ஒரு இக்கட்டான நிலையில் சிக்கிக் கொள்கிறீர்கள். இதிலிருந்து மீள வேண்டும். என்ன செய்வது...என கையை பிசைந்து கொண்டு நிற்கக்கூடாது. இதிலிருந்து மீண்டே தீர வேண்டும் என்ற நம்பிக்கை உங்களுக்குள் உருவாக வேண்டும். மனம் இருந்தால் மார்க்கமுண்டு. நம்மால் முடியாதது என்பதே கிடையாது.
"துன்பமே உன்னை வரவேற்கிறேன்,'' என யார் ஒருவர் கஷ்டத்தை ரத்தினக்கம்பளம் விரித்து வரவேற்கிறாரோ அவர் என்றேனும் ஒருநாள் எட்டிப்பிடிக்க முடியாத நிலையில் இருப்பார்.
வருவது வரட்டும், அதிக பட்சம் போனால் என்ன...இந்த உயிர்தானே' என்று தினமும் பத்து தடவை உங்களுக்குள் சொல்லிக்கொண்டே இருங்கள். நீங்கள் உங்களை அறியாமலே உயரப் பறக்க துவங்கி விடுவீர்கள்.
நீங்கள் ஏதோ ஒரு வேலையில் இருந்தீர்கள். அது நன்கு பழகிய வேலை. ஏதோ காரணத்தால் அதை இழக்க வேண்டி வந்து விட்டது. குடும்பம் பசியில் தத்தளிக்கும் என்ற நிலை...அன்பு மனைவியும், பிள்ளைகளும், பெற்றவர்களும், சகோதரிகளும் உங்கள் கண் முன் நின்று, அடுத்த ஒன்றாம் தேதிக்கு என்ன செய்யப் போகிறாய்?'' என்று கேட்பதை மனக்கண் முன் பார்க்கிறீர்கள். பயம் தொற்றுகிறது. இதைத் தான் தவறு என்கிறேன்.
இந்த சமயத்தில் யாரோ ஒருவர் உங்களுக்கு வேலை வாங்கித் தர முன் வருகிறார். அல்லது நீங்களே ஒரு இடத்தில் வேலைக்கு ஆள் தேவை என்ற போர்டைப் பார்க்கிறீர்கள். இப்போது கிடைக்கும் வேலை உங்களுக்கு பழக்கப்படாததாக இருக்கலாம். எப்படி செய்வது என்ற தயக்கம் ஏற்படுகிறது.
இந்த தயக்கத்துக்கு மருந்து தான் இந்த சம்பவம்.
விவேகானந்தர் ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருந்தார். அருகிலுள்ள ஒரு மரத்தின் கிளையில் ஒரு கலயத்தைக் கட்டி சில வாலிபர்கள் துப்பாக்கியால் குறி வைத்து சுட்டனர். எல்லோரது குறியும் தவறி விட்டது. விவேகானந்தர் அந்த இளைஞர்களைப் பார்த்து சிரித்தார். இதை ஒரு இளைஞன் கவனித்து விட்டான்.
"என்ன கிண்டல் சிரிப்பு...நாங்கள் இந்த கலயத்தை குறி வைத்து அடிக்க முடியவில்லை என்று தானே சிரிக்கிறீர். இதோ பிடியும்...துப்பாக்கியை...சுட்டுத்தள்ளும் பார்க்கலாம்,'' என்றனர்.
விவேகானந்தர் கையில் துப்பாக்கியை வாங்கினார். கலயத்தை நோக்கி குறி வைத்தார். துப்பாக்கி குண்டு கலயத்தை சுக்கு நுõறாக்கி விட்டது. அந்த இளைஞன் ஆச்சரியப்பட்டான்.
"ஆச்சரியமாய் தான் இருக்கிறது. இருந்தாலும், இது தற்செயலாக நிகழ்ந்ததாக இருக்கலாம் இல்லையா? எங்கே...அந்த கலயம் கட்டப்பட்டிருந்த குச்சி அதோ இருக்கிறது. அதை அடித்து வீழ்த்தும், பார்க்கலாம்,'' என்றான் இளைஞன்.
விவேகானந்தர் திரும்பவும் குறி வைத்தார். குச்சி கீழே விழுந்தது.
இளைஞன் அப்படியே அவர் காலில் விழுந்து விட்டான்.
"தாங்கள் பெரிய துப்பாக்கி சுடும் வீரர் என அறியாமல் பேசி விட்டேன். மன்னிக்க வேண்டும். நீங்கள் யாரிடம் பயிற்சி எடுத்தீர்களோ, அவரிடம் போய் நாங்களும் படிக்க வேண்டும்,'' என்றான்.
விவேகானந்தர் சொன்னார்.
"தம்பி! நான் இதுவரை துப்பாக்கியை தொட்டது கூட இல்லை. நீ ஒரு வேலையைச் சொன்னாய். அதை முடித்தாக வேண்டும் என என் மனதில் உறுதி கொண்டேன். ஒரே மூச்சில் முடித்தாக வேண்டும் என கணநேரத்தில் வைராக்கியம் எடுத்தேன். முடித்து விட்டேன்,'' என்றார்.
பார்த்தீர்களா! உறுதி கொண்ட நெஞ்சங்கள் எப்பேர்ப்பட்ட சூழ் நிலையையும் சமாளிக்கும் என்பதை..சரியோ தவறோ, மனம் ஒன்றை ஆணித்தரமாக நம்பி பற்றிக்கொண்டால், அது தரும் வலிமை மகத்தானது. அறிவியல் கண்டுபிடிப்புகளும் சரி, மாபெரும் போர்களும் சரி, அவைகளின் முடிவுகள் நம்பிக்கையில் தான் தொடங்குகின்றன
இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்! வாழ்த்துகள் !!