Click "Like" Button To Join | |
| | தமிழரைப் பிரிக்கிறதா இணையம்? | |
| | Author | Message |
---|
Fathima
Posts : 999 Points : 1988 Join date : 2010-03-10 Age : 39 Location : srilanka
| Subject: தமிழரைப் பிரிக்கிறதா இணையம்? Tue Apr 20, 2010 7:07 am | |
| உலகின் செம்மொழிகளில் எல்லாம் சிறந்ததும் தலையாயதும் ஆன மொழி எது என்று கேட்டால் தமிழ் என்று தயங்காமல் பதில் சொல்லலாம்!
இப்படிச் சொல்வதற்குத் தமிழன் என்ற ஒரு தகுதி மட்டும் போதாது! பலமொழி அறிவும், ஒலி நுட்பங்களில் தேர்ச்சியும், இலக்கணங்களில் திட்பமும் என்றும் இளமை, இனிமை, புதுமை, பொருண்மை என்ற குணங்களைக் கொண்டுள்ளதா என்று ஆராயும் அறிவு நுட்பமும் ஆய்வுக்கே உரிய ஒரு நிலை சார்பில்லாத நடுவு நிலை மனப்பான்மையும் வேண்டும். இப்படிப்பட்ட அரிய தகுதிகள் சென்ற நூற்றாண்டின் அறுபதுகளுக்குப் பின்னர் தமிழ் நாட்டில் குறைந்து விட்டது அல்லது அறவே இல்லை எனலாம்.
தமிழ் மொழி அரசியல்வாதிகளின் கொடூரப் பிடியில் சிக்கிக் கொள்ளவே தமிழ் அறிஞர்களும் அந்தக் கோரப்பிடிக்கு இரையாகி விட்டனர்!
ஆகவே சம்ஸ்கிருதம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகள் மீது காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டு பன்மொழி அறிவும் நுண்மான் நுழைபுலமும் தமிழ் நாட்டிலும் தமிழ் அறிஞர்களிடையேயும் அருகிப் போனது. குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல 'எம்மொழி செம்மொழி' என்று அரசியல்வாதிகள் ஓட்டுக்காக கூப்பாடு போட அதை விடப் பெரிய தகுதியை அடைய வேண்டிய அரிய மொழி அதை அடையாமல் இருக்கிறது! ஆனால் ஆறுதல் அளிக்கும் ஒரே விஷயம் தமிழனின் அன்றலர்ந்த மூளை தான்; கவலை அளிக்கும் அம்சமும் அதுவே தான்! ஒற்றுமை என்பது சற்றும் இல்லாத அந்த மூளை நம்மை திடுக்குறச் செய்கிறது; கவலையுறச் செய்கிறது!! என்றும் புதுமை என்ற உருவத்தோடு இணையிலாத் தமிழ் -இணையதளத்தில் -ஏராளமான சாதனைகளைப் புரிந்து விட்டது; புரிந்து வருகிறது.
தமிழிலேயே இன்று இமெயில் அனுப்பலாம். கீபோர்டில் தமிழ் எழுத்துக்களை அடித்து வெவ்வேறு எழுத்துருக்களில் (Fonts) 'விளையாடலாம்'!
தொல்காப்பியம், திருக்குறள் முதலாக தேவார, திருவாசக, நாலாயிர திவ்யபிரபந்தம் திருப்புகழ், திரை இசைப் பாடல்கள் முடிய ஆன்லைனில் படித்து மகிழலாம். அதை நமக்கென படி இறக்கி (downloading) அச்சடித்து (printing) வைத்துக் கொள்ளலாம்! எண்ணற்ற சிந்தனைச் சிதறல்கள் இப்போது இன்டர்நெட்டில் தமிழில் படித்து மகிழ உள்ளன! சிற்றிதழ்களாகவும் ப்ளாக்குகளாகவும் அன்றாடம் ஆயிரமாயிரம் மலர்கின்றன.
ஏராளமான தமிழ்ப் பத்திரிகைகள் வாரந்தோறும், மாதந்தோறும் தமிழில் வெளிவருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை காழ்ப்புணர்ச்சி இன்றி நடு நிலைமையோடு இருப்பது ஆரோக்கியமான சுவையான செய்தி! ஆறாம் திணை, அம்பலம், நிலாச்சாரல் என ஆரம்பித்து சொல்லிக்கொண்டே போகலாம்.
இணையதளத் தமிழ் எனப்படும் இன்டர்நெட் தமிழில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் அளவற்ற ஆர்வம் காட்டுகின்றனர். இதன் விளைவாக நாளுக்கொரு புதுமையும் வேளைக்கொரு எழுச்சியும் இன்டர்நெட்டில் காணமுடிகிறது! இணைய தள மாநாடுகள் வருடந்தோறும் நடைபெறுகின்றன. இதில் இடம் பெறும் ஆய்வுக்கட்டுரைகள் மலைப்பையும் திகைப்பையும் பிரமிப்பையும் தருகின்றன.ஆஹா, தமிழன் மூளை இவ்வளவு சிறந்ததா, பெரியதா!!
தமிழை மலையாளமாகவும் மலையாளத்தைத் தமிழாகவும் இயந்திரம் மூலமாக மொழி பெயர்ப்பது, அரிதாகக் காப்பாற்றப்பட்டு இன்று கரையானுக்கெனவே காத்திருக்கும் லட்சக்கணக்கான பனை ஓலைச் சுவடிகளை - அரிய தமிழ் நூல்களை- டிஜிலடைஸ் செய்து என்றும் உள்ளதாக்கி எதிர்கால சந்ததியினருக்கு அர்ப்பணிப்பது, விரும்பும் திரை இசை தமிழ் இசை பிறமொழிப் பாடல்களை கணிணியில் இறக்கிக்கொள்வது, ஒருவரோடொருவர் தமிழிலேயே செய்தி மற்றும் கருத்துப் பரிமாற்றங்களைச் செய்து கொள்வது, இதற்கென இ மெயிலை அதிகமதிகம் பயன்படுத்துவது, போட்டோக்களையும் தமிழ் தலைப்புகளுடன் அனுப்புவது, ஆய்வுக் கட்டுரைகளைக் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டு தலைப்பொறுப்பாகத் தமிழை வளர்ப்பது என இவையனைத்தும் இன்னும் பலவும் இன்று இன்டர்நெட் தமிழ் வாயிலாக சாத்தியமே!
தமிழ் நாளிதழ்களை அன்றாட காலை பானம் அருந்து முன்னரே கணினித்திரையில் படித்து மகிழ்வது எத்தனை சுகமான அனுபவம்!
ஆனால் இவ்வளவு இருந்தும் நம் முன்னேற்றம் குறிப்பிடத்தகுந்த அளவு இல்லை; ஆகவே குறிப்பிடத் தகுந்த படி உலகளாவிய விதத்தில் பேசப்படவும் இல்லை! இதற்கான முழு முதல் காரணம் தமிழனின் நண்டு மனப்பான்மைதானோ?! கூடையில் முன்னேறி ஒரு நண்டு மேலே ஏறும் போது அதன் காலை அடுத்த நண்டு வாரி விடுவது போல முன்னேறும் தமிழனை ஊக்கி விடாது அவனது காலை வாரி போட்டியாக இன்னொரு தமிழனே எழுவது ஏனோ, தெரியவில்லை.
எழுத்துருவை மட்டும் எடுத்துக் கொள்வோம். தமிழனுக்கு ஒரு எழுத்துரு என்ற நிலை ஏற்படுமோ என்ற அளவுக்கு எழுத்துருமயம்! பாமினி, கம்பன், இளங்கோ, பாரதி, டிஸ்கி, யுனிகோட்... இன்னும் இன்னபிற பெயர்கள். இனி இல்லாத பெயர் இன்டர்நெட்டில் இல்லை! இதனால் ஏற்படும் தொல்லை பெரிய தொல்லை! ஒருவர் அனுப்பும் எழுத்துருவை இன்னொருவர் படிக்க முடியாது. இதற்கென எழுத்துரு மாற்றிகள் இன்று உருவாக்கப்பட்ட போதும் திரையில் நீங்கள் படிக்க வேண்டிய எழுத்துக்களுக்குப் பதிலாக சதுரம் சதுரமாகப் பார்க்கும் போது மனம் வெறுத்து விடும்.
தமிழில் உள்ள வெண்பா போல உலகில் வேறெந்த மொழியிலும் ஒரு பாவினம் இல்லை (சம்ஸ்கிருதம், ஹிந்தி உட்பட)! தமிழில் உள்ள 'ழ' போல வேறு எந்த மொழியிலும் ஒலி இல்லை (லத்தீன், கிரேக்கம் உட்பட)! சிறந்த சொற்களை குறைந்த எழுத்துக்களால் கொண்ட முதன்மை மொழியான தமிழின் பெருமை எல்லையற்றது; அகன்றது; விரிந்தது; ஆழம் காண முடியாதது!
அருட்பிரகாச ராமலிங்க சுவாமிகள் (வள்ளலார்) கூறிய தமிழ் பெருமை உள்ளிட்ட ஏராளாமானோரின் கூற்றுக்களைப் படிப்பதன் மூலம் தமிழின் பெருமையில் ஒரு சிறிதையும் அதன் தெய்வீகத்தன்மையையும் உணரலாம்.
இன்டர்நெட்டில் தமிழ் புதுப் பொலிவுடன் திகழ்ந்து உலக மொழியாக ஏற்றம் பெற அரைகுறைப் பாமரனுக்கும் புரிந்த வழிகள் சில உண்டு. அந்த அங்கலாய்ப்பை புரிந்து கொண்டால் போதும்.
முதலில் அரசியல்வாதிகளின் கையிலிருந்து தமிழ் விடுபட வேண்டும். தமிழறிஞர்கள் கட்சிச் சார்பு கொண்டவர்களாக இல்லாமல் மொழிச் சார்பு கொண்டவர்களாக மாற வேண்டும்.அனைத்து மொழிகளையும் சம்ஸ்கிருதம் ஹிந்தி உள்ளிட்ட எல்லா மொழிகளையும் கற்றுத் தமிழுடன் ஒப்பிட்டு தமிழின் பெருமையை இன்டர்நெட் வாயிலாக உலக அரங்கில் ஒலிக்கச் செய்ய வேண்டும்.
இன்டர்நெட் தமிழ் பொறியாளர்களும் தமிழ் அறிஞர்களும் இணைந்து ஒற்றுமையாக கூடி அமர்ந்து விவாதித்து எழுத்துருஉள்ளிட்ட பொதுக் கொள்கைகளை உருவாக்க வேண்டும். ஒரு மாநாடு முடிந்தவுடன் எதிர் மாநாடு நடப்பது அழகல்ல! ஆங்கிலம், சீன மொழி போல மிக அதிகம் பேரால் பயன்படுத்தப் படும் செம்மொழி தமிழ். தனக்கென ஒரு தனிப்பட்ட பழம் பெருமை வாய்ந்த இறைமையைக் கொண்டது அது.
அரைகுறைப் பாமரனின் அங்கலாய்ப்புக்கு அறிஞர்கள் சற்று சிரமம் பாராமல் காது கொடுத்துக் கேட்டால் இன்டர்நெட் தமிழ் இணையிலாத் தமிழாக மாறி விடும்!
**** [b]
THANKS:
WIKIPIDIA
Last edited by Fathima on Sun May 30, 2010 8:51 am; edited 1 time in total | |
| | | Fathima
Posts : 999 Points : 1988 Join date : 2010-03-10 Age : 39 Location : srilanka
| Subject: இணையத்தில் சமூக சங்கமம் Tue Apr 20, 2010 7:10 am | |
| கடந்த சில ஆண்டுகளாக"ஆர்குட்" இணையதளம் இளைஞர்களை ஈர்த்திருக்கிறது. சமீப காலமாக, இளைஞர்கள் மட்டுமன்றி பெரியவர்களும் இந்த இணையதளத்தை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டார்கள். "ஆர்குட்" என்ன செய்கிறது என்பதை சுருக்கமாக சொல்லிவிட்டுத் தொடருவோம்.
நண்பர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதற்காகத்தான் "ஆர்குட்"ஆரம்பித்தார்கள். பல கிளைகள் முளைத்து இன்று மிகவும் பெரிய மரமாக வளர்ந்துவிட்டது. நம்மைப் போன்ற எண்ணங்களையும் விருப்பங்களையும் கொண்ட மனிதர்களைத் தேடிக் கண்டுபிடித்து தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும் இப்போதுபயன்படுகிறது.
"ஆர்குட்" போல நிறைய இணையதளங்கள் உள்ளன. உதாரணத்திற்கு, அமெரிக்காவில் "ஃபேஸ்புக்" என்றொரு இணையதளம் மிகவும் பிரபலம். இப்பொழுதெல்லாம் எல்லோரும் சைபர் க்ரைம்.. அது.. இது.. என்கிறார்கள். நம் மனதில் ஏற்படும் முதல் கேள்வி - இது போன்ற இணையதளங்களை நம்பலாமா?
சில மாதங்களுக்கு முன் என் தோழி எனக்கு ஒரு கதை சொன்னாள். அவளுடைய தோழனுடைய உறவினருடைய தோழனுடைய தோழியுடைய சொந்தக்காரருக்கு நிகழ்ந்த சம்பவமாம்!
"ஆர்குட்" இணையதளத்தில் ஒரு பெண் ஒரு ஆடவனுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறாள். இருவரும் இணையதளம் மூலமாகவே தங்கள் எண்ணங்களை பரிமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவருக்கு ஒருவர் பிடித்துப் போகவே சந்திக்கலாம் என்று முடிவு எடுத்திருக்கிறார்கள். இந்தப் பெண் அவனை சந்திப்பதற்காக அவன் வீட்டுக்கு செல்ல, அங்கே இவளுக்கு அபாயம் காத்துக்கொண்டிருந்தது. இவளிடம் தகாத முறையில் அவன் நடந்து கொள்ள முயற்சிக்க, தப்பித்தால் போதும் என்று தலையை பிய்த்துக்கொண்டு ஓடியே வந்துவிட்டாளாம். அதே "ஆர்குட்" டில் சந்தித்து ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, மணந்து சந்தோஷமாக வாழ்பவர்களும் உண்டு.
சரி, அது கிடக்கட்டும், நம் பழைய கேள்விக்கு திரும்புவோம்! எப்படி இது போன்ற இணையதளங்களை நம்புவது?!! கவனிக்கத்தக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், "ஆர்குட்" போன்ற இணையதளங்கள் மனிதர்களிடையே தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். இதைப் பயன்படுத்துபவர்களில் நல்லவர்களும் உண்டு, கயவர்களும் உண்டு. "ஆர்குட்" போன்ற இணையதளங்களை கண்டிப்பாக நம்பலாம். அதை உபயோகப்படுத்தும் நபர்களை நம்பலாமா என்பது தான் கேள்விக்குரிய ஒன்று.
இணையத்தில் கயவர்களை இனம் காண்பது கடினம். நேரில் பார்த்து ஏமாறுபவர்களே ஏராளமிருக்க, வெறும் இணையப் பழக்கத்தில் எப்படி ஒருவரை நம்ப முடியும்! நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க இதோ, சில வழிகள்:
• அனைத்து இணையதளங்களிலும் நம் விவரங்களை கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். அவர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் கிடையாது. பெயர், ஊர் போன்ற விவரங்களைத் தரலாம். ஆனால், தொலைபேசி எண், ஈ-மெயில் போன்ற விவரங்களைத் தந்து விடாதீர்கள். எது போன்ற விவரங்களை நீங்கள் உங்கள் விரோதியிடமும் தருவீர்களோ அதை மட்டும் தாருங்கள். வேறு எதுவும் எழுத வேண்டாம்.
• பொது வலைப்பக்கங்களில் உங்கள் புகைப்படங்களைப் போடாதீர்கள். புகைப்படங்களை பகிர்ந்துகொள்ள வேண்டுமென்றால், உங்கள் நண்பர்களுக்கு மட்டும் அவைகளைப் பார்ப்பதற்கு அனுமதி கொடுங்கள். அநேக இணைய தளங்களில் இந்த வசதி உண்டு. இதை எப்படிச் செய்யவேண்டும் என்று உங்களுக்கு தெரியவில்லை என்றால், அந்தந்த தளங்களிலேயே கொடுத்திருப்பார்கள். பார்த்துக் கொள்ளவும். அல்லது, யாரிடமேனும் கேட்டுக் கண்டுபிடியுங்கள்.
• இணையத்தில் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் நட்பு கொண்டாட வேண்டும் என்று எண்ண வேண்டாம். நீங்கள் பழகவிருக்கும் நபர்களைத் தேர்வு செய்யுங்கள். நல்லவர்கள் எல்லா இடங்களிலும் இருப்பார்கள். கொஞ்சம் பொறுமையாக இருந்தால், நீங்கள் அவர்களைக் கண்டுகொள்ள முடியும். ஒருவரை நண்பராக ஏற்றுக்கொள்வதற்கு முன், அவரின் விவரங்கள் போலியானவையாக இருக்கக் கூடுமோ என்று நன்கு யோசித்துவிடுங்கள்.
• இணையத்தில் குழுக்கள் உண்டு. விருப்பங்கள் ஒன்றாகக் கொண்ட நபர்கள் சேர்ந்து ஆரம்பிக்கும் குழுக்கள். உதாரணத்திற்கு, விஜய் ரசிகர்கள், கே.பாலசந்தர் ரசிகர்கள் என்று நிறைய குழுக்கள். வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் நடிகைகளின் ஆபாசப் படங்களை பகிர்ந்து கொள்வதற்குக் கூட குழுக்கள் உண்டென கேள்விப்பட்டுள்ளேன். நீங்கள் எந்த குழுவில்வேண்டுமானாலும் உறுப்பினராகலாம். உங்கள் ரசனைகளை நன்கு அறிந்தவர்கள் நீங்கள் மட்டுமே!! நிதானமாக யோசித்து உங்கள் குழுக்களைத் தேர்வு செய்யுங்கள்.
• நீங்கள் வசிக்கும் வீட்டைப் பற்றியோ, படிக்கும் கல்லூரி/பள்ளி பற்றியோ, வேலை பார்க்கும் அலுவலகம் பற்றியோ அதிகம் சொல்ல வேண்டாம். மற்றவர்கள் உங்களுக்கு அனுப்பும் செய்திகளை (ஸ்க்ரேப்) அவ்வப்பொழுது அழித்துவிடுங்கள். .
• நீங்கள் மற்றவருக்கு அனுப்பும் செய்திகளில் உங்களைப் பற்றிய சொந்தக் குறிப்புகளைத் தர வேண்டாம். அப்படியே அனுப்ப வேண்டும் என்றாலும், வேறு யாரும் பார்க்காது அனுப்புதல் சாத்தியம். எப்படி என்று அறிந்துகொள்ளுங்கள்.
• அதிகமாக நண்பர்கள் வைத்திருந்தால் யாரும் பரிசு தரப் போவது இல்லை. எண்ணிக்கையை விட, நண்பர்களின் குணங்கள் தான் முக்கியம்.
• கடைசியாக, ஏமாற்றுபவர்கள் எங்கிருந்தாலும் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள். அதனால், எது செய்தாலும் நன்கு யோசித்து விட்டு எச்சரிக்கையுடன் செய்யுங்கள்! | |
| | | Fathima
Posts : 999 Points : 1988 Join date : 2010-03-10 Age : 39 Location : srilanka
| Subject: இணையம் Tue Apr 20, 2010 7:17 am | |
| இணையம் (Internet) என்பது உலகளாவிய அளவில் பல கணினி வலையமைப்புகளின் கூட்டு இணைப்பு ஆன பெரும் வலையமைப்பைக் குறிக்கும். இவ்விணையத்தில் தரவுப் பறிமாற்றமானது முன்னும் பின்னும் அடையாளம் சேர்க்கப்பட்ட தரவுத்தொடர்களாக (பாக்கெட் சுவிட்சிங்) இணையத்தில் உலா வர செய்யப்பட்ட நெறிமுறைகளைப் பின்பற்றி நடைபெறும். இணையம் என்னும் சொல்லானது செப்புக்கம்பிகளினாலும், ஒளிநார் இழைகளினாலும் இணைக்கப்பட்டுள்ள கணினிவலைகளின் பேரிணைப்பைக் குறிக்கும். உலகளாவிய வலை (world wide web) என்பது உலகளாவிய முறையில் இணைப்புண்ட கட்டுரைகள், எழுத்துக்கள், ஆவணங்கள், படங்கள், பிற தரவுகள் முதலியவற்றைக் குறிக்கும். எனவே இணையம் என்பது வேறு உலகளாவிய வலை என்பது வேறு. இணையத்தில் பல்லாயிரக்கணக்கான சிறிய வணிக, கல்வி நிறுவன, தனி நபர் மற்றும் அரசு சார் கணினி-வலையமைப்புகள் இதன் உறுப்புகளாவன. மின்னஞ்சல், இணைய உரையாடல், மற்றும் ஒரு கட்டுரையில் இருந்து மற்றொன்றிற்கு மீயிணைப்புகள் மூலம் உலவல் வழி தொடர்புபடுத்தப்பட்ட இணையத்தளங்கள் முதலிய சேவைகளையும், உலகளாவிய வலையின் தரவுகளையும் இணையம் தருவிக்கின்றது.
வரலாறு
1950-ம் ஆண்டிற்கு அண்மையில் தொடர்பியல் ஆய்வாளர்கள் கணினி மற்றும் பல்வேறு தொலைத்தொடர்பு வலையமைப்பின் பயனர்கள் பொதுவான தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்றம் கொள்ள ஆவன செய்ய வேண்டும் என எண்ணினர். இதன் விளைவாக மையக் கட்டுப்பாடற்ற வலையமைப்புகள், வரிசைப்படுத்துதல் முறைகள், மற்றும் தரவுப்பொதி நிலைமாற்றம் போன்ற துறைகளில் ஆய்வு செய்யத் துவங்கினர். முதலாவது TCP/IP முறையிலமைந்த வலையமைப்பானது ஐக்கிய அமெரிக்காவின் நேஷனல் சயன்ஸ் பவுண்டேசனில் ஜனவரி 1 1983 முதல் இயங்க ஆரம்பித்தது. 1990களில் இது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. இக்காலப்பகுதியில் உருசியாவில் உள்ள சேர்னோபில் அணுஆலை வெடிப்பு மக்களை விஞ்ஞானிகள் ஒன்றாக இயங்கவேண்டும் என்ற கருத்துக்களை முன்வைத்தது. பிரான்ஸ் ஸ்விட்சலாந்து எல்லையிலிருந்த சேர்னோபிலில் உலகளாவிய வலை பிரசித்தமடைந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் டிம் பேர்ணர்ஸ்-லீ எச்டிஎம்எல் (HTML) மெருகூட்டும் மொழி, எச்டிடிபீ (HTTP) என்னும் அனுமதிக்கப் பட்ட அணுகுமுறைகளை கொண்ட புதிய அணுஆய்வுகளுக்கான ஐரோப்பிய அமைப்பின் (CERN சேர்ண்) இணையத் தளமானது உருவாக்கப் பட்டது.
ஜூன் 30 2006-ல் உலகம் முழுவதும் நூறு கோடி மக்களுக்கும் மேல் இணையத்தை உபயோகம் செய்கிறார்கள். | |
| | | Sponsored content
| Subject: Re: தமிழரைப் பிரிக்கிறதா இணையம்? | |
| |
| | | | தமிழரைப் பிரிக்கிறதா இணையம்? | |
|
Similar topics | |
|
| Permissions in this forum: | You cannot reply to topics in this forum
| |
| |
| |