உத்தரவு
நினைவு விரல்களால்
தலைகோதுவதை நிறுத்து..
கண்களின்
பனிக்குடம் உடைய
ரத்தக் கவுச்சியடிக்க
தொப்புள்கொடி சுற்றிப் பிறக்கும்
கனவுப் பிரசவங்களுக்கு
சீம்பாலாய்
இன்னும் எத்தனை நாளைக்குத்
தருவது..
பிரிவின் கண்ணீரை?
முகூர்த்தம்
தொலைதூர
தெருவிளக்குக் கம்பத்தில்
தன்னை விடுவிக்கும்
காற்றுக்காய்
அப்படியும்..
இப்படியும்.. அசைகிறது..
மீண்டும் பறக்கும்
தவத்தில்..
நூலும்.. வாலும்..
அறுந்த பட்டம்!
விழிகள் இடித்து
உயிரில் அதிர்வு!
மனக்குகை இடுக்கில்
பார்வையின் விதைகள்!
கனவுகளின் மார்சுரந்து
விழிப்பூந்தொட்டியில்
துளிர்க்கிறது..
இதயங்களின் வார்த்தை.
இமை மாறிப் படபடக்கும்..
இமை வழி.. நிகழ்கிறது
மகரந்தச் சேர்க்கை.
வெவ்வேறான வேர்களில்
ஒரே மாதிரியான
பூவை மலர்த்தி.. தன் இருப்பைக் காட்டுகிறது..
காதல்!