கடிதம் - 49
('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)
திருப்பத்தூர்.வ.ஆ.
24-2-65
பிரிய நண்பர் ஆதிராஜ் அவர்களுக்கு,
வணக்கம்.
முன்பொருமுறை எழுதி அனுப்பினேனே, 'தமிழ் ஒளி'யின் கவிதைகள் சில, அவைகள் எப்படி? நீங்கள் அவற்றைக் குறித்து எழுதவில்லை என்று கருதுகிறேன். அதிலே 'கண்ணம்மா பாட்டு' எனக்கு மிகவும் பிடித்தது. அதில் தென்படும் ஆழ்ந்த
சோகம் அற்புதமானது. என் நினைவுகளை அது அடிக்கடி தனது அந்தச் சோகத்தால் இப்பொழுதெல்லாம் இடைமறிக்கிறது. 'தமிழ் ஒளி'யின் உள்ளம், வண்ணங்கள் குழைப்பதில் தெய்வத்தின் வரப்பிரசாதம் பெற்ற ஓர் அபூர்வ சித்ரக் கலைஞனைப் போல் எத்தகைய சௌந்தர்யத்தோடிருக்கிறது! இந்த நூற்றாண்டின் மூன்றாவது தமிழ்க் கவிஞன் அவன். அவனுக்கு டி.பி. அவனுக்கு இருப்பிடம் இல்லை! ஏன் அவன் உயிரோடு இருக்கிறானா இல்லையா என்பதே தெரியவில்லை!
'தமிழ் ஒளி' அந்த நாட்களில் எழுதிய 'வீராயி' என்கிற காவியத்தை, சென்னை செல்லும்போதெல்லாம் 'கன்னிமாரா' என்கிற கடலுக்குள் வலைவீசித் தேடுகிறேன். இன்னும் கிடைக்கவில்லை. வேறு, புதிதாகவும் எதுவும் கிடைக்கவில்லை.
'தமிழ் ஓளி' இந்த நூற்றாண்டின் மூன்றாவது தமிழ்க்கவி என்கிற விஷயத்தை நான் பிரஸ்தாபித்தபொழுது, வல்லிக்கண்ணன் வீட்டில் தி.க.சிவசங்கரன் என்ற விமரிசக நபருக்கும் ('தாமரை'யில் பார்த்திருப்பீர்கள்) எனக்கும் அது சம்பந்தமாக அபிப்பிராயபேதம் ஏற்பட்டது. கடைசியில், அதுபற்றி ஒரு பட்டிமன்றத்திலேயே பேசத் தயார் என்று அறிவித்துவிட்டேன்.
மறந்திருக்கக் கூடும் - இப்பொழுது நினைவுகூர்வதில் நீங்கள் மகிழக்கூடும் என்று கருதி அவனது சில பழைய கவிதைகளை எழுதுகிறேன்.
சூறைக் காற்று..........மழையைப்பற்றி:
'மக்கள் தொடுத்திடும் யுத்தம் - என
வானமும் மண்ணும் இருண்டு நடுங்க
செக்கென ஆட்டுது காற்று - பெருந்
செல்வர் மணிமுடி சட்டம் சிறைகள்
பொக்கென வீழ்வது போலே - யாவும்
போயின! பொட்டென்று விட்டது காற்று
செக்கச் சிவந்தது வானம் - அன்னை
சேல்விழி காட்டினள் காலை'.
* * * * * * * * * * * * * * *
'தட்டி யெழுப்பினாள் காற்றை - அது
தாவி யுருட்டுது மாமரக்காட்டை'
* * * * * * * * * * * * * * *
கார்த்திகை மாதத்து மின்மினிகளைப் பற்றி வருணனை:
'கீர்த்தி இளமை கிழியாப் பழம் பெருமை
சீர்த்தியிவை நான்கும் சிறப்புரு பெற்றதுபோல்
தென்னையின் பாளை சிதறும் புதுமலர் போல்
பொன்னை உருக்கும் புதுமை போல், மற்றும்
அகழ்வாரைத் தாங்கும் அவல நிலத்தில்
புகழுருவம் ஒன்று புறப்பட்ட தோற்றம் போல்
பொய்யே மலிந்த புலையிடையே நன்னெஞ்சம்
'ஐயோ' என்றேங்கி அழுத கண்ணீர்த்துளி போல்
பிரிந்தார் அகத்திற் பிறந்ததோர் வேட்கை
எரிந்த பொரியாகி எங்கும் பறந்தது போல்
நெற்றித் திலகம் நிறம் பெற்றெழுந்தது போல்
சுற்றித் திரிந்து சுடர்கின்ற பொன்விளக்கு
சொல்லுக் கடங்காது தோன்றுகின்ற கற்பனைபோல்
அல்லுக்கடங்காத ஆனந்த மின்விளக்கு!
ஐப்பசித் தூதை அனுப்பி வைத்துக் கார்த்திகையைக்
கைப்பிடித்த வாளின் ககனத் திருவிளக்கு!
பூவின் இதழ்ஒன்று பொன்சிறகு பெற்றதுபோல்
நாவின் சிறுசொல் நறுக்குப்போல், நல்லோர்கள்
வாழும் இடத்திற்கு வாழ்த்தாகி வான்விருந்தாய்ச்
சூழும் சுடர்போன்ற தோற்றங்காண்! மின்மினிகாண்!'.
இங்கே எனது இலக்கிய முயற்சிகள் சற்று ஒய்ந்திருக்கின்றன. ஒருக்கால், நிரந்தரமான சாவுக்கு இவை முன்னறிகுறிகளோ என்னவோ? P.U.Cக்குப் படிக்கிற ஒரு சாக்கு. ஆனால் அதையும் ஒழுங்காகச் செய்யவில்லை. முன்பு விகடனுக்கு ஒரு கதை எழுதிக் கொண்டிருப்பதாய்ச் சொன்னேனே, அது இன்னும் ஆரம்பப் பாராவைக் கூடத் தாண்டவில்லை.
சிறுகதை என்றால் என்ன என்பது ஓரளவுக்குப் பிரக்ஞையில் நன்றாக உறைத்து விட்டது. அதன் dimensions அனைத்தையும் அறிந்திருக்கிற காரணத்தால், நம் காரியங்களை அளவுகடந்த ஜாக்கிரதையுணர்ச்சியோடு செய்ய வேண்டியிருக்கிறது. இடையில், சேகரிக்கிற ஒவ்வொரு இலக்கியத் தகவலும் நம்மை மிரட்டிக்கொண்டிருக் கின்றன. ஓ, இலக்கியம்! அது பெரிய விஷயம் -
- அதே சமயத்தில், வற்றாது வரளாது சமயாசமயங்களில் பீரிட்டுக் கிளம்புகிற நம் உற்சாகமும் இன்னும் ஓயவில்லை.
எனவே பார்ப்போம்! ஜெயகாந்தன் சொல்கிறபடி, "சரஸ்வதி தேவியின் அருள் பெற்று, அவள் கரம்பற்றி நடந்த எத்தனையோ கோடி கலைக் குழந்தைகளில்" நாம் ஒன்றாக முடியாதா?
'சரஸ்வதி' என்கிறது வெறும் சமயத்தைக் குறிக்கிற பிரதிமை மட்டுமன்று. அது ஒரு கலையின் பெரிய உருவகம். எனவே, ஜைனராகிய உங்களுக்கும் அவ்வுருவத்தின் அழகு விளங்காது போகாது. பாஞ்சாலி சபதத்தின் ஆரம்பத்தில் பாரதி எழுதுகிறானே அதைப் பாருங்கள்:
அவள் - அந்த சரஸ்வதி -
வேதத் திருவிழியாள் -அதில்
மிக்கபல் லுரையெனும் கருமையிட்டாள்
போத மென் நாசியினாள் - நலம்
பொங்கும்நல் சாத்திர வாயுடையாள்
கற்பனைத் தேனிழதாள் - சுவைக்
காவிய மெனுமணிக் கொங்கையினாள்'.
- எப்பொழுதாவது கவிதைகள் எழுதுகிறேன். ஆயினும் கவனம் சிறுகதைகளின் மீது அதிகம் காதல் கொள்கிறது. இது சிருஷ்டி விஷயத்தில் மட்டும்தான். ரஸனை, வாசிப்பு, லயிப்பு எல்லாம் கவிதைதான். அல்லும் பகலும் வாய் கவிதையையே அலப்பிக்கொண்டிருக்கிறது. படிப்பதும் கவிதையே. சிறுகதைகளை தொடுவதுமில்லை.
- ஏனெனில் நாம் படிக்கிற தகுதியுள்ள சிறுகதைகள் இன்று தமிழ்நாட்டில்
பிரசுரமாவதேயில்லை - ஜெ.கா.வைத் தவிர்த்து.
தங்கள்,
தங்கள்,
பி.ச.குப்புசாமி.
****************************************************************************************************************************************************************************************************************************************************************
('சந்திரமௌலி'என்கிற பி.ச.குப்புசாமி கவிஞர்ஆதிராஜுக்கு எழுதிய கடிதங்கள்)
திருப்பத்தூர்.வ.ஆ.
1-3-65
பிரிய நண்பர் ஆதிராஜ் அவர்களுக்கு,
வணக்கம்.
ஜெயகாந்தனின் 'உன்னைப்போல் ஒருவன்' படம் அருமையாக வந்திருக்கிறது.
"இந்தப் படம் சேரிவாழ் மக்களைப் பற்றியது; அவர்களின் உணர்ச்சிகளைப் பற்றியது; அவர்களின் ஆத்மாவைப் பற்றியது. எனவே இதுவும் அவர்கள் வாழ்வைப் போலவே மெதுவானது; மந்தமானது; தேக்கமானது." - என்கிற சிறு விளக்கத்தோடு படம் ஓடத் துவங்குகிறது.
சரியாக இரண்டு மணி நேரம் ஐந்து நிமிஷம் படம் ஓடுகிறது. 11145 அடி.
சில விமர்சனங்களைச் சுட்டிக் காட்டுகிறேன். படத்தின் சிறப்பை அவை விளக்கும்.
காமராஜ்:
"இந்த மாதிரிப் படங்களையெல்லாம் அரசாங்கமே விலை கொடுத்து வாங்கி, ஜனங்களுக்கு இலவசமாகக் காட்டி அவர்கள் ரசனையை மாத்தணும்."
ஸாதூல் என்கிற உலகப் பிரசித்தி பெற்ற பிரெஞ்சு விமரிசகர்:
"மனித மனத்தில் பெரிய அளவுக்குச் செயல் விளைவுக¨ª உண்டாக்குகிற படங்களின் வகையைச் சேர்ந்தது அது."
இல்லஸ்ரேட்டட் வீக்லி (7 - 2 -65) :
யதார்த்தம் என்பது - ஜெயகாந்தன் சத்யஜித்ரேயை வழிகாட்டியாகக் கொண்டிருந்த போதிலும் - ரேயை விட ஜெயகாந்தனிடம்தான் உண்மையில் உள்ளது. இதைப் போன்ற படங்கள் இந்தியாவிலேயே மிகக் குறைவு. ஜெயகாந்தன் நேர்மையானவர்; துணிவு மிக்கவர்; புரட்சிகரமானவர். விரைவில் இவர் ரேயைப் போல் இன்னொரு தனி நட்சத்திரம் ஆகிவிடுவார்"
அநேகமாக இவ்விஷயங்களை நீங்கள் பத்திரிகைகளில் பார்த்திருக்கலாம். மொத்தத்தில், படத்துக்கு ஜனாதிபதி பரிசு நிச்சயம் கிடைத்தே தீரவேண்டும்.
இன்னொரு மகிழ்ச்சிகரமான விஷயம். ஜெயகாந்தன் சமீபத்தில் ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையாகி இருக்கிறார்.
விவேகாநந்தரின் 'ஞானதீபம்' படித்ததாக எழுதியிருந்தீர்கள். எந்தச் சமயத்தினருக்கும் பொதுவாகப் பயன்படக்கூடிய சொத்துக்கள் ஹிந்துசமயத்தில் சில உள. அவைகளுள் சரஸ்வதி, கவிதை, சமஸ்கிருதம் போலவே விவேகாநந்தரும் ஒருவர்.
'ஞானதீபம்' இரண்டாவது பாகம் படியுங்கள். இந்தியாவின் வரலாறு, இந்தியா வளர்ந்தவிதம், இந்தியாவின் சமண பௌத்த சாக்த சமயங்களுக்கு, ஹிந்து சமயத்தோடு உள்ள உறவு - இவைகளையெல்லாம் பிரமிக்கத்தக்க வகையிலே ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்.
விவேகாநந்தரைப் படிப்பதால் ஹிந்து சமயத்தினருக்குச் சமய ஞானமும் அது பற்றிய பலமுமே லாபமாகக் கிடைக்கிறது என்பது பலரது அறியா முடிவு. ஆனால், உண்மையில் விவேகாநந்தர் ஹிந்து சமயத்தினருக்கு மட்டும் பயன்படக் கூடியவரல்ல. வாழ்வுத் தத்துவங்களில் நம்பிக்கையுள்ள ஹிந்து சமயமும், அறிவுபூர்வமான - ஆஸ்திகத்திற்கு ஒருவகையில் நாஸ்திக 'எதிர்விளைவு மருந்தை' அளிக்க வந்த சமண சமயமும், மனிதன் இறுதியில் ஆசையை நிராகரிக்க வேண்டிய அவசியத்தை வற்புறுத்த வேண்டி அவன் பருவங்களின் வேறு இயல்புகளுக்கு வழிவகுக்கத் தவறிய பௌத்த சமயமும் - எல்லாம் விவேகாநந்தரால் பயன்பட முடியும்.
இந்தியாவில் ஒர் ஆன்மீகவாதிக்குச் சமுதாயத்தில் உள்ள பொறுப்பும், சமுதாய வாதிக்கு ஆன்மீகத்தில் உள்ள பொறுப்புமே விவேகாநந்தர் அறிவுறுத்துபவை.
சமுதாயமும், ஆத்மாவும் எல்லா சமயங்களுக்கும் பொது அல்லவா?
கம்பராமாயணம் படித்து வருகிறீர்களா? கவிஞர்களுக்கு அது ஒரு தெய்வீக மருந்து. தேவர்கள் ஒரு காலத்தில் அமிர்தம் உண்டதை நான் சிறுவயதில் கேட்டு அதற்காகப் பொறாமைப் பட்டதுண்டு. ஆனால் கவிஞனுக்கு கம்பராமாயணத்திலிருக்கிற விருந்து தேவர்களுக்குக் கூட வேறெங்கும் இருக்காது. எனவே எப்பாடு பட்டாவது கம்பனை முதலிலிருந்து கடைசிவரை ஒருமுறை படித்துவிடுங்கள். பாரதி யின் 'பாஞ்சாலி சபதத்தை'யும் அவ்வாறே சிபாரிசு செய்கிறேன்.
நீங்கள் ஆற்காட்டிலிருந்து கொண்டுவந்ததாக எழுதிய புஸ்தகங்களுள் 'சித்தார்த்தன்' அவ்வளவு நன்றாயிருக்காது. மற்றவை பயனுள்ளவையே! படித்து முடியுங்கள்.
என்னிடம் ஜவஹர்லால் நேருஜியின் ஆங்கிலப் பிரசங்கங்கள் முழுத் தொகுதியாக இருக்கிறது. மெள்ள மெள்ளப் படித்து வருகிறேன். மற்றபடி, வேறு புஸ்தகங்களெதுவும் சமீபத்தில் படிக்கவில்லை. Hindu Marriage Bill பார்லிமெண்டில் கொண்டு வரப்பட்டபொழுது நேருஜி ஆற்றியிருக்கிற உரை மிகப் பிரமாதமாயிருக்கிறது. ஒரு பெரும் தத்துவ ஞானியினுடைய உரை அது.
'புதுமைப்பித்தனின் கட்டுரைகள்' அங்கு லைப்ரரியில் இருந்தால் எடுத்துப் படியுங்கள்.
நமது நண்பர்களைப் பற்றி எழுதுங்கள். நண்பர்கள் பெருஞ்செல்வம் என்று எழுதினேன். அப்படி இருந்த போதிலும் யாரிடத்தும் என்னை நான் பூர்ணமாக வெளிப் படுத்திக் கொள்ளவில்லை. நானோ அல்லது நண்பர்களோ - யார் காரணம் என்று என்னால் சொல்ல முடியாது. எதுவோ அதற்குக் காரணம். நம் சிதம்பரம் அடிக்கடி கடிதம் போடுகிறது.
புதிய நண்பர்களுள் ஒருவரை, இன்னும் உங்களுக்குச் சரிவரத் தெரியப் படுத்தவில்லை என்று நினைக்கிறேன். சிதம்பரத்தின் ஹெட்மாஸ்டர் - தற்போது மங்கலம்பேட்டை(தெ.ஆ)யில் இருக்கிறார் - சபாநாயகம் என்பவரைப் பற்றிச் சொல்லி இருக்கிறேனா?
நல்ல நண்பர். நமது ரகம். ஓவியம், புகைப்படம், சங்கீதம், எழுத்து, ரேகை என்று பல விஷயங்களில் - பரிச்சயமுள்ளவர். எழுத்து சம்பந்தமாக நம்மோடு பூர்ண ஒற்றுமையுள்ள அபிப்பிராயங்களைக் கொண்டவர். 'சபா' என்கிற பெயரில் கதைகள்எழுதியிருக்கிறார். எனக்கு அடிக்கடி கடிதம் எழுதுகிறார். நானும் பதில் போடுகிறேன். சற்று அந்தரங்கமான நண்பராக விரைவில் அமைவார். சந்தர்ப்பம் நேரும்போது தங்களுக்கு நேரடியாக அறிமுகம் செய்விக்கிறேன்.
தங்களது அந்த நீண்ட கடிதத்தில் ஒரு அருமையான வரி இருந்தது - "வாழ்க்கை எவ்வளவோ மாறிவிட்டது" என்று.
வாழ்க்கை மாறித்தான் விட்டது. மிக மிக மாறிவிட்டது.
கடிதம் எழுதுங்கள்.
தங்கள்,
பி.ச.குப்புசாமி.
*[b]