காவடி ஆட்டம்
தாயுமானவன்
குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்..
பெங்களூரு ரமணியம்மாள் பாடியதை பலரும் கேட்டிருக்கிறோம். முருகனுக்குப் பால், பன்னிர், புஷ்பம், எனப் பலவிதக் காவடி தூக்கி ஆடுபவர்களையும் பார்த்திருக்கிறோம். ஆட்டம் சரி.. ஆனால் உணார்ந்து ஆடுகிறொமா என்பதே கேள்வி.
"சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து
என்பது மாணிக்கவாசகர் வாக்கு.
பொருள் புரியாமல் செய்யும் எதற்குமே பலன் இருக்குமா என்பது ஐயமே. நம் இந்திய வழக்காற்றில் மதங்கள் என ஒன்றில்லை. சமய்ங்கள் மட்டுமே இருந்தன என ஒரு கருத்துண்டு.
அவ்வகையில் நம் மண்ணில் ஆறுவகை சமயங்கள் உண்டு.
1. சிவனை வழிபடு தெய்வமாகக் கொண்ட சைவம் (saivam) - இறைத்தன்மை ஒருமை நிலையில் இருக்கும் நிலை.
2. சக்தியை வழிபடு தெய்வமாகக் கொண்ட சாக்தம் (saaktham) - இருமை நிலை
3. விஷ்ணுவை வழிபடு தெய்வமாகக் கொண்ட வைணவம் (vainavam) - மும்மை நிலை.
4. பிரம்மாவை வழிபடு தெவமாகக் கொண்ட சௌரம் (sauram) - நான்கு நிலைத் தன்மை.
5. விநாயகனை வழிபடு தெய்வமாகக் கொண்ட காணபத்தியம் (ganapaththiyam) - ஐந்தாம் நிலை.
6. முருகனை வழிபடு தெய்வமாகக் கொண்ட (kaumaaram) - இறைத் தன்மையின் ஆறாம் நிலை
ஆக ஒருமைக்கு உட்பட்ட முதல் நிலையான சிவனிலையில் துவங்கி ஆறாம் நிலைக்கு உயர்வதே மனித வாழ்வு.
சிவநிலை என்பது அடக்கமும் ஒடுக்கமும்.
முருக நிலை என்பது அறிவும் விரிவும்.
முன்னது அனைத்தையுமாண்டு அனுபவித்து, முற்றும் உணர்ந்து அடங்கி ஒடுங்கும் நிலை. பின்னது கையில் ஒரு பெரிய ஆயுதத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என அறியாத நிலை. சிவநிலை என்பது உடலையும் சகலத்தையும் கடத்தல். முருகநிலை என்பது உடலுக்குள்ளும் உள்ளத்துக்குள்ளும் நிலைத்தல். முருகன் அவதரித்தது சிவனின் நெற்றி எனக்கொண்டால், நெற்றி நம் ஒவ்வொருவரின் சிரசாய் விளங்கும் குன்று. நெற்றி எனும் குன்றில் இளங்கும் அறிவுக்கடவுளே முருகன். அறிவுக்கான ஆட்ட மைதானம் நெற்றியெனில் அறிவை ஆட்டுவிப்பது மூளை, ஆம் மனித மூளை. நம் கபாலத்தில் காரணத்தோடு மூன்று இடங்களில் பிரித்து வைக்கப்பட்டிருக்கிறது. வலது மூளை, இடது முளை, மையத்தில் முகுளம்.
ஒருவன் சாராயம் அருந்தினால் சாக்கடையில் விழுவான். அவனுக்கு சாக்கடையில் இருக்கிறோம் எனவும் தெரியும். நாற்றமடிக்கும், அதிலிருந்து விடு பட வேண்டுமெனவும் தெரியும், ஆனால் எழுந்து செயல்பட முடியாது, கார்ணம் முகுளம் பாதிக்கப்படுவதே. நம் அன்றாட வாழ்வின் கேள்விகளும், விடைகளும், மகிழ்ச்சியும், சோகமும், ஏற்றமும், இறக்கமும் வலது இடதாய் இருக்கின்றன.
கண்கொண்டு பார்த்தால், ஒரு பக்கம் ஏழ்மை மறுபக்கம் வளமை. இரண்டுக்கும் இடைப்பட நிலை என்பதுதான் நிரந்தரம். அதுதான் அறிவு நிலை. சதா நம் கபாலத்தில் வலது மூளையும் இடது மூளையும் செய்யலாமா வேண்டாமா எனப் போராடியே ஒரு முடிவை எடுக்கிறது. நம் எண்ண அலைகள் கபாலத்தில் வலதுக்கும் இடதுக்கும் ஆடும் ஆட்டம், கொஞ்சம் கண் மூடி பார்த்தால், ஒரு அரைவட்ட நாண் போலத்தெரியும். அதாவது, காவடியின் மேற்பகுதி போல.
காவடியாட்டத்தின் சிறப்பே அது விழாமல் இருப்பதுதான் (in very simple words kaavadi aattam is the balancing the thing in between left and right). வலதில் ஒரு கருத்து, இடத்தில் அதற்கு எதிரான கருத்து. எதை எடுத்துகொள்வது? எந்தப் பக்கமும் ஒருசார்பாய் சாய்ந்துவிடாமல் நடுநிலையான அறிவு நிலையில் நாம் வாழ வேண்டும் என்கிற உட்ப்புற மனப் பயிற்சிக்காக வெளியில் நாம் வைத்திருக்கும் அடையாளச் சின்னமே காவடி ஆட்டம்.
இதற்குத் தேவை விழிப்புணர்வு. சம்காரம் செய்த கடவுளர்களில் எதிரியை மன்னித்துத் தன்னிடமே வைத்துக்கொண்ட ஒரே கடவுள் முருகன் மட்டுமே. அன்பும், அறிவும் விழிப்புணர்வும் இருந்தாலன்றி இது சாத்தியமில்லை. எனவே வெளியே நாம் பார்க்கும் காவடி ஆட்டத்தை இன்று முதல் நமக்குள் ஆடிப் பழகுவோம்.
வேண்டுதலிலும் விழாமல் வேண்டாமையிலும் விழாமல் நடு நிலையில் நம் அறிவுக்காவடியை ஏந்திப் பிடிப்போம். நமக்குள் உயிர் உள்ள ஒவ்வொரு நொடியும் தைப்புபூசமே.
அரோகரா!
தமிழன்புடன்,
வெங்கட். தாயுமானவன்.