என் அன்பிற்கினிய BTC உறவுகளே! இன்று (01/07/2010) நமது BTC அரட்டை அறையில் இருவர் சன்டை போட்டது எனக்கு மனது வேதனையாக இருந்தது. சரியாக புரிந்துகொள்ளாததின் காரணமாக இவ்வாறு ஏற்பட்டது என என்னுகிறேன். இதனை அடிப்படியாக கொண்டு வ்நான் படித்த சிலவற்றினை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
இதோ...
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி
கோபம் என்ற ஒரு குணம், நமது வாழ்வின் நிம்மதியை முற்றிலும் குலைக்கக் கூடியது. நமது குடும்ப வாழ்க்கை, தொழில் இரண்டையும் ஒருசேர அழித்துவிடக்கூடியது கோபம். கோபத்தின் தீமைகளைக் கூற வரும் வள்ளுவர் அதை 'சேர்ந்தாரைக்கொல்லி' என வருணிக்கிறார். அதாவது தான் எங்கிருக்கிறோமோ அந்த இடத்தை அழித்துவிடக்கூடிய தீ என்பது இதன் பொருள். கோபத்தால் ஏற்படும் நாசத்தை இதைவிடத் தெளிவாகக் கூற இயலாது. கோபம் நம் சிந்திக்கும் திறனை மழுங்கடித்துவிடும். நமது நினைவாற்றலைக் குறைத்துவிடும்.'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' என்ற பழமொழி இதைக் குறித்து எழுந்ததே!
இன்றைய பரபரப்பான உலகம், வேகம் நிறைந்த உலகம் நம்மில் பலருடைய இயல்பான அமைதியான குணத்தை மாற்றி கோபக்காரர்களாக ஆக்கி விடுகிறது. கோபத்தின் காரணமாக உடல் நலம் கெடுகிறது. மன உளைச்சல் ஏற்படுகிறது. குடும்ப உறவுகள் சிதைகின்றன. இன்னும் பல மோசமான விளைவுகள் நேரிடுகின்றன.
இதைத்தான் வள்ளுவர்
'நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.' என்கிறார்.
இத்தகைய பல கேடுகளை உண்டாக்கும் சினத்தைக் கட்டுக்குள் வைப்பதற்கான திறனை வளர்த்துக்கொள்ள சில வழிகளை இங்குப் பார்க்கலாமா?
இயலாமையின் காரணமாக கோபத்தை அடக்குவது தவறு. அது எதிர்விளைவை ஏற்படுத்தும். பொதுவாக கோபம் வந்து அதை அடக்கிக்கொள்பவர்கள் அழுத்தி அழுத்தி வைக்கப்பட்ட வெடி மருந்து போல் ஒருநாள் வெடித்து விடுவார்கள். இது அடிக்கடி கோபம் வரும் நபருக்கு ஏற்படும் அழிவை விட அதிக அழிவைத் தந்துவிடும். கோபத்தைச் சரியான முறையில் கையாளுதல் வேண்டும். அதற்கான சில யோசனைகள்:
உங்களுக்குக் கோபம் வந்து கன்னாபின்னாவென்று கத்தத் தொடங்குமுன் ஒரு குவளை குளிர்ந்த நீரை அருந்துங்கள். கோபம் சற்று அடங்கும். பிறகு நீங்கள் எதிராளியிடம் பேசுகையில் உங்களை அறியாமலே அமைதியான குரலில் பேசுவதை உணர்வீர்கள். கையிலேயே தண்ணீரை வைத்துக்கொண்டே அலைய முடியுமா என்று கோபிக்காதீர்கள். அதற்கும் ஒரு வழியிருக்கிறது. கோபமும் படபடப்பும் தோன்றும்பொழுதே மூச்சை நிதானமாக இழுத்து விடுங்கள். ஒன்று முதல் பத்து வரை மெதுவாக எண்ணுங்கள். பதட்டமும் கோபமும் அடங்கிவிடும்.
உங்களுக்குப் பிடிக்காத ஒரு செயலை ஒருவர் செய்துவிட்டாரா? அடக்க முடியாத அளவு அவர்மேல் ஆத்திரம் பொங்குகிறதா? அவரைக் கூப்பிட்டு அறைய வேண்டும், கன்னாபின்னாவென்று திட்டவேண்டுமென்று தோன்றுகிறதா? பொறுங்கள். சற்று யோசியுங்கள். அப்படித்திட்டினால் என்ன ஆகும்? ஒன்று அவர் மனம் மிக வருந்தும் அல்லது அவர் உங்கள் மீது கோபப்பட்டுக் கத்துவார். சண்டை போடுவீர்கள். நிலைமை மேலும் மோசமாகிக்கொண்டே போகும். அதற்குப் பதில்... அவரை எப்படியெல்லாம் திட்டவேண்டுமென்று நினைக்கிறீர்களோ அதையெல்லாம் ஒரு காகிதத்தில் எழுதுங்கள். இரண்டு முறை அதைப் படியுங்கள். உங்களுக்கே அதில் நீங்கள் எழுதியுள்ளது அதிகப்படி என்று தோன்றிவிடும்.
ஒருவரின் ஒரு செயல்பாடு உங்களுக்குக் கோபத்தைத் தருகிறது என்று கொள்வோம். நீங்கள் அந்த இடத்தில் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்று ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். 'Empathy' அதாவது பிறருடைய இடத்தில் உங்களை வைத்துப் பார்ப்பது என்பது உங்கள் சினத்தைக் கட்டுப்படுத்த வல்லது.
ஒரு பொருள் குறித்து உங்களுக்குச் சினம் தோன்றுகிறதா? இந்தக் கோபத்தினால் உண்டாகும் பலன் என்ன, இதனால் ஏற்படக் கூடிய விளைவுகள் என்னென்ன என்று ஒரு நிமிடம் சிந்தியுங்கள். இது இப்படி நடக்காவிட்டால், இப்படி நடந்தால் என்று பல கோணங்களில் யோசித்துப் பாருங்கள்.. உங்கள் கோபம் அர்த்தமற்றது என்பதை நீங்கள் உணர்வீர்கள்.
ஒரு தவறு நடந்துவிட்டது என்று கொள்வோம். அது திருத்தப்படக்கூடியதா என்று பாருங்கள். முடியுமானால் திருத்தி விடுங்கள். கோபப்படத் தேவையில்லை. திருத்த முடியாத பட்சத்தில் கோபப்படுவதால் மட்டும் என்ன பயன்? என்று யோசியுங்கள்.
ஒருவர் உங்களுக்கு ஒரு துன்பத்தைக் கொடுக்கிறார் என்று கொள்வோம். அது தெரியாமல் செய்த தவறா இல்லை வேண்டுமென்றே செய்தாரா என்று ஆய்ந்து பாராமல் கோபித்துக்கொள்வது அந்நபருக்கும் உங்களுக்கும் உள்ள உறவினை/ நட்பினை உடைத்துவிடக்கூடும். ஒரு வேதனையான உண்மை என்னவென்றால், நாம் முன்பின் தெரியாதவர்கள் தவறு செய்கையில் கோபப்படுவதில்லை. நம் உறவினர்களோ நண்பர்களோ செய்கையில் மிகுந்த ஆத்திரம் கொள்கிறோம். அதே போல், நம்மை விட வலியவர்களிடம் கோபப்படுவதில்லை. நமக்குக் கீழ் இருப்பவர்கள் செய்யும் தவறுக்கு ஆத்திரமடைகிறோம். நம் மேலதிகாரிகளோ, நம் வாழ்க்கைத் துணையோ நம்மைக் கோபத்துடன் திட்டக்கூடாது என விரும்புகிறோம். ஆனால், நம்மிடம் அல்லது நமக்குக் கீழ் வேலை செய்பவர்களிடம் நாம் அப்படி நடந்துகொள்வதில்லை. இது தவறு என்று சுட்ட விரும்பும் திருவள்ளுவர் 'வெகுளாமை' அதிகாரத்தில் முதற் குறளிலேயே
'செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்.'
என்று இதைக் குறிப்பிடுவதில் இருந்து இதன் முக்கியத்துவத்தை நாம் உணரலாம். (பொருள் - தனது கோபம் பலிக்கும் என்ற இடத்தில்தான் ஒருவன் தன் சினத்தைக் கட்டுப்படுத்தவேண்டும். தனது கோபம் செல்லாது என்னும் இடத்தில் ஒருவன் அதைக் கட்டுப்படுத்தினால் என்ன, கட்டுப்படுத்தாவிட்டால் என்ன? - வெகுளாமை - குறள் எண் - 301)
தயவு செய்து தலையணையைக் குத்துவது, தனிமையில் கத்துவது போன்றவற்றைச் செய்யாதீர்கள். அதே போல் உங்களுக்குக் கோபம் உண்டாக்கிய / உண்டாக்கக்கூடிய நினைவுகளை அசை போடாதீர்கள்.
'கோபத்துடன் படுக்கைவிட்டு எழுபவன் நட்டத்துடன் படுக்கைக்குச் செல்வான்' என்பது ஒரு பழமொழி. 'கோபப்படுவது எளிது. ஆனால் சரியான இடத்தில் சரியான அளவில் சரியான காரணத்திற்காகக் கோபப்படுவது கடினம்' என்பது பேரறிஞர் அரிஸ்டாட்டிலின் பொன்மொழி. கோபத்தினால், உங்கள் உடலில் இரத்த அழுத்தம் கூடுகிறது. மன உளைச்சல் அதிகரிக்கிறது. தலைவலி, வயிற்று நோய்கள் முதலியவையும் ஏற்படுகின்றன. எனவே சினத்தைக் குறைப்போம்; மகிழ்ச்சியை அதிகரிப்போம்.
- வருத்தம் கலந்த சந்தோசத்துடன்..ப்ரியமுடன்
(நன்றி : ஈழநேசன்: பாலகார்த்திகா)