ஈஸ்டர் கொண்டாடுவது ஏன்: உலக வரலாற்றில் 'ஈஸ்டர்' என்றதும், இயேசு உயிர்த்தெழுந்த சம்பவமே நினைவில் வரும். உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகை. மனிதர் வாழும் போது மட்டுமே சாதனை புரிகின்றனர். இயேசுவோ,'நானே உயிர்த்தெழுதலும், வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்' என கூறிய வார்த்தைகள் சரித்திரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.
உயிர்த்தெழுந்த சம்பவத்துக்கு பின் கடவுளே குமாரனாக 'இயேசு' என்ற பெயரில் உலகில் தோன்றினார் என்ற விசுவாசம் கிறிஸ்தவர்கள் மத்தியில் வேரூன்றியது. கி.பி.313ல் ரோம அரசர் கான்ஸ்டன்டைன், இயேசுவை தெய்வமாக ஏற்று கொண்டதும், உலக வரலாற்றில் அவரை மையப்படுத்தினார். உலக வரலாற்றில் கி.மு. 1876 முதல் கி.மு.168 வரை எகிப்து, அசீரிய, பாபிலோன், மேதிய, பாரசீக, கிரேக்க வல்லரசுகள் ஆட்சிபுரிந்தன. கடைசியில் ரோம அரசு உலகை ஆண்ட போது, கி.பி.,1ல் இயேசு, கன்னி மரியின் மகனாக பிறந்து வளர்ந்து, மரித்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். கடவுள், பூமியில் பரிசுத்த சந்ததி ஏற்படுத்த தன் சாயலில் ஆதாமை படைத்தார். ஆனால், அவன் கடவுள் சொன்னதற்கு கீழ்படியாமல் மீறிய பாவத்தால், மகிமையை இழந்தான். ஆதாம், ஏவாளுக்கு பிறந்த முதல் மகன் காயின். இவன் தன் சகோதரன் ஆபேலை கொன்ற பாவத்தால் மனுக்குலத்திற்கு சாபம் வந்தது. கீழ்படியாமை, கொலை என பல பாவங்களால் மனிதன் சாவை சம்பாதித்தான்.
கடவுள் மனித இனத்துக்கு விதித்த பத்துக் கட்டளைகளையும் மீறினான். இதனால் ஏற்பட்ட பாவத்துக்குப் பரிகாரமாக ஆடு, மாடு அல்லது பறவைகளைப் பலி கொடுத்தான். மீண்டும் மீண்டும் பலி செலுத்தியும் பலனின்றி போனது. மனிதர்கள் தொடர்ந்து பாவம் செய்தனர். தன்னால் படைக்கப்பட்ட மனுக்குலம், சாபம், பாவம் என்ற சாவிலிருந்து விடுபட்டு நித்திய வாழ்வு அடைய வேண்டுமென்ற திட்டம் நிறைவேற கடவுளே, குமாரனாக சிலுவையில் ரத்தம் சிந்தி மனுக்குல பாவங்களுக்கு நித்திய மன்னிப்பை வழங்கினார். அவர் உயிர்த்தெழுந்த நன்னாளே 'ஈஸ்டர்' ஆக கொண்டாடப்படுகிறது.
உயிர்த்தெழுந்த பின் நடந்தவை: இயேசுவை சிலுவையில் அறைந்த பின், அவரது உடலை கல்லறையில் மூடி, ரோம போர் சேவகர்கள் காவல் காத்தனர். ஆனால், தான் சொன்னபடியே மூன்றாம் நாள் அவர் உயிர்த்தெழுந்தார். இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ், துக்கம் தாளாமல் இறந்தான். தோமா என்ற சீடரைத் தவிர மற்ற பத்து பேரும், பூட்டிய அறையில் யூத மத குருக்களுக்கு பயந்து, நம்மையும் கொலை செய்வார்களோ என்ற நடுக்கத்துடன் இருந்தனர். அப்போது இயேசு, அவர்கள் நடுவில் நின்று, ''பயப்படாதே, உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக. மரித்தேன், ஆனாலும் சதா காலங்களிலும் உயிரோடு இருக்கிறேன், மனந்திரும்புங்கள் என்ற நற்செய்தி உலகமெங்குமுள்ள மக்களுக்கு அறிவிக்கப்படும் போது மீண்டும் நான் உலகில் வருவேன். பாவம் செய்கிறவன் வாழ்வடைய முடியாது. மனம் வருந்தி திருந்தி, மீண்டும் பாவத்தில் விழாமல் இருந்தால் மட்டுமே நித்ய வாழ்வு பெறமுடியும். மீறினால், நியாயத்தீர்ப்புக்கு பின் நரகத்தில் செல்ல வேண்டும்,'' என்று சொல்லிச் சென்றார்.
ஒரு கன்னியின் மகனாக இயேசு பிறப்பார் , அவர் சிலுவை பாடு அனுபவிப்பார். மரணத்தை ஜெயிப்பார் என்று, பலநூறு ஆண்டுகளுக்கு முன் தீர்க்கதரிசிகள் மூலம் கூறிய வார்த்தைகள் நிறைவேறியதையும், சில நாட்களுக்கு முன் இயேசு கூறிய யாவும் நிறைவேறியதையும் எண்ணிப் பரவசமடைந்தனர். இயேசு சென்ற பிறகு தோமா வந்தான். அவனிடம், இயேசு வந்ததை சீடர்கள் தெரிவித்தும் நம்பவில்லை. உடனே, இயேசு அவர்கள் நடுவில் வந்து 'சமாதானம்' என்று கூறி, தோமாவிடம், தன் விலா, கை, கால்களிலுள்ள காயங்களையும் காட்டினார். உடனே தோமா கதறி அழுதபடி 'கடவுளே, என் ஆண்டவரே', என்று, அவர் பாதத்தில் விழுந்தான்.
இயேசு தோமாவிடம், ''பார்த்த பின் என்னை நம்பினாய். காணாமல் என்னை நம்புகிறவர்கள் பாக்கியவான்கள்,'' என்றார். இந்த வார்த்தையே இன்றும் உலகம் முழுவதுமுள்ள கிறிஸ்தவர்களுக்கு ஜீவனாக விளங்குகிறது. பின் நாற்பது நாட்கள் வரை சீடர்களுக்கும், மக்களுக்கும் தம்மை வெளிப்படுத்தி வந்தார். நாற்பதாம் நாள் பரலோகத்திற்கு ஏறி செல்லும் முன், இயேசு,'' உலகத்தின் முடிவு மட்டும் நான் உங்களுடனே இருக்கிறேன். என் பெயரால் எங்கே யார் இருந்தாலும் அங்கே அவர்கள் நடுவில் இருக்கிறேன்,'' என்றார். ''என் பெயரால் பிசாசை துரத்துங்கள், வியாதியஸ்தரை குணமாக்குங்கள். உலக முழுவதும் சகல ஜாதி மக்களுக்கும் என்னை பற்றி நற்செய்தியாக அறிவியுங்கள். வானிலும், பூமியிலும் சகல அதிகாரமும் எனக்கு உண்டாயிருக்கிறது,'' என்றார்.
கடவுளின் தன்மையும் இயேசுவின் நாமங்களும்: வார்த்தையான கடவுள், குமாரனாக உலகில் தோன்றி, பரிசுத்த ஆவியானவராக மூன்று தன்மைகளில் செயல்படும் 'இயேசு' என ஒரே நபராக எப்போதும் இருக்கிறவராக இருக்கிறவர். அன்பானவர், பரிசுத்தர், சத்தியமானவர், நீதியுள்ளவர், நியாயாதிபதி, இரக்கமுள்ளவர், அதிசயமானவர், ஆலோசனை கடவுள், வல்லமை தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு. சேனைகளின் கடவுள்,யுத்தத்தில் வல்லவர், பரிகாரியானவர், பாவத்தை வெறுப்பவர், மனம்திரும்பும் பாவிக்கு வாழ்வளிப்பவர். பிசாசின் கிரியைகளை அழிப்பவர், அற்புதம் செய்கிறவர், எவரையும் உயர்த்துகிறவர், தாழ்த்துகிறவர், காற்று- கடலை அதட்டுபவர், இருதயத்தில் அகந்தையுள்ளவர்களை சிதறடிக்கிறவர், மனுக்குலப் பிறப்பு, இறப்பில் இடம் பெறுகிறவர். மரித்து-உயிர்த்தெழுந்தவர், சூரியனும், கேடகமுமாய் என்றென்றும் ஜீவிக்கிறவர், இதோ சீக்கிரமாய் வருகிறேன் என்றவர்.
இயேசும் சிலுவையும்: எகிப்து, அசீரியா, பாபிலோன், மேதிய-பாரசீக, கிரேக்க அரசுகளுக்கு பின் கடைசியாக ரோம் அரசு கி.மு.168 முதல் கி.பி.476 வரை ஆட்சி செய்தது. இந்நிலையில் இயேசு கி.பி.34ல் மரித்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த பின், அவர்மீது நம்பிக்கை வைத்த சீடர்களையும், மக்களையும் ரோம் அரசு 300 ஆண்டுகளாக கொடுமைப்படுத்தியது. கி.பி.306ல், கான்ஸ்டன்டைன் அரசர், ஸ்பானிய நாட்டுடன் போருக்கு செல்லும் போது, சிலுவை தரிசனத்தை கண்டு, 'வெற்றி பெறுவாய்' என வாக்கு பெற்றார். நம்பிக்கையிழந்து போருக்குச் சென்றவர், அற்புத வெற்றி பெற்று, நாடு திரும்பி அரண்மனையில் சிலுவையைப் பற்றி ஆராய்ந்து, இயேசுவின் உயிர்த்தெழுதலை அறிந்து பரவசமானார். பின் இயேசுவை நம்பியதால், மக்களும் மறுவாழ்வு பெற்றனர். ரோமில் முதன்முறையாக இயேசுவை மையப்படுத்தி கி.பி.313ல் கி.மு.,கி.பி.,என வரலாறு கணக்கிடும்படி கட்டளையிட்டார். அன்றுமுதல் இன்றுவரை உலகில் பெரும்பாலான நாடுகளில் இயேசுவும், சிலுவை சின்னமும் புனிதமாக விளங்கி வருகிறது.
பைபிளின் சிறப்பு: ஆதாம் உள்ளிட்ட அøனைத்து உயிரினங்களின் படைப்பு, இயேசுவின் பிறப்பு, அதன் பின் நடந்த நிகழ்வுகள் ஆகியவற்றுடன், உலகம் முடியும் மட்டும் நடக்கவுள்ள சம்பவங் களை பைபிள் வெளிப்படுத்துகிறது. பழைய, புதிய என இரு ஏற்பாடுகளில், பழைய ஏற்பாடு மட்டும் கிறிஸ்தவ, இஸ்லாம், யூத மதத்துக்கு பொதுவாக உள்ளது. 2,426 மொழிகளில் அச்சிடப் பட்டுள்ளது. ஜெர்மனி விஞ்ஞானி ஜான் குட்டன்பர்க் கி.பி.1450ல் 'பிரின்டிங் மிஷின்' கண்டுபிடித்து முதல் நூலாக பைபிளை அச்சிட்டார். கி.மு.1500 முதல் கி.பி.55 வரை 40க்கும் மேற்பட்ட தீர்க்கதரிசிகளால் அந்தந்த கால நிகழ்வுகளாக எழுதிய கடவுள் வார்த்தையாக, நம்பப்படுகிறது.
உலகில் முதலில் எழுதப்பட்ட பைபிள் பிரதி ஒன்று, நியூயார்க் நகரின் பொது இறையியல் கல்லூரியிலும், இத்தாலி வாடிகன் நகரில் தோல் சுருளில் எழுதப்பட்ட புதிய ஏற்பாடும் உள்ளன. ஒரு சுருளின் நீளம் 30 அடி. 43 சுருள்கள் உள்ளன. ஆடு, மாடு, ஒட்டகம், கழுதை தோல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.ஜெர்மனி போதகர் சீகன்பால், தஞ்சாவூர் அருகேயுள்ள தரங்கம்பாடியில் தங்கியிருந்தார். கி.பி.1705ல் எபிரெய மொழியிலிருந்து தமிழில் பைபிளை மொழி பெயர்க்க துவங்கி 1714ல் முடித்தார். இந்த பைபிள் வாடிகன் நகரில் உள்ளது. 1806ல் இந்தி, 1807ல் மராத்தி, 1809ல் குஜராத்தி, 1812ல் தெலுங்கு, 1815ல் பஞ்சாபி, 1821ல் காஷ்மீரி என இந்திய மொழிகளில் பைபிள் மொழி பெயர்க்கப்பட்டது.
முற்பிதாக்கள்: குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பது டார்வினின் தத்துவ கருத்து.ஆனால், மனிதனிலிருந்து மனிதன் மட்டுமே பிறக்க முடியும் என இயேசு தம் பிறப்பால் உலகுக்கு வெளிப்படுத்தினார். மனிதனை மண்ணினால் படைத்த கடவுளே, கன்னி மரியாளின் மகனாகப் பிறந்தார் என பைபிள் விளக்குகிறது. ஆதாமிலிருந்து, இயேசு வரை நான்காயிரம் ஆண்டுகளும், இயேசுவுக்கு பின் இன்று வரை 2010 ஆண்டுகளாக உலக வரலாறு விளக்குகிறது. குறிப்பாக ஆதாமிலிருந்து கன்னிமரியாள் வரை, சேத், ஏனோஸ், கேனான், மகலாலேயல், யாரேத், ஏனோக், மெத்தூசலா, லாமேக், நோவா. சேம்- அர்பக்சாத், சாலா, ஏபேர், பேலேகு, ரெகு, செரூக், நாகோர், தேரா, ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு, யூதா, பாரேஸ், எஸ்ரோம், ஆராம், அம்மினதாப், நகசோன், சல்மோன், போவாஸ், ஓபேத், ஈசாய், தாவீது, சாலமோன், ரெகோபெயாம், அபியா, ஆசா, யோசபாத், யோராம், உசியா, யோதாம், ஆகாஸ், எ÷கியா, மனோசே, ஆமோன், யோசியா, எகோனியா, சலாத்தியேல், சொரபாபேல், அபியூத், எலியாக்கீம், ஆசோர், சாதோக், ஆகீம், எலியூத், எலெயாசார், மாத்தான், யாக்கோபு மகளான கன்னி மரியாளிடத்தில் இயேசு பிறந்து, மரித்து, உயிர்த்ததன் மூலம் மனிதனின் முற்பிதாக்கள் குரங்கு அல்ல என நிரூபித்தார்.
ஆண்டவரின் வார்த்தைக்கு தலை வணங்குவோம்: வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் எத்தனையோ தேவமனிதர்களைக் குறித்து வாசிக்கிறோம். அவர்களது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் மூலம், அவர்கள் தேவனோடு உள்ள ஐக்கியத்தையும், தெய்வீக நற்பண்புகளை எப்படிவெளிப் படுத்திக் காட்டினார்கள் என்பதையும் விவரிக்கிறதைக் காண்கிறோம். எனினும் அப்படிப்பட்ட தேவமனிதர்களில் அநேகருடைய பெயர் குறிப்பிடப்படவில்லை. சிலருக்கு ஊர் பெயர் மாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களைப் பற்றிய தனிப்பட்ட குறிப்புகள் தரப்படாமல் உள்ளன. ஆனாலும், அவர்கள் காட்டிய தேவபக்தியும் தேவப் பண்புகளும் தேவ ஊழியங்களை மதிக்கும் நற்பண்பும் மிகச்சிறப்பானவை. அவை நமக்கு பாடமாக நிற்கின்றன.
அந்த வரிசையில் எலியா தீர்க்கதரிசி தன்னுடைய வாழ்க்கையின் இக்கட்டான நாட்களில் சந்தித்த ஒரு பெண்ணைக் குறித்து வேதத்தில் ஒரே ஒரு அதிகாரத்தில் மாத்திரம் (1 இராஜா.17) வாசிக்கிறோம். அந்தப் பெண் கணவனை இழந்தவள். அவள் சாரிபாத் என்ற ஊரைச்சேர்ந்தவர். ஒரு சமயம் சாரிபாத்தில் மழை பெய்யவில்லை. கடும் பஞ்சம் ஏற்பட்டது. வறுமையின் காரணமாக தன் ஒரே மகனோடு அழிவின் விளிம்பில் வாழ்ந்து வந்தாள். எலியா தீர்க்கதரிசி சாரிபாத்துக்கு வந்தார். அவர் அந்த ஊருக்குள் நுழைந்ததும் சந்தித்த முதல்நபர் இந்தப் பெண் தான். அவள் விறகு பொறுக்கிக் கொண்டிருந்தாள். தீர்க்கதரிசி எலியா அவளிடம், ''எனக்கு தண்ணீரும் கொஞ்சம் அப்பமும் கொண்டு வா,'' என்றார்.
அதற்கு அவள்,''பானையில் ஒரு பிடி மாவும், கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே அல்லாமல், என்னிடத்தில் ஒரு அடையும் இல்லையென்று, உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன். இதோ, நானும் என் குமாரனும் சாப்பிட்டுச் செத்துப்போக, அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப்படுத்துகிறதுக்கு இரண்டு விறகு பொறுக்குகிறேன்,'' என்றாள். அப்பொழுது எலியா அவளைப் பார்த்து, ''பயப்படாதே; நீ போய் உன் வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து; ஆனாலும், முதல் அதிலே எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டு வா; பிறகு உனக்கும் உன் குமாரனுக்கும் பண்ணலாம். கர்த்தர் தேசத்தின் மீது மழையைக் கட்டளையிடும் நாள் மட்டும் பானையின் மாவு செலவழிந்து போவதும் இல்லை; கலயத்தின் எண்ணெய் குறைந்து போவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்,'' என்றார்.
அவர் சொன்னதை முழுவதுமாய் விசுவாசித்தாள் அந்தப் பெண். ''அவள் போய் எலியாவின் சொற்படி செய்தாள் (வ:15). அதாவது விசுவாசித்த வாக்குத்தத்தத்திற்கு கீழ்ப்படிந்து செயல் பட்டாள். கர்த்தர் எலியாவைக் கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, மாவு செலவழிந்து போகவும் இல்லை; கலயத்தின் எண்ணெய் குறைந்து போகவும் இல்லை''(வ.16) என்று வாசிக்கிறோம். கர்த்தரின் வார்த்தை அல்லது தேவனுடைய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் நம்முடைய வாழ்க்கையில் நிறைவேற வேண்டுமானால், இந்த ஏழைப்பெண்ணைப் போல் வார்த்தையை அப்படியே விசுவாசிக்க வேண்டும். விசுவாசித்துக் கீழ்ப்படிய வேண்டும். கீழ்ப்படிந்து செயல்படுத்த வேண்டும். அப்பொழுது அந்த வார்த்தை நமக்கு வாய்க்கும்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இதைக்குறித்து தமது சீடர்களிடத்தில் சொல்லும்போது, ''உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான். என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான். தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான். சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலயம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று,
மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்,'' என்றார். (மத்.10:40-42). தேவன் எல்லாவற்றுக்கும் பிரதிபலனை அளிப்பதற்கு கரிசனையுள்ளவராக இருக்கிறார்.