பாரதியார் தன் நண்பர்கள் குழுவோடு அமர்ந்து கொண்டு சில சமயம் தான் எழுதிய கவிதைகளை பாடிக் காண்பிப்பார். சில சமயம் தமாஷாகக் கதை சொல்லுவார். ஒரு நாள் பாரதி கதை சொல்லும் மூடில் இருந்தார்.
"ஒரு குடியானவனும் ஒரு செட்டியாரும் நடைப்பயணமாய் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு பயணமாகிக் கொண்டு இருந்தார்கள். வழியில் ஒரு காட்டுப் பாதையைக் கடக்க வேண்டும். அங்கே திருடர் பயம் அதிகம். இருந்தாலும் வேறு வழியில்லை. இருட்டு நேரத்தில் காட்டு வழியே நடக்கலானார்கள்" என்று சொல்லிவிட்டு, "என்ன செட்டியாரே திருடர்கள் இப்போது வரலாமா? இல்லை இன்னும் கதை போன பிறகு வரலாமா?" என்று அங்கே அமர்ந்து கொண்டிருந்த வெல்லச்சு செட்டியாரைக் கேட்டார்.
அவர் சிரித்துக் கொண்டே "எனக்கு என்ன பயம்? நான்தான் பாரதியுடன் இருக்கிறேனே?" என்பார். உடனே பாரதி கதையைத் தொடர்வார். "அப்படியானால் சரி, திருடர்கள் பார்த்தார்கள். குடியானவன் நன்றாக அடி வாங்கினான். செட்டியாரோ ரொம்ப சாமர்த்தியமாய், ஏற்கனவே அடிபட்டுக் கிடப்பதைப் போல் கிடந்தார். திருடர்கள் அவரைத் தொட்டுப் பார்த்துவிட்டு, கட்டை போல இருக்கிறதே என்றார்கள். உடனே செட்டியார் 'எந்த கட்டையாவது மடியில் பத்து ரூபாய் நோட்டு வைத்திருக்குமா?' என்று கேட்டு விடுவார்."
உடனே வெல்லச் செட்டி எழுந்து வந்து தன் மடியில் இருந்த பத்து ரூபாய் நோட்டை பாரதியிடம் கொடுத்து விடுவார். கதை அத்துடன் முடியும்.
பாரதி வாழ்ந்த காலத்தில் மிகுந்த வறுமையில் வாழ்ந்தார். ஆனால் யாரும் அவரை நெருங்கி "ஐயோ! பாவம்" என்று உதவி செய்ய விடமாட்டார். வெல்லச் செட்டி போல பலரிடம் தானே பெற்றுக் கொள்வார். கவிச்சக்கரவர்த்திக்கு கப்பம் கட்டும் தோரணையில்தான் அவர்கள் தர வேண்டும். இல்லையேல் பாரதிக்கு உதவி செய்ய முடியாது. அவரும் பெற்றுக் கொள்ள மாட்டார்.
வறுமை மிகக் கொடியது. வறுமையில் இருப்பவர்களை பண ஆசை காட்டி இன்று என்ன பொய் சாட்சி வேண்டுமானாலும் சொல்ல வைக்க முடியும் என்பதைப் பார்க்கிறோம். "நான் வறியன்; நான் என்ன செய்ய முடியும்" என்று நம் நிலைமையை நாம் நொந்து கொண்டே காலம் தள்ளவும் முடியும். "நொந்தது சாகும்" என்ற பாரதியின் வரிகள், நொந்து கொண்டு இருப்பவர்கள் சாவை நெருங்கிக் கொண்டு இருப்பவர்கள் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
மஹாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவுக்கு இரண்டாவது முறை சென்ற போது, பலத்த எதிர்ப்பு காத்திருந்தது. அதுவும் இந்த முறை மனைவி, மக்களையும் அழைத்துக் கொண்டு சென்று இருக்கிறார். அவரைக் கொல்லவும் துணிந்த கூட்டம் அங்கே டர்பன் துறைமுகத்தில் காத்திருந்தது. முதலில் கப்பலை கரை சேரவே விடாமல் முட்டுக் கட்டை போட்டனர். பல நாட்கள் வேறு வேறு காரணங்கள் சொல்லி இந்தியாவில் இருந்து வந்த இரண்டு கப்பல்களை 23 நாட்கள் கடலில் நிற்க வைத்துவிட்டார்கள். காந்தி இந்தியாவில் இருந்து பலரை அழைத்து வந்து தென் ஆப்பிரிக்காவில் நிரப்பப் பார்க்கிறார் என்ற எண்ணத்தில் வெள்ளையர்கள் செய்த சதி இது. ஆனால் உண்மையில் காந்திஜிக்கு, தன் குடும்பத்தினரைத் தவிர இன்னும் இரண்டு மூன்று பயணிகளைத் தான் தெரியும். "அப்படியே திரும்பிப் போங்கள். இல்லையேல் கடலில் தள்ளி விடுவோம்." என்ற மிரட்டல் செய்திகள் வந்த வண்னம் இருந்தன. காந்தி எல்லா பிரயாணிகளையும் சந்தித்து அமைதி காக்க அறிவுறுத்தினார். கிறிஸ்துமஸ் விழாவும் கடலிலேயே கொண்டாடப்பட்டது.
இந்த இருபத்து மூன்று நாள் சத்தியாக்கிரகத்திற்குப் பின்னால் கப்பல்கள் துறைமுகத்தில் அனுமதிக்கப்பட்டு, பிரயாணிகளை இறங்க அனுமதித்தார்கள். பிரச்சினை இருக்கும் என்பதால், காந்தியின் குடும்பத்தார் மட்டும் முதலில் தனியாக வெளியே சென்று ஒரு நண்பர் வீட்டுக்கு சென்று விட்டார்கள். பிறகு காந்தி இறங்கி வந்ததும் பிரச்சினை ஆரம்பமாயினது. ரிக்ஷாவில் காந்தி ஏறப் போனால், ரிக்ஷாக்காரனை கொன்றுவிடுவோம் என்று ஒரு கும்பல் மிரட்டியதால், அவன் பயந்து ஓடிவிட்டான். பின்னர் காந்தியின் மீது சரமாரியாக கற்களும் அழுகின முட்டைகளும் வீசப்பட்டன. போலிஸ் அதிகாரி அலெக்ஸாண்டரின் மனைவி வந்து, கூட்டத்தில் புகுந்து, காந்தியைக் காப்பாற்ற குடையை விரித்துப் பிடித்துக் கொண்டார். பின் இரவு ஒரு நண்பர் வீட்டில் தங்கப் போனால், அங்கேயும் கூட்டம் கூடி காந்தியைத் தாக்க முயற்சி நடந்தது. காந்தி இவையனைத்தையும் எதிர்கொண்டுதான் தன் தென் ஆப்பிரிக்க வாழ்க்கையின் இரண்டாம் இன்னிங்ஸ் துவங்கினார்.
உண்மையையும் நேர்மையையும் வழியாய்க் கொண்டு வாழும் யார் வாழ்க்கையிலும் இப்படி பேடிகள் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவார்கள். காந்தி அன்று பயந்து போய் திரும்பி இருந்தால் இன்று தென் ஆப்பிரிக்காவில் கருப்பர்களுக்கு, இந்தியர்களுக்கு விடுதலை இல்லை. நல்ல காரியம் செய்ய நினைத்து செயலில் இறங்கியிருக்கும் எல்லோருக்கும் இப்படிப்பட்ட சோதனைகள் வருவது இயற்கை. "நமக்கு ஏன் இந்த நிலைமை? நாம் நல்லதுதானே செய்ய வந்தோம்?" என்று நொந்து சாகிறவர்களுமுண்டு. இது போன்ற சமயங்களில் தைரியமாக நிலைமையை சமாளிக்கிறவர்கள்தான் தலைவர்கள் ஆகிறார்கள்.
ஒரு செயலைச் செய்யும்போது வரக்கூடிய இடையூறுகள் அந்தச் செயலை நாம் இன்னும் நன்றாகச் செய்ய தானாகவே ஏற்பட்ட வாய்ப்புகள். இதைச் சரியாகப் புரிந்து கொண்டு வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்பவர்கள், வெற்றி பெறுகிறார்கள். இடையூறு வந்துவிட்டதே என்று நொந்து கொண்டு இருப்பவர்கள் எதையும் செய்ய முடியாமல் இடையூறுகளினால் சிறைபட்டு போகிறார்கள். "நொந்தது சாகும்" என்பதாலே நாம் நொந்து கொள்வதை விட்டு விட்டு வாழத் துவங்குவோம்.