எப்போதும் ரமணிசந்திரன் அவர்களின் எழுத்து மேல் பெரிதாய் ஒரு மரியாதை இருந்ததில்லை எனக்கு. இருப்பினும் சும்மா இருக்கப் பொறுக்காமல் சண்டித்தனம் செய்யும் மனதிற்கு அப்போதைக்கு கைகளில் அகப்பட்டது எதுவாயினும் படித்துப் பார்க்க விருப்பம் இருந்திருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு அப்படி ஏதேச்சையாய் இரு புத்தகங்களை படிக்க நேர்ந்துத் தொலைத்தது. முதலாவது ஒன்றை படிக்க ஆரம்பித்த சரியாய் பதினைந்தாவது நிமிடத்தில் அது நடந்தது. அடி மனதிலிருந்து பொங்கும் உச்சகட்ட கோபத்தில் அந்த புத்தகத்தை சுவற்றில் விசிறி அடித்தேன்.
எப்போதும் என்னைப்போலத்தான் மற்றவர்களும் சிந்திக்க வேண்டும் என்ற பைத்தியக்காரத்தனமான சிந்தனை எனக்கு இருந்தது கிடையாது என்றாலும், பல வாசகர்கள் உருகி உருகி அம்மா, அம்மா என்று அழைத்துக் கொண்டிருப்பதும், இவரது கதைகளை சோறு தண்ணி இல்லாமல் படித்துக் கிடப்பதுமான தமிழ் சூழல் மீதும், இவரது தீவிர வாசகர்களான எனது சில நண்பர்கள் மீதும் எனக்கு ஏனோ கண்மண் தெரியாமல் கோபம் வந்தது.
இவரது ஒவ்வொரு புத்தகத்தின் ஆரம்பத்திலும் “அருணோதயம் ரமணன்” அவர்களின் “இன்று லட்சக் கணக்கான வாசகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் ரமணி சந்திரன்…” என்ற டெம்ப்ளேட் வார்த்தைகளுடன் தொடங்கும் முன்னுரைக்கு சற்றும் குறைவில்லாது ஒரு டெம்ப்ளேட் கதையோடு ஒவ்வொரு புத்தகமும் வந்து பெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது.
இளம் வயதில் தொழிலதிபராய் இருக்கும் ஒரு நாயகன், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பாசமான நாயகி, இருவரில் எவருக்கேனும் ஏதேனும் ஒரு காரணத்தால் எதிர்பாலினத்தவரைக் கண்டாலே ஆகாது. நாயகன் பெரும்பாலும் மிக அழகாயும், புத்திசாலியாயும் இருப்பான். நாயகி அவனை எவ்வளவு தான் வெறுத்தாலும் அவன் சிரிக்கும் போது அப்படியே சொக்கிப் போவாள். நாவலின் பத்தாவது அத்தியாயத்தில் எதோ ஒரு காரணத்திற்காய் நாயகிக்கும், நாயகனுக்கும் பொய்யாய் ஒரு கல்யாணம் நடக்கும். நாயகி அவன் வீட்டிற்கு மனைவியாய் நடிக்கப் போவாள். திருமணத்திற்கு முன்பு ப்ளேபாயாக இருந்த நாயகன், கல்யாணத்திற்குப் பின்பு “மெட்டி ஒலி கோபி”யை விட ரொம்ப நல்லவனாய் நடந்து கொள்வான். நடுவில் வில்லியாய் எதாவது ஒரு இளம் பெண் அவன் மீது ஈஷிக் கொண்டு வளைய வருவாள். கடைசியில் இருவரும் எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து விட்டு ஒன்று சேருவார்கள். பெரும்பாலான கதைகளில் படுக்கையறையில் நாயகி தீரா காதலுடன் நாயகனின் அணைப்புக்குள் தன்னை சுருக்கிக் கொண்டு நிற்கும் ஒரு வகையான கனவுச் சூழ்நிலையுடன் முடிவடைந்திருக்கும்.
இந்த ஒரே கதையை எத்தனை முறை ரமணிசந்திரன் அவர்கள் பல்வேறு விதங்களில் திகட்ட திகட்ட கொடுத்தாலும் தமிழ் கூறும் நல்லுலகு மறுக்காமல் வாங்கி வாசித்து சந்தோஷப் பட்டு உருகிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான நடுத்தர மற்றும், கீழ் நடுத்தர பெண்களின் வாழ்நாள் கனவாக நல்ல கணவனை பெறுவதே என்ற சூழலை நாம் உருவாக்கி வைத்திருப்பதுவும், பெண்களுக்கு இயல்பாகவே மறுக்கப் படும் பாலியல் ஏக்கங்களும், விருப்பங்களும், நிஜத்தில் நடக்காத கணவனின் அன்பான ஆக்கிரமிப்பை புத்தகங்களிலாவது தேடிப்பார்த்து படித்து சுய இன்பம் பெற்றுக் கொள்ளுவதும், எல்லாவற்றுக்கும் மேலாய் மெல்ல மெல்ல Submissive நடத்தைக்கு தான் மாற வேண்டியதன் பொருட்டும் பெண்களுக்கு ரமணி சந்திரனின் கதைகள் பொதுவாய் பிடித்துப் போகிறதோ என்ற எண்ணம் ரொம்ப காலமாகவே எனக்குள் இருந்து வந்திருக்கிறது.
நான் விசிறி அடித்த புத்தகத்திலும் இப்படி ஒரு டெம்ப்ளேட் இல்லாமலில்லை. ஆனால் என்னை மிகவும் கோபத்திற்குள்ளாக்கியது நாயகன் நாயகியை விரும்புவான். அப்போதே நாயகன் சொல்லுவான் “நான் இதுவரை ஆசைப்பட்டு எதையும் அடையாமல் விட்டதில்லை” என்று. நாயகி நிர்தாட்சண்யமாய் அவனை மறுத்து விட ஒரு சந்தர்ப்பத்தில் அவளை மயக்கத்திற்குட்படுத்தி விருப்பமில்லாமல் பாலியல் உறவு கொண்டு விடுவான். தமிழ் சினிமாவின் பாணியில் சொல்லுவதென்றால் அவளை கெடுத்து விடுவான். (எவன்தான் கண்டு பிடிச்சானோ இப்படி வாக்கிய அமைப்பை).
இந்த அத்தியாயங்களில் நாயகியின் மன நிலையையும், நாயகனின் வெற்றிக் களிப்பையும் சொல்லி இருப்பார் நாவாசிரியர். பின்பு வேறு வழியில்லாமல் வெறுப்புடன் அவனை திருமணம் செய்து கொண்டாலும் நாளாக நாளாக அவன் மேல் மெதுவாய் ஈர்ப்பு கொண்டு கடைசி அத்தியாயத்தில் காதல் நிரம்பிய வசனங்கள் உடைய, நாயகனின் அணைப்பில் நாயகி தன்னை மறந்து கிடக்கும் ஒரு படுக்கையறைக் காட்சியுடன் நாவல் முடிகின்றது. இதில் இன்னொரு முக்கியமான விஷயம் பத்து வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்ட இந்த நாவல் திரும்ப திரும்ப வாசகர்களால் படிக்கப்பட்டு இப்போது பதினைந்தாவது பதிப்பைத் தொட்டிருக்கிறது.
இன்னொரு கதையில் நாயகன் சுத்தமாய் ப்ளேபாய். வழக்கம் போல் பணக்காரன், தொழிலதிபர். நாயகன் நாயகியை படுக்கைக்கு அழைப்பான். நாயகி இவனைப் போய் காதலித்தோமே என்று பிரிந்து சென்று கிராமத்திலிருப்பாள். நாயகியின் சகோதரி ஏதேனும் ஒரு பணக்காரனிடம் செட்டிலாக வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆள்: தேடிப்பார்த்து, கடைசியில் அந்த நாயகனுடனேயே அவனை வளைத்துப் போடும் பொருட்டு அவனுடன் உறவு கொண்டு ஒரு குழந்தையைப் பெற்ரு விட்டு இறந்து விட, தியாகச் சொரூபமான நாயகி அப்பாவைப்போலவே இருக்கும் அந்தச் சிறுவனை வளர்த்துக் கொண்டிருப்பாள். திடீரென்று ஒருநாள் அவனுக்கு ஞானோதயம் வந்து இவளிடம் திரும்பி வர, வழக்கம் போல் ஆரம்பத்தில் வீம்பாய் பேசும் நாயகி கடையில் அந்த நாயகனுடன் ஒன்று சேர்ந்து தனது வாழ்க்கையை மறுபடி அவன் கையில் கொடுத்து விட்டு, வாழ ஆரம்பிப்பாள். இந்த நாவலும் பன்னிரண்டு முறைக்கும் மேல் மறுபதிப்பு செய்ப்பட்டிருக்கிறது.
என்னைக் கேட்டால் ஒன்று சொல்லலாம் ரமணி சந்திரன் நாவலின் நாயகிகளை பேசாமல் “சுயமரியாதை இல்லாத ஜென்மங்கள்” என்று அடைமொழி இட்டுக் கூப்பிட்டுக் கொள்ளலாம். அதைவிட இப்படி எல்லாம் எழுதும் இவர்தான் பெண்களின் எழுத்தாளர் என்று எவரேனும் சொல்லும் போது சொல்லுபவர் மீது ஒரு பரிதாப உணர்வுதான் ஏற்படுகிறது. ஆண் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பான், பொம்பளைப் புள்ளைதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப் போகணும் என்ற ஒரு வகையான தாழ் மன உணர்வுகளையும், அழகியலும், பாலியல் ஏக்கங்களும், மசாலாவும் சேர்ந்து கலந்த ஒரு கனவுச் சூழ்நிலையில் பல வாசகர்களை தன் சுயம் தொலைத்து விட்டு வாழ வகை செய்ததையும் தாண்டி, பெண்களின் எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்ளும் ரமணி சந்திரனின் எழுத்துக்கள் சாதித்தது என்ன?[b]