நமது திறன்களை நேரடியாக பிரதிபலித்து காட்டுவது நேர்முகத் தேர்வு. எழுத்துத் தேர்வில் அனைவருக்கும் அனுபவம் இருந்தாலும் நேர்முகத்தேர்வு சற்று வித்தியாசமானது. நேர்முகத் தேர்வில் வெல்வதற்கான நுணுக்கங்களை சில இங்கே
'பேசுங்கள்' உங்களைப் பற்றி தெரிந்து கொள்கின்றேன் என்பதை நேர்முகத் தேர்வுக்கான ஒருவகை விளக்கம் என்று கூறலாம். உயர்கல்விக்கு மாணவ, மாணவியரை தேர்வு செய்யவும், வேலை நாடுனர்களை தேர்வு செய்யவும் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு நடைமுறை பரவலாக இருந்து வருகின்றது.
பன்முகத் திறன்களை மதிப்பீடு செய்து அவற்றின் அடிப்படையில் தகுதியானவர்களை தேர்வு செய்தால்தான் அளிக்கப்பட்ட பணியினை திறம்பட செய்ய முடியும். இந்த கருத்தின் அடிப்படையில்தான் சில பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும்போது எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தும் நடைமுறை உள்ளது.
உதாரணமாக தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) பணிவாய்ப்புகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும்போது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு போன்றவற்றை நடத்துகின்றது. சாதாரணமாக எழுத்தர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், சுருக்கெழுத்து தட்டச்சர் போன்ற பணிக் காலியிடங்களை நிரப்புவதற்கு வெறும் எழுத்துத் தேர்வு மட்டுமே நடத்தப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணிநியமன ஆணை வழங்கப்படுகின்றது. தொகுதி 2, தொகுதி 1 போன்ற தேர்வுகளுக்கு கல்வித் தகுதி குறைந்தபட்சம் பட்டப்படிப்பு என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி தொகுதி 1 தேர்வின்போது மூன்று நிலைகள் உள்ளது. முதலில் முதல்நிலைத் தேர்வு (கொள்குறி வகை), இரண்டாவது கட்டமாக முதன்மைத் தேர்வு (விரிவாக விடையளித்தல்) என்ற வகையில் நடைபெறுகிறது. மூன்றாம் நிலையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
தொகுதி 1 மூலம் தேர்வு செய்யப்படுபவர்கள் அரசு இதழ் பதிவு பெற்ற அலுவலர்களாக பணிபுரியும் வாய்ப்பைப் பெறுவதால் பொறுப்பு மிக்க தலைமைப் பண்புடைய, முடிவெடுத்து செயல்படும் திறன்களை உடையவர்களை இனங்கண்டு தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.
தேர்வு முறைகள்:
ஒருங்கிணைந்த சார்நிலை பணிகளுக்கு சமீபத்தில் எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளிவந்து நேர்முகத் தேர்வு நடைபெற இருக்கும் சூழலில், நேர்முகத் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கு சில ஆலோசனைகள் இக்கட்டுரையில் தரப்படுகின்றது.
எழுத்துத் தேர்வு என்பது கற்றறிந்தவற்றை கேள்விக்கேற்ப சரியாக எழுத்து மூலம் விடையளிப்பதைக் கொண்டு மதிப்பீடு செய்யப்படுகின்றது. நேர்முகத் தேர்வு என்பது வாய்மொழியாக கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது பதில் அளிப்பவரின் ஆளுமைத்திறன், புரிதல், பதில் அளிக்கும் பாங்கு, நடை, உடை, பாவனை ஆகியவற்றை மதிப்பீடு செய்ய உதவுகின்றது.
நேர்முகத் தேர்வை நடத்தும் குழுவில் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் இடம் பெறுவர். ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழு நேர்முகத் தேர்வு நடத்தும்போது தேர்வாணைய உறுப்பினர்கள், நிரப்பப்பட இருக்கக்கூடிய பணிகள் சம்பந்தபட்ட துறைத் தலைவர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள், வல்லுனர்கள் ஆகியோர் கலந்து கொள்வர். நேர்முகத் தேர்வுக் குழுவில் இருப்பவர்கள் மிகுந்த அனுபவம் மிக்கவர்களாக இருப்பார்கள்.
அடிப்படை விஷயங்கள்:
உங்களது பெயர், பெற்றோரின் பெயர்கள், ஊர், கல்வித்தகுதி, விரும்பும் பணி, பிற தகுதிகள் ஆகியவற்றை விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருப்பீர்கள். அதன் அடிப் படையில் கேள்விகள் முதலில் அமையும். உங்களது பெயருக்கான காரணம், நீங்கள் வசிக்கும்பகுதி அல்லது மாவட்டத்தின் சிறப்பம்சங்கள் பற்றி அறிந்திருக்க வேண்டும். பெற்றோர்கள் வகிக்கும் பொறுப்பு போன்றவற்றை தெரிவிக்க வேண்டும். படித்த பாடத்திலிருந்து அடிப்படையாக சில கேள்விகளை எதிர்பார்க்கலாம். அதற்கு தயார் செய்து கொள்ள வேண்டும்.
தேர்வு செய்த துறை மற்றும் பணி குறித்த அடிப்படை விவரங்கள் மற்றும் அப்பணியை தேர்வு செய்யும் காணரங்கள் குறித்து வினா எழுப்பினால் விளக்கம் அளிக்க தயாராக இருக்க வேண்டும். ஏற்கனவே ஏதாவது ஒரு பணியில் இருந்து கொண்டு நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள வந்திருந்தால் அப்பணி சார்ந்த விபரங்கள் மற்றும் தொகுதி2-ல் அடங்கிய பணியை தேர்வு செய்யும் காரணத்தை கேட்டால் கூறுவதற்கு தயாராக இருக்க வேண்டும்.
சாரணர்படை, தேசிய சேவைப்பணி, என்.சி.சி., செஞ்சிலுவைச் சங்கம், சுற்றுப்புற சூழல் குழுமம், சமூகப் பணிகள் போன்ற ஏதாவது செயல்பாடுகளில் ஈடுபட்ட அனுபவத்தைக் குறிப்பிட்டால் அவை சார்ந்த கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். விளையாட்டு, பொழுது போக்கு அம்சங்கள் பற்றி குறிப்பிட்டிருந்தால் அவை பற்றிய கேள்விகளையும் எதிர்பார்க்கலாம்.
செய்திகள், புள்ளிவிவரங்கள்
அன்றாட நிகழ்வுகள், தமிழக அளவில், இந்திய அளவில், உலகளவில் என்று முக்கியத்துவம் வாய்ந்தவற்றைப் பற்றி தகவல் சேகரித்து நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். பன்றிக் காய்ச்சல், சட்டமன்ற இடைத் தேர்தல் என்று அன்றாட நிகழ்வுகள் குறித்த தகவல்களை குறிப்பெடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் வெளியீடான தமிழரசு மாத இதழில் அரசின் திட்டங்கள், அரசின் மூலம் அளிக்கப்படும் விருதுகள், இதர செயல்பாடுகள், திட்ட விளக்கங்கள் பற்றி அதிகாரப்பூர்வமான செய்திகள், பல்வேறு அரசுத்துறை சார்ந்த வளர்ச்சி திட்டங்கள் நடைமுறைப்படுத்துதல் பற்றி செய்திகள் வெளிவரும். அவற்றில் முக்கியமானவற்றை குறிப்பெடுத்து தேவைக்கு பயன்படுத்தலாம். நடப்புச் செய்தித்தாள்கள், தொலைக்காட்சி, வானொலி மூலம் அறிந்து கொள்ளலாம்.
பாடம் சார்ந்த அடிப்படைக் கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையிலும் ஆதார நூல்களிலிருந்து குறிப்புக்கள் எடுத்து வைத்துக் கொள்ளலாம். இணைய தளத்தின் மூலமும் அரசுத் துறை சார்ந்த விவரங்கள் மற்றும் தேவையான தகவல்களை சேகரிக்கலாம்.
பயிற்சி பெறுங்கள்
எழுத்துத் தேர்வு என்பதில் அனைவருக்கும் பரிச்சயம் இருக்கும். ஆனால் நேர்முகத் தேர்வு என்பது பலருக்கு புதிய அனுபவமாக இருக்கும். ஆகவே மாதிரி நேர்முகத் தேர்வுகளை ஏற்பாடு செய்து கலந்து கொண்டு தனது குறை நிறைகளை அறிந்து அவற்றை சரிசெய்து கொள்ளலாம். "அறையில் ஆடினால்தான் அம்பலத்தில் ஆட முடியும்'' என்பது போல பலமுறை மாதிரித் தேர்வுகளை ஏற்பாடு செய்து கலந்து கொண்டு மதிப்பீடுகளின் அடிப்படையில் பயிற்சியை மேற்கொண்டால், தயக்கமின்றி இயல்பாக நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள முடியும்.
நேர்முகத் தேர்வில் கேள்விகள் எத்தகைய தன்மை வாய்ந்தவையாக அமையும் என்பதை ஓரளவு கணிக்கலாம். இருந்தபோதும் ஒவ்வொரு முறையும் நேர்முகத் தேர்வின் போக்கு சிறிதளவு மாறுபடுவதற்கும் வாய்ப்பிருக்கும். ஆகவே கலந்து கொண்டவர்களின் அனுபவத்தைப் பெற்று அதற்கேற்ப தயார் செய்து கொள்ளலாம். ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் தங்களைப் பற்றிய தகவல்களை அளித்து கேள்விகளாக கேட்கும்படி கூறலாம். அவ்வாறு பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்து பழகும்போது நேர்முகத் தேர்வை எதிர்கொள்வது ஓரளவு எளிதாகிவிடும்.
நேர்முகத் தேர்வுக்கு செல்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் முன்கூட்டியே செய்துவிட வேண்டும். பயணத்திற்கான முன்பதிவு, அணியும் உடைகளை ஒழுங்கு செய்து கொள்ளுதல், உரிய சான்றிதழ்கள், நகல்கள் ஆகியவற்றை தயாராக வைத்துக் கொள்ளுதல் போன்றவையும் முக்கியமானவையாகும். நேர்முகத் தேர்வு நடக்கும் அறையில் நுழையும்போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், முடிந்து வெளியில் செல்லும்போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்த்து தயார்படுத்தி கொண்டால் தடுமாற்றம் ஏற்படாது.
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டு தேர்வுகளிலும் சிறப்பாக எதிர்கொண்டால் வெற்றி வாய்ப்பை உறுதி செய்து கொள்ளலாம். இட ஒதுக்கீடு, வெளிப்படையான தேர்வுமுறை, நடுநிலையான மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் தேர்வுமுறை அமைந்துள்ளதால் சமுதாயத்தில் பொருளாதார, சமூக ரீதியாக பின் தங்கியவர்களும் பணிவாய்ப்பைப் பெற முடியும் என்ற நம்பிக்கை இளைஞர்களிடம் உருவாகி உள்ளது.
உங்களது உழைப்பு, திறமை ஆகியவற்றின் மீது நம்பிக்கை வைத்து முறையான பயிற்சியை மேற்கொண்டால் வெற்றி நிச்சயம்.