இந்த ஒத்துழைப்பைப் பலரிடம் நாம் பெற்றால் நம்மை முன்னேற்ற ஒரு கூட்டமே தயாராக இருக்கும். சிலந்தி வலைகள் பின்னப்பட்டால் சிங்கமும் சிக்கும் என்பது எத்தியோப்பிய பழமொழி.
தனிமரம் தோப்பாகாது
தனித்து நின்று யாராலும் வெற்றி பெற முடியாது. உங்களை மேலே ஏற்றிவிட, தூக்கிவிட உதவும் கரங்கள் நிச்சயம் வேண்டும். அதாவது மற்றவரின் ஒத்துழைப்பு வேண்டும். இதை பெறுவது எப்படி?
நாம் மற்றவருடன் ஒத்துழைத்தால், மற்றவரின் ஒத்துழைப்பு தானே கிடைக்கும். நம்மை மேலே ஏற்றிவிட நண்பர்கள், நலம் விரும்பிகள் தேவை என்பதை முதலில் உணர வேண்டும். இதற்கடுத்து நமது நண்பர்கள், தெரிந்தவர்கள் பட்டியலைத் தயாரித்து அவர்கள் நமக்கு எவ்வாறு உதவமுடியும் என்று சிந்தித்துச் செயல்பட வேண்டும்.
கேள்!
"கேள்" என்பதே தாரக மந்திரம். நல்லவற்றைக் கேள், தேவையைக் கேள், உதவியைக் கேள், வழிகாட்டுதலைக் கேள். கேளுங்கள் கொடுக்கப்படும் என்பதற்கிணங்க நமது நலம் விரும்பிகளை உருவாக்குவதோடு அவர்கள் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் உணர்த்தி நமது தேவையை கேட்க வேண்டும், பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
எஃகு மன்னனின் உயர்வு
பிரபல எஃகு மன்னன் ஆண்ட்ரூ கார்னீகி தனது போட்டியாளரான ஜார்ஜ் புல்மெனை நியூயார்க் நகரில் நிகோலஸ் என்னும் ஹோட்டலில் சந்திக்க நேர்ந்தது. கார்னீகி புல்மெனை அழைத்து, "ஹலோ, மிஸ்டர், புல்மென், நம்மை நாமே முட்டாள்களாக ஆக்கிக் கொள்ளவில்லையா?" என்றார்.
"என்ன சொல்கிறீர்கள்?" என வினவினார் புல்மென்.
"நம்மிடையே உள்ள பலத்த போட்டியால் இருவரும் ஒருவருக்கொருவர் நஷ்டத்தை அல்லவா உண்டு பண்ணிக் கொள்கிறோம். மாறாக, இருவரும் ஒத்துழைத்து நம் இரு கம்பெனிகளையும் இணைத்து வியாபாரம் நடத்தினால் எப்படி இருக்கும்" என்றார் கார்னீகி.
இதைக் கேட்ட புல்மென், "அப்படி உருவாகும் கம்பெனிக்கு என்ன பெயர் இடுவது?" என்றார்.
"சந்தேகம் என்ன? புல்மென் பாலஸ் கார் கம்பெனி" என்றார் கார்னீகி.
''வாருங்கள் மேலே பேசலாம்" என அழைத்தார் மகிழ்ச்சியுடன் புல்மென்.
இந்த ஒத்துழைப்பால் பகையும், போட்டியும் மாறி புதுக்கம்பெனி பிறந்தது. கோடிக்கணக்கான டாலர் லாபம் இருவருக்கும் கிடைத்தது.
வலிமைக்கு வழி
பரஸ்பர நல்லுணர்வு, ஒத்துழைப்பு ஆகியவை ஒன்றும் ஒன்றும் கூட்டினால் இரண்டு என்ற கணக்கில் அடங்குவதில்லை. ஒன்றுக்கு பக்கத்தில் போடும் ஒன்று போல ஆகி பதினொன்று ஆகிறது. அதாவது பல மடங்கு சக்தியைத் தருகிறது.
பஞ்சதந்திரம் - பைபிள் - பழமொழி
பஞ்சதந்திரக் கதைகள் கூறுவது ஒற்றுமையே வலிமை என்பதையே! இன்றைய உலகநாடுகள் கூட்டு அமைப்பாக இணைவது வலிமைக்காகத்தான். சங்கங்கள், தொழிலக கூட்டுகள், கலைத்துறைக் கூட்டமைப்புகள், வணிகப் பேரவைகள் ஏற்படுவது ஒத்துழைப்பால் சக்தி பெருவதற்காகவே!
இந்த ஒத்துழைப்பைப் பலரிடம் நாம் பெற்றால் நம்மை முன்னேற்ற ஒரு கூட்டமே தயாராக இருக்கும். சிலந்தி வலைகள் பின்னப்பட்டால் சிங்கமும் சிக்கும் என்பது எத்தியோப்பிய பழமொழி.
"இரண்டு பேர் இணைவது ஒருவராக செயலாற்றுவதை விட மேலானது. ஏனெனில் தங்களின் உழைப்புக்கு நல்ல வெகுமதியை அவர்கள் பெறுவார்கள். ஒருவன் அதில் விழுந்தாலும் அடுத்தவன் அவனைத் தூக்கி விடுவான். தனியே இருந்து விழுந்தாலோ அவனைத் தூக்கிவிட ஆளே இருக்காது" என்கிறது பைபிள்.
முன்னேற மிகவும் சிறந்த சுலபமான வழி மற்றவர்கள் தங்கள் நலனே உங்கள் முன்னேற்றத்தில் இருக்கிறது என்பதை உணருமாறு நாம் நடப்பதே ஆகும்.
அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல், "ஒரு நிறுவனத்தில் ஒரே ஒருவர் குறைகூறிப் பிளவை உருவாக்கும் மனப்பான்மை உடையவராக இருந்தால் போதும், ஆயிரம் பேர் வேலை பார்க்கும் அங்கே சச்சரவும் அதிருப்தியும் தானே வரும்" என்கிறார். நம்மை ஒருவர் சந்திக்கும் போது நம்மை அவர்கள் சந்திப்பதால் நன்றாக ஆகிவிட்டது போல - புத்துணர்ச்சி பெற்றதுபோல - அவர்கள் உணர வேண்டும்.
எதிரான கருத்துக்களைக் கொள்கை ரீதியாக கொண்டிருந்தாலும், வெறுப்பைக் களைந்து மனித நேயத்தை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். பரஸ்பரம் ஒத்துப்போகும் விஷயங்களை முதலில் இனம் கண்டு அதில் இணைய முயற்சிக்க வேண்டும். பாதைகள் வேறு என்பது முடிவாகி விட்டால் வேறுபாடுகளைப் பொறுத்துக் கொள்ளும் மனப்பான்மை வேண்டும்.
இதன் மூலம், எதிர்ப்புகள், தடைகள் பெருமளவு குறையும். தம் கருத்துக்களை அனுசரித்து ஒத்துப்போகும் நண்பர்களோடு கூட்டு சக்தியாக இணைய வேண்டும். இதன் மூலம் தடைகள் தடைப்பட்டு ஆக்க சக்தி பெருகும்.