நேர்த்தியான வேலை
'ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருக்கும் சேவை' என்று வேலை பார்ப்பவர் மீது அனைவரது கவனமும் திரும்பும். அவர் முன்னேற்ற ஏணியில் வேகமாக மேலே அனுப்பப்படுவார் என்பது உறுதி.
ஒரு கம்பளத்தை விரிப்பதனாலும் சரி, விண்ணில் ராக்கெட்டை ஏவுவதானாலும் சரி, செய்கின்ற வேலையை இன்னும் எப்படிச் சிறப்பாகச் செய்ய முடியும் என்று யோசித்து வேலை பார்ப்பவர் மிகவும் மேலான, நேர்த்தியான நிலையை (To Excel) எய்தப் பாடுபடுகிறார். ஒவ்வொரு கணமும் ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொள்கிறார் அவர்.
சந்தர்ப்ப தேவதை
சந்தர்ப்ப தேவதைக்கு ஏதன்ஸ் நகரில் லிஸிபஸ் என்ற சிற்பி ஒரு சிலையை வடித்தான். அந்த தேவதை பெரு விரலின் நுனி ஒன்றை மட்டும் கீழே ஊன்றி இருந்தது. பறப்பதற்குத் தயாரான நிலையில் இரு இறக்கைகள் கைகளின் இருபுறமும் விரிந்து இருந்தன. கையில் கூர்மையான கத்தி ஒன்று இருந்தது. தேவதையின் முகத்தில் முன்புறம் தலைமுடி தொங்கிக் கொண்டிருந்தது. பின்பக்கமோ வழுக்கை.
சிலையின் கீழே உள்ள பீடத்தில் உரையாடல் ஒன்று பொறிக்கப்பட்டிருந்தது.
"நீ ஏன் பெருவிரல் நுனியில் நிற்கிறாய்?"
"எந்த நேரத்திலும் பறப்பதற்குத் தயாராக"
"இரண்டு இறக்கைகள் விரிந்திருப்பது ஏன்?"
"காற்றைவிட வேகமாகக் கடுகிப் பறப்பதற்காக"
"உன் கையில் கூரிய கத்தி ஏன்?"
"நான் கத்தி முனையை விடக் கூர்மையானவன் என்று உணர்த்துவதற்காக"
"உன் தலைமுடி ஏன் முகத்தில் முன்னால் தொங்குகிறது?"
"பார்ப்பவர்கள் எளிதில் என்னைப் பற்றுவதற்காக"
"பின்னால் வழுக்கை ஏன்?"
"ஒரு முறை பிடிக்கத் தவறுபவன் கையில் அகப்படாமல் இருப்பதற்காக!"
"நீ யார்?"
"நான் தான் சந்தர்ப்பம்"
"உன்னை சிற்பி யாருக்காக படைத்தான்?"
"உனக்காகத்தான்!"
சந்தர்ப்பம் வரும்போது அதை பிடித்துப் பயன்படுத்தத் தவறினால் அது அகப்படாது என்பதை அருமையாக உணர்த்துகிறது இந்தச் சிலை என்பது ஒரு புறமிருக்க சந்தர்ப்பங்களை நாமே உருவாக்க வேண்டும் என்பது அடுத்த நிலை. முன்னேறுவதற்கான சந்தர்ப்பங்களை நாமே உருவாக்க வேண்டும்.
'செய்தொழில் நேர்த்தி' என்ற தாரக மந்திரத்தை இடைவிடாது நினைப்பவர் தமக்குரிய சந்தர்ப்பங்களை நிச்சயம் தாமாகவே உருவாக்கிக் கொள்வர்.
விழுந்தாலும் எழு
"அம்மா, மண் தரையில் தவறிக் கீழே விழுந்து விட்டேன்" என்று அலறினாள் மகள்.
"பரவாயில்லை மகளே, ஆனால் எழுந்திருக்கும் போது சும்மா வெறுங்கையுடன் எழுந்திருக்காதே. ஒரு பிடி மண்ணைக் கையில் எடுத்துக் கொண்டு எழு" என்றாள் தாய்.
எந்த சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி ஆதாயத்தைத் தேடு என்ற தாயின் போதனை முன்னேற விரும்புவோருக்குச் சரியான பாடம்.
வேலையே வழிபாடு (Work is Worship) என்பது பழமொழி.
செய்யும் தொழிலே தெய்வம். அதில் திறமைதான் நமது செல்வம் என்பது நாம் அறிந்த சிறப்பான சினிமா பாடல்.
உழைப்பால் உயர்ந்தவர்
90 வயதான கிளாட்ஸ்டோன், "உழைப்பதிலேயே எனக்குப் பெரிய இன்பம் கிடைக்கிறது" என்கிறார்.
ஆங்கில அகராதியைத் தொகுத்த டேனியல் வெப்ஸ்டர் தனது 70-வது பிறந்த நாளன்று தனது வெற்றிக்கான ரகசியத்தை வெளியிட்டார். "உழைப்பே என்னை இன்றைய நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது. ஒரு கணம் கூட சோம்பேறியாக இருந்து உணவை உண்டதில்லை நான்" என்றார் அவர்.
அதிகமாக உழைக்கும்போது ஏற்படும் போராட்டங்களும் தடைகளும் வலிமையையே அதிகரிக்கும்.
விதைத்த அளவிற்குத்தான் அறுவடை செய்ய முடியும் என்பது இயற்கை விதி. இந்த விதிப்படி செய்த வேலைக்கு ஏற்ற பலன் மட்டுமே கிட்டமுடியும். சோம்பேறியாக இருந்தவனுக்கு அறுவடை என்ற சந்தர்ப்பமே வர முடியாது.
ஸ்மைல்ஸ் என்னும் பெரியார் கூறி இருக்கிறார்:- "எல்லாப் பெரிய மனிதர்களும் உழைப்பாலேயே முன்னேறி இருக்கிறார்கள். அதன் விளைவே நமது இன்றைய நாகரீகம்".
ஆகவே, வாழ்க்கையில் வெற்றி பெறத் துடிப்போர் அடைய வேண்டிய பதினைந்தாவது குணாதிசயம் ஊதியத்திற்கு மேல் உழைத்தலாகும்!