‘காலைவணக்கம்’ சொல்லிக்கொண்டு வந்த மடலில்
சிரித்தபடி அமர்ந்திருந்தது ஒரு குழந்தை.
குழந்தையைப் பார்த்ததும்
பால்யம்…
பள்ளிக்கூடம்…
தமிழய்யா…
தமிழ்…
என்றும்,
தமிழை நினைத்ததும்
கவிதை…
இலக்கியம்…
திரைப்படம்…
இசை…
என்றும்,
இசையை நினைத்ததும்
இளையராஜா…
எஸ்பிபி…
எஸ்பிபி சரண்…
சென்னை 28…
என்றும்,
சென்னையை நினைத்ததும்
வெயில்…
கடல்…
கடற்கரை…
காதல்…
என்றும்,
எதை நினைத்தாலும்
எதனெதற்கோ இழுத்துச் செல்லும் மனதில்
அடுத்து
உன்னை நினைத்ததும்
நீ மட்டுமே நிறைகிறாய்!