நீயொரு வண்ணம்
நானொரு வண்ணம்
நட்பு வானவில்
முகந் தெரியா
உன் நட்பில் திளைக்கையில்
புரிந்தது
அகம் நக நட்பது…
உன் நண்பனைக் காட்டு
உன்னைப் பற்றிச் சொல்கிறேனெனச்
சொல்லியவருக்கு எப்படி புரியவைப்பது
நம் நட்புவட்டம்
வேற்றுமையில் ஒற்றுமை காணும்
ஒரு குட்டி இந்தியா என்று
முதன்முதலாய் பார்த்துக்கொண்டது.
பரஸ்பரம் புன்னகைகள்
பறிமாறிக்கொண்டது,
அறிமுகத்தில் தொடங்கி
கதைகள் பேச ஆரம்பித்தது,
உன் அருகாமை இல்லாத
பொழுதுகளில் தவித்துப்போனது,
இவையெல்லாம் நடந்தேறிய
தேதிகளும் கிழமைகளும்
சத்தியமாய் நினைவில்லை,
நல்லவேளையாய் நட்பில்
அது தேவைப்படுவதுமில்லை!
இப்படிக்கு,
நட்பு
ஒளிபுகா அடர்க்கானில்
ஒளிந்திருந்தோம் சில காலம்
களித்திருந்தோம் நன்றாய்
அக்கானிடையே ஒன்றாய்
ஆலென்றாலும் பனையென்றாலும்
ஆரும் பிரித்துப்பார்த்தில்லை – கொடுங்
காலம் வரும்வரை நம்காட்டில்
அறுவடையும் நடந்ததில்லை
வசந்தம் மட்டுமே வந்த பாதையில்
புயலும் ஒரு முறை வீசிற்று
கசக்கும் நினைவுகளை
இதயத்தில் பதித்துப் போனது
இலையுதிர் காலமென
இயம்பக் கேட்டதுண்டு
மரங்களே உதிர்ந்திடும்
மாயமும் கண்டோம் அன்று.
திசைக்கு ஒருவரென
யாவரும் பிரிந்தோம்;
ஆசைக்கு தக்கபடி
என்னவோ ஆனோம்!
இனி எக்கணம் சந்திப்போமோ?
எவ்வண்ணம் சந்திப்போமோ?
எப்படியும்,
நினைவுத்தென்றல் வீசுகையிலெல்லாம்
படபடத்துக்கொண்டு தான் இருப்போம்
பழையக் காட்டை நினைத்து…