வியாசர் நளன் வரலாற்றைக் கூறல்
—————————————-
சேமவேல் மன்னனுக்குச் செப்புவான் செந்தனிக்கோல்
நாமவேற் காளை நளனென்பான் – யாமத்
தொலியாழி வைய மொருங்கிழப்பப் பண்டு
கலியால் விளைந்த கதை.
ஒப்பற்ற செங்கோலையும் அச்சந்தரும் வேலையுமுடைய காளையைப் போன்ற நளவேந்தன், நள்ளிரவிலும் ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த இம்மண்ணுலகமெல்லாம் ஒருசேர இழக்குமாறு , முன்பொரு காலத்தில் சனியால் நிகழ்ந்த வரலாற்றைக் குடிகளுக்கு நன்மை செய்கின்ற வேலையுடைய அரசனாகிய தருமனுக்கு வியாசர் கூறத் தொடங்கினார்.
(பாரத காலத்துக்கு முன்பு நளன் வரலாறு நிகழ்ந்தது என்பதை நினைவில் கொள்க.)
இனி நளன் வரலாற்றை வியாசர் கூறுவதாக கூறத் தொடங்குகிறார் ஆசிரியர்; முதலில் நளனது நாட்டு வளம், நகர வளம், மக்கள் சிறப்பு முதலியவற்றைக் கூறுகிறார்.
நிடத நாட்டு சிறப்பு.
—————————-
காமர் கயல்புர்ளக் காவி முகைநெகிழத்
தாமரையின் செந்தேன் தளையவிழப் – பூமடந்தை
தன்னாட்டம் போலுந் தகைமைத்தே சாகரஞ்சூழ்
நன்னாட்டின் முன்னாட்டும் நாடு.
கடல் சூழ்ந்த நல்ல நாடுகளில் முதன்மையானதென சிறப்பித்துக் கூறும் நிடத நாடு, அழகிய கெண்டை மீங்கள் பிறழ்வதாலும், குவளைகள் மலர்வதாலும், நல்ல தேனையுடைய தாமரை அரும்புகள் மலர்வதாலும் திருமகளின் கண்களைப் போலச் சிறப்பையுடையதாய் இருந்தது.
மாவிந்த நகரச் சிறப்பு.
—————————-
கோதை மடவார்தங் கொங்கை மிசைத்திமிர்ந்த
சீதக் களபச் செழுஞ்சேற்றால் -வீதிவாய்
மானக் கரிவழுக்கும் மாவிந்தம் என்பதோர்
ஞானக் கலைவாழ் நகர்.
மலர் மாலையை அணிந்த இளம்பெண்களின் தனங்களில் பூசப்பெற்ற குளிர்ச்சி பொருந்திய கலவைச் சாந்தாகிய வளப்பமுள்ள குழம்பால் , தெருக்களில் செல்லும் பெரிய யானையின் கால்கள் சறுக்குகின்றன! அத்தகைய வளமார்ந்த அன்னகர் ‘ மாவிந்த நகரம்’ என்னும் பெயர் பெற்றுள்ளது. அஃது உண்மைக்கலை அறிவு செழித்திருக்கின்ற தன்மையுடையதாயிருந்தது.
அந்நகர மாளிகைகளின் சிறப்பு.
————————————-
நின்று புயல்வானம் பொழிந்த நெடுந்தாரை
என்றும் அகில்கமழும் என்பரால் – தென்றல்
அலர்த்துங் கொடிமாடத் தாயிழையார் ஐம்பால்
புலர்த்தும் புகைவான் புகுந்து.
தென்றலால் அசைகின்ற கொடிகளையுடையவை அந்நகர மாடங்கள். அவற்றில் ஆராய்ந்தெடுக்கப்பட்ட அணிகளை அணிந்த பெண்கள் தங்கள் கூந்தலை உலர்ந்த அகிற்புகை எழுப்புகின்றார்கள்.அப்புகை வானத்தில் எங்கும் பரவுவதால், வானத்திலிருந்து மேகங்கள் பெய்த மழைத்தாரைகளிலெல்லாம் எப்போதும் அகிலின் நறுமணம் கமழ்ந்துகொண்டே இருக்கும் என்று கூறுவர் புலவர்.
அந்நகர மக்கட்சிறப்பு.
————————-
வெஞ்சிலையே கோடுவன; மென்குழலே சோருவன
அஞ்சிலம்பே வாய்விட் டரற்றுவன; – கஞ்சம்
கலங்குவன; மாளிகைமேல் காரிகையார் கண்ணே
விலங்குவன மெய்ந்நெறியை விட்டு.
அந்நகரில் வளைந்திருப்பன, விற்களே ; தளர்ந்திருப்பன, மெல்லிய தன்மையுடைய பெண்களின் கூந்தல்களே ; வாய் விட்டு கதறுவன, பெண்களின் கால்களில் உள்ள அழகிய சிலம்புகளே; சலனமடைவன, நீரிலுள்ள தாமரை மலர்களே; உண்மையான வழியை விட்டு விலகுவன,(தம் கணவர் வருகையை நோக்கி நிற்கும்) பெண்களின் கண்களே.
அலுவலை நாடிச் சென்ற தம் கணவர் வருகையை வழிமேல் விழி வைத்து நோக்கி நிற்கும் பெண்டிர் தூரத்தில் வரும் அயலார் ஒருவரைத் தம் கணவர் என்று கருதி, அவர் அருகில் வர ஏமாறுவதலால் , இங்ஙனம் கூறப்பட்டது.
( செந்நெறி பிறழ்வார், தளர்வார், கதறுவார், கலக்கமடைவார், ஒருவரும் அந்நகரத்தில் இல்லை )
கல்லாரும் இல்லாரும் இலர் எனல்
———————————————–
தெரிவனநூல்; என்றுந் தெரியா தனவும்
வரிவளையார் தங்கள் மருங்கே; – ஒருபொழுதும்
இல்லா தனவும் இரவே ; இகழ்ந்தெவருங்
கல்லா தனவுங் கரவு.
அந்நகர மக்கள் என்றும் ஆராய்ந்து அறிவன, நல்லறிவைப் புகட்டும் நூல்களே; அம்மக்கள் அறியாதவை, பல வரிகள் அமைந்த வளையல் அணிந்த பெண்களின் இடைகளே; அந்நகரில் இல்லாதவை பிச்சை எடுக்கும் தொழில்களே ; எத்தகையவரும் இகழ்ந்து கற்றுக்கொள்ளாதவை வஞ்சிக்கும் தொழில்களே.
கவிஞர் நன்றி.
———————
மாமனுநூல் வாழ வருசந் திரன்சுவர்க்கி
தாமரையாள் வைகுந் தடந்தோளான் – காமருபூந்
தாரான் முரணைநகர் தானென்று சாற்றலாம்
பாராளும் வேந்தன் பதி.
இவ்வாறு வருணிக்கின்ற புலவர், மாவிந்த நகரத்தை வருணித்ததில் அமைதி கொண்டாரில்லை. ஆகலின் , மேலும் வருணிக்க வேண்டும் என்ற ஆவல் துள்ளி எழுகிறது. அதற்குக் காரணம் , “இதுவரை , இத்தனை பாடல்களைப் பாடி விட்டோமே! சந்திரன் சுவர்க்கி நம்மை ஆதரித்தவன் அல்லவா? அவனது பெயரை எடுத்துரைக்கவில்லையே ! ” என்ற ஏக்கம் போலும் ! அதனால் , மீண்டும் ‘மாவிந்த நகரம் சந்திரன் சுவர்க்கி ஆளும் முரனை நகரைப் போன்றது’, எனக் கூறுகிறார். புகழேந்தியாரது நன்றி பாராட்டும் குணத்தை இதனால் அறியலாம். புலவர் கூற்றை கேட்போம்:
–> நிடத நாட்டு அரசனான நளனது மாவிந்த நகரைத் திருமகள் விரும்பி வீற்றிருக்கின்ற உயர்ந்த தோள்களையுடையானும், அழகிய பூமாலையை அணிந்தவனும், சிறந்த மனுநீதி நூல் மேன்மையடைய வந்து பிறந்தவனுமான சந்திரன் சுவர்க்கி என்பவனது முரணையம்பதியைப் போன்றது என்று கூறலாம்
நளன் என்னும் நல்லரசன்.
————————————-
ஓடாத தானை நளனென் றுளனொருவன்
பீடாருஞ் செல்வப் பெடைவண்டோ -டோ
முருகுடைய மாதர் முலைநனைக்குந் தண்டார்
அருகுடையான் வெண்குடையான் ஆங்கு.
‘ஆங்கு பெடை வண்டோடு ஊடா நனைக்கும் தாண்தார் உடையான் வெண்குடையான் ஒருவன் நளன் என்று உளன்!’ என்று கூட்டுக.
( ஓடாத = தோற்று , தானை = சேனை, பீடாரும் = ( பீடு + ஆரும் )பெருமை பொருந்திய, செல்வம் = காதல், பெடைவண்டு = பெண் வண்டு, முருகு = தேன், தண்தார் = குளிர்ச்சி பொருந்திய மலர்மாலை )
இத்தகைய சிறப்பு வாய்ந்த அந்நகரில் , பெருமை பொருந்திய அன்புடைய பெண் வண்டு ஆண் வண்டோடு ஊடியது; அதனால் மலர் மாலையிலிருந்த தேன் வழிந்து ஓடி , பக்கத்தில் உள்ள பெண்களின் மார்பிடமெல்லாம் நனைக்கும் குளிர்ச்சி பொருந்திய மாலையை மார்பில் உடையவன்; வெண்கொற்றக் குடையை உடையவன்; இத்தகைய சிறப்புடையவனாய், பகைவர்க்கும் புறமுதுகிட்டுத் தோற்று ஓடாத சேனைகளையுடைய ‘ நளன் ‘ என்னும் ஒருவன் இருந்தனன்.
நளன் அறநெறியில் அரசு புரிதல்.
———————————————
சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை அறங்கிடப்பத்
தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான் – மாதர்
அருகூட்டும் பைங்கிளியும் ஆடற் பருந்தும்
ஒருகூட்டில் வாழ உலகு.
( சீதம் = குளிர்ச்சி , தாது = மகரந்தம் , அவிழ் = சிந்தும், பூந்தாரான் = அழகிய மலர்மாலையை அணிந்தவன் )
மகரந்தப் பொடி சிந்துகின்ற மலர் மாலையைத் தரித்த நளன், பெண்டி தம் அருகில் வைத்துப் பாலும் பழமும் ஊட்டி வளர்க்கின்ற பச்சைக்கிளியும் பருந்தும் ஒரே கூட்டிற்குள் பகைமை நீங்கி வாழும்படி, குளிர்ச்சியுடைய நிலவு போன்ற வெண்கொற்றக்குடையின் நிழலில், சிறந்த அறங்கள் நிற்கத் தன் நாட்டைத் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் ஆண்டு வந்தான்.
நளன் சோலைக்குச் செல்லல்
—————————————–
வாங்குவளைக் கையார் வதன மதிபூத்த
பூங்குவளைக் காட்டிடையே போயினான் – தேங்குவலைத்
தேனாடி வண்டு சிறகுலர்த்தும் நீர்நாடன்
பூநாடிச் சோலை புக.
( வாங்கு வளை = வளைந்த வளையல், வதனமதி = முகமாகிய சந்திரன், தேங்குவளை = தேம் + குவளை, தேம் = இனிமை, தேனாடி = தேன் + ஆடி, ஆடி = முழுகி. )
இனிமை பொருந்திய குவளை மலரின் தேனில் முழுகி எழுந்த வண்டுகள், தம் சிறகுகளை உலரச் செய்கின்ற நீர்வளம் வாய்ந்த நாடு நிடதம்; அந்நாட்டரசனாகிய நளன் , பூக்கொய்ய விரும்பி சோலைக்குள் செல்லும்போது, வளைந்த வளையல்களை அணிந்த பெண்களின் முகமாகிய நிலவினிடத்து மலர்ந்துள்ள விழிகள் என்னும் அழகிய நீலமலர்க் கூட்டத்தின் நடுவிலே சென்றான்.
–> நளன் சோலைக்குச் சேன்ற போது பெண்கள் அவனையே பார்த்துக்கொண்டிருந்தனர் என்பது கருத்து. இதனால் நளனது அழகிய தோற்றம் புலனாகும்.
நளன் சென்ற காலம் இளவேனில்.
——————————————–
வென்றி மதவேடன்வில்லெடுப்ப, வீதியெல்லாம்
தென்றல் மதுநீர் தெளித்துவர, – நின்ற
தளவேனல் மீதலருந் தாழ்வரைசூழ் நாடற்கு
தளவேனல் வந்த தெதீர்.
( வென்றி = வெற்றி, மதவேடன் = மதவேள் + தன், மதவேள் = மன்மதன், மதுநீர் = தேன் , தளவு = முல்லை, ஏனல் = தினை, அலரும் = மலரும் , தாழ்வரை = மலைச்சாரல். )
முல்லை நிலத்தின்கண் வளர்ந்த முல்லைக்கொடி படர்ந்து குறிஞ்சி நிலத்தின்கண் வளர்ந்துள்ள தினைத்தட்டையின் மீது மலர்கள் பூக்கின்ற மலைச்சாரல் சூழ்ந்த நிடத நாட்டு மன்னனாகிய நளனுக்கு எதிரில் மன்மதன் தனது வெற்றி மிக்க கரும்பு வில்லைத் தாங்கி வரவும் தென்றல் வீதி எல்லாம் மது நீரை தெளித்துக்கொண்டு வரவும் இளவேனிற்பருவம் வந்துற்றது.
நளன் பூங்காவை அடைதல்.
————————————–
தேரின் துகளைத் திருந்திழையார் பூங்குழலின்
வேரிப் புனல்நனைப்ப வேயடைந்தான் – கார்வண்டு
தொக்கிருந்தா லித்துழலுந் தூங்கிருள்வெய் யோற்கொதுங்கிப்
புக்கிருந்தால் அன்ன பொழில்.
( வேரி = தேன், தொக்கிருந்தாலித்துழலும் = தொக்கு + இருந்து + ஆலித்து + உழலும் , தொக்கு = ஒருங்கு சேர்ந்து, ஆலித்து = ஆரவாரம் செய்து, வெய்யோன் = கொடிய கிரணங்களையுடைய சூரியன், பொழில் = சோலை. )
மிக்க இருளானது சூரியன் ஒளிக்கதிர்களின் முன் விலகி ஒளித்துக்கொண்டிருந்தாற்போன்ற கருநிற வண்டுகள் ஒன்றாகக் கூடி மகிழ்ந்து சுற்றித் திரிகின்ற சோலையை, தனது தேர் உருளைகளிற் படிந்த புழுதியைத் திருத்தமான அணிகள் அணிந்த பெண்களது மலர் சூடிய கூந்தலினின்று ஒழுகி வழிகின்ற பூந்தேன் என்னும் நீர் நனைத்துக் கரைக்கும்படி நளன் சேர்ந்தான்!
அன்னம் தோன்றுதல்.
—————————–
நீணிறத்தாற் சோலை நிறம்பெயர நீடியதன்
தாணிறத்தாற் பொய்கைத் தலஞ்சிவப்ப – மாணிறத்தான்
முன்னப்புள் தோன்றும் முளரித் தலைவைகும்
அன்னப்புள் தோன்றிற்றே ஆங்கு.
( நீணிறம் = மிக்க வெண்ணிறம், பெயர = மாறுபட, மாண் நிறத்தான் = நளன், முளரித்தலை = தாமரையில் , அன்னப்புள் = அன்னப்பறவை. )
நள தமயந்தியர் ஒன்று சேரக் காரணமாயிருந்த அன்னம் நளன் முன் தோன்றுகிறது.
அந்தப் பொழிலில் மாட்சிமைப்பட்ட அழகினையுடைய நளன் முன்பு நீரில் முளைத்தெழுகின்ற தாமரை மலரில் தங்கி வாழ்கின்ற அன்னப் பறவை ஒன்று, தன் உடலின் வெண்மை நிறத்தால் சோலையின் பசுமை நிறம் வெண்ணிறமாய் மாறவும் , தன் கால்களின் செந்நிற மிகுதியினால் அங்குள்ள தடாகத்தின் நீரிடமெல்லாம் செந்நிறமாய் மாறவும் தோன்றியது.
நளன் தோழி ஒருத்தியை அன்னத்தை
————————————————–
பிடித்துத்தர ஏவுதல்.
——————————
பேதை! மடவன்னந் தன்னைப் பிழையாமல்
மேதிக் குலமேறி மென்கரும்பைக் – கோதிக்
கடித்துத்தான் முத்துமிழுங் கங்கைநீர் நாடன்
பிடித்துத்தா என்றான் பெயர்ந்து.
( மட அன்னந்தன்னை = இளமை பொருந்திய அன்னத்தை, மேதிக்குலம் = எருமை மந்தை )
அன்னத்தின் அழகில் நளன் மனம் ஈடுபட்டது. ஆதலின், அதனைப் பிடித்துத்தர அவன் தோழி ஒருத்தியை ஏவினான்.
எருமை மந்தை கரும்பு வயலில் புகுந்து மென்மையான கரும்புகளைக் கடித்துக் குதப்பி முத்துகளைக் கக்குகின்றது; அத்தகு நாட்டையுடையவன் நளன். அவன் தோழி ஒருத்தியை பார்த்து, ‘மடவாய் , நீ சென்று இளமை பொருந்திய அந்த அன்னத்தைத் தப்பாமல் பிடித்துக்கொண்டுவந்து கொடுப்பாயாக,’ என்றான்.
கரும்பின் கணுவில் முத்துப் பிறக்கும் என்பது பல நூல்களில் கூறப்படுகின்றது.
மகளிர் அன்னத்தைப் பிடித்தல்.
——————————————-
நாடிமட அன்னத்தை நல்ல மயிற்குழாம்
ஓடி வளைக்கின்ற தொப்பவே – நீடியநல்
பைங்கூந்தல் வல்லியர்கள் பற்றிக் கொடுபோந்து
தங்கோவின் முன்வைத்தார் தாழ்ந்து.
( தங்கோ = தம் + கோ (தம் அரசன்) )
மயில் கூட்டம் அன்னத்தைச் சூழ்ந்தது போலப் பெண்கள் அன்னத்தைச் சூழ்ந்தார்கள்; பெண்டிர் மயில் போன்ற சாயலையுடையவர் எனக் கூறப்பெறுவராதலின், ஆசிரியர் இங்ஙனம் கூறினார்.
மன்னனைக் கண்ட அன்னம் வருந்துதல்.
——————————————————
அன்னந் தனைப்பிடித்தங் காயிழையார் கொண்டுபோய்
மன்னன் திருமுன்னர் வைத்தலுமே – அன்னம்
மலங்கிற்றே தன்னுடைய வான்கிளையைத் தேடிக்
கலங்கிற்றே மன்னவனைக் கண்டு.
( ஆயிழையார் = ஆராய்ந்தெடுக்கப்பட்ட அணிகலைப் பூண்ட மகளிர்; மலங்கிற்று = மருண்டது ; வான் கிளை = பெருஞ்சுவர். )
ஆராய்ந்தெடுக்கப்பட்ட அணிகளையுடைய மகளிர் அன்னத்தைப் பிடித்துச் சென்று அரசன் முன் வைத்த உடனே, அன்னம் தனது சுற்றமாகிய மற்ற அன்னங்களைக் காணாமல் வருந்தியது; மன்னவனைக் கண்டு மருண்டது.
‘அஞ்சாதே!’ என அரசன்
——————————————-
அன்னத்தைத் தேற்றுதல்.
——————————————-
‘அஞ்சல் மடவனமே! உன்றன் அணிநடையும்
வஞ்சி அனையார் மணிநடையும்- விஞ்சியது
காணப் பிடிததுகாண்,’ என்றான் களிவண்டு
மாணப் பிடித்தார் மன்.
மதுவை உண்டு களிக்கும் வண்டுகள் மிகுதியாய் மொய்த்துள்ள மாலையை அணிந்த நளன் ,” இளமை பொருந்திய அன்னமே, அஞ்சாதே! உனது அழகிய நடையும், வஞ்சிக் கொடி போன்ற பெண்களின் அழகிய நடையும் ஆகிய இரண்டனுள் எது சிறந்தது என்று கண்டறிவதற்காகவே உன்னைப் பிடித்துக்கொண்டு வரச் செய்தேன்! வேறொன்றுமில்லை! ” என்றான்.
அன்னம் அச்சம் நீங்கல்.
—————————————-
செய்ய கமலத் திருவை நிகரான
தையல் பிடித்த தனியன்னம் – வெய்ய
அடுமாற்ற மில்லா அரசன்சொற் கேட்டுத்
தடுமாற்றம் தீர்ந்ததே தான்.
(தையல் = தோழி, வெய்ய = கொடுமையான, அடு மாற்றம் = கொல்லும் சொல், தான் = அசை. )
செந்தாமரையில் வீற்றிருக்கும் இலக்குமியைப் போன்றவளான தோழி பிடித்த ஒப்பற்ற அன்னம், கொடுமையான கொலைத் தொழில் இல்லாத நளனது சொல்லைக் கேட்டு மனக்கலக்கம் தீர்ந்தது.
தமயந்தியைப்பற்றி அன்னம் நளனுக்குக் கூறல்.
——————————————————————
‘திசைமுகந்த வெண்கவிகைத் தேர்வேந்தே! உன்றன்
இசைமுகந்த தோளுக் கிசைவாள் – வசையில்
தமையந்தி என்றோதும் தையலாள் மெந்தோள்
அமையந்தி என்றோர் அணங்கு.
( திசைமுகந்த = திசைகளில் பரவிய, வெண்கவிகை = வெண்மையான குடை, அமை = மூங்கில், அந்தி = அழகி, அணங்கு = தெய்வப் பெண். )
‘எட்டுத் திக்குகளிலும் பரவிய வெண்கொற்றக் குடையுடையுடைய தேரினையுடைய மன்னனே, உன் புகழைத் தாங்கிய தோள்களுக்கு, மூங்கில் போலும் அழகிய மெல்லிய தோள்களையுடைய ஒப்பற்ற தெய்வமகள் போன்ற குற்றமற்ற தமயந்தி என்று கூறப்படுகின்ற ஒருத்தி பொருத்தமாவாள்.’
இவ்வாறு அன்னம் அவன் தன் அச்சத்தைப் போக்கிப்பாதுகாத்ததற்கு நன்றி பாராட்டும் முறையில் கூறியது.
நளன், ‘தமயந்தி யார்?’ எனக் கேட்டல்.
——————————————————–
அன்னம் மொழிந்த மொழிபுகா முன்புக்குக்
கன்னி மனக்கோயில் கைக்கொள்ளச் – ‘சொன்னமயில்
ஆர்மடந்தை?’என்றான் அனங்கன் சிலைவளைப்பப்
பார்மடந்தை கோமான் பதைத்து.
( புக்கு = புகுந்து, அனங்கன் = உடலற்ற மன்மதன் )
அன்னம் கூறிய அச்சொல் செவியில் நன்கு நுழையும் முன்பே நளன் மனமாகிய கோயிலுக்குள் தமயந்தி சென்று , அதைத் தனதாக்கிக்கொண்டான். ஆதலால் , மன்மதன் அவன் கரும்பு வில்லை வளைத்து அம்பு தொடுத்து எய்ய, நிலமகளுக்குத் தலைவனான நளன் , துடிதுடித்துக் காதலால் மயங்கி, ” நீ கூறிய மயில் போன்றவள் யாருடைய மகள்?” என அன்னத்தை வினவினான்.
நளன் தமயந்தியைப் பற்றி விளக்கிக் கூறுகின்றது.
————————————————————————–
‘எழுவடுதோள் மன்னா! இலங்கிழையேர் தூண்டக்
கொழுநுதியிற் சாய்ந்த குவளை – உழுநர்
மடைமிதிப்பத் தேன்பாயும் மாடொலிநீர் நாடன்
கொடைலிதர்ப்பன் பெற்றதோர் கொம்பு.
( எழு = இருப்புத்தூண், அடு = வென்ற, இலங்கிழை = (இலங்கு + இழை) விளங்குகின்ற அணி, விதர்ப்பன் = கொடைக்குணம் பொருந்திய விதர்ப்ப நாட்டு அரசன், கொம்பு = பூங்கொம்பு போன்றவளான தமயந்தி.)
‘இருப்புத்தூணை வென்ற தோள்களையுடைய அரசனே, யான் கூறிய விளங்குகின்ற அணிகளை அணிந்த அப்பெண்ணானவள், உழவர்கள் ஏரில் பூட்டிய மாடுகளைத் தூண்டி நடத்த , அப்போது அவ்வேரின் கொழுவின் முனையால் கீறப்பட்டுச் சாய்ந்து கீழே வீழ்ந்த குவளை மலர்களி , நீர் வரும் மடைகளில் அவர்கள் காலால் மிதித்தலினால் அவற்றிலுள்ள தேனானது வழிந்து பாய்ந்தோடுகின்ற வயற்புறங்களில் நீர் ஓடுகின்ற ஒலிகள் மிக்க நீர் வளம் பொருந்திய நாட்டையுடையவனாகிய கொடையிற்சிறந்த விதர்ப்ப நாட்டு மன்னன் பெற்று வளர்த்த ஒப்பற்ற பூங்கொம்பு போன்றவள் ஆவாள்.
தமயந்தி விதர்ப்ப நாட்டு மன்னன் மகள் என்று கூறிய அன்னம் இனி அவளுடைய அழகைக் கூறுகின்றது.
பெண்மை அரசு.
———————————
‘ நாற்குணமும் நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சர்
ஆர்க்குஞ் சிலம்பே அணிமுரசா – வேற்படையும்
வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்
ஆளுமே பெண்மை யரசு.
( ஆர்க்கும் = ஒலிக்கும், அணிமுரசு = அழகிய முரசு )
‘ நாணம், மடம், ஆச்சம், பயிர்ப்பு, என்னும் நான்கு குணங்களையே , தேர், யானை, குதிரை, காலாள் என்னும் நான்கு வகை சேனைகளாகக் கொண்டு ; மெய் , வாய் , கண், மூக்கு , செவி எனும் ஐம்பொறிகளையும் வழிச் செல்கின்ற அறிவையே சிறந்த அமைச்சர்களாகக் கொண்டு , காலில் அணிந்துள்ள ஒலிக்கின்ற சிலம்பே அழகிய பேரிகையாய் விளங்க , வேற்படையும் வாட்படையுமே இரு கண்களாக , அவள் பெண் இயல்பாகிய அரசை ஆட்சி புரிகின்றாள்.
‘பெண் இயல்பு’ என்னும் அரசை ஆட்சி செய்கின்றாளாம் தமயந்தி.அதை இப்பாடல் விளக்குகின்றது.
சிலம்பின் இரக்கம்.
—————————
‘மோட்டிளங் கொங்கை முடியச் சுமந்தேற
மாட்டா திடையென்று வாய்விட்டு – நாட்டேன்
அலம்புவார் கோதை அடியிணையில் வீழ்ந்து
புலம்புமாம் நூபுரங்கள் பூண்டு.’
( மோடு = உயர்வு, கொங்கை = முலை, நூபுரங்கள் = சிலம்புகள் )
‘தமயந்தியினுடைய இடையானது உயர்ந்த இளமுலைகளை அவளது வாழ்நாள் முழுவதும் சுமந்து நிற்கும் வன்மையுடையதாகாதெனக் காலில் அணிந்துள்ள சிலம்புகள் , புதிய தேன் மேலெழும் மலர் சூடிய கூந்தலாளின் இரண்டு அடிகளிலும் வீழ்ந்து அவ்வடிகளுக்கு அணியாக அமைந்து வாய் விட்டுப் புலம்பும்!’
முலைகள் பாரமுடையன; ஆதலின் ,இடை அவற்றைத் தாங்க முடியாமல் ஒடிந்துவிடுமாம்! இதை நினைத்து சிலம்புகள் புலம்புகின்றன.
நுடங்கும் நுண்ணிடை.
——————————–
‘என்றும் நுடங்கும் இடையென்ப ஏழுலகும்
நின்ற கவிகை நிழல்வேந்தே! – ஒன்றி
அறுகாற் சிறுபறவை அஞ்சிறகால் வீசும்
சிறுகாற்றுக் காற்றாது தேய்ந்து.’
( நுடங்கும் = துவளும், கவிகை = குடை, ஆற்றாது = பொறுக்க முடியாமல். )
‘இவ்வுலகின் ஏழு தீவுகளிலும் நிலைத்த குடை நிழலையுடைய அரசனே , ஆறு கால்களையுடைய சிறிய பறவைகளாகிய வண்டு, ஒன்று கூடித் தம் அழகிய சிறகுகளினால் உண்டாக்குகின்ற மென்மையான் காற்றுக்கும் பொறாமல் மெலிவடைந்து எப்போதும் அவள் இடை துவளும்.’
வண்டுகளின் சிறகுகள் எத்துணை மெல்லியவை! அவற்றிலிருந்து எவ்வளவு காற்று வீசும்! அக்காற்றுக்கே தாங்க முடியாமல் அவ்விடை வருந்துமாம்! அவ்வளவு சிறிய இடையாம்!
நெற்றியழகு.
——————
‘செந்தேன் மொழியாள் செறியளாக பந்தியின்கீழ்
இந்து முறியென் றியம்புவார் – வந்தென்றும்
பூவாளி வேந்தன் பொருவெஞ் சிலைசார்த்தி
ஏவாளி தீட்டும் இடம்.’
( செறி = நெருங்கிய , பொரு வெஞ்சிலை = போர் செய்கின்ற கொடிய வில், அளகம் = கூந்தல், இந்து = நிலவு, பூவாளி = பூவாகிய அம்பு )
‘பூவாகிய அம்பினையுடைய மன்மதன் எக்காலத்தும் வந்து போர் செய்கின்ற கொடிய வில்லைப் பொருந்த வைத்து, அம்பின் வரிசைகளைத் தீட்டிக் கூர்மை செய்யும் இடம், நல்ல தேன் போன்ற இனிய சொற்களையுடைய தமையந்தியின் நெருங்கிய முன்னுள்ள கூந்தல் வரிசையின் பக்கத்திலுள்ள பிறைத்துண்டாகிய நெற்றி என்று கூறுவர் புலவர்.’
‘உனக்கும் அவட்கும் தொடர்பென்ன?’ என்று
———————————————————
நளன் அன்னத்தை வினவுதல்.
—————————————-
‘அன்னமே ! நீயுரைத்த அன்னத்தை என்னாவி
உன்னவே சோரும்! உனக்கவளோ – டென்னை
அடை’வென்றான் மற்றந்த அன்னத்தை முன்னே
நடைவென்றாள் தன்பால் நயந்து.
( அடைவு = தொடர்பு, நயனது = விரும்பி )
நளன், இவ்வாறு கூறிய அந்த அன்னப் பறவையை நடையினால் மிக்க இளமைப் பருவத்திலேயே வெற்றி கொண்டவளாகிய தமயந்தியின் மேல் ஆசை கொண்டு, ‘ அன்னமே, நீ கூறிய அன்னத்தைப் போன்றவளாகிய தமயந்தியை நினைக்கும்போதே என்னுயிர் வாட்டமுறுகின்றது! அவளுடன் உனக்குள்ள தொடர்பு யாது?’ எனக் கேட்டான்.
‘உனக்கும் அவளுக்கும் தொடர்பென்னா?’ எனக் கேட்டதிலிருந்து தனது காதலை அன்னப்பறவை சொல்லுந்தகுதியில் அத்தொடர்புளதோ என்ற குறிப்பையும், ‘சொன்னால் அன்னத்தின் சொல்லை தமயந்தி ஏற்றுக்கொள்வாளோ ! அத்தகைய மதிப்பு அதனிடத்தில் அவளுக்கு உளதோ!’ என்ற குறிப்பையும் நாம் பெறலாம்.
அன்னம் தமயந்தியின் நடையைக் கற்கத் தான்
—————————————————————
அவளிடம் வந்ததாகக் கூறல்.
—————————————
பூமனைவாய் வாழ்கின்ற புட்குலங்கள் யாமவள்தன்
மாமனைவாய் வாழும் மயிற்குலங்கள்; – காமன்
படைகற்பான் வந்தடைந்தான்; பைந்தொடியாள் பாத
நடைகற்பான் வந்தடைந்தோம் நாம்.
( பூ மனை வாய் = பூவாகிய மாளிகையில், புட்குலங்கள் = பறவைக்குலங்கள், பைந்தொடியாள்= பசுமையான வலைகளை அணிந்த தமயந்தி )
‘மன்மதன் தமயந்தி தன் விழியாகிய அம்பு எய்வதைக் கண்டு அம்பெய்திப் பழகிக்கொள்ள அங்கு வந்து சேர்ந்தான்; யாங்கள் பசுமையான வளையலை அணிந்த தமயந்தியின் நடையைக் கற்பதற்காக வந்து சேர்ந்தோம்; யாங்கள் ‘மலர்’ என்னும் மாளிகையில் வாழ்கின்ற மயிலினது கூட்டத்தைப் போன்ற தோழிப் பெண்கள் என்று எங்களைக் கண்டோர் கூறும்படி அவளுடன் பழக்கம் கொண்டுள்ளோம்!’
( அன்னம் இவ்வாறு கூறுவதால் நளன் காதலை உரைத்தற்குத் தகுதி உடையதே அன்னம் என்னும் குறிப்பையும் ஆசிரியர் உணர்த்துகின்றார்.)
நளன் காதல்.
———————-
இற்றது நெஞ்சம் ; எழுந்த திருங்காதல்;
அற்றது மானம் ; அழிந்ததுநாண்;- ‘மற்றினியுன்
வாயுடைய தென்னுடைய வாழ்வெ’ன்றான் வெங்காமத்
தீயுடைய நெஞ்சுடையான் தேர்ந்து.
( இருங்காதல் = பெருங்காதல், அற்றது = நீங்கியது, வெங்காமம் = கொடிய காமம் )
இவ்வண்ணம் அன்னம் கூறியதும் நளனது மனம் தன்னிலையை இழந்தது! மிக்க காதல் எழுந்தது! பெருமை நீங்கியது ! வெட்கம் இல்லையானது! கொடிய காமம் என்னும் தீப்பற்றிய மனமுடையவனாகிய நளன், சற்றே அறிவு தெளிந்தான்; பின்பு , ” என் உயிர் வாழ்க்கை உன் வாயிலிருந்து வரும் சொற்களில் இருக்கிறது! ‘ என்று கூறினான்.
அன்னம் நளனுக்கு ஆறுதல் கூறிச் செல்லல்.
————————————————————–
‘வீமன் திருமடந்தை மென்முலையை உன்னுடைய
வாம நெடும்புயத்தே வைகுவிப்பேன் – சேம
நெடுங்குடையாய்!’ என்றுரைத்த நீங்கியதே அன்னம்
ஒடுங்கிடையாள் தன்பால் உயர்ந்து.
( வைகுவிப்பேன் = பொருந்தச் செய்வேன் , சேம நெடுங்குடை = குடிமக்கட்கு நன்மை செய்கின்ற குடை )
‘ நாட்டு மக்கட்கு நன்மை செய்கின்ற விரிந்த குடையை உடையவனே, வீமராசனுடைய செல்வ மகளான தமயந்தியின் இளமை தவழும் மார்பினை, உன்னுடைய அழகிய உயர்ந்த தோள்களைப் பொருந்தச் செய்விப்பேன்!’ என்று அன்னம் கூறிவிட்டு நுண்மையான இடையை உடையவளாகிய தமயந்தியிடம் பறந்து சென்றது.
நீங்கிய அன்னத்தின் நினைவில் மிதத்தல்.
————————————————————
‘இவ்வளவில் செல்லுங்கொல்! இவ்வளவில் காணுங்கொல்!
இவ்வளவில் காதல் இயம்புங்கொல்!-இவ்வளவில்
மீளுங்கொல்!’ என்றுரையா விம்மினான் மும்மதம்நின்று
ஆளுங்கொல் யானை அரசு.
( மதம் = யானைகளுக்குரிய கன்ன மதம். )
அன்னம் சென்றது. சென்றவுடன் நளன் மனம் அலைபாய்கின்றது! அதனை ஆசிரியர் மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டுகின்றார்.
மூன்றுவகை மதங்களும் மிகுந்து அதனால் அவைகளின் வழிபட்டு நிற்கும் கொலைத் தொழிலைப் பூண்ட யானையையுடைய நளன் என்னும் மன்னன்,’ அன்னமானது இத்தனை நேரம் வீமன் தலை நகரான குண்டின புரத்தை அடைந்திருக்குமோ! இத்தனை நேரம் தமயந்தியைக் கண்டிருக்குமோ! இத்தனை நேரத்திற்குள் எனக்கு அவளிடமுள்ள உண்மையான அன்பை உரைத்திருக்குமோ! இதற்குள் அங்கிருந்து திரும்புமோ! திரும்பி வந்து கொண்டிருக்குமோ!’ என்று கூறிக் கூறி பெரு மூச்சு விட்டு ஏங்கிக்கொண்டிருந்தான்.
தம் வாழ்வில் காதல் அனுபவத்தையுடையவர் இப்பாடலின் அருமையை நங்குணர்வர்.
மேலும் வருந்துதல்.
———————————–
சேவல் குயிற்பெடைக்குப் பேசுஞ் சிறுகுரல்கேட்டு
ஆவி உருகி அழிந்திட்டான் – பூவின்
இடையன்னம் செங்கால் இளவன்னம் சொன்ன
நடையன்னம் தன்பால் நயந்து.
( சேவல் குயில் = ஆண் குயில், பெடைக்கு = பெண் குயிலுக்கு. )
நளன் , தாமரைப் பூவில் வாழ்கின்ற , சிவந்த கால்களையுடைய அன்னப் பறவை சொன்ன அன்னம் போன்ற நடையினையுடைய தமயந்தியின் மீது காதல் மிக்கு, ஆண் குயிலானது பெட்டைக் குயிலுடன் பேசுகின்ற இனிமையான குக்ரலைக் காதால் கேட்டு தளர்ந்து வருந்தினான்.
மயிலைக்கண்டு வருந்துதல்.
————————————-
அன்னம் உரைத்த குயிலுக் கலசுவான்
மென்மயில்தன் தோகை விரித்தாட- முன்னதனைக்
கண்டாற்றா துள்ளங் கலங்கினான் ; காமநோய்
கொண்டார்க்கிஃது அன்றோ குணம்.
( ஆற்றாது = பொறுக்க மாட்டாமல்.)
அன்னத்தால் சொல்லப்பெற்ற குயிலினது குரல் போன்ற குரலையுடைய தமயந்தியைப் பெறத் தளர்ந்து நிற்கும் நளன், மென்மையான தன்மையுடைய தனது தோகையை மயில் விரித்து ஆடிக்கொண்டிருக்க , தன் எதிரில் அதைப் பொறுக்க முடியாமல் மனம் கலங்கினான். காதல் நோய் கொண்டவர்க்கு இது இயல்பே அன்றோ?
மயில் ஆடுவது, மயில் போன்ற சாயலையுடைய தமயந்தியை நினைவுக்குக் கொண்டு வருவதால், நளனது வருத்தம் மிக்கதென்க.
நளன் கொடியைக் கண்டு வருந்துதல்.
—————————————————-
‘வாரணியுங் கொங்கை மடவாள் நுடங்கிடைக்குப்
பேருவமை யாகப் பிறந்துடையீர்;- வாரீர்
கொடியார்!’ எனச்செங்கை கூப்பினான் நெஞ்சம்
துடியா நெடிதுயிராச் சோர்ந்து.
( வார் = கச்சு, ஆர் = சிறப்பு விகுதி, நெடிது உயிரா = பெருமூச்சு விட்டு. )
நளன் மனந்துடித்து, பெருமூச்சு விட்டு, ” பூங்கொடிகளே , கச்சினை அணிந்த முலையினையுடைய இளமை பொருந்திய தமயந்தியின் துவளும் இடைக்குச் சிறந்த உவமைப் பொருளாகத் தோன்றி அதன் பயனைப் பெற்றுள்ளீர்கள்; ஆகலின், உங்களுடைய அழகு அவளுடைய இடையழகு போன்றதா என்பதைக் காண வேண்டும்! வாருங்கள்!” என்று கூறித் தன் சிவந்த கைகளைக் குவித்துக் கொடிகளைத் தொழுதான்.
தமயந்தியின் கொங்கை முதலியவற்றால் தன் காமம்
———————————————————-
தணியும் என நளன் நினைத்தல்.
—————————————-
‘கொங்கையிள நீரால் குளிர்ந்தவிளஞ் சொற்கரும்பால்
பொங்கு சுழியென்னும் பூந்தடத்தில் – மங்கைனறுங்
கொய்தாம வாசக் குழல்நிழற்கீழ் ஆறேனோ
வெய்தாமக் காமவிடாய் வெப்பு!’
( கொய் தாமம் = மணமுடைய , அப்போதே பறித்தெடுக்கப்பட்ட மலரால் ஆன மாலை.)
‘தமயந்தியினுடைய முலைகளாகிய இளநீரினாலும், குளிர்ச்சி பொருந்திய மென்மையான சொற்களாகிய குப்பஞ்சாற்றினாலும் ,அழகையுடைய உந்திச் சுழிஎன்னும்தாமரைத் தடத்தினில் நறுமணம் மிகுந்த அப்பொழுதே பறித்துச் சூடிய மலர்மாலையினையுடைய மணமுள்ள கூந்தலின் நிழலிலே கொடிய அந்தக் காம வெப்பத்தை ஆற்றிக்கொள்ளப் பெறேனோ?’
அன்னம் தமயந்தியை அடைதல்
——————————————
மன்னன் விடுத்த வடிவில் திகழ்கின்ற
அன்னம்போய்க் கன்னி அருகணைய – நன்னுதலும்
தன்னாடல் விட்டுத் தனியிடஞ்சேர்ந் தாங்கதனை
என்நாடல் சொல்லென்றாள் ஈங்கு.
( அருகு அணைய = அருகில் சேர, நன்னுதல் = ( நல் + நுதல் ) அழகிய நெற்றியை உடைய தமயந்தி , ஆடல் விளையாட்டு, நாடல் = தேடுதல்.)
நளன் தூதாக அனுப்பிய அழகால் திகழ்கின்ற அன்னப்பறவை, பறந்து சென்று , தமயந்தியிடம் சேர்தலும், அழகிய நெற்றியை உடைய தமயந்தியும் பூப்பறித்தல் முதலிய தன் சோலை விளையாட்டுகளை விட்டுவிட்டு, யாருமில்லாத ஒரு தனித்த இடத்திலே அன்னத்தை அழைத்துப் போய் , ஆங்கு அவ்வன்னத்தைப் பார்த்து , ‘ நீ இங்கு என்னைத் தேடி வந்தது எதற்காக ?’ என்று வினவினாள்.
‘உனக்கு தக்கான் தனக்கு நிகரிலா நளன்.’
——————————————————
‘செம்மனத்தான் தண்ணிளியான் செங்கோலான் மங்கையர்
தம்மனத்தை வாங்குந் தடந்தோளான் – மெய்ம்மை
நளனென்பான் மேனிலத்தும் நானிலத்தும் மிக்கான்
உளனென்பான் வேந்தன் உனக்கு.’
( தண் அளியான் = குளிர்ச்சி பொருந்திய கருணையுடையவன், தடந்தோளான் = பெரிய தோள்களையுடையவன், மிக்கான் = சிறந்தவன் )
‘ நல்ல மனம் உள்ளவனும், அன்போடு கூடிய இரக்க முடையவனும் , அறவழியினின்று தவறாது ஆட்சி செய்கின்றவனும், இளம் பெண்களின் மனத்தைத் தம்மிடம் இழுக்கின்ற நீண்ட உயர்ந்த தோள்களையுடையவனுமான உண்மையுள்ள நளன் என்னும் பெயரையுடையான், மேலுலகத்திலும் இவ்வுலகத்திலும் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத புகழையுடையான் இருக்கின்றான்.அவனே உனக்குக் காதலனாவான்!’என்றது அன்னம்.
திருமாலும் நளனுக்கு நிகராகான்.
———————————————-
‘அறம்கிடந்த நெஞ்சும் அருளொழுகு கண்ணும்
மறம்கிடந்த திண்டோள் வலியும் – திறங்கிடந்த
செங்கண்மால் அல்லனேல் தேர்வேந்தர் ஒப்பரோ
அங்கண்மா ஞாலத் தவற்கு?’
( அங்கண் = அழகிய இடத்தை உடைய, மாஞாலம் = பெரியவுலகம். )
தருமம் குடி கொண்ட மனமும் , இரக்கவுணர்வே வழிகின்ற கண்களும், வீரம் மிக்க திண்மையான தோள்களின் வலிமையும் உள்ளவனாயிருத்தலால், அழகிய இடத்தையுடைய இப்பெரு மண்ணுலகத்தில் அந்நளனுக்குச் சிவந்த கண்ணினையுடைய திருமாலே நிகராக மாட்டான் என்றால், மற்றத் தேர் ஊர்ந்து செல்லும் அரசர் அவனை ஒப்பர் எனக் கூறலாமோ? (கூறலாகாது)
தமயந்தி நளன்பால் உளத்தைச் செலுத்துதல்.
————————————————————-
புள்ளின் மொழியினொடு பூவாளி தன்னுடைய
உள்ளங் கவர ஒளியிழந்த – வெள்ளை
மதியிருந்த தாமென்ன வாய்ந்திருந்தாள் வண்டின்
பொதியிருந்த மெல்லோதிப் பொன்.
( புள் = பறவை, வெள்ளை மதியிருந்ததாம் என்ன = வெண்மை நிலவு இருந்ததைப் போல, ல்பொன் = திருமகள் ( திருமகளைப் போன்ற அழகுடைய தமயந்தி.)
வண்டினம் தங்கிய மென்மையான கூந்தலையுடைய திருமகளைப் போன்ற தமயந்தி, அன்னத்தின் சொல்லோடு மன்மதனால் எய்யப்படுகின்ற மலர் அம்புகள் தன்னுடைய மனத்தைக் கொள்ளை கொண்டு விட்டன ஆதலால், தன் ஒளி குறைந்த வெண்ணிலவு இருந்தது என்னும்படி காதலால் உள்ளம் வருந்த வெண்மை நிறம் வாய்ந்தவளாயினாள்.
அன்னம் நளனது காதலைக் கூறல்.
————————————————
மன்னம் மனத்தெழுந்த மையல்நோய் அத்தனையும்
அன்னம் உரைக்க அகமுருகி – முன்னம்
முயங்கினாள் போற்றன் முலைமுகத்தைப் பாரா
மயங்கினாள் ; என்செய்வாள் மற்று?
( முயங்குதல் = சேர்தல், பாரா =பார்த்து, மற்ரு = வேறு. )
நளன் நெஞ்சில் உள்ள காதலையெல்லாம் அன்னப் பறவையானது எடுத்து விளக்கிச்சொல்ல , தமயந்தி உள்ளம் கரைந்து நளனுக்குத் தான் உரியளாகுமுன்பே , அவனைச் சேர்ந்தவள் போன்று மிக்க ஆசையுடையளாய் , தனது மார்பைப் பார்த்து நளன் பால்