lakshana
Posts : 1114 Points : 2926 Join date : 2010-03-09 Age : 36 Location : india, tamil nadu
| Subject: பெற்ற மனசு (1) Fri May 28, 2010 4:01 pm | |
| கையிலிருந்த அந்தப் பிஞ்சு சிசுவைப் பார்த்தாள் மல்லிகா. ரோஸ் நிறத்தில் சிவந்த உதடுகள். மல்லிகை மொக்குகளாய் சின்னச் சின்ன விரல்கள். நந்தியாவட்டை புஷ்பம் போன்ற வெண்மையான பாதங்கள். இன்னமும் தொப்புள் கொடியின் ரத்தம் உலரவில்லை. தனது சிறிய வாயைத் திறந்து அந்தச் சிசு அமுதசுரபியைத் தேடியது. மல்லிகாவின் நெஞ்சு கனத்தது. குழந்தையை நெஞ்சோடு அணைத்து சேலை நீக்கி பாலைத் தந்தாள். சேலையை நீக்கிய போது மனம் நினைவுத் திரைகளை விலக்கிப் பார்த்தது.
"இதோ பார் மல்லிகா, புள்ளை உண்டாகி இருக்கேன்னு சந்தோஷமா சொல்லாதே. எனக்குப் பத்திக்கிட்டு வருது. ஏற்கனவே ஒண்ணு பெத்துட்டே. அது போதும். இந்தக் காலத்துலே சோத்துக்கும் படிப்புக்கும் தாளம் போட வேண்டி இருக்கு. ஒரு புள்ளையை நல்லா வளர்த்தா போதும்."
"இந்த அறிவு அன்னைக்கே இருந்திருக்கணும்."
"தப்புத்தான். ஏதோ அசந்து மறந்த நேரத்தில் தற்காப்பு இல்லாம உன்னைத் தொட்டுட்டேன். அதுக்காக ஆயுள் பூராவும் பிரச்சனைகளை தொட்டுட்டு இருக்கணும்னு தேவையில்லை."
"தேவை இருக்கிறப்போ ஏத்துக்கறதுக்கும் இல்லாதப்போ தள்ளறதுக்கும் இது உங்க ஆபீஸ் ஃபைல் இல்லீங்க..."
"இந்தா சும்மா பேசாதே. இந்தப் புள்ள நமக்கு வேண்டாம்."
"நல்லா இருக்கே. குழந்தை பொறந்தா என்ன பண்றது.. குப்பைத் தொட்டியிலே வீசிப்போடறதா?"
"அப்படியும் போடலாம். தப்பில்லை. ஆரம்பத்துலே இந்த சனியனால் பிரச்சனை இருக்காது. பேசாம தாய்ப்பாலை குடிச்சுட்டு கிடக்கும். அப்புறம் வளர வளர பிரச்சனை பூதமா மாறும். சாப்பாடு கேட்கும். துணி கேட்கும். படிப்பு கேட்கும். பாட புஸ்தகம் கேட்கும். டொனேஷன் கேட்கும். பகாசுரன் மாதிரி என்னையே காவு கேட்கும்."
"என்ன பேசறீங்க, மூணு மாசக் கருவுலே..."
"ஆமாம் மூணு மாசக் கருவிலேயே அதை அழிச்சுடு..."
மல்லிகா திடுக்கிட்டாள்.
"பாவங்க..."
"பாவமாவது, புண்ணியமாவது. பொறந்தப்பா கொல்றதைவிட இது தேவலை. அன்னிக்கு மாத்திரை சாப்பிட மறந்து போனே. இந்தா இந்த மாத்திரையை தினம் சாப்பிடு. ஒரு வாரத்துலே கரு கலைஞ்சிடும்."
"வேண்டாங்க..."
அதன் பின் அவள் கணவன் பாண்டி வாயால் பேசவில்லை. எட்டி உதைத்தான். அவள் தலை முடியைப் பிடித்து இழுத்து சுவரில் அடித்தான். ஏற்கனவே பிறந்த மூன்று வயதுக் குழந்தை ராஜா விவரம் புரியாமல் அலறினான்.
அதன்பின் அவள் மருந்து சாப்பிட்டாள். ஒரு வாரம்... பத்து நாட்கள். ஊஹும்... கரு கலையவில்லை. குழந்தையாக மாறத் துடித்தது. எனக்கும் இந்த உலகில் வாழ உரிமை இருக்கிறது என்று மவுனச் சட்டம் பேசி மோனத்தவமாக உள்ளே முடங்கிக் கிடந்தது.
பாண்டி அதன் பின் பப்பாளிப்பழம் வாங்கித் தந்தான். என்ன என்னமோ செய்து பார்த்ததில் இவளுக்கு ஜுரம் தான் வந்தது. கரு வெளியே வரவில்லை. இந்த 'உள்ளே வெளியே' போரட்டம் தொடர்ந்தது. பாண்டி சோர்ந்து போனான். அதன் பின்தான் மல்லிகாவிடம் கண்டிப்பாகச் சொன்னான்.
"இதோ பார் மல்லி. விட்டுத் தொலை. ஒரு கண்டிஷன். குழந்தை பொறந்தவுடனே பெண் குழந்தையா இருந்தா அரசுத் தொட்டிலே போட்டுடணும் என்ன?"
மல்லிகா அதிர்ந்தாள். அரசு தொட்டிலா, இவள் பிள்ளையை தூளியில் போட்டு தாலாட்ட நினைத்தாளே!
"அரசு சுகாதார நிலையங்களில் அரசுத் தொட்டில்கள் வைக்கிறார்களாம். இதில் குழந்தையைப் போட்டுவிட்டால் அவர்கள் 'தத்து' எடுத்துக் கொண்டு குழந்தையை வளர்ப்பார்களாம். ஒவ்வொரு குழந்தைக்கும் அரசாங்கம் மாதம் ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்கிறதாம்." பாண்டி கதை கதையாக சொன்னான்.
"இதோ பார் மல்லிகா. நம்ம குழந்தை நல்லா வளரணும். அது நம்ம வீட்டிலே வளர்ந்தா என்ன? அரசுத் தொட்டில்லே வளர்ந்தா என்ன? பொறந்த குழந்தையை எருக்கம்பால் கொடுத்து, நெல் மணியை பாலோடு கலந்து கொடுத்து கொல்றாங்களாம். அதை விட இது தேவலை"
இவள் அழுதபடி தினம் தினம் ஆண்டவனை வேண்டிக் கொண்டாள். "கடவுளே இந்தக் குழந்தை பெண்ணாகப் பிறந்துவிட கூடாது."
அன்று கூட ஒரு மீட்டிங்கில் பெண்களின் பெருமையைப் பற்றி ஒரு அம்மாள் பேசினாளே.. அந்தப் பெருமை எல்லாம் மீட்டிங்கோடு சரிதானா? 'மைக்'கில் சத்தம் போடத்தான் பெண் விடுதலையா? மறைவில் பெண் சிசுக் கொலையா? என்ன கொடுமை இது? யார் இதை சீர்திருத்தப் போகிறார்கள்?
அழுது புலம்பி, தவித்து, மானுட தேசமெங்கே? தாய்ப்பாசம் எங்கே? மனித உணர்வு இல்லாத மானுடன் வாழ்கிற தேசம் இங்கே! என்று தனக்குள் ஆயிரமாயிரம் கேள்விகள் கேட்டு இவள் கண்ணீரை காணிக்கையாக்கிய போது மாதங்கள் கரைந்தனவே தவிர, ஒரு கரு கரையவில்லை. பத்து மாதம் சுமந்து பெற்ற பச்சை சிசு... இதோ இதோ இவள் கையிலே...
இவள் கண்ணீர் முத்துக்களில் உருவான சிசு பெண்ணாகப் பிறந்து தொலைத்தது. இவள் பாவம்...இல்லை இல்லை... அதன் பாவம்...
அது மட்டுமல்ல. கருவைக் கலைக்க இவள் சாப்பிட்ட மருந்துகள் அந்தக் பிஞ்சு உடலில் மென்மையான தோலை அரித்திருந்தது. கண்களைச் சுற்றி ரத்தம் சிவப்பு நிறம் கட்டி இருந்தது. ஆசனவாயில் புண். குழந்தை சோனியாக... நோஞ்சானாக... ஆனாலும் இது இவள் குழந்தை... பத்து மாதம் சுமந்த இன்பச்சுமை? சுந்தனப் புதையல். பாண்டி இதைச் சகதியில்போடச் சொல்லுகிறானே!
பக்கத்திலே இருந்த பாண்டி அவசரப்படுத்தினான். கனவு கலைந்தது. நிஜம் தெரிந்தது. "குழந்தை ரொம்ப சோனியா இருக்குங்க. கொஞ்சம் நாள் பால் கொடுத்திட்டு..."
"இது தானே வேணாங்கிறது. பால் கொடுத்தா பாசம் வந்துடும். அப்பறம் இதை லேசிலே கொடுக்க மாட்டே. இதோ பார். நம்பளால இந்த சோனிக் குழந்தைக்கு வைத்தியம் பார்க்க முடியாது. சீக்கிரம் சட்புட்டுன்னு தொட்டிலே போட்டுட்டுவா. ஆளுங்க வரதுக்குள்ளே வா..."
"இதோ பாத்தீங்களா? குழந்தையோட இடது உள்ளங்கால்லே ஒரு மச்சம்..."
"மச்சமாவது... மண்ணாங்கட்டியாவது.. மச்சத்தைப் பத்தி அப்புறம் பேசிக்கலாம். மொதல்லே..."
"அதில்லீங்க.. பொட்டப்புள்ளைக்கு இடது உள்ளங்கால்லே மச்சமிருந்தா அதிர்ஷ்டம்னு செல்வாங்க... இவ பொறந்த வேளை நமக்கு அதிர்ஷ்டம் வந்தாலும் வரும்..."
"ஆமா... இத்தனை நாளா வராத அதிர்ஷ்டம்.. இனி தான் வரப்போகுதாக்கும்! அதிர்ஷ்டம் வராது, செலவுதான் வரும். சனியனைப் போட்டுட்டு வாங்கறேன்... சும்மா சும்மா பேசிட்டு..." பாண்டி கத்தினான்.
கடைசியில் வேறு வழியின்றி குழந்தைக்கு கண்ணீர் மழையுடன் முத்தமழையையும் பொழிந்து விட்டு அரசுத் தொட்டிலில் குழந்தையைப் போட்டு விட்டு அழுதபடி கணவனுடன் வீடு திரும்பினான் மல்லிகா. பால் கட்டிக் கொண்ட நெஞ்சோடு பச்சிலை வைத்துக் கட்டினாள். மனம் கட்டிக் கொண்ட நினைவுகளுக்கு கண்ணீரால் கரை கட்டினாள். கரை புரண்டு வெள்ளம் ஓடியது. நாட்களும் ஓடின.
அன்று...
(மீதி அடுத்த இதழில்) | |
|
lakshana
Posts : 1114 Points : 2926 Join date : 2010-03-09 Age : 36 Location : india, tamil nadu
| Subject: பெற்ற மனசு (2) Fri May 28, 2010 4:09 pm | |
| அக்கம் பக்கத்திலிருந்த சிலர் சொன்ன செய்தியை கேட்டுவிட்டு தவித்து போனாள் மல்லிகா. அரசுத் தொட்டிலில் போடப்பட்ட சில நோஞ்சான் குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை தரப்படுமாம். அதன்பின்தான் அனாதை இல்லங்களுக்கு எடுத்துச் செல்லப்படுமாம். அப்படிப்பட்ட சில பிஞ்சுக் குழந்தைகள் ஆஸ்பத்திரியிலேயே வெய்யில் தாங்காமலோ அல்லது சிகிச்சை சரி இல்லாமலோ இறந்து போயினவாம். பத்து பன்னிரண்டு குழந்தைகள் இறந்து விட்டனவாம்.
மல்லிகாவிற்குப் 'பகீர்' என்றது. இறந்த இந்தக் குழந்தைகளில் இவள் பிஞ்சும் ஒன்றாக இருக்குமோ? எங்கோ வேர் பிடித்து பூத்துக் குலுங்கப் போகிறது என்று கனவு கண்டு காத்திருந்த இவளின் தொட்டிலில் விட்ட துளிர் கருகிவிட்டதோ? கருகின துளிர்களில் இவள் ரத்தமும் கணக்கிடப்பட்டிருக்குமோ?
இதற்கு மேல் மல்லிகாவால் தாங்க முடியவில்லை. அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி, உண்ணாவிரதம் இருந்து கணவனை சம்பாதிக்க வைத்து 'எங்கேயோ கெட்டு ஒழி' என்ற அவன் ஆசீர்வாதங்களுடன் ஆஸ்பத்திரிக்கு ஓடினாள் மல்லிகா.
இவள் குழந்தை சாகவில்லை என்று புரிந்தது. ஒரு அனாதை இல்லத்தின் பெயரை குறிப்பிட்டு அங்கே சேர்ந்திருப்பதாகச் சொன்னார்கள். இவளால் இவள் குழந்தையை அடையாளம் சுலபமாக கண்டு பிடிக்க முடியும். உள்ளங்காலில் மச்சமிருக்கிறதே. உண்மையில் அதிர்ஷ்டக்காரக் குழந்தைதான். இல்லாவிட்டால் பிரிந்த தாயை அடையும் பாக்கியம் அதற்குக் கிட்டி இருக்குமா?
அனாதை இல்லத் தலைவியிடம் அழுதபடி தன் கதையைக் கூறி இழந்த தன் குழந்தையை திருப்பித் தந்துவிடும்படி கெஞ்சினாள் மல்லிகா.
இல்லத் தலைவி இவளை வேதனையுடன் பார்த்தாள். மலர்ந்தும் மலராத பாதி மலர்களை இவர்களால் எப்படி வீதியில் வீசி எறிய முடிகிறது? காலம் காலமாகத் தொடர்ந்து வருகிற பெண்களின் சாபமா இது?
குந்தி பிள்ளையை ஆற்றில் விட்டாள். கர்ணன் தலை எழுத்து மாறியது. மணிபல்லவ தீவின் அரசகுமாரி தான் பெற்ற பிஞ்சு மழலையை அலைகடலில் அர்ப்பணித்தாள். பல்லவ சாம்ராஜ்யம் உருவானது.
இது ஏன்? தாமரை மலர்களில் உதிர்த்த கார்த்திகேயனை கார்த்திகை பெண்கள் வளர்த்தபின்தான் பார்வதியிடம் ஒப்படைத்ததாக புராணம் சொல்கிறது. காக்கை கூட்டுக்குள் குயில் முட்டை இருக்கிறது. புராணத்திலிருந்து, சரித்திரத்திலிருந்து பறவை விலங்கினம் வரை இதுதான் நடப்பதாக இருந்திருக்கிறது!
தாய்மை பெண்மைக்கு வரப்பிரசதமா? சாபமா? 'மாமன் அடிச்சானோ? மல்லிகைப் பூச்செண்டாலே? அத்தை அடிச்சாளோ அரளிப்பூ செண்டாலே...!' என்று தாலாட்டு பாடுகிற தாய்மையே தன் சேயை அடித்தால்?
இந்த மல்லிகா எதில் சேர்த்தி? இவள் குழந்தை கர்ணனாக, கார்த்திகேயனாக அல்லது பல்லவனாக வரப் போகிறதா? ஓ! இது பெண் குழந்தை! அதனால் சமையல் அறை ராணியாக, அடுக்களை அனார்கலியாக வலம் வருவாள்.
ஆசிரமத் தலைவி சிரித்துக் கொண்டாள். "சரிம்மா இப்படி இரு. உன் குழந்தை இருக்கான்னு பார்த்துட்டு வரேன்."
மல்லிகா காத்திருந்தாள்.
துடிக்கும் நெஞ்சுடன் தலைவியின் வருகைக்காக காத்திருந்தாள்.
தலைவி வந்தாள்.
அவள் கையில்...?
துணியில் சுற்றப்பட்ட ஒரு குழந்தை. மல்லிகா ஆவலுடன் அந்தக் குழந்தையை வாங்கி அதன் இடது உள்ளங்காலைப் பார்த்தாள்.
இது இவள் குழந்தைதான். சந்தேகமே இல்லை. இதோ இதோ அதிர்ஷ்ட மச்சம்.
மல்லிகா தலைவி காட்டிய பேப்பர்களில் கையேழுத்து போட்டுவிட்டு குழந்தையுடன் நிம்மதியாக அந்த ஆசிரமத்தின் வெளி கேட்டை கடந்த அதே நேரம்….
தலைவி சுவரில் மாட்டப்பட்டிருந்த மதுரை மீனாட்சி அம்மன் படத்தின் முன் கைகூப்பி கண்மூடி நின்றிருந்தாள்.
"மாதா மரகதமே... மாமதுரை மீனவளே... என் தாயே... என்னை மன்னிச்சிடும்மா... இந்த தாயோட அந்த மச்சக் குழந்தை இங்கே வந்த அன்னிக்கே செத்தப் போச்சு. இதை நான் இவகிட்டே சொன்னா இவளும் உயிரை விட்டுடுவா. அதனால 'மார்க்கர் இங்க்' கால அந்தக் குழந்தையோட உள்ளங்கால்லே நானே மச்சம் வரைஞ்சேன். மச்சக் கறை மறையறதுக்கு சில மாதங்கள் ஆகும். அதுக்குக்குள்ளே இந்தத் தாய்க்கு அந்தக் குழந்தை மேலே பாசம் வந்திருக்கும். நான் செஞ்சது தப்புதான். ஆனா இந்தத் தப்பால் இரண்டு ஜீவன்களுக்கு வாழ்வு கொடுத்திருக்கேன். ஒரு தாய்க்கு மகளைத் தந்திருக்கேன். ஒரு அனாதைக்கு ஆதரவு தந்திருக்கேன். தேவி நீ அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி. அந்தக் குழந்தை எதிர்காலத்துலே கொடிகட்டி வாழ நீ தான் அருள் புரியணும்."
மீனாட்சி அம்மன் படத்தின் முன் எரிந்து கொண்டிருக்கும் குத்து விளக்கு சுடர் விடுகிறது.
(கோவை இ.எஸ்.டி. டிரஸ்டின் மூலம் சிறந்த சிறுகதையாகத் தோந்தெடுக்கப்பட்டு பரிசு பெற்ற கதை.)
| |
|
Admin Administrator
Posts : 232 Points : 638 Join date : 2010-02-25 Age : 44
| Subject: Re: பெற்ற மனசு (1) Fri May 28, 2010 7:53 pm | |
| மிகவும் அருமையான சிறு கதை . நல்ல சமூக சீர் திருத்த கதைகளில் இதுவும் ஒன்று . மிக்க நன்றி LAKSHANA SISTER | |
|
Sponsored content
| Subject: Re: பெற்ற மனசு (1) | |
| |
|