பழமொழி என்பது முது மொழி (ணீணூணிதிஞுணூஞ) என்றும் முன்னோர் வகுத்த நெறி எனவும் பொருள்படும். பழமொழிகளைக் கூறிப் பொருளை விளக்குதலும், நீதியை உணர்த்துதலும் தமிழ் வழக்கு. அந்த வகையில், பழமொழி மருத்துவ இலக்கியங்களில் நிரம்பக் காணப்படா விட்டாலும், மருத்துவப் பழமொழியென அதிக அளவில் வழக்கில் இருந்து வரக் காணலாம்.
ஒரு தொழிலை நூல்வழிக் கற்பதைவிடவும் சிறந்தது, பயிற்சி முறையில் கற்பது என்பது மருத்துவத் துறைக்கு ஏற்றதாக இருக்கிறது. நுண்மையான செயல் பலவற்றைக் கொண்ட மருந்து செய்முறையில் குற்றம் நிகழாமலிருக்க, பயிற்று முறை தேவை என்பது பழமொழியின் மூலம் உணர்த்தப்பட்டுள்ளது.
கை காட்டாத் தொழில் முறைக்கு கரைதா னேது?''83
என்று, பயிற்றுவிக்காத தொழில் முறை எல்லையை அடையாமல் அலைந்து கொண்டிருக்கும் என்பதை விளக்குகிறது.
காமம் என்பது அளவுடன் இருக்க வேண்டும். அது அளவைக் கடந்தால் அதனால் மற்றவருக்கும் தொல்லை. அதனை மேற்கொள்ப வனின் அறிவும் மழுங்கும் என்பதைக் கூறும் பழமொழியாக,
தீராத காமிக்கு அறிவங் கேது?''84
என்பது உரைக்கப்படுகிறது.
கருங்காலி என்றொரு மரம். மிகவும் உறுதியானது. அந்த மரத்திலிருந்து கோடாலி என்னும் மரம் வெட்டும் கருவிக்குக் காம்பு செய்வர். கோடாலிக்குக் காம்பாக அமைந்த கருங்காலி, கருங்காலி மரத்தை வெட்டும் கோடாலிக்குக் காம்பாக அமைந்து விடுகிறது. இதனைக் குறிப்பிட்டு வழங்கி வரும் பழமொழி, ‘குலத்தை அழிக்க வந்த கோடாலிக் காம்பே’ என்பதாகும். அதே கருத்துடையதாக வேறு இடங்களிலும் அந்தப் பழமொழி வழங்கி வரும்.
குலந்தனக்குக் கோடாலிக் காம்பு மாச்சே''85
என்று, மருந்தே மருந்தைக் கெடுக்கும் குணத்தைக் குறிக்க வழங்குகிறது.
மருத்துவக் கலையின் அங்கமான வாதம் ஒரு விந்தையாகக் கருதப்படும். அது, பல வேலைகளைச் செய்வதனால் அவ்வாறு உரைக்கப்படும். வாதத்துக்குத் தங்கம் மூலப் பொருளாகும். தங்கம் இல்லாத வாதம் பங்கம் என்பர். அதே போல, வேதாந்தம், சிந்தாந்தம் என இரண்டு தத்துவம். வேதாந்தம், ஞானம் பெறும் வழி முறைகளை விவரிக்கும். வேதாந்தம் அறியாமல் ஞானத்தை அடைய முடியாது என்பது பழமொழியாகக் கூறப்படுகிறது.
வங்கம் முடிந்தால் தங்கம் இல்லாவிடில் பங்கம்''
வாதம் ஊதியறி, வேதம் ஓதியறி''86
என அமைந்துள்ளதைக் காணலாம்.
கடம்பு மரத்திலான கட்டிலில் படுத்துறங்கினால், உடல்வலி, குளிர் சுரம், மூட்டுப் பிடிப்பு, கண்ணோய், தொண்டைப்புண், வயிற்றுவலி, மனச்சோர்வு ஆகியன குணமாகும் என்பது மருத்துவக் குறிப்பானபடியால்,
உடம்பை முறித்துக் கடம்பில் போடு''87
என்னும் பழமொழி உருவாயிற்று.
இலுப்பை
*******
சர்க்கரை செய்யும் ஆலை இல்லாத ஊரில், சர்க்கரைக்காக இலுப்பைப் பூவைப் பயன்படுத்திச் சர்க்கரை செய்வர். இச்சர்க்கரை, அழலை, தீச்சுரம், நீர்வேட்கை, இருமல், இளைப்பு, வீக்கம், வாயு, சேற்றுப்புண் போன்றவற்றை நீக்கக் கூடிய மருத்துவப் பண்பு நிறைந்தது. எனவே,
ஆலை இல்லா ஊரில் இலுப்பைப் பூ சர்க்கரை.''87
சர்க்கரையை விட இலுப்பைப் பூச் சர்க்கரை சிறந்தது என்பதால் இந்தப் பழமொழி கூறப்பட்டது.
வல்லாரை
********
வல்லாரையை உண்டால் நினைவாற்றல் பெருகும் என்பது பொதுச் செய்தி. அதைவிட, வல்லாரையில் மருத்துவக் குணம் நிறைந்துள்ளது என்பதைத் தேரன், வல்லாரைக் கற்பமுண வல்லாரை யார் நிகர்வார் என்கிறார். இது வாய்ப்புண், கழிச்சல், குருதிக் கழிச்சல், வயிற்றுக் கடுப்பு, சுரம், இளைப்பு, தொண்டைக் கம்மல், வெறி, யானைக் கால், விரைவீக்கம், நெரிகட்டி, மேகப்புண், நரம்பு நோய் போன்ற பல நோய்களுக்கு மருந்தாகும். அதனால் தான்,“வல்லாரை இருக்க எல்லாரும் சாவதேன்”88 என்னும் பழமொழி குறிக்கிறது.
முருங்கை
********
முருங்கையின் அனைத்து உறுப்புகளும் மருந்தாகிறது. என்பதற்கு,
முருங்கைக் காய்கறி முகிலிலை வேர்கொள
ஒருங்குள நோயெலாம் ஓடவும் துரத்துமே''89
என்று தேரர் தரும் குறிப்பு சான்றாகிறது. அதனால் தான்,
முருங்கை உண்ண நொறுங்குமாம் மேகம்''
முருங்கைக்காய் என்றதும் முறிந்ததாம் பத்தியம்''90
என்னும் பழமொழிகள் உருவாகி இருக்கின்றன.
ஆவாரை
******
ஆவாரை அனைத்துவகை மேக நோயையும் குணப்படுத்த வல்லது. குறிப்பாகச் சேர்க்கை நோய்க்குச் சிறந்த மருந்து. பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாட்டை நீக்கும். உடல் சூட்டைத் தணித்து, மேனியைப் பொன்னிறமாக மாற்றும் என்பது மருத்துவக் குறிப்பு. இதனை அறிந்தே,
ஆவாரை பூத்தால் சாவாரைக் கண்டதுண்டோ?''91
என்று, பழமொழி வினா தொடுக்கிறது.
வெங்காயம்
**********
வெங்காயத்தின் பூ, தாள், கிழங்கு, விதை ஆகிய எல்லாமே உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. இது உடலில் வெப்பத்தை உண்டாக்கும்; சிறுநீர்ப் பெருக்கும்; கோழையை அகற்றும் என்பதால்,
வெங்காயம் உண்போர்க்குத் தங்காயம் பழுதில்லை''92
என்று பழமொழி குறிப்பிடுகிறது.
கழுதைப் பால்
***********
குழந்தை பிறக்கும் போதே தோன்றக் கூடிய நோய்களில் செவ்வாப்பு என்னும் நோயும் ஒன்று. இதனை உள்ளங்கால், உள்ளங்கை பகுதிகளில் காணப்படும் நீல நிறத்தால் கண்டறியலாம். இது குழந்தையைப் பெரிதும் பாதிக்கக் கூடியது. இதற்குக் கழுதைப்பால் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இதனைக் கருத்திற் கொண்டே, குழந்தை பிறந்த உடனே கழுதைப்பால் ஊட்டிவிடும் பழக்கம் தோன்றி யிருக்கிறது. நோய்க்கான மருந்து நோயின்றியே பயன்படுத்தப் படுகிறது. இதனால் கழுதைப் பாலின் சிறப்பினை அறிந்து,
கழுதைப் பாலைக் குடித்ததாம்
அழுத பிள்ளை சிரித்ததாம்''93
என்னும் பழமொழி, வழக்கில் வந்தது.
இவ்வாறு, மருத்துவம் தருகின்ற குறிப்புகளைக் கொண்டும், அனுபவத்தின் மூலமாகவும் கண்டறிந்தவற்றைப் பிறரும் அறிந்திட வேண்டும் என்பதற்காக, பழமொழி அமைப்பில் கருத்துகள் வெளியிடப் படுகின்றன. பழமொழிகள் தேரையர் நூல்களில் அதிக அளவில் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. கீழ்க்கணக்கில் இடம் பெற்றுள்ள பழமொழி போல, மருந்தாகும் பொருளின் குணத்தைக் குறிப்பிடும் போது, அதற்கென ஒரு பழமொழியைக் கூறுகின்ற வழக்கம் அந்நூல்களில் காணப்படுகின்றன.