சங்க காலம் : கி.பி இரண்டு,மூன்றாம் நூற்றாண்டுகள்
சங்கம் மருவிய காலம் : 3ம் நூற்றாண்டின் இறுதி முதல் 7ம்நூற்றாண்டு தொடக்கம்
சோழர்காலம் : கி.பி 850 முதல் 1200வரை.
சங்க காலம் :
சங்க காலத்தில் குறுந்தொகை அகம்,புறநானூறுகள்,நற்றினை,ஐங்குறுநூறு..கலித்தொகை என பட்டியல் அதிகம்.சங்ககாலம் பொற்காலம் என்றே அழைக்கப்படுகிறது என்பார்கள் முனைவர்கள். அதில் காதல்..ம். குறுந்தொகை சொல்லாத காதல் இல்லவே இல்லை எனலாம்.
யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்
யானும் நீயும் எவ் வழி அறிதும்
செம் புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
என காதலின் பாலபாடத்தை,அதாவது யார் எவர் என்றெல்லாம் பார்த்து வருவதல்ல காதல் என்பதில் தொடங்கி,தலைவன் பிரிவு,தலைவி பிரிவு என காதலை துய்த்துணர்ந்த பாடல்கள் குறுந்தொகையின் சிறப்பு.
இது இப்படி என்றால், அகநானூறு இன்னும் சிறப்பு.இன்றைய மணிரத்னம் படம் முதல் முதல் இரவு காட்சி என்றாலே,மணப்பெண்ணை தோழிகள் அறைக்குள் தள்ளிவிட்டு கொல்லென சிரிப்பதை, இதோ இந்தப் பாடல் சங்க காலத்தில் எப்படி விளக்கியிருக்கிறது.
வால்இழை மகளிர் நால்வர் கூடி,
'கற்பினின் வழாஅ, நற் பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!'என,
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க,
வதுவை நல் மணம் கழிந்த பின்றை,
கல்லென் சும்மையர், ஞெரேரெனப் புகுதந்து
இப்படி காதலும் அதனடுத்த காமமும் மிகுந்த அழகியலோடு பதியப்பட்ட காலம் சங்க காலம்.
சங்கம் மருவிய காலம் :
களப்பிரர் மற்றும் பல்லவர்கள் ஆட்சிக்குட்பட்ட காலம் சங்கம் மருவிய காலம்.காதலைப் பொறுத்தவரை சங்க காலம் பொற்காலம் என்றால்,சங்கம் மருவிய காலம் பொற்சுரங்க காலம்.ஆம்.திருக்குறள்,சிலப்பதிகாரம்,பதினெகீழ்கணக்கு நூல்கள் என அற்புதங்கள் நிகழ்ந்தது இக்காலமே.
அறம்,பொருள்,இன்பம் என திருவள்ளுவர் வாழ்வின் அத்தனை வித கோணங்களையும் இரண்டடியில் குறள் என்று எழுதிவைத்த அவரின் குரல் இன்றுவரையில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.
துப்பாக்கியை நெற்றிப்பொட்டில் வைத்து சுட்டதற்கு இணையான இந்த வரிகளை விட காதலைப் பற்றி இன்னும் யார் என்ன சொல்ல மிச்சமிருக்கிறது?
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.
“நான் உன்னைப் பார்க்கும் போது நீ மண்ணைப் பார்க்கிறாய்’ என்று புதிது புதிதாக எழுதப்படும் கவிதைகள் எல்லாமே பழசு.வள்ளுவர்காலத்துப் பழசு என்பது இந்தக் குறளில் தெரிகிறது.
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து.
இதைவிட காதலியின் நெஞ்சத்தை எங்கு எந்த கவிஞர் பதிந்துவிடப் போகிறார்? காதலனை நெஞ்சில் குடிவைத்திருக்கும் காதலி சூடாக எதையுமே சாப்பிடுவதில்லையாம்.அழகியல் என்பதையும் மீறி அன்பு.
இதே சங்கம் மருவிய காலத்தில் தான் சிலப்பதிகாரம் இயற்றப்பட்டது.இறைவனை பாடுபொருளாகக் கொண்டகாலகட்டத்தில் சாதாரண மாந்தர்களை கதைநாயகர்களாகக் கொண்ட முதல் காப்பியம் சிலப்பதிகாரம்.
மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே
அரும்பெறற் பாவாய் ஆருயிர் மருந்தே
பெருங்குடி வணிகன் பெருமட மகளே
மலையிடைப் பிறவா மணியே என்கோ
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ
யாழிடைப் பிறவா இசையே என்கோ
என்று காதலியை வர்ணிப்பதில் முன்னோடி இக்காப்பியமே.
அளிய தாமே சிறுபசுங் கிளியே
குழலும் யாழும் அமிழ்துங் குழைத்தநின்
மழலைக் கிளவிக்கு வருந்தின வாகியும்
மடந்தை மாதுநின் மலர்க்கையின் நீங்காது
என தன் தலைவியை கோவலன் எல்லாவற்றோடும் ஒப்பிட்டு உருகுவது அழகியல்.காதல்.அல்லது காதலின் அழகியல்.
சங்கம் மருவிய காலத்தின் இறுதிகள்,கி.பி.600லிருந்து 850வரையிலான ஆண்டுகள் பல்லவர் காலம்.
பல்லவர் காலம்
பக்தி இலக்கிய காலம் இது எனச் சொல்லலாம்.திருஞானசம்பந்தர்,நாவுக்கரசர்,சுந்தரர்,மாணிக்கவாசகர் என பட்டியல்.மேலும் ஆழ்வார்களின் காலமும் இஃதே.
இதில் காதல் என்று பார்த்தால் ஆண்டாள் பாடல்களைப் பார்க்கும் பொழுது,கடவுளைக் காதலனாகக் கொண்ட பெண்ணின் வார்த்தைகள் மனதை வசீகரிக்கின்றன.
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தர்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதணன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி...
காதலனை மணம்புரியும் கனவை இன்றுவரை இதைவிடச் சிறப்பாக சொல்லியதாகத் தெரியவில்லை என்பதனால்தான் ஆங்காங்கே இந்தப் பாடலே மைக்செட்டுகளை நிறைக்கிறது மணநாட்களில்.
அதனடுத்த வரிகளில் ஆண்டாள் தான் காதலில் ஒரு ராணி என்றே நிரூபிக்கிறார்.
ஊனிடை ஆழிசங்கு உத்தமர்க்கு என்று
உன்னித்து எழுந்த என் தடமுலைகள்
மானிடவர்க் கென்று பேச்சுப்படின்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே
இதற்கு மேல் என்ன சொல்ல? என்று நாம் நினைக்கும் பொழுதே அடுத்த அடி...
கருப்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ
மருப்பொசித்தமாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே!
என்று உருகி கேட்கும் காதல் பெண்ணின் குரல் ஒலித்துக்கொண்டேதானிருக்கிறது.(நாற்றம் என்பது வாசனை..)
THANKS:
Wikipedia