அன்பான தோழமைகளே, பாசமிகு BTC இதயங்களே.. வணக்கம்,
மற்றுமொரு படித்ததில் பிடித்தது பகுதியில் இன்றைய பதிவு டாக்டர். M.R.Copmayer, அவர்களின் தலைசிறந்த நூலில் இருந்து பெறப்பட்டது, சரி கட்டுரையைப் பார்போம்.
உடனடி எதிர்கொள்ளலை எப்படி உபயோகிப்பது ?
உங்களை ஒருவர் கடுமையாக விமர்சிக்கிறார் என வைத்துக் கொள்வோம். அவரின் விமர்சனம் நியாயமற்றது என நீங்கள் நினைக்கிறீர்கள், உங்கள் எதிர் கொள்ளல் என்ன ? அவரின் விமர்சனத்தை சூடாக மறுக்காதீர்கள். விவாதம் வலுத்து மனக்கசப்பு அதிகமாகும். பளிச்சென்று பலனளிக்கக்கூடிய தயாரான பதிலை நீங்கள் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்.
எப்பொழுது நீங்கள் நியாயமற்ற முறையில் விமர்சிக்கப்பட்டாலும் இந்தநிலை உடனடியாகப் பயன்படுத்தப் பட வேண்டும். இதுதான் விசைமுடுக்கப்பட்ட உடனடி எதிர்கொள்ளல். உங்களைப்பற்றிய விமர்சனம் உங்கள் மனத் துப்பாக்கியிலிருந்து இந்த பதிலை விசைமுடுக்கி அனுப்புகிறது.
அது நியாயமற்ற விமர்சனம் என எண்ணும் போது மட்டும் இதைப் பயன்படுத்துங்கள். உடனடியாகச் சிந்திக்க நேரம் கொடுக்காமல், அவற்றுக்கு உங்கள் பதிலை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இங்கு நான் குறிப்பிட்டுள்ள எதிர்கொள்ள்ளுக்கான பதில் மனோதத்துவ ரீதியில் பயனளித்துள்ளது, எனவே உங்களுக்கான ஒரு சிறப்பான பதிலை நீங்கள் கண்டுபிடிக்கும் வரை இப்பதிலையே நீங்கள் உபயோகப்படுத்தலாம்.
நீங்கள் முறையற்ற விதத்தில் விமர்சிக்கப்படும் போது இனிமையாக, பொறுமையாக நீங்கள் சொல்ல வேண்டிய பதில் :
“நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள், ஏன் அப்படி உணர்கிறீர்கள் என்பது எனக்கு நன்றாகவே புரிகிறது”
இவ்வளவே, முக்கியமான விடயம், இதற்கு மேலே ஏதும் சொல்லாதீர்கள். மறுத்துப்பேசத் தொடங்காதீர்கள். விவாதம் புரியாதீர்கள். விமர்சனம் பற்றி அலசாதீர்கள். விவாதம் முடிந்துபோன பிரமையை ஏற்படுத்துங்கள். விமர்சனத்தை நீங்கள் வாங்கிக் கொண்டாகிவிட்ட்து. விமர்சிப்பவர் எப்படி உணர்கிறார் என்பதையும் ஏன் அப்படி உணர்கிறார் என்பதையும் நீங்கள் புரிந்து கொண்டுவிட்டதாகத் திட்டவட்டமாக்க் கூறிவிட்டீர்கள்.
இதற்குமேல் ஒன்றுமில்லை. நீங்கள் மேலே ஒருவரி கூடப் பேசக் கூடாது. உங்களை முறையற்ற விதத்தில் விமர்சித்தவர் குழம்பிப் போவார் – அவருக்குப் பேச்சு வராது. விமர்சனம் சரியானது என நீங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அவரின் கருத்து தவறு என்றும் நீங்கள் உபயோகமற்று விவாதிக்கவில்லை.
விமர்சனத்தை ஒப்புக் கொள்ளாமல் நீங்கள் பரிவு, பொறுமை காட்டிவிட்டீர்கள். விமர்சித்தவர் “எப்படி”, “ஏன்” நடந்து கொண்டார் என்பதைப் புரிந்து கொண்டதாகச் சொல்லிவிட்டீர்கள்.
உங்களைப் பொறுத்தவரை விஷயம் முற்றுப்பெற்றதாக அறிவித்து விட்டீர்கள், நிறுத்துங்கள்.
முடிந்தால் சம்பாஷணையை முற்றிலும் மாறுபட்ட விதத்தில் திருப்பிவிடுங்கள். முடியவில்லை என்றால் மௌனம் சாதியுங்கள். அவர் திரும்ப தொடர்ந்தால் முன் சொன்ன அதே பதிலைச் சொல்லுங்கள். அது பற்றி அதிகம் விவாதிக்காதீர்கள்.
கிட்டத்தட்ட இதேபோன்ற மற்றொரு உதாரணம், சூடு அதிகமாகுமுன் ஒரு விவாதத்தை நிறுத்திவிடுவது. நீங்கள் யாவரும் நல்ல மனம் படைத்தவர்கள். நீங்களாக விவாதமொன்றைத் தொடங்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.
பிறர் உங்களுடன் விவாதிக்கத் தொடங்கும் போது, நல்ல எண்ணத்துடன் கூடிய பொறுமையான எதிர் கொள்ளலை உடனடியாக்க் கடைப்பிடியுங்கள்.
நீங்கள் ஒரு அபிப்பிராயம் கொள்ள எவ்வளவு உரிமை உள்ளவரோ, அவ்வளவு உரிமை ஒரு அபிப்பிராயம் கொள்ள எனக்கும் உண்டு. உங்கள் கருத்து சரியாகக் கூட இருக்கலாம். இதைச் சொல்லுங்கள்.
இங்கு நிறுத்துங்கள், உங்கள் நியாயமான கருத்தின் மூலம் விவாதத்தை நீடிக்க விரும்பவில்லை என்பதை அறிவித்து விட்டீர்கள். முற்றுப்புள்ளி.
நாம் சற்றே சிந்தித்து செயலாற்றுவோமா என் இனிய BTC தோழமைகளே....!!!
- நன்றியுடன்..... ப்ரியமுடன்