வெளியில் கும்மிருட்டு, விடாமல் பெய்தது மழை. எதையும் பார்க்காமல், கற்பகத்தை மூன்று மாத கைக்குழந்தையுடன் வெளியே தள்ளினான் ராமமூர்த்தி. அவளுக்குப் பின்னாலேயே வந்து விழுந்தது 3 வயது பெண் குழந்தை.
கொட்டித்தீர்த்த மழைக்கு இடையே எங்கே போவதென்றே தெரியவில்லை. ஊருக்கு நடுவே இருந்த மரத்தடியில் நின்றாள். குழந்தைகள் இரண்டும் வீறிட்டு அழுதன. இரண்டுக்கும் பசி, அவளுக்கும்தான். காலையிலிருந்து கணவனுடன் தகராறு; அவளும் ஒரு வாய் கூட சாப்பிடவே இல்லை.கையில் பைசாக் காசு இல்லை. எங்கேயும் போகவும் முடியாது. குழந்தை அழும் சத்தத்துக்கும் யாருமே எட்டிப் பார்க்கவில்லை. சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தவர்களும், என்ன ஏதென்றும் கேட்கவில்லை. மழைத் தண்ணீரோடு சேர்ந்து அவளது கண்ணீரும் கரைந்து ஓடிக் கொண்டிருந்தது.
தாயின் கண்ணீரையும், மரக்கிளைகளில் இருந்து தெறித்து விழுந்த தண்ணீரையும் விழுங்கிய குழந்தை சிறிது நேரத்தில் தூங்கி விட்டது. மடியில் படுத்திருந்த சிறுமியும் அழுது ஓய்ந்து தூங்கிப் போயிருந்தாள்.கிழக்கே வானம் மெல்ல வெளுத்துக் கொண்டிருந்தது.நடந்ததையெல்லாம் நினைத்துப் பார்த்த கற்பகம், ஒரு முடிவுக்கு வந்தவளாய், குழந்தையை தோளில் போட்டுக் கொண்டு, சிறுமியின் கையைப் பிடித்தபடி, நடந்தாள். சற்று தூரத்தில் ஊர்க்கிணறு வந்தது. விரக்தியின் விளிம்பு, அவளை கிணற்று விளிம்பில் வந்து நிறுத்தியிருந்தது.
இனி தனக்கும், குழந்தைகளுக்கும் வாழ்வு ஏதுமில்லை என்று தீர்மானித்தவள், கைக்
குழந்தையை அள்ளி எடுத்து முத்தமிட்டாள். அடுத்த வினாடியே, அப்படியே குழந்தையை கிணற்றுக்குள் வீசினாள்.அடுத்த குழந்தை, "ஏம்மா, தங்கச்சிப்பாப்பாவை கிணத்துக்குள்ள வீசுன' என்று பரிதாபமாய்க் கேட்க, "நீயும் தங்கச்சி கிட்டப்போறியா' என்று கேட்டாள் கற்பகம். அவளும் "போறேன்' என்று தலையாட்ட, அவளைத் தூக்கி முத்தம் கொடுத்தவள், கதறியவாறே அவளையும் கிணற்றுக்குள் வீசினாள்.தண்ணீரில் தத்தளித்த குழந்தைகளைப் பார்த்து, அடுத்த நொடியிலேயே அவளும் குதித்தாள். சற்று தூரத்தில் நடந்து சென்ற விவசாயி ஒருவர், அதிகாலை நேரத்தில் ஊர் கிணற்றுக்குள் யாரோ குதிக்கும் சத்தம் கேட்கிறதே என வந்து பார்க்க, கற்பகம் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தாள்.
ஊரே கிணற்று முன்னே கூடியது. இளவட்டங்கள் உள்ளே குதித்து, கற்பகத்தையும், குழந்தைகளையும் தூக்கி வந்தார்கள். குழந்தைகள் ரெண்டும் பிணமாயிருந்தன; கற்பகம் காப்பாற்றப்பட்டும், நடைப்பிணமானாள். எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள்.போலீஸ் வந்தது. ஊர் மக்களையும், அவளின் கணவன் ராமமூர்த்தியையும், கற்பகத்தின் அக்காவையும் விசாரித்தது. கற்பகத்தை விசாரித்தபோது, அவள் வாய் திறக்கவே இல்லை. குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்ததாக கற்பகம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாள்.
ராமமூர்த்தி, அந்த ஊரிலேயே வசதியான விவசாயி. அவனுக்கும், தேவகிக்கும் திருமணமாகி முழுசாய் மூன்று வருஷம் முடிந்து விட்டது. குழந்தை இல்லை. அத்தனை சொத்துக்கும் வாரிசு இருக்காதோ என்று பயந்த ராமமூர்த்தி, தேவகியை சரிக்கட்டி, அவளது தங்கை கற்பகத்தை கல்யாணம் செய்து கொண்டான்.கற்பகத்துக்கு ஆண் குழந்தை பிறந்தது. வாரிசு தந்த கற்பகத்தை, ராமமூர்த்தி கொண்டாட, தேவகியே கற்பகத்துக்கு விரோதியானாள். அடுத்து கற்பகத்துக்கு பெண் குழந்தை பிறக்க, கணவனுக்கு கோபத்துக்கு தூபம் போட்டாள். அடுத்தும் பெண் குழந்தை பிறக்க, கற்பகம் யாருக்கும் பிடிக் காதவள் ஆனாள்.
ஆண் வாரிசை வைத்துக் கொண்டு, அவளை வீட்டை விட்டு துரத்த முற்பட, தேவகியும் திட்டம் போட்டுக் கொடுத்தாள். ஆண் குழந்தையை அவளிடம் அண்ட விடாமல், அவனது தாய் என்பதையே மறைத்து, அவனை வளர்த்தனர். அவன் கேட்டதெல்லாம் வாங்கிக்கொடுக்க, அம்மாவையே மறந்தான் அவன்.தினமும் கற்பகத்தைத் திட்டுவதும், அடிப்பதுமாக சித்ரவதை தொடர்ந்தது. அன்று நடந்த தகராறின்போது, ராமமூர்த்தியுடன் தேவகியும் சேர்ந்தே அவளை வெளியே தள்ளி விட்டாள். வெறுப்பின் உச்சத்தில்தான் குழந்தைகளைக் கொன்றாள் கற்பகம்.
இரண்டு ஆண்டுக்கு பின் கற்பகம் மீதான கொலை வழக்கு, கோர்ட் விசாரணைக்கு வந்தது. போலீசார் நரைத்துப்போன, எண்ணெய் பார்க்காத தலையுடன் கூடிய ஒரு பெண்ணை கோர்ட்டுக்கு இழுத்து வந்து நிறுத்தினர். நீதிபதி கேட்ட எந்தக் கேள்விக்கும் அவள் எந்தப் பதிலும் சொல்லவில்லை.கோர்ட் ஊழியர்கள், போலீசார் மிரட்டியபோதும் அவள் பேசவேயில்லை. சம்பந்தப் பட்ட ஸ்டேஷன் இன்ஸ் பெக்டர், அந்தப் பெண்ணை பார்த்து அதிர்ந்தே போனார். 30 வயதான கற்பகமா, இப்படி 70 வயது கிழவியைப் போல் மாறியிருக்கிறாள் என்று அவருக்கு அதிர்ச்சி.
பேசா மடந்தையாகி விட்ட கற்பகத்தின் பரிதாப நிலையைக் கண்ட இருதரப்பு வக்கீல்களும் கோர்ட்டில் ஆஜராகும் போது, ஒரு நல்ல சேலை கட்டிக் கொண்டு வர ஏற்பாடு செய்யும் படி போலீசாரிடம் கேட்டுக் கொண்டு பணம் கொடுத்தனர். சாட்சி விசாரணை துவங்கி நடந்தது.அவள் கொலைகாரியாக மாறியதற்கான காரணம் விசாரிக்கப்பட்டது. சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், கைது செய்தபோது அவளின் நிலை குறித்து போலீசாரிடம் விசாரிக்கப்பட்டது. இதன் பின் சிறையில் அவள் நடந்து கொண்ட விதம் எல்லாம் விசாரிக்கப்பட்டது.
நடைப் பிணமாக மாறியிருந்த கற்பகத்தை வழக்கில் இருந்து விடுவித்தார் நீதிபதி. அவளுக்காக ஆஜரான வக்கீல் சந்தோஷம் அடைந்தாலும், அதை அறிந்து கொள்ளும் மன நிலையில் அவள் இல்லை. விடுதலையான கற்பகத்தை யார் அழைத்துச் செல்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டது.கணவர், அக்கா தேவகி மற்றும் மகன் ஹரி ஆகியோர் கோர்ட்டுக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அவளை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். திடீரென அங்கு வந்த 50 வயது பெண் ஒருவர் , "நான் கற்பகத்தின் பெரியம்மா மகள்' என அறிமுகப்படுத்திக் கொண்டு, "நான் இவளை கடைசி வரை பார்த்துக்கிறேன்' என்று கற்பகத்தை அழைத்துச் சென்றாள்.
கற்பகம் தன்னை வீட்டை விட்டு துரத்தி, பால் குடி மாறாத குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்யக் காரணமாக இருந்த கணவரையும், அக்காவையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவர்கள் தலை குனிந்து கொண்டார்கள்.
வெளியே செல்லும் முன், அவளது மகனை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தாள். அப்போதும் அவள் எதுவுமே பேசவில்லை. அவளது பார்வை, "நான்தானடா உன் அம்மா' என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது.