மறுபடியும் மிகத்தெளிவாய்ச் சொன்னாள் கவுரி.""எனக்கு இந்த புருஷன் வேண்டாம்...என்ன கட்டாயப்படுத்தாதீங்க...ப்ளீஸ்!'' விடவில்லை அந்த அதிகாரி. சின்ன முள்ளின் ஒரு சுற்று முடியும் வரைக்கும், தனக்குத் தெரிந்த கதையையெல்லாம் சொல்லி, வழக்கை இன்னொரு தேதிக்கு ஒத்தி வைத்தார்.
கவுரியின் முற்போக்கு சிந்தனை, அந்த அதிகாரிக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், நம் கலாசாரத்தின் மீதும், பண்பாட்டின் மீதும் அவளுக்கு பற்று இருப்பதை அந்த பெண் அதிகாரி நன்றாகவே புரிந்திருந்தாள்.நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்தவள் என்றாலும், கவுரியின் தோற்றம், பேச்சு, அணுகுமுறை எல்லாமே அவளை மேல் தட்டுப் பெண்ணாய்த்தான் எல்லோர்க்கும் காட்டியது. பள்ளி, கல்லூரிகளில் கவுரியின் ஆளுமைக்கு ஈடு கொடுக்க முடியாமல் விலகிப்போன மாணவர்கள் பலர்.தனியார் நிறுவனத்தில் வேலைக்குப் போய் சம்பாதிக்க ஆரம்பித்ததுமே, அவளுக்கு வரன் வந்தது. உள்ளூர் மாப்பிள்ளைதான் வேண்டுமென்று தேடியதில், கிடைத்தவன் சுகுமார். அவனுக்கும் தனியார் கம்பெனியில்தான் வேலை.
ஆனால், கவுரி தடாலடி என்றால், சுகுமார் அமைதியின் சொரூபி. அதிர்ந்தும் பேசத் தெரியாதவன். திருமணம் முடிந்து ஒரு வருஷத்திலேயே ஊர் கேள்வி கேட்க ஆரம்பித்தது.""என்ன ஏதும் விசேஷம் இல்லையா?''பதில் சொல்லியே மாய்ந்து போனாள் கவுரி. என்ன பிரச்னை என்று தெரியாமல் இருவரும் விழித்த போது, சுகுமாரின் அண்ணன் கணேசன்தான் ஆறுதலுக்கு வந்தான்.சொந்தமாக தொழில் செய்து, நிறைய நில புலன்களை வாங்கிக் குவித்து இருந்தான் கணேசன். ஆனால், ஏதோ காரணத்தால் கல்யாணம் செய்து கொள்ளவே இல்லை. தம்பிக்கு ஏதாவது பணக் கஷ்டம் என்றால், கேட்பதற்கு முன்னே கொடுக்கக் கூடிய மனசுக்காரன்.அன்றைக்கு இருவரையும் வெளியே தனது காரில் அழைத்துச் சென்ற கணேசன், மெதுவாக விஷயத்தை ஆரம்பித்தான்.
""கல்யாணம் ஆகி 3 வருஷமாச்சு. இன்னும் ஏன் குழந்தை இல்லைன்னு கேக்குறாங்க, உங்க கஷ்டம் எனக்குத் தெரியும். எனக்குத் தெரிஞ்ச டாக்டர் அம்மா இருக்காங்க. அவுங்களைப் போய்ப் பார்ப்போம்,'' என்று அவன் சொன்ன போது, கவுரிக்கு தயக்கமாய் இருந்தது.ஒரு வழியாய் இருவரும் சம்மதித்து, டாக்டரைப் போய்ப் பார்த்தார்கள். எல்லா பரிசோதனையும் முடித்து, இரண்டு நாள் கழித்து வரச்சொன்னார்கள். ரிசல்ட் வாங்க இருவரும் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது, கணேசனிடமிருந்து போன் வந்தது.
""ரிசல்ட்டை நானே வாங்கிட்டேன். டாக்டர் பயப்படும்படி ஒன்றும் இல்லை. சத்தான ஆகாரங்கள் சாப்பிட்டா, சீக்கிரமே குழந்தை உருவாயிடும்கிறாரு. ஏதோ டானிக் எழுதிக் கொடுத்திருக்காங்க; நானே வீட்டுக்கு வர்றேன்,'' என்றான்.கவுரிக்கும், சுகுமாருக்கும் நிம்மதியாய் இருந்தது.அன்று மாலையில் வீட்டுக்கு வந்தான் கணேசன். சிறிது நேரம் பேசிவிட்டு, சுகுமாரை மட்டும் அழைத்துக் கொண்டு போனான். ஓட்டல் ஒன்றில் அமைதியான சூழலில் பேச ஆரம்பித்தான் கணேசன்.
""தம்பி! நான் சொல்றத கேட்டு மனசை விட்றாத, இன்னைக்குக் காலைல "கிளினிக்' போனப்ப டாக்டர் சில விஷயங்களை சொன்னாங்க. உனக்கும், கவுரிக்கும் குழந்தை பிறக்கறதுல சிக்கல் இல்ல. ஆனா, உங்கிட்ட இருக்குற விந்தணு சக்தி குறைவா இருக்காம். அதனால குழந்தை ஊனமா பிறக்க வாய்ப்பு இருக்காம்,'' என்று கூற, லேசாய் கலங்கினான் சுகுமார்.அவனைத் தேற்றி விட்டு தொடர்ந்தான் கணேசன்.""டாக்டர் ஒரு ஐடியா சொன்னாங்க, விந்தணு வங்கியில இருந்து சத்தான விந்தணுவை வாங்கி, "டெஸ்ட் டியூப் பேபி'யை உருவாக்கலாம்னு சொன்னாங்க, சரி, யோசிச்சு சொல்றோம்னு வந்துட்டேன்,'' என்று டாக்டர் சொன்ன விஷயத்தை போட்டு உடைத்தான் கணேசன்.
இதை கேட்டவுடன் மனதளவில் தளர்ந்து போனான் சுகுமார்.ஆனால், சுகுமாரின் அண்ணன் கணேசன், தொடர்ந்து பேச ஆரம்பித்தான். ""நான் சொல்றதை தப்பா நினைச்சுக்காதே! எனக்கு வியாபாரத்தில் நல்ல லாபம். ஏகப்பட்ட நிலபுலன் இருக்கு. கல்யாணம் பண்ணிக்காததால பொண்டாட்டி, புள்ள ஏதுமில்லை, நீ சம்மதிச்சா காதும் காதும் வெச்சமாதிரி ஒரு விஷயத்தை உங்கிட்ட சொல்றேன், '' என்று பீடிகை போட்டான்.
""யாரோ ஊரு பேரு தெரியாத ஒரு ஆளோட விந்தணுவை எடுத்து, கவுரிக்கு வைச்சு, குழந்தை பிறக்கறதை விட, என்னோட விந்தணுவை பயன்படுத்தி குழந்தை பிறக்க வெச்சா, எனக்கும் ஒரு வாரிசு கிடைச்ச மாதிரி இருக்கும். உனக்கும் ஒரு குழந்தை கிடைக்கும். ரெண்டு பேரு பிரச்னையும் தீர்ந்துடும்,'' என்றான்.
கணேசன் சொன்ன கருத்து முதலில் அருவெறுப்பாக இருந்தாலும், சின்ன வயதில் இருந்து தன்னை படிக்க வைத்து, வளர்த்தவர் என்பதால், நிச்சயமாக தன்னுடைய நன்மைக்காகத்தான் சொல்வார் என்று நம்பினான். நீண்ட நேர மனப் போராட்டத்துக்கு பின் சம்மதித்தான் சுகுமாரன். இதைப்பக்குவமாக கவுரியிடம் சொல்லி, முதலில் சம்மதம் வாங்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால், மாதங்கள் பல உருண்டோடியும், சுகுமாருக்கு அந்த விஷயத்தை கவுரியிடம் சொல்லும் மன தைரியம் வரவில்லை. ஒரு நாள் கணேசனிடமிருந்து போன் வந்தது.
""என்ன யோசிச்சியா! என்ன முடிவு செஞ்ச, கவுரியிடம் சொன்னியா'' என்றான். ""முதல்ல ஆகவேண்டிய காரியத்தை பார்ப்போம். அப்புறம் கவுரியிடம் சொல்லிக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்,'' என்றான் சுகுமாரன். ஒரு வழியாய் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, கவுரியிடம் பேசினான்.""கவுரி! உனக்கு சின்ன ஆபரேசன் பண்ணுனாத்தான் நமக்கு குழந்தை பிறக்குமாம், டாக்டர் சொன்னாங்க, அடுத்த வாரம் தயாரா இரு!,'' என்றான்.கவுரிக்கு முதலில் எதுவும் புரியவில்லை. என்ன ஆபரேசன் என்று டாக்டரிடம் கேட்டுக் கொள்ள முடிவு செய்தாள்
அன்று அதிகாலையிலேயே எழுந்து, சாமி கும்பிட்டு விட்டு, சுகுமாருடன் மருத்துவமனைக்குக் கிளம்பினாள். ஏனோ மனசு லேசாய் கலக்கமாய் இருந்தது அவளுக்கு. டாக்டரிடம் சென்றதும் முதல் கேள்வியாய்க் கேட்டாள்.""டாக்டர்! எனக்கு என்ன ஆபரேஷன் பண்ணப் போறீங்கன்னே இவரு சொல்லலை, என்ன பிரச்னை எனக்கு, என்ன ஆபரேசன்?,'' என்றாள்.அந்த மகப்பேறு மருத்துவ நிபுணர் தெளிவாய் விளக்கினார்.
சுகுமாரின் விந்தணுவில் சக்தி குறைவாய் இருப்பதையும், அதனால், கணேசனின் விந்தணுவைப் பயன்படுத்தி "டெஸ்ட் டியூப் பேபி' உருவாக்க திட்டமிடப்பட்டிருப்பதையும் விளக்கினாள்.அதைக் கேட்டு அதிர்ந்துபோன கவுரி, ""என்ன முட்டாள்தனமான வேலை, என்னைக் கேட்காம, இப்பிடி ஒரு கேவலமான காரியத்தைச் செய்ய உங்களுக்கு எப்பிடி மனசு வந்துச்சு, நீயெல்லாம் ஒரு புருஷனா?,'' என்று கத்திக் குவித்து விட்டு, புயலாய் வெளியே வந்தாள்.
நேராக அம்மா வீட்டுக்குப் போனவள், அங்கிருந்து வக்கீல் வீட்டுக்குப் போனாள். ""எனக்கே தெரியாம இப்பிடி ஒரு காரியம் பண்ணத் துணிஞ்ச அந்த மனுஷனோட இனிமே வாழவே முடியாது,'' என்று வக்கீலிடம் சொன்னவள், சுகுமாருக்கு நோட்டீஸ் அனுப்பி விட்டு, விவகாரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாள். நீதிமன்றத்தில் கவுன்சிலிங்கின் போது, அவளை சமாதானப்படுத்த முயன்ற முயற்சிகள் தோல்வியில் முடிய, அவளுக்கு விவகாரத்து கிடைத்தது. இப்போது கவுரி தனியாக வாழ்கிறாள்; சுகுமாரின் எல்லா நினைவுகளையும் மறந்து விட்டு.