அன்பின் தோழமைகளே, பாசமிகு BTC இதயங்களே!
இன்று உங்களுடன் பகிரப் போகும் செய்தி மிகவும் முக்கியமானதொன்றாகும். இது திரு. நெப்போலியன் ஹில் அவர்களுடைய ஒரு நூலில் இருந்து பெறப்பட்டதாகும். நாம் சரியான பாதையில் பயணிக்கிறோமா, என நம்மை நாமே அடிக்கடி சுயவிமர்சனம் அல்லது சுய அலசல் செய்து கொள்வது மிகவும் அவசியம். வாழ்வில் தோல்விகளுக்கு பல காரணங்கள் இருக்கலாம். உங்களைப் பற்றி உங்களுக்கே சரியான மதிப்பீடு இல்லையென்றால் அதுவே தோல்விகளுக்கெல்லாம் தலையாய காரணியாக இருக்கக் கூடும். சரி, கட்டுரைக்குப் போவோம்.
உங்களின் சுயமதிப்பு தெரியுமா ? தன்னை அறிந்தவன் தான் மனிதன் என்று சொல்வதுண்டு. உங்களுடைய எல்லாப் பலவீனங்களையும் நீங்கள் அறிந்திருந்தால் தான் அதைச் சரி செய்து கொள்ளவோ அல்லது களைந்தெறியவோ முடியும். உங்களின் பலம் என்ன என்பதையும் தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான் உங்கள் ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்களின் கவனத்தை நீங்கள் ஈர்க்க முடியும். உங்களை நீங்கள் அக்கு வேறு ஆணி வேறாக அலசிப் பார்த்தால் தான் உங்களைப் பற்றி உங்களுக்கே தெரிய வரும்.
வருடாந்திரம் உங்களைப் பற்றிய சுயமதிப்பீடு செய்வீர்களானால் அதனால் உங்களுக்கு அபார பலனுண்டு. இந்த மதிப்பீட்டில் குறைகள் குறைந்தும், நிறைகள் அதிகமாகியும் காணப்பட வேண்டும். உங்களின் முன்னேற்றம், தேக்கம் அல்லது பின்னடைவு பற்றி இதில் தெரிந்து கொள்ளலாம். வளர்ச்சியின் வேகம் குறைவாக இருப்பினும் தேக்கமற்ற சிறிய முன்னேற்றமாவது உங்கள் நிலையில் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு வருடக் கடைசியிலும் இந்த சுய அலசலை நீங்கள் நடத்த வேண்டும். அதற்கு ஏற்ப புது வருடத் தீர்மானங்களையும், முன்னேற்றத் திட்டங்களையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். உங்களை நீங்கள் எடை போட்டுக் கொள்வதற்கு பின்வரும் கேள்விகளை உங்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள். இவற்றுக்குப் பதில் சொல்லும் போது உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளும் அபாயத்தைத் தவிர்க்க உங்களைத் தெரிந்தவரின் உதவியுடன் பதில்களைச் சரி பாருங்கள்.
கேள்விப் பட்டியல்: 1) இந்த வருடத்திற்காக நான் தீர்மானித்திருந்த குறிக்கோளை நான் எட்டியிருக்கிறேனா ?
2) என்னால் எந்த அளவுக்கு எடுத்துக் கொண்ட வேலையை சரியாகச் செய்ய முடிந்தது ?
3) மற்றவர்களோடு இணக்கமாகவும் ஒத்துழைத்தும் நடந்து கொண்டேனா ?
4) ஒத்திப் போடும் சுபாவத்தால் என் திறமைகள் மழுங்க இடமளித்தேனா ?
5) எந்த வழிமுறைகளில் என் ஆளுமையை மெருகேற்ற முயற்சித்தேன் ?
6) எடுத்த திட்டங்களில் விடா முயற்சியுடன் ஈடுபடுகிறேனா ?
7) எல்லா சந்தர்ப்பங்களிலும் திட்டவட்டமாகவும், உடனடியாகவும் முடிவுகளை எடுத்திருக்கிறேனா ?
பய உணர்வுகளால் என் திறமை குறைவதற்கு அனுமதித்துள்ளேனா ?
9) என் எச்சரிக்கை உணர்வு அதீதமானதா, அல்லது குறைவானதா ?
10) என் சக ஊழியர்களை என் உறவு மகிழ்வடையச் செய்ததா ? அவர்கள் வேதனைப்படுத்திய, அல்லது நான் வேதனையுற்ற விடயங்களுக்கு நான் ஓரளவு காரணமா. இல்லை முழுக் காரணமும் நானா ?
11) எடுத்த வேலையில் கவனம் செலுத்தாமல் சக்தியை வீணடித்திருக்கிறேனா ?
12) எல்லா விதமான விடயங்களிலும் திறந்த மனதுடனும் சகிப்புத் தன்மையுடனும் அணுகியிருக்கிறேனா ?
13) எந்த வழியில் என் திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறேன் ?
14) எனது எந்தப் பழக்கத்தையாவது கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறேனா ?
15) என் மீது மரியாதை செலுத்துவதற்கு தூண்டிவிடும் வகையில் என் சகாக்களிடம் நடந்து கொள்கிறேனா ?
16) எனது அபிப்பிராயங்களையும் முடிவுகளையும் யூகத்தின் அடிப்படையில் அமைத்துக் கொள்கிறேனா ? அல்லது துல்லியமாக அலசி, ஆராய்ந்து அமைத்தேனா ?
17) எனது நேரம், செலவுகள், வருமானம் எல்லாவற்றையும் திட்டமிட்டு அதற்கேற்ப அவதானமாக நடந்து கொண்டேனா ?
18) பெரும் ஆதாயம் தரக் கூடிய வேலைக்காக ஒதுக்கி இருக்க வேண்டிய நேரத்தை ஆதாயம் இல்லாத வழிகளில் எந்த அளவுக்கு வீணடித்திருக்கிறேன் ?
19) அடுத்த வருடத்தில் மேலும் சிறப்பாக செயல்படுவதற்கு எந்த அளவுக்கு எனது பழக்கங்களை நான் மாற்றிக் கொள்ள வேண்டும் ? நேரம் ஒதுக்குவதை எப்படி சீர் செய்து கொள்ள வேண்டும் ?
20) என் மனசாட்சிக்கு விரோதமான எந்த நடவடிக்கையிலாவது நான் ஈடுபட்டேனா ?
உங்களை நீங்களே எடை போட்டுக் கொள்ளுங்கள், உங்கள் வெற்றிக்குக் குறுக்கே நிற்கும் காரணங்களைக் கண்டு கொள்ளுங்கள், இன்றே உங்கள் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வையுங்கள்.
நன்றியுடன் ……
ப்ரியமுடன்