விபத்தில், என் இடது கை போனாலும், வாழ்க்கையின் நெருக்கடிகளால் உருவான நம்பிக்கையின் மூலம், வலது கையின் உதவியுடன், என் குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன்,'' என, மரக்கடைசல் தொழிலில், தனியாக ஈடுபட்டு உள்ள இளைஞர் உமாபதி, 31, தெரிவித்தார்.
அவரிடம் பேசியபோது...
உங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாமா...?
எனக்கு மூன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. மனைவி இந்திராணி, மகள்கள், தனுஸ்ரீ, 2, தர்ஷினி, 4 மாதக் குழந்தை. என் சொந்த ஊர் கும்மிடிப்பூண்டி. நான், ஆறாம் வகுப்பு வரை படித்துள்ளேன். 10 ஆண்டுகளாக இந்த மரக்கடைசல் தொழில் செய்து வருகிறேன். விவசாயம் செய்வதிலும் ஈடுபாடு உண்டு.
உங்கள் கையை எப்படி இழந்தீர்கள்?
திருமணத்திற்கு முன், பொறுப்பில்லாத நண்பர்களுடன் சுற்றி திரிந்தேன். 2006ம் ஆண்டு, மது போதையில், ஒரு நாள் ரயிலில் பயணம் செய்த போது, வில்லிவாக்கம் அருகே கீழே விழுந்ததில் என் இடது கை போனது. அதன்பின், இரண்டு ஆண்டுகள் வீட்டில் இருந்தேன்.
அப்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?
வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல், தர்பூசணி, கத்தரிக்காய் பயிர் செய்து விவசாயத்தில் ஈடு பட்டேன். பிறகு கட்டில், மேஜை, நாற்காலி, ஷோபா, அலங்கார பொருட்கள் வைக்கும் மர ஸ்டாண்டு போன்ற மர பொருட்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த என் தம்பிக்கு உதவியாக இருந்தேன்.அந்த நிலையில், திருமணம் ஆனது. பெண் குழந்தை பிறந்தது. என்னை நம்பி வந்த மனைவி மற்றும் குழந்தையை காப்பாற்ற சொந்தமாக தொழில் செய்யும் எண்ணமும் உருவானது.அதற்கு உதவியாக, என் தம்பி ராஜசேகர், கடந்தாண்டு இந்த கடையைப் பிடித்து மரக்கடைசல் தொழிலுக்கான இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொடுத்தார்.அதன்பின், கடைக்கு வந்து செல்ல வசதியாக, ஆவடிக்கு அருகில் உள்ள ஆரிக்கம்பேட்டில் என் மாமியார் வீட்டருகே குடி வந்தேன்.
கடை துவங்கியதும் வேலை கிடைத்ததா?
கடை திறந்து பலநாள் வேலையின்றி உட்கார்ந்திருப்பேன். என் தம்பி சில வேலைகளை கொடுத்து உதவினார். தெரிந்த தொழில் என்றாலும் உடல் ஊனம் காரணமாக கஷ்டப்பட்டு செய்தேன்.பலரும் என்னை வேடிக்கையாக பார்த்தார்கள். ஏதாவது வேலை கொடுக்க நினைப்பவர்கள், ஒற்றைக் கையால் இவன் எப்படி வேலை செய்வான், என்ற சந்தேகத்தில் பரிதாபமாக பார்த்தபடியே சென்று விடுவார்கள்.அப்போதெல்லாம் மனக்கஷ்டம், பணக் கஷ்டம் சேர்ந்து, அழ வைக்கும். கிடைத்த சில மர வேலைகளையும் ரசித்து அழகாக, சுத்தமாக செய்தேன். அதை பார்த்தவர்கள் வேலை கொடுக்க முன் வந்தனர். இப்போது குடும்பத்தை காப்பாற்றும் அளவிற்கு வருவாய் கிடைக்கிறது.
விபத்திற்கு பின் உங்கள் கையை சீரமைக்க முயன்றீர்களா?
முயன்றேன், ஆனால் அப்போது அதற்கான பொருளாதார வசதியும், காலமும் ஒத்துழைக்கவில்லை. நானும் போனால் போகட்டும்... என்ற எண்ணத்தில் இருந்து விட்டேன்.
தனி ஆளாக கஷ்டப்படுகிறீர்களே, வேலையை கற்றுக்கொள்ளும் ஆட்கள் யாராவது இருந்தால் உதவியாக இருக்குமல்லவா?
ஆரம்பத்தில் கஷ்டம் இருந்தது. இப்போது அதுவே பழகி விட்டது. நெருக்கடிதான் நமக்கு நம்பிக்கையையும், முன்னேற்றத்தையும் தரும். அதனால் நான் உழைக்க தயங்குவதில்லை. இனியும் தயங்கமாட்டேன்.மரக்கடைசலின் போது வெளியாகும் தூசு காரணமாக, இந்த வேலையை கற்றுக்கொள்ள யாரும் முன் வருவதில்லை. அதனால், எனக்கு உதவியாக யாரும் இருப்பதில்லை.மேலும், மர வேலைப்பாடுகள் கொண்ட அனைத்து பொருட்களும், குறைந்த எடை, நாகரிகம் காரணமாக பிளாஸ்டிக் பொருட்களாக மாறி விட்டன. அடுத்த, 10 ஆண்டுகளில் மர வேலைப்பாடுகள் செய்வதற்கு ஆட்களே இருக்க மாட்டார்கள்.
இப்போது சிறிய அளவில் கடை வைத்திருக்கும் நீங்கள், தொழில் முன்னேற்றத்திற்கு எந்த வகையான உதவியை எதிர்பார்க்கிறீர்கள்?
வங்கிகள் மூலம் கடனுதவி கிடைத்தால், மேலும் சில இயந்திரங்கள் வாங்கி இரண்டு அல்லது மூன்று பேருக்கு கூடுதலாக வேலை கொடுக்க முடியும். என் தொழில் மீது நான் வைத்துள்ள நம்பிக்கை போல், என் மீது வங்கி அதிகாரிகள் நம்பிக்கை வைத்து கடனுதவி கொடுத்தால், என்னால் நிச்சயம் சாதிக்க முடியும்.