== Tamil Story ~~ நம்பிக்கை வேண்டும் வாழ்வில்... [ 2 ]
படித்து முடித்துவிட்டு நிமிர்ந்த மைதிலி கடிதத்தை மடித்து கண்களில் சோகத்துடன் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த லலிதாவை நோக்கி நீட்டினாள் ஒன்றும் பேசாமல்.
“என்னை மன்னிச்சிருங்க மைதிலி.. என்னாலதான்..”
அவளைப் பேசவிடாமல் சைகைக் காண்பித்த மைதிலி.. “இங்க பாருங்க லலிதா. அண்ணா எங்களுக்கு திரும்ப வேணும். அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும். அது உங்க கையிலதான் இருக்கு. உங்கள நினைச்சு கவலைப் படற நிலமையில நானோ, எங்கம்மாவோ இல்லை. அண்ணா போனத்¢லேயிருந்து அவங்க நிம்மதியா சாப்பிட்டு, தூங்கி நான் பார்க்கலை. இப்படியே போனா அவங்க உடம்புக்கு ஏன் உயிருக்கே ஏதாவது ஆயிருமோன்னு பயமாயிருக்கு.. சோ... அண்ணா உங்ககிட்டயிருந்து எதிர்பார்க்கறது ஒண்ணுதான். அது உங்களுக்கே என்னன்னு தெரியும்னு நினைக்கறேன். இவ்வளவு நாள் பழகிய நட்புக்கு பிரதியுபகாரமா நினைச்சிக்குங்க. இதுக்கும் மேல ஒண்ணும் சொல்றதுக்கில்ல. அண்ணா சீக்கிரம் திரும்பி வரணும்னு மட்டும்தான் நான் ஆசைப்படறேன்..”
வராந்தாவில் நின்றிருந்த சங்கர் தன்னையும் கண்டுக்கொள்ளாமல் அறையைவிட்டு வெளியேறிய மைதிலியை பார்த்தவாறே கலங்கிய கண்களுடன் நின்றிருந்த லலிதாவை நெருங்கி “ஹேய் என்ன நடக்குது இங்க? மைதிலி ஏன் அப்படி கோபத்துடன் போறாங்க..?” என்றான்.
“நத்திங்.. சங்கர்.. வாங்க, நாம போலாம்..” என்றவாறு தன்னுடைய பதிலுக்கு காத்திராமல் வாயிலை நோக்கி விரைந்த லலிதாவின் பின்னே ஓடினான் சங்கர்.
***
அடுத்த நாள் பிற்பகல்..
கைத்தொலைப்பேசி சிணுங்க எடுத்துப் பேசிய மைதிலி எதிர் முனையில் பதற்றத்துடன் ஒலித்த சங்கரின் குரலைக் கேட்டாள்.
“நேற்று என்ன நடந்துது மைதிலி? இன்னைக்கி லலிதா அவங்க வேலையை ரிசைன் பண்ணிட்டு ஊருக்கு கிளம்பிப் போயிட்டதா ஆபீஸ்ல பேசிக்கறாங்க. வாட் ஹேப்பண்ட்..?”
“எனக்குத் தெரியலை சங்கர். எனிவே தாங்க் யூ பார் திஸ் இன்பர்மேஷன்.”
சங்கரை மேலே பேசவிடாமல் தொலைப்பேசி இணைப்பைத் துண்டித்த மைதிலி நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
லலிதாவின் இந்த முடிவு எப்படியும் அண்ணாவுக்குத் தெரியவரும்.
அண்ணா திரும்பி வந்துவிடுவான்..
இன்று அல்லது நாளை...
உற்சாகம் உள்ளத்தில் பொங்கி வர இருக்கையிலமர்ந்து தன் வேலையைப் பார்க்க துவங்கினாள் மைதிலி.