வாஷிங்டன்: அமெரிக்காவின் கடன் சுமையைத் தீர்க்க, இரு கட்சிகளுக்கிடையில் ஒருமித்த தீர்வு ஏற்படவில்லை. நிலவரம் மேலும் சிக்கலுக்குள்ளானதற்கு யார் காரணம் என்பதில், அதிபர் பராக் ஒபாமா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஜான் பாய்னர் இருவரும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
அமெரிக்காவின் கடன் சுமை, கடந்த மே மாதம் 14.3 டிரில்லியன் டாலரை எட்டியது. நாட்டின் கடன் உச்சவரம்பு எட்டப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 2ம் தேதிக்குள், கடன் உச்சவரம்பை அதிகரிக்காவிட்டால், அரசு அன்றாடச் செலவுகளுக்கே திண்டாட வேண்டி வரும் என, நிதியமைச்சகம் எச்சரிக்கை விடுத்தது.இதையடுத்து, அதிபர் ஒபாமாவும், எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியினரும் பல கட்ட ஆலோசனை நடத்தினர். இறுதியில் குடியரசுக் கட்சியினர், ஒபாமாவின் பல்வேறு நலத் திட்டங்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில் தங்களுக்கு சாதகமான "கட், கேப் அண்டு பேலன்ஸ்' மசோதாவை, பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றினர்.கடந்த 22ம் தேதி அம்மசோதா, ஆளும் கட்சி பெரும்பான்மையாக உள்ள செனட்டில் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, கடன் நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டிய நிர்பந்தம் உருவானது.
தொடர்ந்து இரு தரப்பினரும் பல கட்டங்களில் ஆலோசனை நடத்தினர். குடியரசுக் கட்சியினர், வரிகளை உயர்த்தாமல், வளமான அமெரிக்கர்களின் வரிகளையும், நாட்டின் செலவுகளையும் குறைக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தனர். ஆனால், அதிபர் ஒபாமாவோ, வரி உயர்வு மற்றும் குறைந்தளவு செலவு குறைவு ஆகியவற்றில் குறியாக இருந்தார். இதனால், இரு தரப்பும் எவ்வித முடிவுக்கும் வர இயலவில்லை.மக்கள் அறிவுரை கூற வேண்டும்: இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு அளித்த பேட்டியில் ஒபாமா கூறியதாவது:ஆண்டு பட்ஜெட்டில் மிக மிக அதிகளவில் செலவுகளைக் குறைத்தால் தான், கடன் உச்சவரம்பை அதிகரிக்க ஓட்டளிப்போம் என எதிர்க்கட்சியினர் பிடிவாதம் செய்து வருகின்றனர். ஆனால், இவ்விவகாரத்தில், மிதமான செலவு குறைப்பு மற்றும் வரி உயர்வு இரண்டும் கலந்த சீரான அணுகுமுறை வேண்டும் என்பதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.ஆனால், எனது வேண்டுகோளுக்கு அவர்கள் செவி சாய்க்கவில்லை. அதனால், அமெரிக்க மக்கள், இவ்விவகாரத்தில் எதிர்க்கட்சியினருக்கு அறிவுரை அளிக்க வேண்டும். நம்மால் இந்தப் பிரச்னையை சமாளிக்க முடியும் என நீங்கள் நம்பினால், அந்த செய்தியை எதிர்க்கட்சியினருக்கு அனுப்புங்கள்.இவ்வாறு ஒபாமா தெரிவித்தார்.செலவுக்கு நீங்கள்; வரிக்கு நாங்களா?ஒபாமா பேசியவுடன் பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவரும், பிரதிநிதிகள் சபை சபாநாயகருமான ஜான் பாய்னர் கூறியதாவது:அதிபர் அடிக்கடி சீரான அணுகுமுறை என்கிறார். அதாவது, நாங்கள் அதிகமாக செலவு செய்வோம்; நீங்கள் அதிகமாக வரி கட்டுங்கள் என்பது தான் அதற்கு அவர் அளிக்கும் அர்த்தம். அரசின் ஊதாரித்தனமான செலவுகள் முடிவுக்கு வந்துவிட்டன என்பதை ஆளும் கட்சியினர் உணர வேண்டும்.எங்கள் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள ஜனநாயகக் கட்சியினர் முன்வர வேண்டும். அமெரிக்கா கடன் நெருக்கடிக்கு உள்ளாகாது என்பதில் சந்தேகம் இல்லை.இவ்வாறு பாய்னர் தெரிவித்தார்.