இளங்கீரன் ஈழத்து முஸ்லிம் எழுத்தாளர்களில் தனித்துவமானவர். ஐம்பதுகளில் ஈழத்துத் தமிழ் நாவலுக்குப் புதிய பரிணாமத்தைக் கொடுத்தவர். ஏறத்தாழ இருபதுக்கு மேல் நாவல்களை எழுதிச் சாதனை புரிந்தவர். சிறந்த மேடைப் பேச்சாளர். மரகதம் என்ற இலக்கிய சஞ்சிகையை 1961 இல் தொடங்கி சில காலம் நடத்தியவர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தோற்றத்தோடு அதில் இணைந்து செயற்பட்டவர்களில் ஒருவர்.
சுபைர் இளங்கீரன் 1927 ம் ஆண்டு இலங்கையில் பிறந்தார். 20 வயது முதல் எழுத்துத்துறையில் ஈடுபாடு காட்டி வந்துள்ளார்.
மலேசியாவில் இனமணி பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்த இவர் இலங்கையில் தொழிலாளி, ஜனவேகம் ஆகிய அரசியல் ஏடுகளின் பிரதம ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.
தொடர் கதை
தினகரன் பத்திரிகையில் இவர் தொடராக எழுதி வந்த நீதியே நீ கேள் தொடர் கதை வாசகர்களால் மிகவும் வரவேற்கப்பட்டதோடு பின்னர் நூலாக வெளிவந்தது.
வானொலி நாடகங்கள்
இலங்கை வானொலி தேசிய சேவையில் இவர் எழுதிய ஏராளமான நாடகங்கள் ஒலிபரப்பாகின. "மனித புராணம்", "வாழப்பிறந்தவர்கள்" போன்ற தொடர் நாடகங்களும் அவற்றில் அடங்கும்.
மேடை நாடகம்
பாரதி நூற்றாண்டை ஒட்டி இவர் எழுதித் தயாரித்த மகாகவி பாரதி நாடகம் 1982 டிசம்பரிலும் 1983 மார்ச்சிலும் கொழும்பில் மேடையேறியது.
மதிப்பளிப்புக்கள்
இலங்கை முஸ்லிம் சமய கலாசார இராஜாங்க அமைச்சு 1992 முற்பகுதியில் வாழ்வோரை வாழ்த்துவோம் எனும் வைபவத்தில் இலக்கிய வேந்தர் எனும் பட்டத்தையும் விருதையும் வழங்கி கௌரவித்தது.
1992 இல் இந்து சமய, கலாசார இராஜாங்க அமைச்சு நடத்திய சாகித்திய விழாவில் இலக்கியச்செம்மல் எனும் பட்டமும் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
எழுதிய நாவல்கள்
ஓரே அணைப்பு
மீண்டும் வந்தாள்
பைத்தியக்காரி
பொற்கூண்டு
கலா ராணி
மரணக் குழி
காதலன்
அழகு ரோஜா
வண்ணக் குமரி
காதல் உலகிலே
பட்டினித் தோட்டம்
நீதிபதி
எதிர்பார்த்த இரவு
மனிதனைப் பார்
மனிதர்கள்
புயல் அடங்குமா? (1954, தினகரன்)
சொர்க்கம் எங்கே (1955, தினகரன்)
மனிதர்கள் (1956, தினகரன்)
இங்கிருந்து எங்கே? (1961, தினகரன்)
காலம் மாறுகிறது (1964, தினகரன்)
மண்ணில் விளைந்தவர்கள் (1960, தமிழன்).
அவளுக்கு ஒரு வேலை வேண்டும் (1972, வீரகேசரி).
அன்னை அழைத்தாள் (1977, சிரித்திரன்)
வெளிவந்த நூல்கள்
தென்றலும் புயலும் (நாவல், 1955)
நீதியே நீ கேள்! (நாவல், 1959)
ஈழத்து முற்போக்கு இலக்கியமும் இயக்கமும் (1994)
தேசிய இலக்கியமும் மரபுப் போராட்டமும் (கட்டுரைத் தொகுப்பு, 1993)
பேராசிரியர் கைலாசபதி நினைவுகளும் கருத்துக்களும் (கட்டுரைத் தொகுப்பு, 1992)