தமிழ் படித்தேன் என்கிறாய்..
இலக்கணமும் தெரியவில்லை
இலக்கியமும் தெரியவில்லை
பிழையின்றி எழுதவும் தெரியவில்லை.
தமிழன் என்று சொல்வதற்கு
உன்னிடம் என்ன அடையாளம்
இருக்கிறது நண்பா....?
தமிழால் பேசி விட்டால் நீ
தமிழனாகி விடுவாயா?
தமிழரல்லாத பல பேர் நம்
தமிழை வளர்க்கவில்லையா?
தமிழைப் பேசி தமிழைப் பாடி
தமிழாலே உயர்ந்தவர்
எத்தனை எத்தனையோ பேர்
உலகில் இருக்கும் போது
அரை குறையாய்த் தமிழ் படித்து
தமிழுக்குத் தலைவன் என்ற
பெயரைத் தேட முயல்கிறாயே!
காலத்தின் கோலத்தால் நான்
அரசின் படியில் மேலும் இல்லாமல்
கீழும் இல்லாமல் நடுநிலையில் நிற்கிறேன்
நீயோ எனக்கு மேலே தலைமை எனும்
மேடையில் நிற்கிறாய்.....
ஆனாலும் தோற்றுவிட்டவன் நானல்ல
நீயேதான். ஏன் தெரியுமா?
என் குழந்தைகளை நான் தமிழ்ப்
பள்ளிகளில் சேர்த்தேன்.
அவர்களும் தமிழை வளர்ப்பார்கள்
தமிழ் நன்னெறிகளைப் போற்றுவார்கள்
தமிழர்களாக உருவெடுப்பார்கள்
என்ற மன நிம்மதியோடு....
மிக்க மன மகிழ்ச்சியோடு.
ஆயிரம் கோடி கொடுத்தாலும்
வர மாட்டாத மன திருப்தி
எனக்குக் கிடைத்து விட்டது.
ஆனால் நீயோ உன் குழந்தைகளை
ஆங்கில மொழிப் பள்ளிகளிலும்
மலாய் மொழிப் பள்ளிகளிலும்
சேர்த்து விட்டாய்..........
தமிழ் சோறு போடுமா
என்றும் கேட்டாய்...
இனி ஒரு தமிழனை நீ உன்
சந்ததி மூலம் உருவாக்க முடியுமா?
முடியாது, கண்டிப்பாக முடியாது
தோற்று விட்டாயடா நண்பா....
தோற்றத்தில் தமிழனாக
இருந்தால் மட்டும் போதுமா?
தமிழன் என்ற உணர்வு எங்கே?
தமிழ் கொடுத்த வீரம் எங்கே?
தமிழ் வளர்த்த பண்பாடு எங்கே?
மறந்து விட்டாயே!
தாய் மொழியை மறந்தவன் தன்
தாயை மறந்தவனுக்கு ஒப்பாவான்
திருக்குறளை கொஞ்சமும் அறியாதவனை
எப்படி ஒரு தமிழனென்று
நா கூசாமல் சொல்வது?
உன் மனதைத் தொட்டுப் பார்
உன்னையே நீ கேட்டுப் பார்
நீ பெற்ற பிள்ளைகளாயினும்
தமிழ் படிக்கும் உரிமையை
அவர்களிடமிருந்து பறித்து விட்டாயே..
நீ செய்தது நியாயம்தானா?
உண்மையில் ....
நீ ஒரு தமிழன்தானா?