இன்று நாம் அடைந்துள்ள நிலை என்பது நேற்று நாம் சிந்தித்ததின் விளைவே. இன்று நாம் சிந்திப்பதே நாளைய நமது வாழ்வை வடிவமைக்க வல்லது. மனதில் நாம் எதை ஆழமாக சிந்திக்கின்றோமோ அதுவே நமது வாழ்வாக மலர்கின்றது.
பிரகாசமான வாழ்வுக்கான நீண்ட கால திட்டமிடுதலில் உள்ள அம்சங்கள் பற்றி இனி காண்போம்.
நீண்ட கால திட்டமிடுதல்:
குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு மேலாகும் இலக்கிற்காக திட்டமிடுதலை நீண்டகால திட்டமிடுதல் என்று கூறலாம். கால அளவை நீட்டித்து திட்டமிடும்போது பல்வேறு காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும்.
வேலைச்சூழல், சமூகச்சூழல், வர்த்தகச் சூழல், தொழிற்சூழல் ஆகியவை மாறிக் கொண்டே இருக்கும்போது இன்றைய யதார்த்தங்களை மட்டும் கணக்கில் கொண்டு திட்டமிட முடியாது. ஒருவர் பெற்றுள்ள கல்வித்தகுதி, திறன்கள் போன்றவை சில ஆண்டுகளுக்குப் பின்னால் தேவைப்படாமல் போகலாம். எப்போதும் தேவைப்படக்கூடிய அடிப்படையான திறன்கள், குணநலன்கள் ஆகியவற்றை பெற்றிருப்பதும், தேவைக்கேற்ப வளர்த்து பாதுகாப்பதுமே நீண்ட காலத் திட்டத்துக்கான அடிப்படையானதும், அத்தியாவசியமானதும் ஆகும்.
அடிப்படை வேலைச் சூழல் சார்ந்த திறன்கள்:
தொடர்பு கொள்ளும் திறன்கள் (பேசுவதன் மூலம், எழுதுவதன் மூலம்), ஆராய்ந்து அறியும் திறன், வித்தியாசமாக சிந்திக்கும் ஆற்றல், கேட்கும் திறன், சமூகநோக்கு, பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திறன், முடிவெடுக்கும் ஆற்றல், ஒருவரையொருவர் அறிந்து கொண்டு இணைந்து செயல்படும் திறன், திட்டமிடுதல், திட்ட மேலாண்மை, நடைமுறைப்படுத்தும் திறன், கணினி மற்றும் தொழில்நுட்ப அறிவு, ஈடுபாட்டுடன் தொடர்ந்து செயல்படுதல், கற்கும்திறன் போன்றவை அடிப்படையில் பெற்றிருக்க வேண்டிய திறன்கள் ஆகும். இத்தகைய திறன்களை தொடர்ந்து காலத்திற்கு ஏற்ப மேம்படுத்திக் கொள்வதை ஒரு தொடர் முயற்சியாக மேற்கொள்ள வேண்டும்.
வேலை உலகின் போக்கு- வேலைவாய்ப்பை இனங்காணுதல் :
இரண்டாண்டுகளுக்கு முன்பு மனித சக்தித் தேவை அதிகமாக இருந்தது. கல்லூரி வளாகத்திலேயே சென்று இறுதி ஆண்டு படிப்பவர்களை தேர்வு செய்தல், படிக்கும் காலத்திலேயே பணித்திறன்பயிற்சி அளித்தல் போன்றவை இருந்தன.
ஆனால் இன்றைய சூழலில் பொருளாதார பின்னடைவின் தாக்கத்தால் உலகளவில் வேலைச் சூழல் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பொருளாதார வளர்ச்சி, வீழ்ச்சி, தொழில்நுட்பத்தின் தாக்கம், ஒவ்வொரு ஆண்டும் படித்து வெளிவருவோர் எண்ணிக்கை, உருவாகும் வேலைவாய்ப்பு, வேலை கலாச்சாரம் ஆகிய பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு திட்டமிட வேண்டும். எந்தப் பாதையை தவிர்க்க வேண்டும்? எதில் பயணம் செய்ய வேண்டும்? என்று தெளிவாக முடிவெடுக்க வேண்டும்.
முடிவெடுக்கும்போது பின்பற்ற வேண்டியவை:
முடிவெடுக்கும்போது பின்பற்ற வேண்டிய நிலைகளை நான்காக பிரிக்கலாம். இவற்றில் அனைத்து நிலைகளையும் கவனமாக பின்பற்றி படிப்பு சார்ந்த, வேலை சார்ந்த முடிவை எடுக்கும்போது எதிர்காலம் சிறப்பாக அமையும்.
1. முடிவு எடுக்கும் விதம்
முடிவெடுப்பதில் முதல் கட்டமாக கவனம் செலுத்த வேண்டியது முடிவு எடுக்கும் விதம். இது நமக்கு சாதகமானவற்றை கணக்கில் கொண்டு செயல்படுவதாகும். முடிவெடுக்க தொடங்கும்போது அவரவர் விரும்பும் படிப்பு வேலைகளை வரிசைப்படுத்த வேண்டும். அவை ஒவ்வொன்றைப் பற்றிய விவரங்களையும் சேகரிக்க வேண்டும். பின்னர் அவற்றை ஆராய்ந்து அவரவர் சூழலுக்கு ஏற்புடைய ஒரு படிப்பு- வேலையை தேர்வு செய்தல் நல்ல பலனை அளிக்கும்.
ஒரு படிப்பையோ அல்லது வேலையையோ தேர்வு செய்த பின்பு அந்த குறிப்பிட்ட படிப்பு அல்லது வேலையோடு மட்டும் நின்றுவிட வேண்டும் என்பது கிடையாது. அவை சார்ந்த இதர பிரிவுகளில் ஏதாவது ஒன்றையும் தேர்வு செய்யலாம்.
உதாரணமாக மருத்துவப் படிப்பில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., நர்சிங், பிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி, கிளினிக்கல் சைக்காலஜி, ஓமியோபதி சார்ந்த படிப்புகள், சித்தா, யுனானி, மருந்தியல் படிப்பு, பாரா மெடிக்கல் படிப்புகள் என்று பல பிரிவுகள் உள்ளன. அவற்றில் ஒன்றை தேர்வு செய்து படிக்கும்போது அது சார்ந்த பணி வாய்ப்புகளையும், கல்வி சார்ந்த பிறதுறை வாய்ப்புகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது விலங்கியல், கால்நடை, விவசாயம், உயிரி தொழில்நுட்பம் சார்ந்த படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்கள், மரபியல் சார்ந்த படிப்பு என்று பல்வேறு பிரிவுகளையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்.
இதே போல் பல அம்சங்களையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்கும்போது நாம் விரும்பும் படிப்பு - வேலை எளிதில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இல்லாவிட்டாலும் அவை சார்ந்த படிப்பு - வேலை வாய்ப்புகள் கைகொடுக்கும்.
2. முடிவு குறித்து விவாதித்தல்
இரண்டாவது நிலையாக, தேர்வு செய்த படிப்பு - வேலை குறித்து நண்பர்களிடமும், வல்லுனர்களிடமும், அதே படிப்பு, வேலையை மேற்கொள்பவர்களிடமும் ஆலோசனை பெறுவது பயனளிக்கும். சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் - பணியாற்ற இருக்கும் தொழில் சூழல் ஆகியவற்றை நேரில் பார்க்கும்போது உங்களுக்கு தோன்றும் அபிப்பிராயம் போன்றவையும் முக்கியமாகும். முழுமையாக ஒரு படிப்பையோ- வேலையையோ பற்றி அறிய முடியாதபோது குறுகிய கால அளவில் திட்டமிட்டு, அனுபவ ரீதியாக உணர்ந்து பின்னர் நீண்டகால திட்டத்தை தீட்டலாம்.
3. முடிவுகளை ஆராய்வது
மூன்றாவது நிலை என்பது முடிவுகளின் விளைவுகள் குறித்து ஆராய்வது. எடுத்த முடிவை செயலாக்கும்போது எதிர்கொள்ள வேண்டிய குறை, நிறைகளையும் அலசி ஆராய வேண்டும். விளைவுகளை நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
முதல்வகை விளைவுகள் உங்களைச் சார்ந்தது. நேரடியாக உங்களுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகள், எதிர்கொள்ள வேண்டிய சிரமங்கள் போன்றவை. வாழ்க்கை என்பது மலர்கள் தூவப்பட்ட வழிப்பயணம் கிடையாது. ரோஜாவை பறிக்கும்போது முள்ளும் இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதிக ஊதியம் கிடைக்கும் வேலையாக இருக்கலாம். ஆனால், உடல்ரீதியாக பின் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பணியாக இருந்தால் சிலருக்கு சரிபட்டு வராது. சவால்கள் நிறைந்த பணியாகவும் சில பணிகள் அமையலாம். அவரவர் அளவில் தனிப்பட்ட முறையில் கிடைக்கும் நன்மை, தீமைகளை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.
பெற்றோர், மனைவி (கணவன்) மற்றும் குடும்பத்தார், நெருங்கிய நண்பர்கள், சார்ந்திருக்கும் சமுதாயம், அவரவர் கொண்டிருக்கும் தனிப்பட்ட உணர்வுகள் ஆகிய அனைத்திற்கும் நன்மை விளைவிப்பதாக இருக்கின்றதா? என்று ஆராய வேண்டும். குடும்பச்சூழலை பிரிந்திருப்பதா? குடும்பத்துடன் இருப்பதா? குழந்தைகளின் கல்வி, பெற்றோர்களை பேணும் பொறுப்பு என்று பலவற்றை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியிருக்கும்.
ஆகவே அவரவர் படிக்கும் படிப்பு, பார்க்கும் வேலையைப் பற்றிய அவரவரது சுயமதிப்பீடு மிகவும் முக்கியமானதாகும். நாம் விரும்பும் துறைக்கு சமூக அங்கீகாரம் எப்படி இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு எல்லா வகையிலும் ஆராய்ந்து தெளிந்து முடிவெடுத்து செயல்பட வேண்டும்.
4. முடிவுகளை செயல்படுத்துதல்
முடிவெடுத்தலின் நான்காவது நிலை, முடிவுகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதாகும். இதற்கு சரியான திட்டமிடுதல் தேவை. ஒரு முடிவை நடைமுறைப்படுத்தும்போது எதிர்மறையான விளைவுகளும் ஏற்படலாம். அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்றும் திட்டமிட்டு செயல்திட்டத்தை வகுக்க வேண்டும். இவ்வாறு எதிர்கால விளைவுகள் அனைத்தையும் எதிர்பார்த்து அவற்றை எதிர்கொள்ள தயாராகிக் கொண்டால் எடுத்த முடிவை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும்.
நீங்கள் திட்டமிட தவறினால், காலத்தின் போக்கு வெற்றியைத் தரும் என்பது நிச்சயமில்லை. ஆகவே நிகழ் காலத்தை திட்டமிட்டு கவனமாக கையாள பழகிக் கொண்டால் எதிர்காலமும் வளமாக அமையும்.