ஒரு செடியில் மலர்கள் மலர்ந்து குலுங்கிச் சிரித்து அழகாக மின்னின. முன்பு பூத்த மலர்கள் வாடியும், வதங்கியும், கருகி வீழ்ந்தும் சூலுற்ற விதை பெற்ற நிலையிலுமாகத் தோற்றமளித்தன.
புத்தம் புதிய அழகு மலர் ஒன்று விதை பெற்ற மலரைப் பார்த்தது. முகம் சுளித்து,
""நீங்களெல்லாம் விதையைப் பெற்றதற்காகப் பெருமையுடன் காட்சி அளிக்கிறீர்கள். உங்களுக்கு அறிவே இல்லை. உங்களிடம் தோன்றியிருக்கும் விதை உங்கள் அழகை அழித்துவிட்டிருப்பதைப் பற்றி நீங்கள் எண்ணிப் பார்ப்பதாகவே தெரியவில்லை,'' என்று ஏளனமாகக் கூறிற்று.
""அழகு அழிந்து போவதாவது! இப்போதுதான் நாங்கள் உண்மையான அழகைப் பெற்றிருக்கிறோம். எங்களிடம் உருவாகியிருக்கும் கருதான் நம்மை இன விருத்தி செய்ய உதவுகின்றன. நம்மிடம் கரு ஏற்பட அனுமதிக்காவிட்டால் நம்முடைய இனமே பூண்டற்று போய்விடும் என்பதை மறந்து விட்டாயா!'' என்று சூல் கொண்ட மலர் கூறிற்று.
உண்மையை விளங்கிக் கொண்ட புதுமலர், ""அக்கா தாய்மைப்பேறு தான் உண்மையான அழகு என்பது இப்போது எனக்கு விளங்குகிறது. நமக்கு முன்னால் ஒரு மலர் தாய்மைப்பேறு பெற்றுச் சூல் கொண்டதனால் தானே நாம் பிறந்தோம். இல்லாவிட்டால் நமது இனமே பூண்டற்று மறைந்து போயிருக்குமே,'' என்று உருக்கமான குரலில் கூறிற்று.