பூதந்தேவனார் சங்க காலத்தில் வாழ்நத ஈழத்துப் புலவர் ஆவர்.
வாழ்க்கை குறிப்பு
**************
இவர் மதுரைக் கடைச் சங்கப் புலவர்களுள் ஒருவர். ஈழத்து பூதந்தேவனார் எனவும் சொல்லப்படுவர். ஈழநாட்டிலிருந்து பாண்டியநாடு போய் மதுரைச் சங்கத்தில் புலவராய் நிலவினார். இவர் தனது தந்தையாகிய ஈழத்துப் பூதனோடு மதுரை வந்து கற்று புலவரானார் என்றும் கூறுவார். ஈழத்து பூதந்தேவனார் என்னும் பெயர் நற்றிணையிலுங் குறுந்தொகையிலும் செய்யுள் முகப்பில் வரையப்பட்டுள்ளது.
சங்க இலக்கியப் பங்களிப்பு
*********************
இவர் பாலையுங் குறிஞ்சியும் பாடியுள்ளார். இவருடைய பாடல்கள் நற்றிணையிலொன்றும் குறுந்தொகையில் மூன்றும் அகநானூறு என்னும் நெடுந்தொகையில் மூன்றுமாக ஏழு பாடல்கள் உள்ளன. நற்றிணையில் வாடை விசுங் குளிர்காலத்தில் தலைவியைப் பிரிதல் மடைமையரென்று பாடுவர். அப்பாடலை இங்கே தருதும்:-
திணை:- பாலை துறை:- இஃது உலகியல் கூறப் பொருள் வயிற் பிரிய வலித்த நெஞ்சிற்குத் தலைமகன் கூறியது.
அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல்காழ்
வீடுறு நுண்டுகி லூடுவந் திமைக்குந்
திருந்திழை யல்குற் பெருந்தோட் குறுமகண்
மணியே ரைம்பான் மாசறக் கழீஇக்
கூதிர் முல்லைக் குறுங்கா லலரி
மாதர் வண்டொடு சுரும்புபட முடித்த
விரும்பன் மெல்லணை யொழியக் கரும்பின்
வேல்போல் வெண்முகை பிரியத் தீண்டி
முதுக்குறை குரீஇ முயன்றுசெய் குடம்பை
முங்கி லங்கழை தூங்க வெற்றும்
வடபுல வாடைக்குப் பிரிவோர்
மடவர் வாழ்யிவ் வுலகத் தானே (நற்றிணை-366)
இன்னும் குறுந்தொகையில் உள்ள மூன்று செய்யுட்களும் சிறந்த பொருளமைவுடையன ஆகும்.
அவற்றுள் இரண்டைக் காட்டுதும்:-
திணை:- பாலை துறை:- இஃது தோழி கிழத்தியை உடன்போக்கு நயம்பக் கூறியது.
நினையாய் வாழி தோழி நனைகவுள்
அண்ணல் யானை யணிமுகம் பாய்ந்தென
மிகுவ லிரும்புலிப் பகுவா யேற்றை
வெண்கோடு செம்மறுக் கொளீஇய விடர்முகை
கோடை யொற்றிய கருங்கால் வேங்கை
வாடு பூஞ்சினையிற் கிடக்கும்
உயர்வரை நாடே னொடுபெயரு மாறே. (குறுந்தொகை-343)
திணை:- குறிஞ்சி துறை:- இஃது தலைமகன் சிறைப்புறத்தானாக வெறியஞ்சிய தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.
வெறியென வுணர்ந்த வேல னோய்மருந்
தறியா னாகுத லன்னை காணிய
வரும்பட ரெவ்வ மின்றுநா முழ்ப்பினும்
வாரற்க தில்ல தோழி சாரற்
பிடிக்கை யன்ன பெருங்குர லேன
லுண்கிளி கடியும் கொடிச்சிகைக் குளிரே
சிலம்பிற் சிலம்புஞ் சோலை
யிலங்குமலை நாட னிரலி னானே. (குறுந்தொகை-360)
நெடுந்தொகையான அகநானூற்றில் இவரால் பாடப்பட்ட மூன்றுள் ஒன்று காட்டுதும்:-
திணை:- குறிஞ்சி துறை:- இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.
முடைச்சுவற் களித்த மூரிச் செந்தினை
ஓன்குவண்ர்ப் பெருங்குரல் உணீஇய, பாங்கர்ப்
பகுவாய்ப் பல்லி பாடுஓர்த்துக் குறுகும்
புருவைப்பன்றி வருதிறம் நோக்கி,
கடுங்கைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய
நெடுஞ்சுடர் விளக்கம் நோக்கி வந்து, நம்
நடுங்குதுயர் களைந்த நன்ன ராளன்
சென்றனன் கொல்லோ தானே-- குன்றத்து
இரும்புலி தொலைத்த பெருங்கை யானைக்
கவுள்மலிபு இழிதரும் காமர் கடாஅம்
இருஞ்சிறைத் தொழுதி ஆர்ப்ப, யாழ்செத்து,
இருங்கல் விடர் அலை அசுணம் ஓர்க்கும்
காம்புஅமல் இறும்பில் பாம்புபடத் துவன்றிக்
கொடுவிரல் உளியம் கெண்டும்
வடுஆழ் புற்றின வழக்குஅரு நெறியே? (அகநானூறு(களிற்றியானை நிரை)-88)