குறுந்தொகை நான்கு தொடக்கம் எட்டு வரையான அடிகளைக் கொண்டமைந்த 401 பாடல்களின் தொகுப்பு. ஏனைய பல பழந் தமிழ் நூல்களைப் போல் இதுவும் 400 பாடல்களின் தொகுப்பாகவே இருந்திருக்க வேண்டுமென்றும் ஒரு பாடல் இடைச் செருகலாக இருக்ககூடுமென்றும் சிலர் கருதுகிறார்கள். இது பலவகையிலும் நற்றிணை, அகநானூறு ஆகிய பாடல் தொகுப்புக்களை ஒத்தது. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. இத் தொகுப்பில் அமைந்துள்ள 391 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். ஏனைய 10 பாடல் களைப் பாடியவர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை. கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
குறுந்தொகை பாடிய புலவர் வரிசை
பாரதம் பாடிய பெருந்தேவனார் - கடவுள் வாழ்த்து
திப்புத்தோளார் 1
இறையனார் 2
தேவகுலத்தார் 3
காமஞ்சேர்குளத்தார் 4
நரிவெரூஉத்தலையார் 5
பதுமனார் 6
பெரும்பதுமனார் 7
ஆலங்குடி வங்கனார் 8, 45
கயமனார் 9
ஓரம்போகியார் 10, 70
மாமூலனார் 11
ஓதலாந்தையார் 12, 21
கபிலர் 13, 18, 25, 38, 42, 87
தொல்கபிலர் 14
ஔவையார் 15, 23, 28, 29, 39, 43, 80
பாலை பாடிய பெருங்கடுங்கோ 16, 37
பேரெயின் முறுவலார் 17
பரணர் 19, 24, 36, 60, 73, 89
கோப்பெருஞ் சோழன் 20, 53
சேரமான் எந்தை 22
கொல்லன் அழிசி 26
வெள்ளிவீதியார் 27, 44, 58
கச்சிப்பேட்டு நன்னாகையார் 30
ஆதிமந்தி 31
அள்ளூர் நன்முல்லையார் 32, 67, 68
படுமரத்து மோசிகீரன் 33, 75
கொல்லிக் கண்ணன் 34
கழார்க் கீரன் எயிற்றி 35
செம்புலப் பெயனீரார் 40
அணிலாடு முன்றிலார் 41
மாமிலாடன் 46
நெடுவெண்ணிலவினார் 47
பூங்கணுத்திரையார் 48
அம்மூவனார் 49
குன்றியனார் 50, 51
பனம்பாரனார் 52
மீனெறி தூண்டிலார் 54
நெய்தற் கார்க்கியர் 55
சிறைக்குடி ஆந்தையார் 56, 57, 62
மோசிகீரனார் 59, 84
தும்பிசேர் கீரன் 61
உகாய்க்குடி கிழார் 63
கருவூர்க் கதப்பிள்ளை 64
கோவூர் கிழார் 65
கோவர்த்தனார் 66
கடுந்தோட் கரவீரன் 69
கருவூர் ஒதஞானி 71
மள்ளனார் 72
விட்ட குதிரையார் 74
கிள்ளிமங்கலங் கிழார் 76
மதுரை மருதன் இளநாகனார் 77
நக்கீரனார் 78
குடவாயிற் கீரனக்கன் 79
வடம வண்ணக்கன் பேரிசாத்தன் 81
கடுவன் மள்ளன் 82
வெண்பூதன் 83
வடம வண்ணக்கன் தாமோதரன் 85
வெண்கொற்றன் 86
மதுரைக் கதக்கண்ணன் 88
மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதன் 90
பூதந்தேவனார்
இன்னும் உண்டு
குறுந்தொகை உரை
கடவுள் வாழ்த்து
தாமரை புரையும் காமர் சேவடிப்
பவளத் தன்ன மேனித் திகழொளிக்
குன்றி ஏய்க்கும் உடுக்கைக் குன்றின்
நெஞ்சுபக வெறிந்த வஞ்சுடர் நெடுவேல்
சேவலங் கொடியோன் காப்ப
ஏமம் வைக லெய்தின்ற லுலகே
உரை:
தாமரை மலரைப் போன்ற சிவந்த அடிகள்(காலடி), பவழம் போல் சிவந்த உடல், உடலில் இருந்து பரவித் திகழும் ஒளி, குன்றி மணி போல் சிவந்த ஆடை, குன்றே இரண்டாய்ப் பிளக்குமாறு நெடிய வேல் படை, இவற்றுடன் சேவல் சின்னம் பொறித்த கொடியைக் கொண்டவனாகிய முருகப் பெருமான் காத்து நிற்பதால் இந்த உலகம் இனிய நாட்களைப் பெற்று விளங்குகிறது.
குறிஞ்சி - தோழி கூற்று
செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பிற் செங்கோட்டி யானைக்
கழல்தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே.
முதற் குறிப்பு:
தோழியிற் கூட்டத்தை விரும்பிய தலைவன், செங்காந்தள் பூவைத் தோழிக்குக் கையுறையாகக் கொடுத்துத் தன் குறை கூறுகையில், 'இஃது எமது மலையிலும் பெருமளவு உள்ளது, ஆதலின் இதனை வேண்டேம்' என மறுத்துக் கூறியது.
உரை:
போர்க்களம் குருதியால் சிவக்கும்படி, பகைவர்களைக் கொன்று ஒழித்த நேரான/ வளைவுகளற்ற அம்பினையும், குருதி படிந்த சிவந்த தந்தங்களை உடைய யானையையும், இடையில் உழலும் வாளையும் கொண்ட முருகனுடைய மலையிலே செக்கச் சிவந்த காந்தள் மலர்கள் கொத்துக் கொத்தாய்ப் பூத்து உள்ளன.
குறிஞ்சி - தலைவன் கூற்று
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.
முதற் குறிப்பு:
இயற்கைப் புணர்ச்சிக்கண், தலைவியின் கூந்தல் இயற்கை மணம் உடையது என்பதைத் தலைவன் வண்டை வினாவுதல் வாயிலாகப் புலப்படுத்தி நலம் பாராட்டியது.
உரை:
பூக்களைத் தேர்ந்து/ ஆராய்ந்து தேன் உண்ணுதலையும், பூக்களிலே அழகிய சிறகுகளையும் கொண்ட வண்டே, நீ சொல்வாயாக! நீ என்னுடைய நிலத்திலுள்ள வண்டு என்பதால் என்னுடைய விருப்பத்தை உரைக்காமல் நீ கண்கூடாக அறிந்த உண்மையைக் கூறுவாயாக! மயிலின் மெல்லிய இயல்பும், செறிவான பற்களும், எழுபிறப்பிலும் என்னுடன் நட்பும் பொருந்திய தலைவியின் கூந்தலை விடவும் மணம் பொருந்திய பூவும் இருக்கின்றதோ!
குறிஞ்சி - தலைவன் கூற்று
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.
-செம்புலப் பெயனீரார். (குறுந்தொகை - 40}
குறிஞ்சி - தலைவி கூற்று
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.
முதற் குறிப்பு:
தலைவனின் இயல்பைப் பழித்துக் கூறிய தோழிக்குத் தலைவி பதிலாகக் கூறியது.
உரை:
மலைச்சாரலில் வளரக் கூடிய, கரிய கிளைகளையுடைய குறிஞ்சி மரத்தின் பூவிலிருந்து பெருமளவு தேன் உருவாகும் நாட்டைச் சேர்ந்தவனாகிய தலைவனிடம் நான் கொண்ட நட்பானது, இந்தப் புவியைக் காட்டிலும் பெரியது; வானை விடவும் உயர்ந்தது; கடலின் ஆழத்தை விடவும் அளத்தற்கரிய ஆழம் உடையது.
நெய்தல் - தலைவி கூற்று
நோம், என் நெஞ்சே; நோம், என் நெஞ்சே;
இமை தீயப்பன்ன கண்ணீர் தாங்கி,
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவு இலர் ஆகுதல், நோம், என் நெஞ்சே
- காமஞ்சேர்குளத்தார்
நள்ளென்றன்றே, யாமம் சொல் அவிந்து,
இனிது அடங்கினரே, மாக்கள் முனிவு இன்று,
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர் யான் மன்ற துஞ்சாதேனே
-பதுமனார்
பாலை - கண்டோர் கூற்று
வில்லோன் காலன் கழலே தொடியோள்
மெல் அடி மேலவும் சிலம்பே நல்லோர்
யார்கொல்? அளியர்தாமே ஆரியர்
கயிறு ஆடு பறையின், கால் பொரக் கலங்கி,
வாகை வெண் நெற்று ஒலிக்கும்,
வேய் பயில் அழுவும் முன்னியோரே
-பெரும்பதுமனார்
மருதம் காதற்பரத்தை கூற்று ==
கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம்,
பழன வாளை கதூஉம் ஊரன்