Click "Like" Button To Join | |
| | செந்தமிழும் சிறு ஆய்வும் | |
| | Author | Message |
---|
Fathima
Posts : 999 Points : 1988 Join date : 2010-03-10 Age : 39 Location : srilanka
| Subject: செந்தமிழும் சிறு ஆய்வும் Sat Apr 10, 2010 7:16 am | |
| தமிழ் என்றாலே நம்மில் பலருக்கு ஓவ்வாமை. அது போன்றவர்களை கண்டால் எனக்கு ஒவ்வாமை. உண்மையில் அவர்களின் உள் மனதில் உள்ளதைக் கூறவேண்டுமானால் அது ஒவ்வாமை அல்ல, அது அத்தனையும் வெளிவேடம். யாருக்கும் அறிவுரை கூறும் நோக்கமோ ஆவலோ நமக்கில்லை. இது போன்ற உடன்பிறப்புக்களால் நம் அன்னைத்தமிழுக்கு வந்து சேரும் இழுக்கைத்தான் நம்மால் அனுமதிக்க முடியவில்லை. தமிழைப் புகழுங்கள் என்று கூறவில்லை. குறைந்தது அன்னைத்தமிழை அவமதிக்காமல் இருந்தால் அதுவே போதும் என்று உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழென்றாலே உணர்ச்சி வசப்படக்கூடியவன் நான். அதனாலேயே என் உள்ளக்கிடக்கிற்கு வடிகால் தேட முயற்சித்ததன் விளைவாக விளைந்ததே கீழ் காணும் வரிகள் சில என் கவிதை தொகுப்பிலிருந்து,
உண்மையில், துயிலும் எரிமலையாய் உள்நின்று கனறும் நின்(தமிழ்) மேல் உள்ளப்பற்று எந்நாளும் எமக்கு.
மேலும்
வரங்கொடு இறைவா என் தமிழ் மீதுள்ள ஆர்வம் குறையாமலிருக்கஸ்ரீ
என நீள்கின்றன.
தமிழர்களுக்குத்தான் எத்தனை தாழ்வு மனப்பான்மைகள். தமிழில் பேசினால் கவுரவக் குறைச்சல், தமிழில் பெயரிட்டால் சங்கடம். மொத்தத்தில் தமிழ் என்றாலே ஏதோ தீண்டத்தகாத ஒரு பண்டமாகவே கருதுவது சகிக்கவில்லை.
தமிழ்ப்பற்றாளன் என்றாலே ஒரு தீவிரவாதியை போன்று கருதுபவர்களின் மனநிலை மாற வேண்டும். தமிழ் என்று சற்று அழுத்தமாக உச்சரித்தாலே அருவெறுப்பு அடையும் நிலை மாற வேண்டும். நாம் விரும்புவது, நேசிப்பது அனைத்தும் தமிழைத்தான், ஆனால் மற்ற மொழியையோ மொழியினரையோ அவமதிப்பது நமது நோக்கமன்று.
தமிழனுக்கு பெயர் சூட்டுவதில் கூட உரிமையோ சுதந்திரமோ இருக்கக் கூடாதா? அப்படியே ஆசையிருந்தாலும் ஏனோ தமிழர்களே ஒரு மாதிரியாகத்தான் பார்க்கிறார்கள். இன்றைய நிலையில் தமிழ் பிள்ளைகளுக்கு 75 விழுக்காட்டிற்கும் அதிகமாகவே மற்ற மொழிப் பெயர்கள் சூட்டி பெருமைப்படுகிறார்கள். அவைகளே அதிகம் பெருகியுள்ளன. நான் முன்பு கூறிய உரிமை, சுதந்திரம் இவர்கட்கு கூடாதோ? என்று சிலர் கேட்கலாம். அதுவல்ல என் கூற்று. தமிழில் பெயர் சூட்ட ஆவலோடு இருப்பவர்கள் அல்லது தமிழில் பெயர் சூட்டியவர்கள் போன்றவர்களை, ஊக்கப்படுத்தக்கூட சொல்லவில்லை. ஏன், வேறு பெயர் தோன்றவில்லையா என்று கேட்காமலிருந்தாலே போதுமானது. அவர்கட்கு உள்ள கொஞ்சநஞ்ச தமிழ்பற்றையும் தங்களின் சொல் மூலம் காயப்படுத்தாமல் இருப்பதே, இவர்கள் செய்யும் மிகப்பெரிய தமிழ் தொண்டாகும். தமிழ் என்றால் இளக்காரம், தமிழன் என்றால் இளைத்தவன் என்றாகிப் போனதன் விளைவுதான் இம்மாதிரியான போக்குகள்.
இன்று தமிழகத்தில் உள்ள தமிழரிடத்தில் கூட தமிழ் மீதான தாழ்வு மனப்பான்மை மிகுந்துள்ளது என்றால், ஆச்சரியப்படுவதற்கில்லை. தமிழில் புலமை பெற வேண்டும் என்று கூறவில்லை, சாதாரண வாக்கியங்களில் கூட சற்றே உற்று கவனித்தால் வடமொழிச் சொற்களின் ஆதிக்கத்தை காணலாம்.
எடுத்துக்காட்டாக இனி இங்கிருந்து தொடங்கும் என் சொற்றொடர்களில் முடிந்த மட்டும் தமிழ் சொற்களையே பயன்படுத்துகிறேன் பாருங்கள். மேலே உள்ள பத்திகளில் அடங்கிய சில சொற்களுக்கு உண்மையான தமிழ்ச் சொல் கீழ்க்கண்டவாறு தருகிறேன்.
மனம் - உள்ளம் வேடம் - கோலம் சுதந்திரம் - விடுதலை அதிகம் - மிகுதி ஆசை - ஆவல், அவா அனாதை - ஆதரவற்றோர் ஆச்சரியம் - வியப்பு சாதாரணம் - எளிய வாக்கியம் - சொற்றொடர் விஷயம் - விடயம் இதன் வாயிலாக, நாம் அன்றாடம் வழங்கும் பேச்சிலே எவ்வளவு கலப்படம் என்று எளிதாக அறியலாம். கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு. நமக்குத் தெரிந்தே இவ்வளவு உள்ளதென்றால் தெரியாதது எவ்வளவோ? ஆகையால்தான் முடிந்த மட்டும் மற்ற மொழிச் சொற்களை பயன்படுத்தாமல் இருக்க முயல்கின்றேன்.
இது போன்ற கலப்படத்தினால் ஏற்பட்டுள்ள விளைவுகள் ஏராளம். தாய்மொழி வழிக் கல்வி பெற உலகில் அனைவரும் பாடுபட வேண்டும். ஆங்கில வழிக் கல்விதான் சிறந்தது எனும் மாயத்தோற்றம் மறைய வேண்டும். தாய்மொழியின் வாயிலாக கற்பவனின் அறிவாற்றல் மற்றும் புரிந்துணர்வு மேம்படும்.
எடுத்துக்காட்டாக, புலம்பெயர்ந்த தமிழர்களின் நிலைதான் என்னை நிலை குலைய வைத்தது. இங்கு குசராத் மாநிலத்தில் படித்து பட்டம் பெற்ற பெருவாரியான தமிழர்களுக்கு ஒரு மொழியும் உருப்படியாகத் தெரிவதில்லை. தமிழ், இந்தி, குசராத்தி, ஆங்கிலம் என பலமொழிப்பாடங்களை படிக்கும் மாணவர்கள் ஒரு மொழியிலும் தேறுவதில்லை. தமிழ் தெரியாது என்பதைப் பெருமையாக கூறும் இவர்கள் மற்ற மொழியில் எவ்வளவு புலமை பெற்றுள்ளார்கள் என்பதனை எண்ணிப்பார்ப்பதில்லை.
அறிவியல் வளர்ந்துள்ள இன்றைய சூழ்நிலையில் முடியாதது என்று ஒன்றும் இல்லை. எண்ணமும் முயற்சியும்தான் அவசியம். ஆகையால் மைய அரசும் மாநில அரசும் அவரவர் தாய்மொழி வழிக்கல்விக்கு விரைவில் ஆவன செய்தால் குப்பனும் சுப்பனும் கூட விஞ்ஞானி ஆகலாம்.
மேலும் தமிழில் புதிய அறிவியல் சொற்கள் இல்லையென ஒரு வாதம். மேலை நாட்டுச் சொற்களை அப்படியே பயன்படுத்தினால்தான் மொழி வளம்பெறும் என்றும் ஒரு கருத்து.
தமிழ்ச்சொற்கள் மிக ஏராளம். ஆனால் வழக்கில்தான் இல்லை. பழம்பெரு இலக்கியங்களில் நல்ல பல சொற்கள் உள்ளன. அவற்றை அறிந்து அப்படியே பயன்படுத்தினால் தவறென்ன? முயற்சியாவது செய்யலாம் அல்லவா?
தொலைபேசி, தொலைக்காட்சி, கணினி, இணையம் என பல புதிய சொற்கள் நீண்டு கொண்டே செல்கின்றன. இவ்வாறு புதியன படைத்தலும் பழைய சொற்களை புதுப்பித்தலும் எவ்வகையில் குற்றமாகும். மொழி வளர இவையன்றோ சான்றுகள். | |
| | | Fathima
Posts : 999 Points : 1988 Join date : 2010-03-10 Age : 39 Location : srilanka
| Subject: தமிழ் வாழ்வதற்கான வழி Sat Apr 10, 2010 7:17 am | |
| மாந்தகுலத்தின் தாயினமாக தமிழினம் அமையப்பெற்றதால் அன்பு, பண்பு, அறிவு, அறம், ஒழுங்கு, நுட்பம், வீரம், வினைத்திறன் இவையெல்லாம் ஒருங்கே அமைந்து சிறப்புகளை அடைந்துள்ளது. ஆயினும் மொழிவழி அடிப்படையில் தான் ஒரு தனித்தன்மை வாய்ந்த இனம் என்பதை உணராததால் எல்லா வகையான இழிவுகளையும், கொடிய அழிவுகளையும் தொடர்ந்து சந்தித்து வருகின்றது. தாய்மைப் பண்பை வேற்றினங்கட்கு வழங்கும் அளவிற்கு தன்னினத்திற்கு வழங்காததால் உட்பகை மட்டுமே மேலோங்கி ஓர்மை அடைவதற்கு வழியே இல்லாமற் போயிற்று.
உலக வரலாற்றில் எவ்வகை சிறப்புத் தகுதியும் இல்லாத இனங்கள் எல்லாம் இன்று எல்லா நிலைகளிலும் ஆளுமை செலுத்துகின்றன. தமிழினமோ எல்லாவகை சிறப்புக் கூறுகளையும் பெற்றிருந்தாலும் இனநலம் எனும் அடிப்படை இல்லாததால் இதற்கு எவர் முன்னின்று உழைத்தாலும் இனம் மீட்சிபெற முடியவில்லை. வேற்றினத்தார் சிலர் இதன் மீது பரிவுகாட்டும் அளவிற்குகூட தமிழினம் தன்னைத்தானே அன்பு செலுத்திக்கொள்ளும் நல்லியல்பை இன்னும் பெறமுடியவில்லை.
மாறாக தன்னைத்தானே சிதைத்துக் கொள்வதிலும், காட்டிக்கொடுப்பதிலும், வேற்றினங்கட்கும் - பிறகூறுகளுக்கும் அடிமையாய் இருப்பதிலும், அதிலே இன்பம் துய்ப்பதிலும் அளவுகடந்த ஈடுபாடு உடையதாக உள்ளது. இந்த மெலிவை வேற்றினத்தார் மிக நுட்பமாக பயன்படுத்தி தமிழினம் என்றும் ஒரு மொழிவழி இனமாக உருக்கொள்ளக் கூடாது என்பதில் மிகத்தெளிவாக செயல்பட்டு வருகிறார்கள்.
இந்தியத் துணைக்கண்டத்தில் எல்லா மொழிவழி இனங்களும் தனித்தனி நாட்டினமாக தலைநிமிரவும், ஆளவும் இசைவளித்து மகிழக்கூடியவர்கள், தமிழினம் தன்னினம் அழிக்கப்பட்டதே என்று கண்ணீர் விடுவதற்காக சிறுஅளவில் கூடினாலும் அதனை தீங்கானதாகவும், வன்முறை எனவும், வளரவே கூடாது என்றும் வகைவகையாய் கூச்சலிடுகின்றனர். கொடிய சட்டங்களைக் கொண்டு ஒடுக்குகின்றனர்
தமிழினத்திலிருந்து திரிந்த இனங்கள் தமிழினத்திற்கு எதிராக இயங்கினாலும் தாய்மைப் பண்பினால் எதிர்க்கின்ற எண்ணமே எழாமல் தமிழினம் எளிதில் வீழ்ச்சி அடைகிறது. தாய்மைப் பண்பு அளவற்று வளர்வதால் தற்காப்பு உணர்ச்சி முழுவதும் அழிந்து விடுகிறது. தாயானது சேய்களின் தவறுகளையும் தீங்குகளையும் பொறுத்துக்கொள்கிறது என்பதால் அது கோழையாகிவிட்டது என்பதன்று. தாய் பொறுக்கமுடியாமல் வெகுண்டெழுந்தாலோ, மனத்தளவில் சினந்தாலோ சேய்கள் வாழவே முடியாது என்பதை சேயினங்கள் உணருதல் வேண்டும்.
தமிழினம் தன்னின் உட்பகையால் தன்னையே அழித்துக்கொண்டதே தவிர வேற்றினங்களை ஒருபொழுதும் அழிக்க முற்பட்டதே இல்லை. உலகினங்கள் தமிழினத்தை அழித்துவிட்டு வாழ முற்படுகையில் உலகில் உட்பகை மட்டுமே மேலோங்கி மாந்தகுலமே அழிந்துவிடும். இது அறச்சினத்தின் வெளிப்பாடன்று, இயற்கையின் இயங்கியலாகும். எந்தவொரு மூலத்தின் கருவைச் சிதைத்தாலும் அதனின் வடிவமே வேறாகிவிடும்.
தமிழினத்தின் மீட்சி என்பது உலகின் மீட்சியாகும். ஆதலால் உலகின் நலனை விரும்புகிறவர்கள் தமிழினத்தின் நலனை விரும்புதல் வேண்டும்.
மொழியாலும் இனத்தாலும் திராவிடர்களாக இருப்பவர்கள் தமிழ், தமிழன், என்பனவற்றுள் ஒளிந்துகொண்டு தமிழுக்கும் தமிழினத்திற்கும் எதிரான வேலைகளை தொடர்ந்து தொய்வில்லாமல் செய்துவருவதால் தமிழும் தமிழினமும் தெளிவுபெறவே முடி யவில்லை. தமிழினம் எந்த முட்டையாக இருந்தாலும் அவையம் காக்கும், எந்த குட்டியாக இருந்தாலும் பால் கொடுக்கும் என்பதைத் தெரிந்த திராவிடர்களும், வேற்றினத்தாரும் தமிழினத்துடன் இரண்டறக் கலந்துவிட்டது போன்று நடித்து முனைப்புடன் செயல்பட்டு தமிழினத்தை அழித்து வருகின்றனர்.
இதனின் முன்னணி திராவிடத் தலைவராக மு. கருணாநிதி திகழ்கிறார். ஆரியர் முதல் ஆங்கிலேயர் வரை எத்தனையோ படையெடுப்புகள் நிகழ்ந்து இருந்தாலும் தமிழைத் தமிழர்களே வெறுத்தொதுக்கும் இழிநிலையை திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளே மிகச்சிறப்பாக செய்துள்ளன. குறிப்பாக கருணாநிதி தனது நுட்பமான சூழ்ச்சித் திறன் வாயிலாக தமிழர்களை சிதைப்பதற்காக மட்டுமே தமிழை சிறப்பாக பயன்படுத்தி வருகிறார். வாழ்வதற்கே வழியற்று இருந்த கருணாநிதி இன்று தமிழும் தமிழினமும் வாழ்வதற்கு வழியே இல்லாமல் அழித்தொழித்து வருகிறார்.
இவர் தொலைக்காட்சியைத் தொடங்கி பண்பாட்டை அழித்தார், ஒரு உருவாய் அரிசியால் உழவை அழித்தார், வெளியுறவுக் கொள்கையால் ஈழத்தமிழர்களை அழித்தார், மதுவினால் மாந்த வளத்தை அழித்தார், குடும்ப அரசியலால் கொள்கையை அழித்தார், திராவிடத்தால் தமிழினத்தை கருவழித்தார், தன்னலவெறியால் அறத்தை அழித்தார், பணத்தினால் வாக்குரிமையின் வலிமையை அழித்தார், இலவயத்திட்டங்களால் தன்னம்பிக்கையை அழித்தார், விலைகட்டுப்பாட்டையும் அழித்தார். இவ்வாறு அழித்தல் அரசராக நாளும் புகழ்பெற்று வருகிறார்.
தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளி அளவிலும் தமிழ்மொழி முழுமையான பயிற்றுமொழியாக இல்லாமல், ஒரு மொழிப் பாடமாகவும் இல்லாமல் பிச்சை கேட்கும் நிலையில் இருந்தது. கடுமையான போராட்டங்களின் விளைவாக ஆங்கிலப் பள்ளிகளில் மொழிப்பாடம் என்னும் பிச்சை போடப்பட்டுள்ளது. இருப்பினும் ஆங்கிலவழிப் பள்ளியில் தமிழில் பேசினால் சாவுத்தண்டனை வழங்குவதற்கு வாய்ப்பு இன்னும் வளமாகவே உள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாக தமிழை எழுதவும், பேசவும் தெரியாத தலைமுறையினரை ஆங்கிலவழிக் கடைகள் திராவிட ஆட்சிகளின் துணையுடன் செய்து வந்துள்ளன.
அரசுப்பள்ளி ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தங்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் பயில வைப்பதேயில்லை. இப்படிப்பட்ட நல்லவர்களால் தமிழ் எப்படி வாழும்? மெக்காலே என்பவரின் அடிமைமுறைக் கல்வியால் தமிழ்வழிக் கல்வி உயிர்ப்பு அடைவதற்கு வாய்ப்பே இல்லை. அவரின் கல்விமுறை அறிவுழைப்பிற்கும் உடலுழைப்பிற்கும் பகைமுரண்களையும் சுரண்டல்களையும் நீடிக்க வைப்பதற்கு மட்டுமே பயன்படும். அறிவுழைப்பும் உடலுழைப்பும் கலந்த கல்விமுறையே மாந்தகுலத்தை பொதுமைப்படுத்தும். அறத்தின் ஆட்சியை நிறுவி நிலைபெறச் செய்யும்.
ஆங்கிலவழிக் கல்வியின் மூலம் உழைப்பாளர்களை மிக நுட்பமாக சுரண்டவும், ஒடுக்கவும், வேண்டியே நன்கு பயிற்றுவிக்கப்படுகின்றனர். இதன்மூலம் நாம் பெற்றெடுத்து வளர்க்கும் பிள்ளைகளே அறத்திற்கும் நமக்கும் எதிராக செயல்படுவர். இவர்களை நாம் விரும்பினாலும் தடுக்க முடியாது.
ஆட்சிமொழிச் சட்டம் அரசு அலுவலகங்களில் மட்டும் படங்காட்டுகிற வேலைகளை செய்து வருகிறது. இருமொழிக் கொள்கையால் உயர்மட்ட அலுவலர் பொறுப்புகளில் தமிழ் எழுத, படிக்கத் தெரியாதவர்களும் பணியில் அமர முடிகிறது. நடுவணரசு அலுவலகங்களில் தமிழுக்கு மதிப்பே கிடையாது. தனியார் கடைகளில், நிறுவனங்களில் தமிழ்ப்பெயர்ப் பலகைகளை தொல்லியல் ஆய்வு செய்துதான் தேடிப்பார்க்க வேண்டும். தமிழ் ஊர்ப்பெயர்கள் பெரும்பாலும் சிதைக்கப்பட்டுள்ளன. அண்மைக்காலங்களில் குழந்தைகட்கு பெற்றோர்கள் தமிழ்ப் பெயர்களை வைப்பதேயில்லை.
வழக்கு மன்றங்கள் மூலம் வளமான வருவாயை எடுப்பதற்கு ஆங்கிலத்தை வணிகமொழியாக வைத்துள்ளனர். ஆங்கிலம் தெரியாதவர்கள் அழிவை காண்பதுதான் மீதமாகும். வழக்குகள் தாய்மொழியில் நடைபெற்றால் வழக்குமன்றம், பாதிக்கப்பட்டவர்களின் உரிமைக்கான போராட்டக்களமாக மாறிவிடும் எனும் அச்சத்தில் ஆளும் பிரிவினர் ஆங்கிலத்தை ஒடுக்குமுறை மொழியாகப் பயன்படுத்துகின்றனர்.
கால்கோள் எடுத்து கருவறை தீரும் வரை கோயிலை உருவாக்கிய தமிழர்கள் தன்னையும் தமிழையும் மதியாது பார்ப்பனர்களை நெறியாளர்களாக அமர்த்தி அழகு பார்த்துக்கொண்டு சமற்கிருத ஒலிப்பில் மயங்கி தம்மின் சாவிற்குப்பிறகும் சமற்கிருதத்திற்கு வாழ்வளிக்கின்றனர்.
ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை, காதலர் விழா, காமக்களியாட்டம், அழகிப்போட்டி, பாலியல் தொழில்முறை, குடும்பத்துடன் குடித்து கூத்தடித்தல், பிறந்தநாள் கொண்டாட்டங்கள், இயற்கையை அழிப்பதில் மகிழ்தல், வேதிவகை வேளாண்மையால் மண்ணையும், உடலையும் கெடுத்துக்கொண்டு வாழ்நாள் முழுவதும் நோயர்களாக இருத்தல், ஆங்கிலமருத்துவ அறுவைத் தொழிற்சாலைகளுக்கு உடல்களை பெருமளவு வழங்குதல் போன்றவை ஆங்கில வழிக் கல்வியாலும், ஆங்கிலேயர்வழி சிந்தனையாலும் வளர்ந்தனவையாகும். தமிழை இவ்வாறெல்லாம் திட்டமிட்டு அழித்தொழித்துவிட்டு அதற்கு நீத்தார் வழிபாடு செய்வது போன்று உலகத்தமிழ் செம்மொழி மாநாடு என்று கூத்தாட முனைவது எவ்வகையில் அறமாகும்?
தமிழ்நாட்டில் தமிழ்தான் கல்விமொழி, ஆட்சி மொழி, வழிபாட்டு மொழி, அறமொழி என்றும், தமிழக அரசுப்பணிகள் தமிழ்வழியில் பயின்றவர்கட்கு மட்டுமே வழங்க இயலும், தனியார் நிறுவனங்களும் தமிழை செயலாண்மை மொழியாக்க வேண்டும் என சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்திய பின்பு செம்மொழி மாநாடு நடத்தினால் அது தமிழுக்கும் தமிழர்க்கும் பெருமையாக அமையும். மாறாக கருணாநிதி தான் செய்கின்ற தவறுகளை எல்லாம் மறைப்பதற்கு தமிழக அரசின் பலநூறு கோடிகளை செலவழித்து செம்மொழி மாநாடு எனும் கூத்தை நடத்த இருப்பது தேவையா?
அறிவியல் வளர்ச்சியின் பெயரால் நிலவுலகை அளவற்று நாம் சீரழித்து வருகையில் அதை சமன்மை செய்யும் பொருட்டு இயற்கை சீற்றமெடுத்து தீர்வு காண்பது போன்று கருணாநிதி அவர்கள் எவ்வளவு கரவாக அழித்தொழிப்பு வேலைகளை செய்து மறைத்து வந்தாலும் மானமுள்ள தமிழர்கள் சரியான தீர்ப்பை வழங்குவார்கள் என்பது திண்ணம். | |
| | | Fathima
Posts : 999 Points : 1988 Join date : 2010-03-10 Age : 39 Location : srilanka
| Subject: தமிழர் மரபு எது? Sat Apr 10, 2010 7:19 am | |
| தமிழர் மரபு எது? என்பது பற்றிய செய்திகளை அவரவர் விருப்பத்திற்கேற்ப முடிவு செய்யப்படுகிறது. பின்னோக்கி செல்லச்செல்ல தமிழரின் வாழ்வு சிறப்பானதாகத் தெரிகிறது என்று சொல்லி கதைக்கின்ற ஒரு கூட்டமும் தமிழ்நாட்டில் உலவி வருகின்றது. சங்க காலம் என்பது பொற்காலம். சாதி, சமயங்கள் அற்ற, தமிழர்கள் ஒருவருக்கொருவர் அன்பு பூண்டு அகம் மகிழ்ந்திருந்த காலம் என்றெல்லாம் சங்கப் புகழ் பாடி அதுவே சிறப்புடையது என்று கூறுகின்றவர்கள் உள்ளனர். சங்க காலத்திற்கு மீண்டும் திரும்புவோம் அல்லது சங்க காலம் மீண்டும் திரும்ப வேண்டும் என்பதே தம்முடைய குறிக்கோளாக கொண்டு இயங்குகின்ற பல தமிழ் இயக்கங்களும் தமிழ்நாட்டில் உள்ளன. வெளிப்படையாக இவ்வாறு சொல்லாவிட்டாலும், இதுவே இவர்களுடைய உள்ளக்கிடக்கை என்பது இவர்களுடைய பத்திரிக்கைகளில், மாத இதழ்களில், பேச்சுகளில் இருந்து நாம் அறியக்கூடிய செய்தியாகும்.
சங்க காலம் உண்மையில் அவ்வாறுதான் இருந்ததா என்பதைக் குறித்த ஆய்வுகளில் நாம் தற்சமயம் இறங்கப் போவதில்லை. ஏனெனில், சென்றது இனி மீளாது மூடர்காள் என்று பாரதியார் பாடியது இவர்களை குறித்துதான் என்று எண்ணத் தோன்றுகிறது. பின்னோக்கி என்றால் எவ்வளவு பின்னோக்கி? ஏன் சங்க காலத்துடன் நிற்க வேண்டும்? பெருங்கற்காலம், புதிய கற்காலம், பழைய கற்காலம் என்று மேலும் பின்னோக்கி சென்று கொண்டேயிருந்தால், இன்னும் சிறப்பாக இருக்கும். எனவே பழமைவாதம் என்பது மனிதர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதற்கான கண்டுபிடித்த கற்பனைவாதமாகும். பழம்பெருமை பேசி கூட்டத்தைக் கூட்டி புதிய சமுதாயத்தை அமைத்து விடுவேன் என்று கூறுவது கையாலகதவன், காலால் கற்கோட்டை கட்ட முயல்வதற்கு ஒப்பாகும்.
பெரியார் அவர்கள் கேட்டது போல் பழமை என்று கூறுவதில் என்ன பெருமை இருக்கிறது? எதிலுமே புதுமை என்பதுதானே சிறப்பு? புதிய கருவிகள் புதிய தொழில்நுட்பம், புதிய துணிகள், புதிய இலக்கியங்கள் என்று நவநவமாய் அணி சேர்ப்பதுதானே தமிழுக்குப் பெருமை. அதைவிடுத்து சங்க காலத்தில் தமிழன் அப்படி இருந்தான், இமயம் வரை சென்றான், ஈழம் வரை வெற்றி கொண்டான் என்றெல்லாம் பழங்கதை பேசுவதனால் பயன் என்ன விளையப்போகிறது? ஏற்கனவே தமிழன் சிந்தைக் குறைவாகவும், செயல்திறன் அதைவிடக் குறைவாகவும் ஆனால் உணர்ச்சிகள் மட்டும் மிக்க நிரம்ப பெற்றவனாகவும் காணப்படுகின்றான். எந்த ஒரு செய்தியையும், ஆராய்ந்து அறியாமல் சிந்தித்து முடிவு செய்யாமல், வெறும் உணர்ச்சிகளை கொண்டே திட்டங்களை வகுத்து செயல்படுத்தி, போரிட்டு வெற்றி பெறலாம் என்பது இயலாத காரியம் என்பதை அன்று முதல் இன்று வரை உள்ள நிகழ்வுகள் நிருபித்துக் கொண்டுதானே இருக்கிறது.
மேலும், தமிழர் மரபு எதன் வழிப்பட்டது? தமிழ்நாட்டின் நிலத்தையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பிரித்துப் போட்ட தொல்காப்பியன் வழியா? அல்லது "யாதும், ஊரே யாவரும் கேளிர்" என்று உலக ஒருமையைப் பாடிய கணியன் பூங்குன்றன் வழியா? நிலத்தை பிளவுப்படுத்தியது அல்லாமல் ஒவ்வொன்றிற்கும் தனியாக முதற்பொருள், கருப்பொருள் என்று தனித்தனியாகப் பிரித்து அவை ஒன்றுடன் ஒன்று இணையக்கூடாது என்ற இலக்கண விதியையும் வகுத்த தொல்காப்பியன் வழிப்படி என்றால் தமிழருடைய மரபில் சிறப்பு என்ன இருக்கிறது? உலகின் எந்த நாட்டிலாவது நிலத்தை இவ்வாறு பிரித்து வைத்திருக்கிறார்களா? இவ்வாறு பிரித்து வைத்ததையே தொல்காப்பியத்தின் சிறப்பு, தமிழரின் சிறப்பு என்று தமிழறிஞர்களும், சான்றோர்களும் பெருமை கொள்வதை நினைத்தால் அழுவதா? சிரிப்பதா?. நிலத்தைப் பிரித்ததுடன் இல்லாமல், மக்களையும் நால்வகையாகப் பிரித்து "ஓதலும், தூதும் உயர்ந்தோர் மேன," வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி, வைசியன் பெறுமே வணிக வாழ்க்கை, நூலே கரகம் முக்கோல் மனையே ஆயும்காலை அந்தணர்க்குரிய என்றெல்லாம் மக்களின் வாழ்க்கையையே நான்காகக் கூறுபோட்டு அந்தணர்க்கும் அரசர்க்கும் கல்வியையும், வணிகர்களுக்கு வியாபாரத்தையும் வேளாண் மக்களுக்கு உழுவதைத் தவிர வேறு தொழில் இல்லை என்றும் வாழ்விற்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் வழியே தமிழர் மரபு என்றால் அந்த மரபின் விளைவுதானே இன்றைய சாதிகளும், பிளவுகளும். அவ்வறாயின் அந்த மரபை பேசுவதிலும், பாராட்டுவதிலும் என்ன பெருமை இருக்கிறது?
பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் மற்றதன் சிறப்பொக்கும் சீர்த்த இடத்து என்று வாழ்க்கைக்கு வழி சொன்ன வள்ளுவர் நெறியாவது ஒப்புக் கொள்ளக் கூடியதாகும். இனி, வள்ளுவரும், தொல்காப்பியரும் தமிழரின் இரு கண்கள் போன்றவர்கள் என்று கூறுவது பொருந்தாக் கூற்றாகும். சாணியும், சவ்வாதும் ஒன்றாக முடியுமா? எனவே தமிழர் மரபு எது என்பதை முடிவு செய்து கொண்ட பின்னரே அந்த மரபினை கைக்கொள்வதா வேண்டாமா என்பதை சிந்தித்துப் பார்க்கவே இயலும். எவ்வாறாயினும், கடந்த காலத்தை நிகழ் காலமாக்க எதிர்காலத்திற்கு வழிகாட்டியாக்க எவராலும் முடியாது- அவ்வாறு செய்ய முயற்சிப்பதும் சரியன்று.
இதற்கு மாறாக, சிலர் தமிழ் தேசிய இயக்கங்கள் தமிழர் மரபை சிறப்புடைத்து அந்த மரபினை மேலைநாட்டு அறிவியல் செய்திகள் அழித்துவிட்டன. ஆங்கில மருத்துவம் அதைப்போன்றே தமிழர் மரபினை அழித்துக் கொண்டிருக்கிறது என்றெல்லாம் கதையாய், கற்பனையாய் நிழல் யுத்தம் செய்து கொண்டிருக்கின்றனர். தமிழ் தேசியர்கள் மிகவும் விதந்து பாராட்டுகின்ற குறுந்தொகை பாடல் ஒன்றை ஒரு எடுத்துக்காட்டுக்கு காண்போம்.
156. குறிஞ்சி
பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே!
செம் பூ முருக்கின் நல் நார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண்டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே!
எழுதாக் கற்பின் நின் சொலுள்ளும்
பிறிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ! மயலோ இதுவே
குறுந்தொகைப் பாடல் 156ல் இந்தச் செய்தி காணப்படுகிறது. அகநானூற்றுத் தலைவன் தன்னுடைய காதலியைப் பிரிந்து மிக்க துயரில் இருக்கிறான். தலைவியைக் காண முடியவில்லையே, அவளோடு சேர முடியவில்லையே, அவளைப் புணரமுடியவில்லையே என்ற மீள முடியாத துயரத்தில் ஆழ்ந்து கிடக்கும் இந்தத் தங்கத்தமிழ்த் தலைவனை அவனுடைய பார்ப்பன நண்பன் (பாங்கன்) தேற்றுகிறான். "தலைவனே நீ தலைவியை மறந்து விட்டு எங்களுடைய எழுதாத கற்பாகிய வேதத்தை சற்று படித்துப் பார். அதிலுள்ள உண்மைகளை விளங்கிக் கொள். உனக்கு சற்று மனஆறுதலாக இருக்கும்" என்று தேற்றுகிறான். அதற்கு தமிழ்த்தலைவன் அளிக்கின்ற பதிலாக, இந்தக் குறுந்தொகைப் பாடல் வருகிறது. அதன் பொருள் "பார்ப்பன மகனே, பார்ப்பன மகனே செம்பூ முருங்க மரத்தின் தடியில் செய்த கமண்டலத்தை உடைய, நோன்பிருந்து உண்ணும் வழக்கமுடைய பார்ப்பன மகனே எழுத்து வடிவம் இல்லாத வேதத்தில் உள்ள இனிய உரைகளில் பிரிந்து சென்ற தலைவன் தலைவியை மீண்டும் புணரச் செய்யும் மருந்து உள்ளதா? அப்படியிருந்தால், அதைப்பற்றிப் பேசு இல்லாவிட்டால், நீ முயற்சி செய்வதில் பயனில்லை."
இந்தப் பதில் எப்படி இருக்கிறது? தமிழருடைய நண்பனாக நடிக்கின்ற பார்ப்பன மகன் அவனை துயரத்திலிருந்து மீட்பதற்காக சொல்கின்ற வார்த்தையைக்கூட காது கொடுத்துக் கேளாமல், தலைவியைப் புணர்வதிலேயே கண்ணும்கருத்துமாக இருக்கின்ற தமிழ்த்தலைவனின் செய்கை போற்றுதலுக்குரியதா? அதுதான் தமிழர் மரபா? இந்த வழியைத்தான் மரபெனப் போற்றி தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பழக்கப்படுத்த தமிழ்த் தேசியர்கள் பெருமுயற்சி செய்து வருகிறார்களா? தமிழ்த் தலைமகன் நற்குணம் படைத்தவனாக இருந்திருந்தால் அவனுடைய பதில் எவ்வாறு இருந்திருத்தல் வேண்டும்? "பார்ப்பன மகனே, என்னுடைய மன ஆறுதலுக்காக உம்முடைய வேதத்தை படிக்க வேண்டிய தேவை எனக்கில்லை. எம்முடைய மொழியிலேயே உள்ள சிறந்த நூல்களைப் படித்து மனஆறுதலைப் பெறுவேன்" என்றவாறு பதில் உரைத்திலிருந்தால் அந்தத் தமிழ் மகனை சிறந்த தலைவன் என்று நாம் பாராட்டலாம். ஆனால் போதையில் மயங்கிய அந்தத் தலைவனோ, தலைவியைப் புணரச்செய்யும் மருந்தை கண்டுகொள்வதிலேயே குறியாய் இருக்கின்றான். கந்தனுக்கு புத்தி ............ என்ற ஒரு சொல் வழக்கு இந்தக் குறுந்தொகை பாட்டிலிருந்துதான் தோன்றியது போல.
இப்பாடலின் முடிவு என்னவாக இருந்திருக்கும்? தலைவன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கும்போது பாங்கனுக்கு தோன்றும் வழி என்ன? தலைவனை பரத்தையுடன், வேறு விலைமகளிருடன் கூட்டுவித்தல்தான். அதுதான் சங்க காலம் முழுவதும் நடந்திருக்கிறது. தலைவனின் சுகத்திற்கென்றே ஒரு பெரும் மகளிர் கூட்டம் பரத்தையர் இற்பரத்தையர் காமக்கிழத்தியர், விலைமகளிர் என்ற பெயரில் தனியாக வைக்கப்பட்டு உடலை விற்பதே அவர்களுடைய முழு நேரத் தொழிலாக வைக்கப்பட்டது. இதை ஆதரித்து தொல்காப்பியரும், பரத்தை வாயில் பிரிவிற்கு நால்வகை பிரிவும் உரியதே என்று நூற்பா இயற்றிவிட்டு சென்று விட்டார். பரத்தமையை எதிர்த்து, கண்டித்து, மக்களுக்கு அறநெறியைக் காட்டிய புலவர் திருவள்ளுவரைத் தவிர, வேறு யாரையாவது ஒருவரை சுட்டிக் காட்ட இயலுமா?
இத்தகைய தமிழர் மரபு சீர்குலைந்து போய்விட்டதே, என்பது தான் பழமைவாதிகளின் கவலையாகும். டாஸ்மாக் போதையைப் போலவே தமிழ் போதையும், அறிவை மழுங்க அடிப்பது. தமிழ் என்னும் தேனை நாக்கில் தடவிவிட்டு தமிழனது தொண்டைக்குள் எதைத் திணித்தாலும், அவன் விழுங்கிக் கொள்வான், ஏற்றுக் கொள்வான், சிந்தித்து செயல்பட மாட்டான் என்ற உண்மையை அரசியல் அறிஞர்கள் அறிந்துதானே இருக்கிறார்கள். ஒரு அரை நூற்றாண்டு காலமாக, அதை செயல்படுத்தி தமிழனை முக்கால் நிர்வாணமாக மாற்றிவிட்டனர். மீதியிருக்கிற இடுப்புத் துணியையும் பிடுங்கிக் கொள்வதற்காகவே மீண்டும் தமிழ் போதையை தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஏற்றுவதற்கு இடையறாது முயற்சி செய்வதை மண்ணுக்கேற்ற மார்க்சியர்களும் தமிழ்த் தேசியர்களும் செய்யலாமா?
சித்த மருத்துவத்தில் சிறப்புடைய செய்திகள் இருக்கின்றன என்பது தமிழ் தேசியர்களின் வாதமாகும். இருக்கலாம். அதை அறிவியல் அடித்தளத்தில் நிறுத்தி உலக முழுமைக்கும் நிருபித்து உலக மக்கள் அனைவரும் பயன்படும்படி செய்ய முயல்வது அறிவார் செயலாகும். அதை விடுத்து நானோ தொழில்நுட்பம் 4000 ஆண்டுகளுக்கு முன்பே சித்தர் மருத்துவத்தில் காணப்படுகிறது என்று கதை அளப்பதும், இதை முதலில் போகர் அறிமுகம் செய்தார், மேலும், போகர் நீரிலும், வானிலும் செல்லும் விமான நுட்பமுறையை 4000 ஆண்டுகளுக்கு முன்பே, சீனர்களுக்கு செயல்படுத்திக் காட்டினார் என்று சான்றுகள் ஏதுவுமின்றி பேசுவதும், எழுதுவதும் சித்த மருத்துவத்தில் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் விதமாகவே அமைகின்றது. 4000 ஆண்டுகளுக்கு முன்னரே போகர் என்ற சித்தர் நீரிலும், வானிலும் சென்ற விமானத்தை கண்டுபிடித்திருந்தால், அத்தொழில் நுட்பம் பின்னர் என்னவாயிற்று? அவ்வளவு சிறப்புடைய சித்த மருத்துவத்தால் இன்றைக்குள்ள நோய்கள் எதனையும் தீர்க்க முடியாமல் போனது ஏன் என்ற கேள்விகளுக்கு விடையே கிடைப்பதில்லை. ரொம்பவும் அழுத்திக் கேட்டால், அந்த தொழில்நுட்பத்தையெல்லாம் ஆரியர்கள் திருடிக்கொண்டார்கள், அவற்றை மறை பொருளாக தங்களுடைய வடமொழியில் (சமஸ்கிருதத்தில்) எழுதி வைத்துக் கொண்டு தமிழ்ச்சுவடிகளை முற்றிலுமாக அழித்து விட்டார்கள் என்று பதில் வரும்.
மருத்துவத்திற்கு என்று இல்லை, பொறியியல், கட்டிடக்கலை, இசை, ஆகிய எதைப்பற்றியாவது பழந்தமிழ் நூல் ஏன் ஒன்றுமில்லை? என்று கேள்வி கேட்டால் , அதற்கு இதுவே பதிலாக சொல்லப்படும். இந்த பதிலைக் கேட்டுக்கேட்டு நமது காதுகள் மரத்துவிட்டன. மனம் சலித்துவிட்டது. இத்தகைய அறிவுத்திருட்டினை செய்வதற்கு ஒரு சில நூற்றாண்டுகளாவது ஆயிருக்கும். அதுவரை தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சான்றோர்கள், அகநானூற்று, புறநானூற்று தமிழ்த்தலைவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்? தங்களுடைய நீண்ட குடுமிக்கு நறுநெய் தடவி முடிந்து, மீசையை முறுக்கிக் கொண்டு, தலைவியைப் புணர்வது எப்படி சிந்தித்துக் கொண்டிருந்தனர். இத்தகைய தமிழர்களை சிறந்த மரபு வழிகாட்டிகள் என்று எவ்வித நாணமுமின்றி தமிழ் தேசியர்களால் எழுதப்படுவதை எவ்வாறு சகித்துக் கொள்ள முடியும்?
இவ்வாறே, "தாம்பரம் நெஞ்சக நோய் மருத்துவமனையில் ஆங்கில மருத்துவப் பேராசிரியர் ........... (பெயர் சில காரணங்களுக்காக தவிர்க்கப்பட்டுள்ளது) அவர்கள் தலைமையில் எய்ட்ஸ் நோய்க்கு 1992/1995 ஆண்டுகளில் சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்த ரசகந்து மெழுகு, நெல்லிக்காய் லேகியம், அமுக்கரா சுரணம் ஆகிய மாத்திரைகள் பயன்படுத்தப்பட்டு உலகு தழுவிய மருத்துவ மாநாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதை ஒரு தமிழ்த் தேசியர் சித்த மருத்துவத்தில் சிறப்பாக எழுதிக் காட்டுகிறார். சித்தமருத்துவத்தின் சிறப்பினை வெளி உலகத்திற்கு கொண்டு செல்வதற்கும் ஒரு ஆங்கில மருத்துவரே தேவைப்பட்டிருக்கிறார். ஆனாலும், மேற்கொண்ட செய்தியில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பதை நாம் உறுதியாகக் கூற இயலாது. 1992-95களில் எய்ட்ஸ் நோய் மருந்தாக கண்டுபிடிக்கப்பட்டவை ஏன் இன்றைக்கு பயன்பாட்டில் இல்லை. அவை எத்தனை பேருக்கு பயன்படுத்தப்பட்டன? எவ்வளவு பேரின் உடம்பிலிருந்து எய்ட்ஸ் நோய்க்கிருமிகள் மறைந்தன? என்பதைப் போன்ற சான்றுகள் ஏதுமில்லாமல் இந்த மருந்தும் வழக்கொழிந்து போய்விட்டது போலும். மிகவும் அழுத்திக் கேட்டால் ஆங்கில மருந்துக் கம்பெனிகள் அரசிற்கு லஞ்சம் கொடுத்து இந்த மருந்தினை மறைத்து விட்டார்கள் என்று பதில் வரும். இந்த பதில்களைக் கொண்டே எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்கள். | |
| | | Sponsored content
| Subject: Re: செந்தமிழும் சிறு ஆய்வும் | |
| |
| | | | செந்தமிழும் சிறு ஆய்வும் | |
|
Similar topics | |
|
| Permissions in this forum: | You cannot reply to topics in this forum
| |
| |
| |