அன்புக்குரிய BTC இதயங்களே!.. வணக்கங்கள்!
சில சமயம் நாம் ஒன்றை நினைத்துக் கொண்டு கருத்துச் சொல்லப் போக அது வேறொன்றாக்க் கருதப்பட்டு வீண் மனச் சங்கடங்களை ஏற்படுத்திவிடுவது அடிக்கடி காணக்கூடிய ஒன்றாக இருப்பதால், வாழ்வில் நாம் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய சில விடயங்கள் பற்றி பகிர எண்ணிணேன்.
இப் பகுதி பேராசிரியர் திரு. சந்திரசேகரன் அவர்களின் கையேட்டில் இருந்து பெறப்பட்டதாகும்.
மனதைப் புண்படுத்தாதீர்கள்.
ஒவ்வொரு மனிதனும் அவனைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானவன் தான். அவனுக்கும் சுயமதிப்பு, தான் என்ற உணர்வு இரண்டும் உள்ளன. அவற்றைப் பாதிக்கும் வகையில் பேசினாலோ, செய்தாலோ மானிட உறவுகள் பாதிக்கப்படும்;
மிரட்டுதல், அச்சுறுத்தல் போன்றவை ஒரு தனிமனிதனின் பாதுகாப்புணர்வைத் தகர்த்து விடுகின்றன. தன்னை மிரட்டுபவர்களை, அச்சுறுத்துபவர்களை ஒருவன் நெஞ்சார வெறுக்கிறான். துணிச்சலும் செல்வாக்கும் உள்ளவர்கள் எதிர்க்கிறார்கள். மற்றவர்கள் மெளனமாக்க் குமுறுகிறார்கள்.
முரண்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும்.
இன்றைய சமூக வாழ்வில் அனைவரும் அனுசரணையாக ஒத்துப்போவது என்பது கடினமான காரியம். அவ்வப்போது பிணக்குகளும், பிளவுகளும் தோன்றுகின்றன. இவற்றால் ஏற்படும் விளைவுகள் விபரீதமானவை, முரண்பாடுகள் குடும்பத்தில், தொழில் செய்யும் இடத்தில், நண்பர்களிடையே தோன்றலாம்.
முரண்பாடுகள் ஏன் தோன்றுகின்றன ?
பிளவுகளுக்கான காரணங்களாகப் பின்வருவனவற்றை ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்:
1) சுயநலம்.
2) ஒப்பந்தத்தை மீறுதல்.
3) புரிந்து கொள்ள முயலாமை.
4) பிடிவாதத் தன்மை.
எல்லோரிட்த்திலும் சுயநலம் சற்று இருந்தாலும், ஒருவரின் சுயநலத்தால் மற்றொருவர் அதிகம் பாதிக்கப்படும் போது அவர் மீது வெறுப்பும், அதன் விளைவாக முரண்பாடுகளும் தோன்றுகின்றன. சுயநல உணர்வு கொண்டவர்கள் எப்போதும் மற்றவர்களுடைய வளர்ச்சியையும், இலாபத்தையும் தடை செய்வதில் குறியாக இருப்பார்கள். எழுதிய எழுதப்படாத ஒப்பந்தங்கள் நிறைய உள்ளன, இவற்றை யார் மீறினாலும் அங்கே முரண்பாடுகள் வெளிப்படுகின்றன.
Communication Gap என்று சொல்லப்படுகின்ற தொடர்பு இடைவெளியால் ஏற்படும் விளைவுகள் பல. சொன்னதைச் சரியாகப் புரிந்து கொள்ளாத காரணத்தால் ஏற்படும் முரண்பாடுகள் பல. பிடித்த முயலுக்கு மூன்றே கால் தான் என்ற பிடிவாத நிலையில் நிற்பவர் சிலர். இவர்களுடைய தீவிரமான பிடிவாத உணர்ச்சியும், விட்டுக் கொடுக்காத தன்மையும் இவர்களுக்கே எதிரியாகி விடும். இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் இவர்களை வெறுக்கத் தொடங்குவார்கள்.
முரண்பாடுகளை எப்படிச் சந்திப்பது ?
இன்றைய சமுதாய அமைப்பில் முரண்பாடுகளைத் தவிர்க்க முடியாது. ஆனால் அத்தகைய சூழ்நிலைகளை எப்படி கையாள்வது என்று பார்க்கலாம்.
1) புறக்கணித்தல் : ஒரு முரண்பாடு தோன்றியபின் நன்றாக சிந்தனை செய்து பாருங்கள். அதனால் ஏற்படக்கூடிய மிக மோசமான, அதிக பட்சமான விளைவுகள் என்ன என்று கணக்கிடுங்கள். அதன் விளைவுகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய அதிக பட்ச சக்தியும், பக்குவமும் இருக்கிறதா என சிந்தியுங்கள், நடப்பது நடக்கட்டும் என அலட்சியமாக விட்டு விடுங்கள், எது நடந்தாலும் பரவாயில்லை என அதைப் புறக்கணித்து மனம் கலங்காமல் தெளிவாக இருங்கள்.
2) தாமதம் செய்யுங்கள்: சில பிரச்சனைகள் தோன்றும் போது உடனடியாக முடிவு எதையும் எடுக்காமல் தாமதியுங்கள். சற்ரு காலம் கடந்து செயல்படும் போது ஆரம்ப வேகமும், சூடும் அங்கே இருக்காது. உணர்ச்சி தீவிரமாக இருக்கும் போது அறிவு மங்கிப் போகும். சில நேரங்களில் ஆறப்போடும் போது தாமாகவே பிரச்சனை தீர்ந்து போய்விடவும் கூடும்.
3) பிரச்சனையை நேராகச் சந்தியுங்கள் : புறக்கணிக்கவோ தாமதிக்கவோ இயலாத அளவு சிக்கலான விவகாரமாக இருந்தால் முரண்பாட்டினை நேரடியாகச் சந்திப்பது சிறந்தது.
முரண்பாடு தோன்றக் காரணம் என்ன அன ஆராய்ந்து தொடர்புபட்டவருடன் நேரடியாகப் பேசி, அதைத் தீர்க்கும் வழிகளை நேர்மையாக அலசி ஆராய்ந்து முடிவெடுங்கள். முரண்பட்டை சரி செய்தபின் மீண்டும் அது தொடர்பான நிகழ்ச்சிகளை நினைவுகூர்ந்து, இனி முரண்படாமலிருக்க என்ன செய்ய வேண்டும் என்பதைக் கண்டு கொள்ள வேண்டும்.
பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும் முரண்பாடுகள் ஆபத்தானவை. மனித வாழ்வின் மகிழ்ச்சியைக் குழிதோண்டிப் புதைக்கக் கூடியவை. முளையிலேயே அகற்றப்படாத சிக்கல்களால் வாழ்நாள் முழுக்க பெருகும் சிக்கல்களுடன் வாழ நேரும்.
நம்மைச் சற்று மாற்றிக் கொள்வோம்.
மற்றவர்களைக் கவருவது மற்றவர்களை நம் வழிக்குக் கொண்டுவருவது போன்ற முயற்சிகளில் ஈடுபடும் போது, நாமும் ஒரு மாற்றத்துக்குத் தயாராக இருக்க வேண்டும். மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களுக்காக சில சிறிய சிறிய நன்மைகளைச் செய்வதன் மூலமாகவே நம் வாழ்வு சிறக்க முடியும். எடுத்துக் கொள்வது மட்டுமல்ல வாழ்க்கை; கொடுப்பதும் வாழ்க்கை தான். அதிகமாகக் கொடுக்கும் போது தான், ஓரளவுக்காவது எடுத்துக் கொள்கிற உரிமை நமக்குக் கிடைக்கும்.
நிபந்தனையற்ற அன்பைச் செலுத்துங்கள்.
எந்த எதிர்பார்ப்பும் இன்றி செலுத்தப்படும் அன்பே உண்மையும் தூய்மையுமானதாகும். எதிர்பார்ப்புகளுடன் வாழும் இவ்வுலகில் எந்த எதிர்பார்ப்பும் இன்றி ஒன்றை வழங்குவது கடினமான காரியம் தான். ஆனால் மனித நேயத்தை வளர்க்க வேண்டுமென்றால் எந்த எதிர்பார்ப்புமற்ற, நிபந்தனையற்ற அன்பை தாராளமாக மற்றவர் மீது செலுத்துங்கள்.
நிபந்தனையற்ற அன்பு ஆற்றுக்கு ஒப்பானது. மேலிருந்து கீழ் நோக்கி வரும் ஆறு போல் அன்பானது தன்னை விடக் கீழானவர்கள் மீது நோக்கிச் செல்ல வேண்டும். எந்தத் தடையையும் தகர்க்கும் ஆறு போல் உங்கள் அன்பு இருக்கட்டும். இடையூறுகள் தாண்டிச் செலுத்தப்படட்டும். அன்பு செலுத்தும் போது அங்கு இன, மத, மொழி, வயது, உணர்வு மாறுபாடுகள் மறைகின்றன.
ஆற்று நீரை யார் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம், அது போல் ஒரு நல்ல மனிதனின் அன்பும் யாரின் வளர்ச்சிக்கும் பயன்படலாம். ஆற்றின் அடிப்பகுதியில் மேடு, பள்ளங்கள் காணப்பட்டாலும் மேல்பகுதி சமமாகவே காணப்படும். அதே போல் தன்சொந்தச் சிக்கல்கள் எத்தனையோ இருந்தாலும் அன்பு செலுத்தும் மனிதன் மனதின் மேற்பரப்பை சீராகவே பேணுவான்.
ஆற்றின் நீரோட்டம் குறையும் போது அது குட்டையாக மாறிக் கெட்டுப் போய்விடும். அன்பற்ற நெஞ்சமும் சாக்கடை தான். மானிட சமூகத்தின் மீது அன்பு செலுத்திய எத்தனையோ பெரியவர்களைப் பார்த்திருக்கிறோம், எல்லாரிடமும் இல்லாவிட்டாலும் உங்கள் நெருக்கமானவர்களிடம் உங்கள் அன்பை வாரி வழங்குங்கள்.
அன்பான மனிதர்களின் வாழ்க்கை அவர்களின் இறப்பின் பின்னும் போற்றப்படும்.
நன்றியுடன் …… ப்ரியமுடன்