என் தோழி ஒருத்தியை உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகின்றேன்.
உங்களுக்குத்தான் புதிய முகம். ஒரு காலத்தில் அவர்களின் குரலைக் கேட்காத கிராமமே கிடையாது. வானொலி நிலையத்தில் பல பிரிவுகளில் பணியாற்றியவர். அதிக நாட்கள் அவர் இருந்த பிரிவு நாடகத்துறை. நாடகம் எழுதுவதிலிருந்து அதில் நடிக்கவும் செய்திருக்கின்றார்கள். ஏற்கனவே இளைஞர், மகளீர் பிரிவுகளில் பணியாற்றிய பின்னரே இப்பிரிவுக்கு வந்தவர். இத்தனையும் நான் சொல்வதற்குக் காரணம்.
என்னைப்போலவே வாழ்வியலைப் பல கோணங்களில் பார்த்தவர். ஒரு விஷயத்தில்மட்டும் எனக்கு அதிக பரிச்சயம் கிடையாது. நடிகர்களுடன் அதிகமாகப் பழகியவர். அவர் பெயர் புனிதவதி இளங்கோவன். அவர்கள் குடும்பமும் வரலாறு, இலக்கியம், நாடகம், சினிமா என்று பல துறைகளில் இருப்பவர்கள். எங்கள் நட்பின் காலம் 52 ஆண்டுகளைத் தாண்டிவிட்டது.
எங்களுக்குள் ஒன்றுபட்ட கருத்துக்களும் உண்டு, மாறுபட்டகருத்துக்களும் உண்டு. அதனால் எங்கள் நட்பு பாதிக்கப்படவில்லை.
கணினி மூலமாக இளைஞர்களைத்திரட்டவும் அவர்களை ஓர் அமைப்பின் கீழ் ஒருங்கிணைக்க விரும்பினேன். இளைஞர்களுக்குப் பயன்படும் அமைப்பாக இருக்கப் பல திட்டங்களும் வகுத்தேன். என்னுடன் சேர்ந்து ஒத்துழைப்பதாக கூறினார். எனவே நாங்கள் இருவரும் சேர்ந்தே திட்டமிட்டு செயல்படுத்தினோம்.
மாதம் ஒரு முறை நடக்கும் கூட்டங்களுக்கும் வந்திருந்து அவர்களே முன்னிருந்து நடத்திக் கொடுத்தார்கள் ஜூலை மாதம் 17ல் கணிணியைத் தொட்டேன். ஒருமாதத்தில் அரட்டையில் நண்பர்கள் சேர்ந்து விட்டனர். எனவே முதல் ஒன்றுகூடும் கூட்டம் ஆகஸ்டு மாதம் ஆரம்பமாகியது.
முதல் கூட்டத்தின் சிறப்பு விருந்தினர் அஸ்வத்தாமா என்ற குமணன். இவர் வர்த்தக ஒலிபரப்பின் மூலம் இளைஞர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர். சென்னை வானொலியில் செய்திப் பிரிவில் வேலை பார்த்தவர். பின்னால் சொந்தத் தொழிலில் இறங்கிவிட்டார். இவர் பெயரைச் சொல்லவும் இளைஞர்கள் உற்சாகமாகி விட்டனர். சொற்பொழிவு கிடையாது. கலந்துரையாடல். விருப்பம் போல் கேள்விகள் கேட்கலாம். அந்தக் கலந்துரையாடல் சுவாரஸ்யமானதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. புனிதம்தான் பேச்சில் கலந்து கொண்டார்.
குமணன் கூட்டத்தி நடத்திச் சென்ற பாங்கில் கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரும் மனம்விட்டுப் பேச ஆரம்பித்தனர். அவ்வப்பொழுது பேச்சு திசை மாறினாலும் கூட்டம் முடிவதற்குள் ஓர் ஒழுங்கில் அமைந்தது. இரு பெண்கள், அதிலும் முதியவர்கள் முன்னிலையில் பேசுகின்றோம் என்ற தயக்கமும் போய்விட்ட்து. புதியவர்களும் நெருங்கிய நண்பர்கள் போல் உணர ஆரம்பித்தனர். மனம் அலைபாயும் வயது. எத்தனை ஆசைகள்! எத்தனை கேள்விகள்! எத்தனை ஏமாற்றங்கள்!
பிரச்சனைக்கு விடை கிடைத்துவிட்டது என்று சொல்ல முடியா விட்டாலும் வலிக்கு ஒத்தடம் கிடைத்தது போல் இறுக்கம் சிறிது தளர்ந்தது.
நல்ல தொடக்கம்.
மறுநாள் வம்ஸி வந்தான். அப்பொழுது புனிதமும் நானும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். வந்தவுடன் முதல் நாள் கலந்துரையாடல்பற்றிப் பேசியபின் ஒரு கேள்வி கேட்டான்.
“காதலைப்பத்தி நிறைய கேட்கணும். நீங்க ரெண்டு பேரும் வயசானவங்க. உங்களுக்குக் காதல்பற்றி என்ன தெரியும்?”
“அடப்பாவி, எங்களுக்குத் தெரியாத காதலா? என்று புனிதம் கேட்டார்கள்.
நான் ஒரு சம்பவம் கூறினேன்.
ஹோட்டல் காஞ்சியில் ஓர் இலக்கியக் கூட்டம்.
கூட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுது சில மாணவ மாணவிகள் வந்து என்னிடம் “சாண்டில்யன் வந்திருக்கிறாராமே, அவரைக் கொஞ்சம் அறிமுகப் படுத்த முடியுமா “ என்று கேட்டார்கள். நானும் உடனே அங்கிருந்த சான்டில்யனைத் தனியாக அழைத்துவந்தேன். அவர் எனக்கு நெருங்கிய நண்பர்களில் ஒருவர் அவரைப் பார்த்தவுடன் மாணவர்கள் முகத்தில் அதிர்ச்சி. வயதானவர். தலையில் சின்ன உச்சிக் குடுமி. வெள்ளை நிற மயிர்கள். முக்கால் கை கதர்ச் சட்டை. வேஷ்டி கூடக் கொஞ்சம் தூக்கி கட்டியிருப்பார்.
அவர்கள் முகத்தைப் பார்த்தவுடன் சிரித்துவிட்டார்
“இவரா சாண்டில்யன்?” ஒருவன் மெதுவாகக் கேட்டான்
“ஏம்பா, உன்னை மாதிரி சின்னப் பைய்யனை எதிர்பார்த்தியா? சின்னப் பையன்களுக்குத் தெரியறதைவிட காதலைப் பத்தி வயசானவங்களுக்குத்தாம்பா நிறைய தெரியும்”
உடனே அங்கிருந்த இளைஞர்கள் எல்லோரும் சிரித்தனர்
“அப்போ நாங்க காதலிச்சா ஏன் பெரியவங்க திட்டறாங்க? “ என்று ஒருவன் கேட்டான்
“ஓ அதுவா, அவங்களுக்கு வயசாயிட்டுதே, அதான் ஆத்திரம். ஆமாம் நீங்கள் காதல்னு நினைக்கிறீங்களே அதுதான் காதலா? “
கேள்வி கேட்டவனுக்கு உடனே ஆத்திரம் வந்துவிட்டது.
“அப்போ எங்களுக்கு காதல் வகுப்பு நடத்துங்க”
“இலக்கியத்தை ஒழுங்கா படி அதில் சொல்லாத காதலா. ? நானே அதைப்பாத்துத்தான் காதலைப்பத்தி எழுதறேன். என் கதை படிச்சு பிடிச்சதனாலேதானே என்னைப் பாக்க ஆசைப்பட்டீங்க”
பின்னர் உரையாடல் கலகலப்பாக இருந்தது.
அதே போல் வம்ஸியுடனும் நாங்கள் பேசவும் சிரித்துவிட்டு ஒத்துக் கொண்டான்
முதல் கூட்டத்தில் எல்லோரும் நண்பர்களாயினர். வயது இடைவெளி கூட தடுப்புச் சுவராக இருக்கவில்லை.
அடுத்த கூட்டத்தில் தம்பதிகள் அழைக்கப்பட்டிருந்தனர். இரு தலைமுறைகளின் கலந்துரையாடல். இரு தரப்பும் மனம்விட்டுப் பேசினர்.
அங்கே பிள்ளைகளின் பெற்றோர்களோ அல்லது பெரியவர்களின் பிள்ளைகளோ கிடையாது.
இரு பக்கத்தினரின் ஆத்திரம், ஆதங்கம், கோபம் எல்லாம் அருவியாகக் கொட்டின.
இரு பக்கத்திலும் அவர்களுக்கே தெரியாமல் உணர்வுகளின் கொந்தளிப்பைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது.
அதன் பின்னர், எல்லோரும் என் பிள்ளைகளாகிவிட்டனர். அவரவர் பிரச்சனைகளை, சந்தேகங்களை என்னிடம் கேட்க ஆரம்பித்தனர். அதுமட்டுமா? பலரின் சிக்கலான நேரத்தில் நான் இருந்து உதவ ஆரம்பித்தேன். நான் சொல்லப் போகும் பல நிஜக் கதைகளுக்குரிய நாயகர்களே இவர்கள்தான். பெயரை மட்டும் மாற்றி எழுதுவேன்
மூன்றாவதில் இளவயதுப் பெண்கள் வந்தனர். விவாதங்கள் சூடாக இருந்தன. புனிதம் நடுவராக இருந்து வழி நடத்தினார்கள்.
இருதரப்பிலும் வந்தவர்கள் அறிமுகம் இல்லாதவர்கள்.
விஜய் டிவி “நானா நீயா?” மாதிரி இருபக்கமும் கேள்விகணைகள்!