"நீரும் செம்புலச்சேறும் கலந்தது போலே கலந்தோம் நாமே"
-- சில்லுனு ஒரு காதல்!
குறுந்தொகை என்ற தொகுப்பு நூல் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர், மற்றும் பாணர் முதலான சமூகத்தின் பல மட்டங்களிலிருக்கும் தமிழறிந்த மக்களால் எழுதப்பட்ட பாடல்களைக் கொண்டிருக்கிறது. மொத்தம் 400 பாடல்கள். 4 முதல் 8 அடிகளுக்கு மிகாமல் எழுதப்பட்ட பாடல்களில் உணர்ச்சிகளைக் கனம் குறையாமல் கவிதையாய்க் கட்டமைத்திருக்கிறது. குறுந்தொகை உவமைகளுக்குப் பெயர் போன இலக்கியம். 'இப்படி கூட சிந்திப்பார்களா?' என்று நம்மை ஆச்சரியத்தில் தள்ளும் அற்புத உவமைகள் ஏராளமிருக்கின்றன. அவற்றில் இதுவும் ஒன்று!
கணவன் வேலைக்காக வெளியூர் சென்றுவிட அவன் பிரிவால் வாடும் மனைவி...
"பூ இடைப்படினும் ஆண்டு கழிந்தன்ன
நீருறை மகன்றிற் புணர்ச்சி போல...."
என்று கணவனுடனான தன் நெருக்கத்தையும் பிரிவுத்துயரையும் சொல்கிறாள்.
மகன்றிற் பறவை (அன்றிற் பறவையாகவும் இருக்கலாம்!) என்பது எப்போதும் தன் இணையோடு சேர்ந்து நீரில் நீந்திக் கொண்டிருப்பது. அப்படி நீந்தி வருகையில் இரண்டு பறவைகளுக்குமிடையில் நீரில் பூத்திருக்கும் தாமரையோ அல்லியோ அல்லது ஏதேனுமொரு நீர்ப்பூவோ எதிர்ப்படுமானால் அந்தப் பூவைச் சுற்றிவந்து மீண்டும் இணையும் சிறு பொழுதிற்கு இரண்டு பறவைகளும் ஓராண்டு பிரிந்தது போலத் தவித்திருக்கும்... அப்பறவையை போன்றவள் தான் நானும் என்கிறாள்!
மற்றுமொரு பெண்... "மழைக்காலத்திற்குள் திரும்பி வந்துவிடுவேன்" என்று சொல்லிப்போனவன் வெகுநாட்களாய் வராததால் காத்திருப்பின் உக்கிரம் தாளாமல் அவனைத் திட்டத் தொடங்குகிறாள்
"வாரார் ஆயினும் வரினும் அவர் நமக்கு
யார் ஆகியரோ? தோழி! நீர
நீரப் பைம்போது உளரி, புதல
பீலி ஒண்பொறிக் கருவிளை ஆட்டி
நுண்முள் ஈங்கைச் செவ்வரும்பு ஊழ்த்த
வண்ணத்துய்ம்மலர் உதிர, தண்ணென்று
இன்னாது எளிதரும் வாடையொடு
என் ஆயினாள் கொல் என்னா தோரே?"
-- 110, கிள்ளி மங்கலங் கிழார்.
"அவர் இனி வராவிட்டாலும் வந்தாலும் எனக்கு அவர் யாரோ போன்றவரே தோழி! நீரில் மலரும் மொட்டுக்களை மலர்த்தி மயில் தோகை போன்ற கருவிளை மலர்களை அசைத்து, நுண்ணிய முட்களையுடைய ஈங்கை மர அரும்புகளை விரித்து, வண்ண மலர்களை உதிர்த்தபடி சில்லென வீசி துன்பம் தரும் இந்த வாடைக்காற்றில் அவள் என்ன ஆனாளோ என்று
வருந்தாதவன் வந்தால் என்ன? வரா விட்டால் தான் என்ன? " என்பது அவள் கோபம்!
'உளரி, ஆட்டி, உதிர' என மலர்களின் துன்பத்தைச் சொல்வதன் மூலம் குளிர்க்காற்றும் மழையும் தன்னை வருத்துவதைச் சொல்லாமல் சொல்லும்
தலைவி "இனி அவருக்கும் எனக்கும் சம்பந்தமில்லை" என்று சினந்து கொள்கிறாள்!!
" நைட் போன் பண்றேன்னு சொல்லிட்டு பண்ணலன்னா எனக்கு கோபம் வராதாடி? எவ்ளோ நேரம் காத்திட்டிருந்தேன் தெரியுமா?
அவ வெயிட் பண்ணிட்டிருப்பாளேன்னு கூட தோணலன்னா இவனெல்லாம் என்ன லவ்வர் சொல்லு?"
என்று கோபமும் ஆற்றாமையுமாய் என் தோழிகள் புலம்பும் தருணங்களில் என் மனதில் இந்தப் பாடல் தவறாமல் தலைகாட்டி புன்னகை பூக்க வைக்கிறது!!
இது ஒரு எல்லை என்றால்.. கணவன் சொல்லிப் போன மழைக்காலம் வந்த பின்னும் அவன் வராத நிலையில் " அவர் சொன்ன சொல் தவறாதவர்..
இந்த மழை தான் பருவம் தப்பிப் பெய்கிறது" என்று சொல்லிக் கொள்ளும் அதீத நம்பிக்கை உணர்வுகளையும் காண முடிகிறது!
பிரிவின்போது பொழுது சாயும் வேளைகள் தரும் துயரத்தை உணர்ந்திராதவர்கள் யார் இருக்க முடியும்? இந்தப்பாடலும் அப்படி ஒரு பிரிவின் துயரைப் பேசுகிறது..
"எல்லை கழிய முல்லை மலர
கதிர்சினம் தணிந்த கையறு மாலை
உயிர்வரம்பு ஆக நீந்தினம் ஆயின்
எவன் கொல்? வாழி தோழி!
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே!"
--387, கங்குல் வெள்ளத்தார்
"பகலின் எல்லை முடிந்து முல்லைப்பூக்கள் மலரத் தொடங்கிவிட்ட மாலை நேரம்! சூரியனின் சினம் தணிந்த பின்னால் வந்து கொண்டிருக்கும் இந்த தாங்கிக் கொள்ளவியலாத மாலை நேரத்தை உயிர் போவதற்கு முன்பாக என்னால் நீந்திக் கடந்து விட முடியுமா தோழி? இரவு வெள்ளம் கடலை விடவும் பெரிதாய் இருக்கிறது" என்கிறாள் ஒரு பெண்!
இரவென்ன வெள்ளம் போன்றதா? அதுவும் உயிர் போவதற்குள் நீந்திக் கடந்துவிட முடியாத கடல் போன்றதா!! என்ன அற்புதமான உவமை இது? இதைப் படித்ததிலிருந்து ஜன்னல் திறந்து இரவு வானம் பார்க்கையில் எல்லாம் இருள் கடலாய்ப் பொங்கிப் பெருகுவது போன்றதோர் பிம்பம் எழுவதை என்னால் தவிர்க்க முடிவதில்லை! இப்பாடலை எழுதியவர் தன்
பெயரைக்கூட குறிப்பிட்டுச் சொல்லிக் கொள்ளாததால் 'கங்குல் வெள்ளத்தார்' என்றே குறிக்கப்பட்டிருக்கிறார்!
குறுந்தொகைப் பாடல்கள் ஒவ்வொன்றிலும் அளவிட முடியாத காதல் உணர்வுகள் தேக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.
பெண்ணொருத்தியைப் பார்த்த நாளிலிருந்து பித்துப் பிடித்தவனாகிறான் இளைஞன் ஒருவன். அவனின் இயல்பு பிறழ்ந்த நிலையைக் காணச்சகிக்காத அவன் நண்பர்கள் அவனை கடிந்து கொள்கின்றனர். அவர்களுக்கு அவன் இப்படி பதில் தருகிறான்...
"இடிக்கும் கேளிர்! நும் குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்றுமன் தில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
கைஇல் ஊமன் கண்ணிற் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போல
பரந்தன்று இந்நோய்; நோன்று கொளற்கு அரிதே"
-58, வெள்ளி வீதியார்
"என்னை இடித்துரைக்கும் நண்பர்களே! என் பிரச்சினையை உங்களால் நிறுத்த முடிந்தால் அது எனக்கு நன்மையுடையதாய் இருக்கும். வெயிலில் காய்ந்து கொண்டிருக்கும் பாறை ஒன்றின்மீது வைக்கப்பட்டிருக்கும் வெண்ணெயை கைகள் இல்லாத, வாய் பேசவியலாத ஒருவன் காக்க முயல்வதைப் போல நான் தவித்துக் கொண்டிருக்கிறேன். வெண்ணெய் உருகிப் பாறையில் பரவுவது போல காதல் என்னுள் பரவிக் கொண்டிருக்கிறது. இந்நோய் தாங்கிக் கொள்வதற்கு அரிதானது" என்பது இதன் பொருள்.
"கை இல் ஊமன் கண்ணிற் காக்கும் வெண்ணெய் உணங்கல் போல"
குறுந்தொகையில் என்னை வெகுவாய் அசர வைத்த உவமை இது! கைகளிருந்தால் உருகும் வெண்ணெயைத் தடுத்து நிறுத்த இயலும். பேச முடிந்தால் எவரையேனும் உதவிக்கழைக்கலாம். ஏதும் செய்யவியலாமல் வெண்ணெய் உருகி வழிதலை கண்களால் கண்டபடி தவிப்பது எத்தனை கொடுமை....என்ன அழகான கற்பனை!
இவை தவிர குறுந்தொகையில் புகழ் பெற்ற பாடல் ஒன்றுண்டு.
"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே"
-- செம்புலப் பெயல்நீரார்
"உன் தாயும் என் தாயும் யாரோவென தொடர்பற்றவர்கள். என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவினர்கள் இல்லை. நீயும் நானும் கூட இதற்கு முன்பாய் அறிமுகமானவர்கள் இல்லை. பாலை மண்ணில் பெய்த மழை போல நம்மிருவர் நெஞ்சங்கள் தாமாகக் கலந்துவிட்டன" என்பது இப்பாடல்.
செம்புலம் என்பது பாலை, செம்மண் என்ற இரண்டு அர்த்தங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. மணலில் தண்ணீர் சிந்திப் பார்த்ததுண்டா நீங்கள்? தண்ணீர் விழுவதும் அதை மணல் உறிஞ்சிக் கொள்ளலும் கண்ணிமைக்கும் நொடிகளில் நிகழும். அதைப் போல பிரித்தறிய முடியாத கணங்களில் உள்ளங்கள் கலந்தன என்றும் கொள்ளலாம். செம்மண்ணில்
புழுதியும் வாசனையும் கிளப்பியடி பெய்யும் மழை நீர் மண்ணோடு கலந்த வினாடியில் சுயமிழந்து தானும் செந்நிறம் கொள்வதுபோல நெஞ்சங்கள் ஒன்றாய்க் கலந்தன என்றும் கொள்ளலாம். எதுவான போதிலும் கண்டதும் காதல் என்ற அனுபவத்தைப் பெற்றவர்களுக்கு இந்த பாடல் மறுதலிக்க முடியாததாய் இருக்கக் கூடும்.
ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த வரிகளைத்தான் உணர்ச்சி குன்றாமல் இன்னும்
"நீரும் செம்புலச் சேறும் கலந்தது போல கலந்தோம் நாமே"
என்று பாடிக் கொண்டிருக்கிறோம்! இப்போது சொல்லுங்கள் சங்க இலக்கியங்களில் அர்த்தங்கள் ஏதுமில்லையா?