மனிதனின் அறிவு ஒரு மாபெரும் சக்தி. எண்ணற்ற சாதனைகளை படைக்கும் வல்லமை வாய்ந்தது மனித அறிவு. இவ்வுலகின் அறிவியல் வளர்ச்சிக்கும், விஞ்ஞான வளர்ச்சிக்கும் மனிதனின் அறிவு மட்டுமே காரணம் என்றால் அது மிகையல்ல. இந்த அறிவு அகந்தையுடன் கூடியதாய் இருந்தால் அது வீழ்ச்சிக்கே வழி வகுக்கும் என்பதயும் மறுப்பதற்கு இல்லை. இந்த கருத்தையே மையமாக கொண்ட ஒரு கதையை எழுதி உள்ளேன்.
முன்னொரு காலத்தில் செந்நாடு என்ற நாட்டை பஞ்சவன் பாரிவேந்தன் என்ற மன்னன் ஆட்சி செலுத்தி வந்தான். நாட்டு மக்களுக்கு எவ்வித குறையும் இல்லாமல்’ ஆட்சி செலுத்தி வந்தான். அவன் நாட்டில் கொசக்ஸி பசபுகழ் என்ற மந்திரவாதி வாழ்ந்து வந்தான். கொசக்ஸி மந்திர தந்திரங்களில் சால சிறந்தவனாக விளங்கினான். அவன் மந்திர தந்திரங்களின் மூலம் நாட்டை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர விரும்பினான்.
ஒரு நாள் கொசக்ஸி அரசவைக்கு சென்று நாட்டிலேயே தான் மட்டும் சக்தி வாய்ந்தவன் என்றும், நாட்டை ஆளும் திறமை தனக்கு மட்டும் தான் உள்ளது என்றும் சவால் விட்டான். பஞ்சவன் சவாலை ஏற்றுக்கொண்டு அவன் சக்தியை நிரூபித்து காட்டும்படி ஆணையிட்டான். தன்னால் பஞ்ச பூதங்களையும் அடக்க முடியும் என்றும் அதன் மூலம் இந்த நாட்டையே தனக்கு கீழ் கொண்டு வருவதாகவும் கூறினான். மன்னனும் பஞ்ச பூதங்களில் ஒன்றையாவது அடக்கி காட்டும்படி கூறினான்.
போட்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. முதலில் நெருப்புடன் போட்டியிட தயார் ஆனான். நெருப்பு பற்றி கொள்ள முடியாத சுவரையும், மேற்கூரையும் அமைத்து வீடு ஒன்றை உருவாக்கி இந்த வீட்டை நெருப்பினால் அழிக்க முடியாது என்று கூறினான். அவன் கூறியபடி வீட்டுக்கு வெளியில் இருந்து நெருப்பினால் அந்த வீட்டை அழிக்க முடியவில்லை. கொசக்ஸி மகிழ்ச்சியின் உச்ச கட்ட நிலையை அடையும் முன் வீட்டுக்குள் எரிந்து கொண்டிருந்த விளக்கு தவறி விழுந்து வீட்டிற்குள் தீப்பற்றி கொண்டது. அதனால் எரிச்சல் அடைந்த கொசக்ஸி அம்முயற்சியை கைவிட்டு அடுத்து ஆகாயத்தை கட்டுபடுத்த நினைத்தான்.
ஆகாயத்தை மறைக்க போவதாக கூறினான். அதன்படி பெரிய கருப்பு துணி போன்ற ஒன்றை தயார் செய்து அதை வைத்து ஆகாயத்தையே மறைக்க முயன்றான். ஆகாயம் முழுவதும் அந்த துணியினால் மறைக்கப்பட்டது. ஆகாயத்தில் இருந்து வந்த இடி, மின்னல் சக்தியால் அந்த துணி கிழிக்கப்பட்டது. மறுபடி தான் தோல்வியுற்றதை எண்ணி மிகவும் கோபமடைந்தான்.
அடுத்து எப்படியாவது காற்றுடன் வெற்றி பெற வேண்டும் என எண்ணி ஒரு பறக்கும் தட்டை தயார் செய்தான். அந்த தட்டில் காற்றின் வேகத்தை விட வேகமாக செல்ல முடியும் என்று கூறினான். அந்த தட்டின் மேல் ஏறி நின்று கொண்டு காற்றை விட வேகமாக பறக்க முயற்சி செய்தான். காற்று திடீரென காற்று சூறாவளியாக மாறி அவனது பறக்கும் தட்டின் திசையை திருப்பி விட்டது. இதனால் போட்டி ஆரம்பித்த இடத்திலேயே வந்து விழுந்தான்.
உச்ச கட்ட கோபத்துடன் நீருடன் போட்டிக்கு தயார் ஆனான். நீரின் போக்கை தடுக்க போவதாக கூறினான். ஒரு பெரிய தடுப்பு சுவர் ஒன்றை கட்டி கடல் நீரை வெளிய வரவிடாமல் தடுத்தான். ஆனால் நீரோ நிலத்தடி நீராக மாறி மண்ணின் வழியே வெளி வந்தது. இதுவரை எடுத்த எல்லா முயற்சிகளிலும் தோழ்வியுற்றதை எண்ணி வெட்கப்பட்டு வெறியுடன் அடுத்த போட்டிக்கு கிளம்பினான்.
அனைத்து மக்களையும் தாங்கும் பூமி தாயிடமே உன்னால் என் எடையை தாங்க முடியாது என கூறி தன் எடையை அதிகரித்து கொண்டே சென்றான். ஒரு கட்டத்தில் நிலம் தானே பிளந்து உள்ளுக்குள் விழுந்தான் கொசக்ஸி. நிலத்தின் எடை தாங்க முடியாமல் தன் தோல்வியை ஒத்துக்கொண்டு மன்னன் பஞ்சவனிடம் மன்னிப்புக்கேட்டான் கொசக்ஸி.
என்ன தான் அறிவுத்திறமை மந்திர தந்திர திறமை அனைத்தும் இருந்தாலும் இயற்கையை வெல்ல நினைப்பது கானல் நீரே!!. அகந்தையால் அழிவது நாமே!!!