உண்மை, அன்பு, நேர்மை ஆகியவற்றை ஒருவராலும் தடுத்து நிறுத்த முடியாது. நீ நேர்மை உள்ளவனாக இருக்கிறாயா? உயிருக்கே ஆபத்து வந்தாலும் சுயநலமில்லாதவனாக இருக்கிறாயா? அன்பு செலுத்துபவனாக இருக்கிறாயா? அப்படியானால் மரணத்துக்கும் நீ அஞ்ச வேண்டியதில்லை.
பரந்த இந்த உலகம் ஒளியை வேண்டுகிறது. அதை எதிர்பார்க்கிறது. இந்தியா மட்டும் அத்தகைய ஒளியை பெற்றிருக்கிறது. ஜால வித்தையிலே இந்தியா அந்த விளக்கை பெற்றிருக்கவில்லை. போலித் தன்மையினாலும் அந்த விளக்கை பெற்றிருக்கவில்லை. ஆனால், உண்மையான மதத்தின் தலை சிறந்த சமய போதனையாகவும், மிகவும் உயர்ந்த ஆன்மிக உண்மையாகவும் அந்த விளக்கை இந்தியா பெற்றிருக்கிறது. ஆகையால்தான் பலவிதமான இன்ப துன்பங்களிலிருந்தும் இன்று வரையிலும் கடவுள் இந்தியாவை பாதுகாத்து வைத்திருக்கிறார்.
நீங்கள் மகத்தான பணியை செய்ய பிறந்தவர்கள்தான் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். சிறிய நாய் குட்டிகளின் குரைப்பைக் கேட்டு நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை. ஆகாயத்தின் இடியோசைகளைக் கேட்டும் நீங்கள் அஞ்ச வேண்டாம். எழுந்து நின்று வேலை செய்யுங்கள்.
மிருக பலத்தால் அல்லாமல், ஆன்மிக பலத்தால் மட்டுமே இந்தியா எழுச்சி பெறப் போகிறது. அழிவு முறையின் மூலமாக அதன் எழுச்சி உண்டாகப் போவதில்லை. மாறாக, அமைதி, அன்பு ஆகிய முறைகளின் மூலமாகத்தான் இந்தப் பணி நடைபெறும். கையில் கலப்பை பிடித்த உழவர்களின் குடிசைகளிலிருந்து புதிய இந்தியா எழும்பட்டும். தாழ்த்தப்பட்டவர்களின் குடிசைகளிலிருந்து புதிய இந்தியா எழட்டும்.
- விவேகானந்தர்