மகளிர் தின சிறப்பு கவிதை - படைத்தவர் திருமதி அன்புசெல்வி (BTC member)
பெண்மையே விழித்திரு!
கனவிலே நினைத்து கருவிலே சுமந்து கைகளில் தவழ்ந்து களிப்பூட்டும் மழலை நீ
கல்வியிலே கலைமகளாய் செல்வத்திலே திருமகளாய் வீரத்தின் விளை நிலமாய் வளருகின்ற நற்பயிர் நீ
எண்ணங்கள் சிறப்பாக ஏற்றமிகு நற்செயல்கள் ஆற்றிட வந்துவித்த அருமையான செல்வம் நீ
கருவிலே உனை அழிக்க கயவர்கள் எத்தனிக்க போராடி பிறந்து வந்த இணையற்ற பொக்கிஷம் நீ
கருவறை தொடங்கி கல்லறை செல்லும் வரை பாதுகாப்பு இல்லா பயிராக வளர்கின்ற பெண்மை நீ
கண்ணின் மணியாக அன்னையவள் காத்ததனால் காரிகையாய் வளர்ந்து விட்டாய்
காலத்தின் மாற்றத்தினால் கல்வி பெற சாலை சென்றால் கடமை ஆற்ற முயன்றித்தால் பெருகி வரும் தடைகள் எல்லாம் எத்தனை ! எத்தனை !
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்பதுபோய்
அத்தனை துறைகளிலும் ஆற்றலுடன் பணிபுரிவோம்
கற்பிக்கும் ஆசிரியராய் கணினியில் வல்லுநராய்
ஆட்சி செய்யும் ஆட்சியராய் அதிகாரம் பெற்றிட்டோம்
பிறர் காலில் நிற்பதற்கு நாம் என்ன இயலாதோரா
நம்பிக்கை நமக்கு உண்டு நம் காலில் நிற்பதற்கு
மண்ணுலகம் ஆள்வதுபோல் விண்ணுலகும் நம் கையில்
வந்தார் சென்றார் எனில் வாழ்வில் என்ன பெருமை உண்டு
சாதிக்க பிறந்தவர் நாம் சரித்திரத்தில் தடம் பதிக்க
சாதனைகள் படைத்திடுவோம் சகல துறைகளிலும்
மண்ணில் விழும் விதைகளெல்லாம் மரமாக ஆவதில்லை
நல்ல புதல்வர்களால் தான் நாடு பெருமை பெரும்
சிறந்த சந்ததிகளை நாம் பெற்று வளர்த்தால்தான்
நாளைய சரித்திரத்தில் நம் பெயரும் இடம் பெரும்
பெண்மையே விழித்திரு ..போராடி வெற்றிகொள் ..
அன்புக்கு அடிபணி ..அடக்குமுறையை முறியடி ...
கடமையில் கருத்தாய் இரு ..கலக்கத்தை ஒதுக்கி தள்ளு ..
துணிவுடன் உழைத்திடு ..துக்கத்தை துடைத்திடு ..
பிறந்தது முதல் போராட்டம் .. நம் பிறவி குணமாகும்
போர்களத்தில் எதிர்கொள்ள காக்கும் கவசம் உண்டு
கல்வி எனும் கவசம் கொண்டு கடமை என்னும் ஆயுதம் ஏந்தி
முன்னேற்ற தடைகள் எல்லாம் முறியடிப்போம் வாருங்கள் ...