BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகடந்த பத்தாண்டுகளில் தமிழ் நாவல்களின் போக்குகள் கடந்து செல்ல வேண்டிய தூரம் Button10

 

 கடந்த பத்தாண்டுகளில் தமிழ் நாவல்களின் போக்குகள் கடந்து செல்ல வேண்டிய தூரம்

Go down 
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

கடந்த பத்தாண்டுகளில் தமிழ் நாவல்களின் போக்குகள் கடந்து செல்ல வேண்டிய தூரம் Empty
PostSubject: கடந்த பத்தாண்டுகளில் தமிழ் நாவல்களின் போக்குகள் கடந்து செல்ல வேண்டிய தூரம்   கடந்த பத்தாண்டுகளில் தமிழ் நாவல்களின் போக்குகள் கடந்து செல்ல வேண்டிய தூரம் Icon_minitimeSat Apr 10, 2010 1:04 pm

இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகள் சமூகரீதியில் புதிய போக்குகளை எதிர்கொண்ட காலம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையூட்டிய அரசியல் தத்துவங்களும் ஆறுதலளித்த மதங்களும் தம் மேலாதிக்கத்தை இழந்திருந்த, எதிர்காலம் குறித்த அவநம்பிக்கையும் இருத்தல் குறித்த கசப்பும் நிரம்பி வழிந்த தருணம் அது. உலக வங்கி, ஐ.எம்.எஃப் போன்ற சர்வதேச நிதிநிறுவனங்களின் மூலதனக் கொடுங்கோன்மை, ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் ஆழமாக ஊடுருவியது. பல்வேறு நாடுகளின் இறையாண்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டது. மனித ஆக்கங்கள் எல்லாமே சந்தைக்கானவையாக மாற்றப்பட்டன. நுகர்பொருள் பண்பாடு தனிமனித வாழ்வின் மீது மூர்க்கமாகத் திணிக்கப்பட்டது. இச்சூழல் கலை இலக்கியத் தளத்திலும் வெவ்வேறு வழிகளில் பிரதிபலித்தது.

தமிழில் காத்திரமான நவீன இலக்கியம் சிறுபத்திரிகை சார்ந்த தளத்திலிருந்துதான் கடந்த ஐம்பதாண்டுகளாகப் பிரசுரம்பெற்று வருகின்றது. காலச்சுவடு, உயிர்மை, தீராநதி, அம்ருதா, உயிர் எழுத்து முதலான தீவிர இதழ்களின் தொடர்ந்த இயக்கம் வாசகப் பரப்பை விரிவுபடுத்தியிருக்கிறது. இணைய இதழ்கள், வலைப்பூக்கள் ஆகியன உலகமெங்கும் வாழும் தமிழர்களிடையே இலக்கியரீதியில் வலுவான தொடர்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஈழப் போர் காரணமாக உலகமெங்கும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களும் தம் பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறார்கள். நவீனத் தமிழிலக்கியம் என்பது சிறுபான்மையினரான ஒரு சில குழுவினருக்கு மட்டும் உரியது என்னும் கருத்தியல் இந்தப் பத்தாண்டுகளில் மாறியிருக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் தோன்றியுள்ள பதிப்பகங்களின் எண்ணிக்கையும் விற்பனையாகியுள்ள புத்தகங்களின் எண்ணிக்கையும் மிக அதிகம். இந்தக் காலகட்டத்தில் கவிதைத் தொகுப்புகளும் நாவல்களும் அதிக அளவில் வெளியாகியுள்ளன. நாவல் என்பது குறைந்தபட்சம் நானூறு பக்கங்களுக்குக் குறையாமல் இருக்க வேண்டும், அப்போதுதான் அதற்கு இலக்கிய மதிப்புக் கிடைக்கும் என்னும் கருத்து தமிழ் கூறு நல்லுலகில் வேரூன்றியது இந்தக் கட்டத்தில்தான்.

பல்வேறுபட்ட போக்குகளையுடைய நாவல்கள் இக்காலகட்டத்தில் வெளிவந்துள்ளன. என்னால் வாசிக்க முடிந்த ஐம்பதுக்கும் கூடுதலான நாவல்களைப் பற்றி வாசகனாகவும் விமர்சகனாகவும் சில கருத்துகளை முன்வைப்பதே இக்குறிப்புகளின் நோக்கம். இதில் இடம்பெறாத சிறந்த நாவல்களும் இருக்கக்கூடும் என்பதை நான் மறுக்கவில்லை.

பன்முகத் தன்மைகளை அழித்து எல்லாவற்றையும் ஒற்றைத் தன்மையாக்கும் முயற்சி எல்லா மட்டங்களிலும் துரிதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதுவரை ஏதோ ஓர் அடையாளத்துடன் தன் இருப்பைத் தக்கவைத்துக்கொண்டிருந்த மக்கள்திரள் அதை இழந்து பெரும் குழப்பத்தை எதிர்கொண்டுள்ளது. பல நூற்றாண்டுகளாகச் சமூகம் உருவாக்கித் தன் வசம் வைத்திருந்த மதிப்பீடுகளின் சிதைவு ஏற்படுத்தியுள்ள அதிர்ச்சி மீள முடியாததாய் நவீன மனிதனின்மேல் கவிந்துள்ளது. இத்தகைய சூழலில் இலக்கியப் படைப்பு கிளர்த்தும் அனுபவங்கள் முக்கியமானவை.

இந்தப் பத்தாண்டுகளில் நூற்றுக்கணக்கான நாவல்கள் தமிழில் வெளியாகியுள்ளன. ஒப்பீட்டளவில் பிற இலக்கிய வடிவங்களைவிட, நாவல்கள் பெரிதும் கவனம் பெற்றுள்ளன. அனுபவம்மிக்க நாவலாசிரியர்களுடன் முதல் நாவல் எழுதிய படைப்பாளியும் சமமாகக் களத்தில் உள்ளார்.

பின்நவீனத்துவம் தமிழ்ப் புனை கதைப் பரப்பில் புதிய போக்கை அறிமுகப்படுத்தியது. இன்று பலரும் தொடர்ச்சியறு எழுத்து முறையில் கதை சொல்வதில் முனைந்துள்ளனர். தமிழவன், கோணங்கி, எஸ். ராமகிருஷ்ணன், எம். ஜி. சுரேஷ், ரமேஷ் -பிரேம், ஜனகப்ரியா, கரிகாலன், சோ. தர்மன், பா. வெங்கடேசன், ஜீ. முருகன், சாருநிவேதிதா, யுவன் சந்திரசேகர் போன்றோர் பின் நவீனத்துவக் கதைசொல்லல் மூலம் படைத்துள்ள நாவல்கள் குறிப்பிடத்தக்கன.

எஸ். ராமகிருஷ்ணனின் நெடுங் குருதி, யாமம் ஆகிய இருநாவல்களிலும் கதைசொல்லலில் தொடர்ச்சியறு (ஸீஷீஸீ- றீவீஸீமீணீக்ஷீ) தன்மை நேர்த்தியுடன் வெளிப்பட்டுள்ளது. வேம்பலை என்னும் ஊரின் கதை, வெயிலின் கதை, பூர்வீகப் பழங்குடியினரின் கதை, தொன்மங்களின் கதை, அதியற்புதப் புனைவுகள் எனப் பல்வேறு கதையாடல்களின் ஒருங்கிணைப்பில் மூன்று தலைமுறையினரின் வாழ்க்கைப் பதிவுகள் நெடுங்குருதி யில் வெளிப்பட்டுள்ளன. நாவலின் மையம் குடும்பமும் விநோதமும்தான். புதியதான கதைகளின் வழியாக மீண்டும் மீண்டும் புதிய கதைகளை உற்பத்தி செய்யும் நாவலின் பிரதி மூலம் வாசகன் தனக்கான பிரதியை வடிவமைத்துக் கொள்ளலாம். நாவல் முழுக்கப் பல்வேறு அதிமானுட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவை யதார்த்த வாழ்க்கை குறித்த கேள்விகளை எழுப்புகின்றன. அப்பாலை உலகத்துடன் தொடர்புகொள்ள, மனித மனம் தொன்மப் புனைவுகளைக் கட்டமைக்கிறது. தொல்பழங்குடித் தமிழரின் வாழ்க்கையை மறு வாசிப்புச் செய்திட முயலும் நெடுங்குருதி நாவல் முன்னிறுத்தும் நுண் அரசியல் முக்கியமானது.

யாமம் நாவலின் மூலம் எஸ். ராம கிருஷ்ணன் சித்தரிக்கும் பல்வேறு புனைகதைகள், வரலாறு என்ற நினைவுத் தடத்தின் வழியே புதிய புனைவைக் கட்டமைக்கின்றன. ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னர், ‘மதறாஸ் பட்டணம்’ உருவான கால கட்டத்தில் வாழ்க்கை இப்படித்தான் இருந்தது என்பதாக விவரிக்கப்பட்டுள்ள கதையானது ‘கலைப் பொருள்’ஆக உருமாற்றம் அடைந்துள்ளது. ஒவ்வொரு தனிமனிதனின் மனத் தேடலும் விழைவும் நாவலில் இடம்பெற்றுள்ள பத்ரகிரி, தையல் நாயகி, திருச்சிற்றம்பலம், எலிசெபத், கிருஷ்ணப்பா போன்றோர் வழியே கசிந்துகொண்டிருக்கின்றன. வாழ்வின் மேன்மையையும் சிடுக்குகளையும் பதிவாக்கியுள்ள நாவல், இன்னொரு நிலையில் இருப்பின் அபத்தத்தை நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளது. யாமம், நெடுங்குருதி ஆகிய இருநாவல்களின் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன் கிளர்த்தும் வாசிப்பு அனுபவங்கள் தனித்துவமானவை.

பிரேம்-ரமேஷின் சொல் என் றொரு சொல் நாவலின் கதைசொல்லல், புதுவகைப்பட்ட வாசிப்பைக் கோருகின்றது. தர்க்க மற்ற, மையமற்ற, தொடர்ச்சியற்ற எழுத்தை அவர்கள் முன் வைத்துள்ளனர். காலத்தைச் சிதைத்துக் குறுக்கு நெடுக்கிலும் பயணிக்கும் கதைசொல்லலில், ‘தமிழ்’ என்னும் தொன்மத்தைக் கண்டறியும் முயற்சி அடியோட்டமாக உள்ளது. நாவலில் இடம்பெறும் நன்மொழித் தேவன் இரண்டாயிரமாண்டு தமிழ் மனோபாவத்தின் ஆதாரம். எங்கும் வியாபிக்கும் வல்லமைமிக்க நன்மொழித் தேவன் பிரதியைப் படைப்பதுடன், பிரதிக்குள் புதைந்துபோய், இறுதியில் பிரதியைவிட்டு வெளியேறுவதன் மூலம் தமிழின் அதிகபட்சச் சாத்தியங்களைக் கண்டறிந்துள்ளனர் பிரேம்-ரமேஷ். நாவலின் கதைசொல்லல் காப்பிய பாணியில் விரிவது, பிரதிமீதான ஈடுபாட்டை அதிகரிக்கிறது. பல்வேறு கதைகளின் சரடில் தொங்கிப் புதிர்வழியினுள் நுழையும் வாசகன் ஒரு நிலையில் புனைவு வெளியில் தொலைந்துபோக இடமுண்டு. நவீன உலகில் அமானுஷ்யத்தின் இடத்தையும் தமிழ்த் தொன்மத்தின் நுணுக்கத்தையும் நவீனக் கதைசொல்லல் மூலம் சித்தரிக்கும் சொல் என்றொரு சொல் பின் நவீனத்துவக் கதையாடலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

யுரேகா என்றொரு நகரம், சிலந்தி, 37 என மூன்று நாவல்களையும் நவீனமான போக்கில் வடிவமைத்திருக்கும் எம். ஜி. சுரேஷ் எல்லாவற்றின் மீதும் விமர்சனத்தைக் கட்டமைக்கும் நிலையில் யுரேகா நாவலில் ‘யுரேகா’ என்ற நகரத்தை வைத்து அரசியல் சொல்லாடலைக் கட்டமைத்துள்ளது, அந்நாவலை வேறுவகையான வாசிப்புக்கு இட்டுச்செல்கிறது. அதிகாரம் வரலாற்றின் வழியாக மக்கள் திரளுக்குள் ஊடுருவி நிகழ்த்தும் வினையைச் சுவராசியமான கதையாக்கியுள்ளார் சுரேஷ். நவீன அறிவியலையும் வாய்மொழிக் கதை மரபையும் இணைத்துப் புதிய மொழியில் அவர் விவரித்துள்ள 37 நாவல், தட்டையான மொழியில் விரிகின்றது. பூமியில் குடும்ப நிறுவனத்தில் சிக்கியிருக்கும் மனிதர்கள், லோன் கிரகத்தில் இயந்திரங்களின் ஆளுமையில் சிதிலமாயிருக்கும் மனிதர்கள் என இருவேறு தளங்களில் விரியும் நாவல் மனித இருப்பு குறித்த ஆழமான விசாரணைகளை முன்வைக்கிறது.

யுவன் சந்திரசேகரின் பகடையாட்டம், குள்ளச் சித்தன் சரித்திரம், கானல் நதி ஆகிய மூன்று நாவல்களும் பிரதியாக்கம் பற்றிய புதிய பேச்சுகளை உருவாக்குகின்றன. நினைவும் இசையும் புராணமும் புனைவும் வரலாறும் என விரியும் கதையாடலை யுவனின் பகடையாட்டம் நாவலில் காணலாம். எல்லாம் துல்லியமாக இருக்கின்றன என்னும் பிரக்ஞையின் அபத்தத்தை முன்னிறுத்தி எல்லாவிதமான சாத்தியப்பாடுகளுக்கும் இடமளிக்கும் வகையில் புனைகதைப் பரப்பை விவரித்து, வேறுதளத்துக்கு இட்டுச்செல்கின்றன யுவனின் நாவல்கள்.

தமிழவனின் வார்ஸாவில் ஒரு கடவுள், இந்தியத் தத்துவ மரபையும் தமிழரின் புராதனத் தன்மையையும் மேலைச் சிந்தனை மரபையும் ஒருங்கிணைத்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பும் வகையில் எழுதப்பட்டுள்ளது. உண்மை என்பது பல்வேறு நிலைகளில் உருவாக்கப்படுவதேயன்றி, புதிதாகக் கண்டறியப்படுவதற்கான சாத்தியப்பாடு மிகக் குறைவு என்னும் நிலையில் உண்மைக்கும் புனைவுக்குமான இடைவெளியைக் கதையாடலின் வழியாகத் தமிழவன் கண்டறிய முயன்றுள்ளார். எதிரிணைகளை மோதவிட்டு ஒழுங்கைச் சிதைத்து விவாதிக்க முயலும் கதையாடல், தன்னிலைக்கும் வரலாறு மற்றும் பண்பாட்டிற்குமான உறவை அடையாளப்படுத்த முயன்றுள்ளது. பல்வேறு கதைகளின் தொகுப்பாக விரியும் இந்நாவலில் இதுவரை கட்டமைக்கப்பட்டுள்ள அறிதல் முறையும் உண்மையைக் கண்டறியும் முறையும் சிதிலமாகியுள்ளதைக் காண முடிகிறது.

பின்நவீனத்துவக் கதையாடலை முன்னிறுத்தும் சாருநிவேதாவின் ராஸலீலா, காமரூபக் கதைகள் ஆகிய இருநாவல்களும் பாலியல் பற்றிய மறுபேச்சுகளை உருவாக்குகின்றன. பாலியல் செயல்பாடுகளும் பாலியல் பிறழ்வுகளும் நாவலாக்கத்தில் வெளிப்படையாகப் பதிவாகியிருப்பதுதான் சாருவின் சாதனை. மற்றபடி நாவல் முழுக்க ஆண் மையவாதத்தில் கதையாடல் விரிவதனால், பிரதியின் மையமழிப்பு, அதிகாரத் தகர்ப்பு போன்ற பின் நவீனத்துவச் சொல்லாடல்களுக்கு இடமில்லை. உடல் துய்ப்பையும் மனப்பிறழ்வு சார்ந்த அழகியலையும் எமினெம் இசையில் வெளிப்படுத்திய விதம் குறித்து வியப்படையும் சாருவுக்கு, தனது நாவல்கள் குறித்து அளவுக்கதிகமான பெருமிதம் இருக்கிறது. பெருமாள் என்ற பித்தனை மையமிட்டு விரியும் கதைசொல்லலில், கதைசொல்லும் முறை அடிக்கடி மாறிக்கொண்டேயிருக்கிறது. பெண் பற்றிய சமூக விழுமியங்களைத் தகர்ப்பதற்கென அதே பாலியலைச் சித்தரிக்கும் நாவலில், அவ்வப்போது பின்நவீனத்துவ உத்திகள் விட்டேத்தியாகக் கலக்கப்படுகின்றன. அதிகார மையத்தைத் தகர்த்துப் புதிய வகைப்பட்ட சொல்லாடலை உருவாக்க விழையும் பின்நவீனத்துவக் கருத் தாடலைப் பெண்ணின் பிருஷ்டத்தைக் கடிப்பதற்கு ஏதுவாக உருமாற்றும் தந்திரத்தில் சாருவின் எழுத்து நுட்பமானது.

கரிகாலனின் நிலாவை வரைபவன் நாவல் மொழி விளையாட்டு மூலம் அதிகார மையத்தைத் தகர்க்க முயல்கிறது. மன வலியும் வதையும் துக்கமும் துரத்தும் நடப்பு வாழ்க் கையிலிருந்து பீறிடும் எக்ஸ் என்னும் கதை மாந்தரின் குறிப்புகளை வாசித்துக்காட்டும் ஸ்டெல்லா என்ற மருத்துவமனை வரவேற்பாளினியின் மூலமாகக் கதைத் தளம் விரிகின்றது. ஒரு நிலையில் மனப் பிறழ்வின் உச்சத்தில் அதீதமாக வெளிப்படும் உணர்வுகளைப் பதிவாக்குதல் மூலம் நாவல் புதிய கேள்விகளை எழுப்புகிறது.

ஜனகப்ரியாவின் சூரனைத் தேடும் ஊர் புதிய வகைப்பட்ட நாவல். பிழையூர் என்ற ஊருக்குள் வந்த சூரனை ஊரார் தேடுகின்றனர். ஒற்றைக் கண் மனிதன் எல்லோரையும் மிரட்டுகிறான். இருளை விரட்டுவதற்கான ஆராய்ச்சி ஊர்ச் சபையில் நடக்கிறது. ஊருக்குள் சாதிக் கலவரங்கள், மந்திரவாதிகள், கோடாங்கிகளின் சொற்கள் ஆதிக்கம் பெறுகின்றன. கிராமத்தை முன்னிறுத்திப் பல்வேறு தொன்மங்களையும் புனைவுகளையும் சேர்த்து நவீன உலக அரசியல் பிரதியில் வெளிப்படுகிறது. ஊருக்குள் கதை வடிவில் கோரமாகப் பல இடங்களில் வெளிப்பட்டும் மறைந்தும் இருக்கின்ற சூரனைத் தேடும் கதைப் போக்கில் பின்நவீனத்துவ அம்சம் பொதிந்துள்ளது.

மாயமாக நாவலைப் புனைந்து சொற்களின் வழியாக வெளியிடும் கோணங்கியின் பாழியும் பிதிராவும் இந்த நூற்றாண்டின் விநோதமான பிரதிகள். பின்நவீனத்துவக் கலைஞன் முன்கூட்டியே வரையறுக்கப்பட்ட விதிகளுக்கேற்பப் படைப்புகளை உருவாக்க முடியாது என்னும் நிலையில் கோணங்கியின் எழுத்து முறை ‘அலாதி’யானது. எழுத்து என்பது மொழி விளையாட்டுத்தான் என்ற நிலையில் கோணங்கி, அளவுக்கதிகமான தொன்மங்களின் வழியே கதைக்குள் பயணிக்க முயல்கிறார். அவருடைய நாவல்களில் உள்ள செயற்கையான மொழிநடையும் இயல்புக்கு மாறான விவரணைகளும் வாசகனைப் பிரதியைவிட்டே வெளியேற்றிவிட்டன. இழந்தது குறித்த ஏக்கத்துடன் நிகண்டுகள், பேரகராதிகள், செவ்விலக்கியம் போன்றவற்றால் அளவுக்கதிகமான நீண்ட வாக்கியங்களுடன் கோணங்கி சொல்லவருவது, குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

பாழியில் சொல்லப்படும் கவித்துவம் நிரம்பிய வரிகள், கலங்கிய நிலையில் அர்த்தத்தை இழந்து தவிக்கின்றன. நகரமயமாதல், உலகமயமாக்கல், சுற்றுப்புறச் சூழலின் நாசம் என அண்மையில் தமிழர் வாழ்க்கையைப் பிடித்துள்ள நாசகாரச் சக்திகளின் அதிகாரத்திற்கெதிராக இழந்துபோன தமிழ் அடையாளத்தை மீட்டுருவாக்க முயல்கிறார் கோணங்கி. திணை சார்ந்த தமிழர் நிலவெளியும் எல்லாவற்றையும் மர்மப்படுத்த முயலும் விநோதக் காட்சிகளும் உடல்களைக் குறித்த கேள்விகளை எழுப்புகின்றன. சம கால நெருக்கடிகளைத் தனது நாவல்களில் ஸ்தூலமாக வெளிப்படுத்தாத கோணங்கிக்கு அறிவியல் தொழில் நுட்பம் குறித்த எதிர்வினை இருக்கிறது. மார்க்சியம் குறித்த, இழந்து போன வளமான நிலம் குறித்த ஆதங்கமும் உடல்கள்மீதான வதையும் வெவ்வேறு வடிவங்களில் அவருடைய நாவல்களில் வெளிப்பட்டுள்ளன. வெவ்வேறு காட்சிகள் வரலாறு என்னும் பெயரில் படிந்துள்ள மனநிலையுடன் பல்வேறு தொன்மக் கதைகளை விவரித்துக்கொண்டே போவது கோணங்கிக்கு இயல்பாக உள்ளது. யதார்த்தச் சித்தரிப்பின் ஊடே மாயப் புனைவு திடீரென உரசிப்போனால், வாசகனின் மனம் திடுக்கிடுவதுடன் தனக்கான பிரதியை உருவாக்க விழையும். ஆனால் கோணங்கியின் நாவல்களில் வெளிப்படும் கதைசொல்லல் வெறும் பிரமிப்பை மட்டும் தருகின் றது. நினைவிலி மனத்துடன் நெருங்கிய தொடர்புடைய கவிதையின் தனிப்பட்ட மொழியை வைத்துப் பின்னப்பட்டுள்ள நாவல்கள், உரைநடைக்கே உரித்தான தருக்க ஒழுங்கைவிட்டுத் தனித்துள்ளன.

கோணங்கிக்குத் தமிழ் இருப்பு குறித்த மகத்தான கனவுகளும் அதியற்புதமான புனைவுகளும் இருப்பது சரியானதுதான். ஆனால் அவற்றைப் புனைகதையாக்கும்போது, அடி யாழத்தில் ஒழுங்கு இருக்க வேண்டியது அவசியம். நிகண்டுகள், செவ் விலக்கியங்களில் இருந்து உருவப்பெற்ற சொற்கள் நவீன வாசகர்களுக்கு முற்றிலும் அந்நியமானவை. வரலாறு, ராகம், ஓவியம், இசை, உலக இலக்கியம், சிற்பம், நாட்டார் வழக்கு, கனவு, தொன்மம் எனப் பல்வேறு விஷயங்களைப் புனைகதை வடிவத்துக்குள் திணிக்கும்போது, வாசகன் குறித்த பார்வையைப் படைப்பாளர் கொண்டிருக்க வேண்டும். புனைகதையின் புதியதான மொழியில் மிகைப்படுத்தப்பட்ட அளவுக்கதிகமான சம்பவங்கள், வாசகனை அண்டவிடுவதில்லை. வாசிப்பின் வழியாகப் பெறும் மகிழ்வும் வாசகன் தனக்குள்ளாக உருவாக்கிக்கொள்ளும் பிரதிகளும் மறுக்கப்படுகின்ற நிலையில், கோணங்கியின் பிரமாண்டமான இருநாவல்களும் வாசக மறுப்புப் பிரதிகளாக உருமாறிவிட்டன. தமிழ்ப் பண்பாட்டுச் சூழலை மையமிட்டுக் கோணங்கியால் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட புதிய வகை நாவல் முயற்சிகள் தமக்கான வாசகர்களைத் தேடிக்கொண்டிருக்கின்றன.

பா. வெங்கடேசனின் தாண்டவ ராயன் கதை, ஜீ. முருகனின் மரம், சுதேசமித்ரனின் காக்டெயில் ஆஸ்பத்திரி, எஸ். செந்தில்குமாரின் ஜி. சௌந்தரராஜனின் கதை போன்ற நாவல்கள் புதிய வகைப்பட்ட கதை சொல்லலுக்கு எடுத்துக்காட்டுகள். இந்நாவல்களை முழுமையாக வாசித்து முடிக்காமையால் இக்கட்டுரையில் சேர்க்கவில்லை.

பின்நவீனத்துவக் கதையாடலை மொழிந்திடும் நவீன நாவலாசிரியர்களின் புனைகதைகளை வாசிக்கும் போது, அவை இன்றும் மேலை நாவலாசிரியர்களின் பிடியிலிருந்து விலகித் தனித்து இயங்கவில்லை எனத் தோன்றுகிறது. போலச் செய்தல், நகலெடுத்தல், வெறுமனே சோதனை முயற்சி என்ற நிலையில் மார்க்யூசையும் உம்பர்ட்டோ போன்றோரின் பெயர்களையும் உச்சாடனம் செய்தல் நவீனத் தமிழ்ப் புனைகதைக்கு வளம்சேர்க்கவில்லை. விளிம்பு நிலையினரைக் கருவாகக் கொண்டு புதியதான உத்திகளைக் கையாண்டுள்ள சில சோதனை நாவல்கள், தமிழ்க் கதையாடல் மரபை மாற்றியமைத்துள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லை. நகலில் இருந்து விலகி அசலான புனைகதைகள் எழுதப்படுவதற்கான அடித்தளம் வலுவடைய வேண்டியது இன்றைய தேவை.

1990களில் புதிய வகைப்பட்ட நவீன எழுத்து பற்றிய குரல் ஓங்கி ஒலித்தது. ஒற்றைத் தன்மை, பிரதியின் அதிகாரம் என்னும் நிலையில் யதார்த்த வகைப்பட்ட எழுத்துகளைப் புறக்கணிக்கும் மனநிலை சிறுபத்திரிகை உலகில் பரவலானது. யதார்த்தப் புனைகதைகளின் காலம் முடிவடைந்துவிட்டது என்ற பொதுப்புத்தி வலுவடைந்தது. இவற்றை மீறி யதார்த்தப் புனைகதைகள் இன்றளவும் தமிழில் செல்வாக்குடன் விளங்குவதற்கு வேறு தனிப்பட்ட காரணங்கள் உள்ளனவா என்பதையும் கண்டறிய வேண்டியுள்ளது.

யூமா வாசுகியின் ரத்த உறவு நாவலை வாசிக்கும்போது இது சுய வரலாறா அல்லது புனைகதையா என்ற ஐயம் தோன்றுகின்றது. குடும்பம் என்னும் நிறுவனத்திற்குள் செயல்படும் அதிகாரத்தைப் பன்முகரீதியில் யூமா வாசுகி எழுத்தாக்கியுள்ளார். மரபுவழிப்பட்ட கூட்டுக் குடும்பத்தில் பெண்கள் அடையும் வலிகளைவிட மனப் பாதிப்புகள் அதிகம். சக உயிர்கள்மீது அன்பற்ற அணுகுமுறையால், அன்றாட வாழ்வின் கொடூரங்களுக்குள் வதைபடும் மனித உயிர்கள் பற்றிய விவரணைகளுக்குள் வாசகனை இட்டுச்செல்கிறது இந்நாவல். துயரத்தின் நெருக்கடியில், அறிவை இழந்து, இவையெல்லாம் ஏன் இப்படி இருக்கின்றன என்னும் அழுத்தமான கேள்வியை எழுப்பி, வாசகனைத் திகைக்கவைத்திருப்பது, யூமா வாசுகியின் கதைசொல்லலின் மேன்மையாகும். குடும்பம் என்ற பெயரில் எல்லோர்மீதும் வன்முறையைப் பிரயோகிக்கும் சூழல், மனித உடல்களை வெறும் வதைக்கான களமாக மாற்றுகின்றது. கதைசொல்லியான யூமா வாசுகி எவ்விதமான நிலைப்பாடும் கொள்ளாமல், விவாதத்திற்குரிய நிலையில் கதையை விவரிப்பது நாவலாக்கத்தில் முக்கியமானது. வெறுமனே புனைவு என்று ஒதுக்கிவிடாமல், சம்பவங்களின் விவரிப்பு தரும் அதிர்வுகளுடன் விவரிக்கப்பட்டுள்ள ரத்த உறவு, தமிழ்க் குடும்பம் குறித்த விமர்சனத்தை எழுப்புகின்றது.

மீனவர் பின்புலத்திலிருந்து வந்த ஜோ டி குருஸ் எழுதிய ஆழி சூழ் உலகு, தமிழ்ப் புனைகதையை அடுத்த தளத்திற்கு மாற்றும் வல்லமை பெற்றது. ஒரு வட்டாரத்தில் வாழும் குறிப்பிட்ட மக்களின் வாழ்க்கைக் கதையை உற்றுநோக்கும் தன்மையும் மதிப்பீடு சார்ந்து அணுகும் திறனும் மிக்கவர் தீவிரமான நாவலைத் தர முடியும் என்னும் நம்பிக்கையை இந்நாவல் ஏற்படுத்துகின்றது. கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலப்பரப்பில் வாழும் மனித உயிர்கள் மட்டுமின்றிப் பிற உயிரினங்களும் படும் ‘பாடுகள்’ அளவற்றவை. திசைகளற்ற கடற்பரப்பில், இயற்கையுடன் முரண்பட்டு மீன்களைப் பிடித்துவரும் மீனவர்களுக்கு ‘நாளை மற்றுமொரு நாள்’தான். ஒருவிதமான சாகச மனநிலையில் இயற்கையுடன் போராடும் மீனவர்களின் சமூக வாழ்க்கை முரண்பாடுகள் மிக்கது. 1933ஆம் ஆண்டு தொடங்கி விவரிக்கப்படும் கதையில் கடற்பரப்புபோல, மக்களின் வாழ்க்கை நீரோட்டமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பதினைந்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள், நூற்றுக்கணக்கான பாத்திரங்கள் மூலம் மூன்று தலைமுறைகளாகக் கிராமத்தில் நிகழும் சம்பவங்களும் மாற்றங்களும் நாவலில் பதிவாகியுள்ளன. ஆமந்தூர் கிராமம்தான் முதன்மைக் கதாபாத்திரம். பல்வேறு கதைகளின் மூலம் ஜோடி குருஸ் வாழ்வு குறித்த பெரும் கேள்விகளை எழுப்புகிறார்.

சாதாரணமாக இருந்த ‘திருப்பூர்’ என்ற ஊரில் நவீனத் தொழில்நுட்பமும் ஏற்றுமதி சார்ந்த வணிக உற்பத்தியும் ஏற்படுத்திய பிரமாண்டமான மாற்றத்தைப் புனைகதை வாயிலாக மணல் கடிகை என்னும் பெயரில் எம். கோபால கிருஷ்ணன் பதிவாக்கியுள்ளார். திடீரெனக் கொட்டும் டாலரால் எங்கும் பொருளாதாரப் பரவல். இதனால் மனிதர்கள் என்ன ஆனார்கள் என்ற கேள்வி தோன்றுவது இயல்பு. மேல் நிலைப் பள்ளியில் பயின்று முடித்த ஐந்து பதின் பருவத்து இளைஞர்களுடன் தொடங்கும் புனைகதை வெவ்வேறு தளங்களுக்கு விரிகின்றது. ஒரே சூழலில் வளர்ந்தவர்கள்மீது நடப்பு வாழ்க்கை தந்த அனுபவங்கள், கசப்பாக நாவல் முழுக்க ஊறிக்கொண்டேயிருக்கின்றது. தனி மனித விருப்பு வெறுப்பு என்று எதுவுமில்லை. இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், நாளடைவில் மனிதர்களும் இயந்திரத்தின் பாகங்களாகும் விநோதம் நடந்தேறுகின்றது. பாரம்பரியமான மதிப்பீடுகள் அர்த்தமிழக்கின்றன. குறிப்பாகப் பெண்ணை முன்னிறுத்திச் சமூகம் உருவாக்கிய சொல்லாடல்கள் அபத்தமாகின்றன. மனித வாழ்க்கையின் வீழ்ச்சியையும் சோர்வையும் உள்ளடக்கிய நாவல் துயரத்தை முன்னிறுத்தினாலும் வாசிப்பில் வசீகரம் மிக்கது.

பல்லாண்டுகளாகக் காட்டிற்குள் வாழ்ந்துவரும் பழங்குடியினரின் வாழ்க்கை ஆதிக்கச் சக்தியினராலும் அரசு இயந்திரத்தாலும் எவ்வாறு சிதிலமாகிறது என்பதை ச. பால முருகனின் சோளகர் தொட்டி நாவல் துயரமான தொனியில் விவரித்துள்ளது. ஏற்கனவே பாரம்பரியமான வனத்தை இழந்துகொண்டிருக்கும் பூர்வீகக் குடிகள் வாழ்க்கையில் வீரப்பன் போன்றவர்களை முன்னிறுத்திக் காவல் துறை செய்யும் கொடுமைகளும் வன்முறைகளும் அளவற்றவை. சந்தனக் கடத்தல் வீரப்பனின் மரணத்திற்குப் பின்னர் வெளியாகியுள்ள இந்நாவலில் கதையோட்டம் யதார்த்தமாக உள்ளது. ஆனால் மக்கள் படும் துயரங்களை வெறுமனே நகலெடுப்பதுபோல விவரித்திருப்பது, வாசிப்பில் வேறு அனுபவமெதையும் தரவில்லை. வெற்றுத் துயரங்கள், வதைகள், சித்திரவதைகள் என்னும் நிலையிலிருந்து விலகி, அதிகாரமையத்தின் மீது விமர்சனத்தை ஏற்படுத்தாதது நாவலின் பலவீனமான அம்சம்.

கீரனூர் ஜாகிர் ராஜாவின் மீன்காரத் தெரு, கறுப்பு லெப்பை ஆகிய இருநாவல்களும் இஸ்லாமியர்களில் ஒடுக்கப்பட்டவர்கள் வாழ் நிலையைக் களமாகக் கொண்டுள்ளன. தமிழ் முஸ்லிம் சமுதாயம் என்னும் ஒற்றைச் சொல்லாடலைக் கலைத்து, அதற்குள் இயங்கும் பல்வேறு மேல் கீழ் அம்சங்களை ஜாகிர் ராஜா இந்நாவல்களில் பதிவாக்கியுள்ளார். மைய அரசியல் மயப்பட்ட முஸ்லிம் மனோபாவத்திற்கு மாற்றாகச் சூபியிசத்தில் நம்பிக்கையுடன் தொன்மங்கள் சார்ந்து வாழ்கின்ற விளிம்புநிலையினரின் வாழ்க்கை பன்முகத் தன்மையுடையதாக உள்ளது. பொருளியல் ஏற்றத்தாழ்வு காரணமாக, வசதி படைத்த முஸ்லிம்களால் பாலியல் வல்லுறவு உள்பட பல்வேறு ஒடுக்குமுறைகளுக்குள்ளாகும் அடித்தட்டு முஸ்லிம்களின் வாழ் நிலை பற்றிச் சித்தரிக்கும் நாவல்கள் தமிழுக்குப் புதிய களத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.

பெருமாள்முருகனின் கூளமாதாரி, கங்கணம் நாவல்கள், கொங்கு நாட்டுப் பகுதியில் கவுண்டர், தலித்துகள் ஆகியோரை முன்னிறுத்தி யதார்த்தமான புனைவுகளைக் கட்டமைக்கின்றன. கிராமத்தைவிட்டு விலகியிருக்கும் அத்துவானக் காட்டில் ஆடு மேய்க்கும் சக்கிலியச் சிறுவர்கள் அன்றாட உணவுக்காகச் சகித்துக்கொள்ளும் துயரங்கள் கூள மாதாரி நாவலில் பதிவாகியுள்ளன. முப்பத்தைந்து வயதானபோதும் ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் பெண்ணுடன் உடலுறவுகொள்ளத் துடிக்கும் முதிர் ஆணான மாரிமுத்துவின் கதைதான் கங்கணம் என்னும் நாவலாகியுள்ளது. காமத்தின் வாசனையை நுகரத் துடிக்கும் மாரிமுத்து பற்றிய புனைவு தமிழுக்குப் புதிது. குடும்பம், சொத்து என்னும் பெயரில் உடல்கள் வதைக்குள்ளாக்கப்படுவதைக் கங்கணம் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.

ஜெயமோகனின் ஏழாம் உலகம் அதிர்ச்சி மதிப்பீடுகளை உள்ளடக்கியது. ஊனமுற்றோரை மூலதனமாகக் கொண்டு கோவில் வாசல், திரு விழாக்களில் பிச்சையெடுக்கவைத்து, வசதியாக வாழும் மனிதர்கள் பற்றிய இந்நாவல் நம்புவ தற்குச் சிரமத்தை ஏற்படுத்துகிறது. மனித இருப்பின் கோரத்தையும் பேரவலத்தையும் யதார்த்த மொழியில் பதிவாக்கியுள்ள ஜெயமோகனின் எழுத்து, வாசக மனத்தில் பதற்றத்தை உருவாக்குகிறது. கதை விவரிப்பு மூலம் ஜெயமோகன் சித்தரிக்கும் நம்பகத்தன்மையானது யதார்த்தக் கதைசொல்லலின் ஆகப் பெரிய பலம். காடு நாவலில் காட்டை முன்வைத்து ஜெயமோகன் விவரிக்கும் புனைகதை ஆழமான அனுபவங்களுக்கு இட்டுச்செல்லும் தன்மையுடையது. இயற்கையின் அங்கமான மனிதன், தனது இருப்பை மறந்து, பூர்வீக நிலமான காடு, வன உயிரினங்களைப் புறக்கணிக்கும் நிலையில், எதிர்கொள்ளும் அனுபவங்கள் முக்கியமானவை. சமுதாய வாழ்க்கைபோலவே காட்டிற்குள்ளும் தொடரும் வாழ்க்கை தனித்தன்மை வாய்ந்தது.

தமிழ் மதிப்பீடுகளின் சரிவை வா. மு. கோமுவின் கள்ளி நாவல் அழுத்தமாகச் சித்தரித்துள்ளது. சக்கிலியர்-கவுண்டர் என விரியும் நாவலின் குவிமையம் பாலியல் பற்றிய வெளிப்படையான பேச்சுகளை முன்வைக்கிறது. உடல் வேட்கையைத் தீர்த்துக்கொள்வதற்காக ஆணும் பெண்ணும் படுகின்ற பாடுகளைக் நுட்பமாகக் கோமு கலைத்துப்போடுகிறார். பாலியலை முன்னிறுத்தித் தமிழ்ச் சூழலைக் கேள்விக்குள்ளாக்கும் கோமுவின் எழுத்து பண்பாட்டிற்கு விடப்பட்ட சவால். திலகவதியின் கல் மரம், சுப்ரபாரதி மணியனின் ஓடும் நதி, எஸ். ராமகிருஷ்ணனின் உறுபசி, நாகரத்தினம் கிருஷ்ணாவின் நீலக் கடல், க. பஞ்சாங்கத்தின் ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம் போன்ற நாவல்கள் யதார்த்தத் தளத்தில் குறிப்பிடத்தக்கவை.

பிறப்பால் தலித்துகளாக உள்ள கண்மணி குணசேகரன், இமையம், சோ. தர்மன், ஸ்ரீதர கணேசன் போன்றோர் எழுதியுள்ள நாவல்களில் தலித்தியப் பிரக்ஞை வெளிப்பட்டுள்ளது. இவர்களில் சிலர் தங்களுடைய படைப்புகளைத் தலித்திய நோக்கில் அணுகுவதை விரும்புவதில்லை. தலித் படைப்பாளர்கள் எழுதியுள்ள நாவல்கள் வெவ்வேறு தளங்களில் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன. தலித் மக்களின் துயரங்களும் அவலங்களும் கதைக்களனாகும் நிலையில், பருண்மையான அரசியல் வெளிப்பாடு என்பது சிலரின் நாவலாக்கத்தில் வெளிப்படவில்லை. இமையத்தின் செடல் நாவல், சாதிய அடுக்குமுறையில் மேல்-கீழ் நிலையில் செயல்படும் ஆண்டான் ஜ் அடிமை உறவானது ஒடுக்கப்பட்ட சாதிகளுக்குள்ளும் செயல்படுவதை விவரிப்பது நுண் அரசியல் சம்பந்தப்பட்டது. தலித் சாதியினரைவிடச் சமூக மதிப்பீட்டில் இழிந்தவராகக் கருதப்படும் ‘கூத்தாடி’ சாதியினர் பற்றிய கதையாடலைத் தேர்ந்தெடுத்ததில் இமையத்திற்கு எனத் தனித்த கருத்தியல் உண்டு. தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள மேலாதானூர் கிராமத்தில் செடல் என்னும் சிறுமியை முன்வைத்துத் தொடங்கும் கதை, பெண்ணுடலை முன்னிறுத்திச் சமூக இழிவுகளை விவரித்துள்ளது. தெய்வத்துடன் சம்பந்தப்படுத்தப்பட்ட நிலையில் புனிதமாகக் கருதப்படும் செடலின் உடல் திருவிழாக்களில் பாலியல் சீண்டல்களுக்குள்ளாகிறது. வட்டார வழக்கு மொழியில் விரிந்துள்ள நாவல், தலித் சார்ந்த எந்தவொரு பிரகடனத்தையும் முன்வைக்கவில்லை. இமையத்தின் நுட்பமான எழுத்து நடை இந்நாவலின் பெரிய பலம்.

ஸ்ரீதர கணேசனின் வாங்கல் கடல் சார்ந்த வாழ்வைப் பின்புலமாகக் கொண்டது. இன்னொரு நாவலான அவுரி பொருளாதார ஏற்றத்தாழ்வு சார்ந்த போராட்டத்தினூடே தலித்துகள் சாதியரீதியில் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறை குறித்தும் அக்கறை கொண்டுள்ளது. சாதியத்துக்கும் வர்க்கத்துக்குமான முரண் நாவலில் விவரிக்கப்பட்டுள்ளது. அவருடைய முந்தைய நாவல்களுடன் ஒப்பிடும்போது, அவுரியில் தலித்துகள் சாதிய ரீதியில் ஒடுக்கப்படுவது குறித்த சொல்லாடல்கள் வீர்யத்துடன் வெளிப்பட்டுள்ளன. அஞ்சலை மூலம் கண்மணி குணசேகரன் தலித் பெண்கள்மீதான அத்துமீறல்களை நுட்பமாகக் கலைப்படுத்தியுள்ளார். சூழலின் வெக்கை காரணமாகக் கணவனைவிட்டுப் பிரிய நேரிடும் பெண் தொடர்ந்து பாலியல்ரீதியில் படும் துயரங்கள் அஞ்சலையின் கதையாக வெளிப்பட்டுள்ளன. நாவலில் இடம்பெற்றுள்ள மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிபூர்வமான காட்சிகள் மனித இருப்பு குறித்த ஆழமான விவாதங்களுக்கு இட்டுச் செல்லவில்லையெனினும், உடல்கள்மீது ஏவப்படும் வதைகளை நுட்பமாகப் பதிவாக்கியுள்ளன.

சோ. தர்மனின் கூகை நாவலில் தலித்துகள்மீதான ஆதிக்கச் சாதியினரின் ஒடுக்குமுறை முழுவதும் சித்தரிக்கப்பட்டாலும், பின்நவீனத்துவக் கதையாடலின் மூலம் தலித்துகளை வேறு ஒன்றாகக் குறியீடு செய்வது நிகழ்ந்துள்ளது. இரவில் கூர்மையான பார்வையுடன், இருளை ஊடுருவித் தனது இலக்கை அடையும் வல்லமை மிக்க புத்திசாலிப் பறவையான கூகை, பகலில் சிறிய பறவையால்கூடக் கொத்தப்படுகிறது. கூகையின் வட்டமான சுழலும் கண்களும் விரும்பிய திசையில் தலையைத் திருப்பும் லாவகமும் கண்டு பயந்திட்ட மனித மனம், கூகையின் முகப்பொலிவைக் கோரமென்றும் அதன் கத்தலைச் சாபமென்றும் அஞ்சி நடுங்குகிறது. சமூக உற்பத்தியில் முழுமையாக ஈடுபடும் தலித் உடல்களின் வலிமையைக் கூகையாக உருவகப்படுத்திச் சாதிய மனத்தைக் கேள்விக்குள்ளாக்கும் தர்மனின் கதையாடல் நுட்பமானது.

தலித் பற்றித் தமிழில் உருவாக்கப்பட்டுள்ள சொல்லாடல்களின் பின்புலமாக இலக்கியரீதியில் பெரிய சாதனைகள் நிகழ்த்தப்பட வேண்டிய தேவை உள்ளது. வெறுமனே கிராமப் புறக் காட்சிகளும் ஆதிக்கச் சாதியினரின் அடாவடித்தனமும் தலித்துகளின் ஒடுங்குதலும் தொடக்க கால தலித் நாவல்களில் பதிவாகியிருப்பது ஏற்புடையதே எனினும் பத்திருபது ஆண்டுகள் கடந்த நிலையில் தலித் நாவல்கள் புதிய வகைப்பட்ட உத்திகளையும் உள்ளடக்கியதாக மாற வேண்டியுள்ளது. தமிழ்ச் யான திசை வழியில் பயணிக்கின்றன என்பதற்கு அடையாளமாக இமையம், சோ.தர்


Last edited by Fathima on Sat Apr 10, 2010 1:11 pm; edited 1 time in total
Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

கடந்த பத்தாண்டுகளில் தமிழ் நாவல்களின் போக்குகள் கடந்து செல்ல வேண்டிய தூரம் Empty
PostSubject: தலித் இலக்கியம் விளிம்பின் சரிவும் மையத்தின் ஏற்றமும்   கடந்த பத்தாண்டுகளில் தமிழ் நாவல்களின் போக்குகள் கடந்து செல்ல வேண்டிய தூரம் Icon_minitimeSat Apr 10, 2010 1:06 pm

க. காசிமாரியப்பன்
புதிய நூற்றாண்டில் பெருக்கெடுத்த டாலர் வெள்ளமும் தனியார்மயமும் தமிழ்ப் பண்பாட்டு வாழ்க்கையைக் கலக்கியடித்திருக்கின்றன. செயலற்ற வெறும் பேச்சுகளாலான உலகத்தில் கம்பியில்லாத் தொலைபேசி, இணையதளங்கள் வழியாகக் குவிந்த டிஜிடல் செய்திகளால் நவீன மனிதரின் அக உலகம் நெருக்கடிகளைக் கோரிப் பெற்றுள்ளது. சைபர் தேச மெல்லுடல்களும் தமிழ்ச் சினிமாவும் கற்றுக்கொடுத்த இன்பத் துய்ப்புகள் கேபினுக்குள் பலரை முடக்கியுள்ளன. பிளவுபட்ட அக்கறைகளுடனான இளைஞர்களின் ஒற்றை நம்பிக்கைகள், கூட்டிணைவின் மீதான தாக்குதல்களை வலுப்படுத்தியுள்ளன. வாழ்வில் முன்னேறச் சமூகத்தைப் புறந்தள்ளித் தனிமனிதரின் மேம்பாட்டுக்கு வழியுரைக்கும் நிபுணர்களின் வாய்ச்சொற்களைக் குளிர்ந்த அறைகளில் காசு கொடுத்துக் கேட்கும் கூட்டம் அச்சத்தைத் தருகிறது. அளவற்ற தன்னம்பிக்கை டானிக்குகளைப் பருகி மகிழும் ஜனக் கூட்டம், கலாச்சார உறக்கம் கொண்டு வல்லரசுக் கனவுகளில் லயித்திருக்கிறது. சோற்றுக்குத் தட்டழியாத மக்களுக்குக் கேளிக்கைகளும் களிப்பும் இலவசமாகத் தரப்படுகின்றன.

எல்லாவற்றுக்கும் ஆசைப்படச் சொல்லும் ஆங்கிலம் பேசும் ஜீன்ஸும் குர்த்தாவும் அனிந்த நவீனச் சாமியார்கள் மூச்சை இழுத்தடக்கிப் புட்டத்திற்கு மேல் சேமித்துத் தண்டுவடம் வழியாக மூளைக்குச் செலுத்தும் புதிய தொழில்நுட்பத்தைச் சொன்னார்கள். மன அழுத்தங்களைக் கண்டறிந்து மருந்து போட்டார்கள். அங்கு நடுத்தர வர்க்கம் விரும்பும் அமைதி சாத்தியமாயிற்று. ஆனாலும் விளிம்புநிலை உயிர்களுக்குக் கார்ப்பரேட் முதலாளியமும் இயக்கங்களும் எதையும் தரவில்லை. இத்துடன் பொருளாதாரக் கலாச்சாரச் சேர்மானங்களால் தவிக்கும் உலகு கைவிடத் தொடங்கிய தார்மீகங்களின் பின்னணியில் விளிம்புநிலைச் சரிவைப் பொருத்த முடியும். சரிவிற்கான சில அனுமானங்களை இக்கட்டுரை சொல்ல முயல்கிறது. மார்க்சியத்தின் வீழ்ச்சியைக் கொண்டாடிய சனாதனிகளுடன் கைகோத்த தலித்தியம் இன்று மேலேற முடியாமல் நிற்கிறது. சாதித் திரட்சி அடிப்படையில் வளங்களைத் துய்க்கும் கழகங்களின் பிற்பட்டோர் வகை மாதிரி அரசியலைப் பின்பற்றும் தலித் கட்சிகள் புதிய தடங்களைக் கண்டறியவில்லை. தொண்ணூறுகளில் முகிழ்ந்த எழுச்சியை அறுவடை செய்து அதிகாரத்தை அடைந்தவர்கள் உள்ளங்கைகளை விரித்துக் காட்டிவிட்டார்கள். அதிகார மைய அரசியலைக் கண்டு நடுங்கும் எளிய மனதுக்கு எந்த நம்பிக்கையையும் தலித் கட்சிகள் அளிக்கவில்லை. வாகன அணிவகுப்பும் மின்னும் சரவிளக்குகளும் அதிர்ச்சியைப் பரிசளிக்கின்றன. பிற்பட்டோர் அரசியல் மாதிரியைப் புறந்தள்ளிய மக்கள் எழுச்சியில் தங்களை நிறுத்திய தலித் இயக்கங்களின் தலைவர்கள் மாறு வேடங்களுடன் கட்அவுட்டுகளில் சிவந்து பொலிந்து கழிசடை அரசியலைக் கைக்கொள்ளுவது வளர்ச்சிக்கு எங்ஙனம் உதவிடும்?

காங்கிரஸ் ஏற்படுத்திய வெற்றிடத்தில் நிறைந்து பிறகு சரிந்த திராவிடக் கட்சிகளின் வெறுமையில் நிலை பெற்றிருக்க வேண்டிய வாய்ப்பைத் தவறவிட்டன தலித் கட்சிகள். பொருளாதாரப் பண்பாட்டு அறிதலற்ற தேமுதிக அவ்விடத்தில் நிலை கொண்டுள்ளது ஆபத்தானதுதான்.

தூயமனக்காரர்களாக அறியப்பட்ட தோழர்களைப் புறந்தள்ளி எழுந்த தலித் கட்சிகளின் அதிகாரத்துக்கு நெருக்கடிகளை ஏற்படுத்த விரும்பாத போக்கால் நலிந்தவர்களை மேலேற்ற முடியவில்லை. சொந்த ஊர்களில் வெட்டிக்கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் புதைக்கப்படுவதற்குள் காரணவான்களோடு கைகோத்து முழங்கும் தலைவர்களுக்கு நெருக்கடிகள் இல்லை. மேலும் கட்டியெழுப்பப்படும் தமிழர் எனும் பேரடையாளப் பட்டம் சூடுவதால் கிடைக்கப் போகும் ராஜாங்கம்தான் யாது? தலித்தியப் போராட்டங்கள்கூட இடதுசாரிகளின் கைகளுக்கு இடம் பெயர்ந்துவிட்டன. தமிழக இரவுகளில் தோழர்கள் கட்டி வைத்திருக்கிற பண்பாட்டு வெளி அலாதியானது. கலை இலக்கிய வெளியும்கூட அழுத்தமானதுதான். ஆனால் தலித் கலை விழாக்கள் பேராயர்களின் கடைக்கண் பார்வைக்குக் காத்திருக்கின்றன. பாமரத் தன் மையை நிலை நிறுத்தி அதிகாரத்தைத் தக்கவைக்கும் நவீன அரசுகள் பொதுப்புத்தியைத் திருப்திப்படுத்தக் கேளிக்கைகளையும் விழாக்களையும் ஆரவாரத்துடன் கட்டமைக்கின்றன. கலாச்சார மந்தத்திற்கு எதிரான செயல் திட்டங்கள் அற்ற தலித் கட்சிகளிடம் பண்பாட்டு வறுமை சரணடைந்துள்ளது. அரசியல் அறிவைப் பிரயோகிக்காத ராணுவத் தன்மையால் பாசிசத்தைத் தான் நிறுவ முடியும். கலாச்சாரச் செழு மையை மேலெடுக்காத மூர்க்கத்தால் பயனில்லை. கற்பித்தலின் தொடக்கத்தைக்கூட இயக்கங்கள் அணுகவில்லை. எளிமையான அரசியல் நூல் வரிசைகளின் பரிச்சயம் ஏதுமற்ற தொண்டர்களை எதிரிகள் கேள்விகளால் எளிதில் வீழ்த்திவிட முடியும்.

மு. வவின் கரித்துண்டைத் தாண்டாமல் கிடக்கும் கல்விப் புலத்துக்குள் நுழைய முடியாமல் தலித் இலக்கியம் வெளியே நிற்கிறது. க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, கோ. கேசவன், தி. சு. நடராசன் போன்ற மார்க்சியர்கள் தமிழ்க் கல்விப்புலத்தில் தவிர்க்க இயலாதவர்களாக மாறிய நிலையில் ராஜ்கௌதமன், ரவிக்குமார், கே. ஏ. குணசேகரன் போன்றோர் நுழைய வழியில்லை. வர்க்க முரண்களைக்கூட ஏற்றுக் கொள்ளும் மனத்துக்குச் சாதிய முரண்கள் தரும் பதைப்பு சொல்லி மாளாது.

பிற்பட்ட சாதி மனங்களை நெருக்கடிக்கு ஆளாக்கிய தலித் அறிவுஜீவிகள் ‘ஜனநாயக சக்தி’களிடம் கடுமையான அளவுகோல்களை முன்வைத்தனர். யதார்த்தத்தைக் கணக்கில் எடுக்காமல் விடிவதற்குள் அனைத்தையும் துறக்கப் பிற்பட்டோரிடம் தலித் அறிவுஜீவிகள் கேட்டுக்கொண்டனர்; உடனடியாகக் கழுவ இயலாக் கசடுகளும் மொழியின் நாற்றங்களையும் தலித் எழுத்தாளர்களும் கொண்டுள்ளனர் என்றபோதிலும். தொடர்ச்சியான உளவியல் தாக்குதல்களால் நிலைகுலைந்த பிற்பட்டோர் அந்நியப்பட்டனர். அதன் தொடர்ச்சியாகப் பெரியாரை அப்புறப்படுத்த முயன்ற நிகழ்வுகள் வெற்றிபெறவில்லை.

தலித் உட்சாதிகளுக்கிடையிலான நட்பு முரண் என்ற சொல் வண்ணம் வெளிறி நிற்கிறது. வடக்கும் தெற்கும் இணைவதற்கான பரஸ்பர உரையாடல்கள் தொடங்கப்படவே இல்லை. உள் ஒதுக்கீட்டுக் கசப்புகள் வேறு. பாமா, ஆதவன் தீட்சண்யா வற்புறுத்தும் தலித் பொதுப் பண்பாட்டுக்கு எதிர்நிலையிலான குரல்கள் ஒலிக்கத்தான் செய்கின்றன. சாதி அரசியலின் பொருட்டுப் பிற்பட்ட சாதிகளிடம் ஏற்படும் தற்காலிக ஒற்றுமை பல சந்தர்ப்பங்களில் தலித்துகளிடம் ஏற்படவில்லை. நாலாப்பக்கங்களிலிருந்தும் எதிரிகளைப் பெருக்கிக்கொண்டும் அவர்களோடு உறவாடியும் சரிந்த தலித் இயக்கங்கள் அன்று வெடி குண்டுகளாக எழுந்து மாபெரும் உறக்கச் சடவை விலக்கியவை. இன்று அவை மத்தாப்புகளாக மின்னுகின்றன. இன்னுங்கூட இழப்பதற்கு ஏதுமற்ற மக்களுக்குத் தலித் இயக்கங்களை விட்டுவிட்டால் நம்புவதற்கும் நடப்பதற்கும் எவரும் இல்லை என்பதும் நிதரிசனம்.

II

அம்பேத்கர் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களை ஒட்டித் தோழர்களும் தோழர்களின் தோள்களில் ஏறியவர்களும் தலித் இலக்கியங்களைப் படைத்தனர்; பண்பாட்டு யதார்த்தத்தைப் பயன்படுத்தித் தொழிலாளர் பாத்திரங்களை வெளியேற்றித் தலித் மாந்தர்களைப் பொருத்துதலும் நிகழ்ந்தது. மாற்றங்களும் உண்டு. அவர்களில் பெரும்பாலான தலித் எழுத்தாளர்கள் இரண்டாம் தலைமுறைப் படிப்பாளிகள். உத்தி யோகஸ்தர்களின் வாரிசுகள். பத்தாண்டுகளில் தீவிரத்துட னும் தீவிரமின்றியும் இயங்குபவர்கள். எழுதி நிலைபெற்றுவிட்ட இவர்களை விடுத்து உக்கிரத்துடன் எழுதும் மூன்றாம் தலைமுறையினர் வெளிப்படவில்லை. கம்யூனிஸ்டுகள், பத்திரிகைகள், கூட்டங்கள் நடத்தித் தட்டிக்கொடுத்து உருவாக்கும் படைப்பாளர்கள் பேருருவம் எடுப்பதும் நடைமுறை. தலித் அரசியல் தேவைகளை நிறைவுசெய்யக்கூடப் புதியவர்கள் யாருமில்லை. படைப்புக் களம் தோன்றவில்லை.

இமையம், சோ. தர்மன், ஆதவன் தீட்சண்யா, அழகிய பெரியவன், மதிவண்ணன், என்.டி. ராஜ்குமார் போன்றோர் தொடர்ந்து இயங்குகிறார்கள். பாமா, சிவகாமி, பாப்லோ அறிவுக்குயில் சுணங்கிப்போனவர்கள். அன்பாதவன், ஸ்ரீதர கணேசன், தய். கந்தசாமி, அரங்க மல்லிகா, விழி. பா. இதயவேந்தன் போன்றோர் கடக்க வேண்டிய தொலைவும் கண்டுபிடிக்க வேண்டிய மொழியும் அண்மையில் இல்லை. தலித் எழுத்துக்களைத் தலித் அல்லாதோர் எழுதக் கூடாது என்னும் பெரும் சர்ச்சைக்குப் பிறகு தலித் வாழ்வை எழுதத் தலித் எழுத்தாளர்களே குறைந்துபோனது முரண்தான்.

இலக்கியத்திலிருந்து அரசியலைப் பிரிக்கும் செயல்பாடுகள் வலிமையற்றவை. உள்நோக்கிப் பயணித்த எழுத்துக்காரர்களுக்குக்கூடத் திராவிடக் காழ்ப்பு உண்டு. தலித் நுண்ணரசியலைத் தலித் படைப்புகள் ஏற்றுள்ளன. அம்பேத்கரியச் சூத்திரத்தைப் பாமா பின்பற்ற விழைகிறார்; மதிவண்ணனும் அழகிய பெரியவனும் சுவடுகளைத் தொடர்கின்றனர். ஸ்ரீதரகணேசன் மார்க்சியத்தை நம்பியவர். காந்திக்கு எதிராகக் கிராம வெளிகளிலிருந்து தலித்துகளை நகர வெளிக்கு நகரச் சொன்ன அம்பேத்கருக்கு முரணாகச் ‘சொந்த மண்ணை’ விட்டுப் பெயர மனமில்லாத தலித் படைப்பாளிகள் இருக்கின்றனர்.

சனாதனக் கிறித்தவத்தின் உடைவைத் தடுக்கத் தலித்துகளை ஆயர்களாக்குதல், களப்பணிகள் மேற்கொள்ளுதல், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைப் போராட்டத்தில் இறக்குதல், இயேசுநாதரைக் கைவிடாமல் புரட்சி செய்தல் போன்றவற்றை விடுதலை இறையியல் முன்வைத்தது. சமூக அக்கறை கொண்ட பாமா, மாற்கு, விடிவெள்ளி போன்ற கிறித்தவத் துறவிகள் எழுதத் தலைப்பட்டனர். தன் வரலாறாக அமைந்த கருக்கும் சங்கதியும் தந்த வாழ்வனுபவம் தமிழுக்குப் புதிது. ராஜ் கௌதமன்கூடக் கிறித்தவத்தை விட்டு நீங்காமல் அதை உடைக்க முயன்றார். நிறுவன சமயத்தைக் காத்துக்கொண்டு பொருளாதாரச் சமூகப் பண்பாட்டு அடிப்படைகளைப் பின்னுக்குத் தள்ளிச் சமய வழிப்பட்டு நின்றதால் தீவிரமான புதிய படைப்புகளை எழுத இயலாமல்போயிற்று.

மொழியாளுமை மிக்க இமையம், சோ. தர்மன், அழகிய பெரியவன் ஆகியோர் வட்டார நாவல்கள் போட்டுத் தந்திருக்கிற நாவல் வரைபடத்தில் தலித் வாழ்க்கையைச் சித்தரித்தனர். துயர வாழ்க்கையில் அழுந்திய பெண்களின் முறைப்பாடுகளையும் தொலையாத ஓலங்களையும் மீட்டெடுக்கும் இமையம் வடிவச் சோதனைகளில் இறங்குவதில்லை. சோ. தர்மன் வேறுபடுகிறார். அழகிய பெரியவனின் படைப்புகளில் திரும்பத் திரும்ப சிலவற்றைக் காண நேரிடுகிறது. மேலும் எழுதியவற்றை எல்லாம் அவர் பிரசுரிப்பதும் குந்தகத்தைக் கொணர்கிறது. யதார்த்தத்தை மீறிய முயற்சிகளை அவர் தீட்சண்யாவிடம் காண முடியும். மையப் பாத்திரத்தைக் கொண்டாடும் மரபைக் குலைத்துப்போடும் பாதையில் நம்பிக்கை தரும் ஆதவன் படைப்புகளில் குறுக்கிடுவதைக் குறைத்துத்தான் ஆக வேண்டும். புதுமைப்பித்தனிடமிருந்து பெற்றது இது. காமம் வழியாக நிறுவப்படும் வழமையான ஒழுக்க அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் நவீனக் கதைகளை எழுதும் ஜே.பி. சாணக்யா தலித் பண்பாட்டு அரசியல் விரும்பும் தேவைகளை நிறைவுசெய்வதில்லை. நகர்சார்ந்த மொழி நுட்பங்களைக் கொண்ட மதிவண்ணன் பன்றிக் குட்டிகளைப் பற்றிச் சொன்னாலும் அருந்ததியர்களின் இனவரைவியல் தகவல்களைத் தொன்மங்களைக் கண்டறியவில்லை. மந்திரம்போல் பிணிக்கும் சொற்கட்டுகளுடன் என். டி. ராஜ்குமார் காட்டும் வனாந்திரப் பாதை வசீகரமானது. அரசியல் சூத்திரங்களுக்குக் கவிதை புனையும் ராஜ்குமார் சமீபமாய்க் கவலை தருகிறார்.

வன்மம் கொழிக்கும் சாதிய மனம், மனநெருக்கடிகளின் அக உலகத்தைத் தலித் படைப்பாளிகளால் தர முடியவில்லை. குற்றச்சாட்டுகளும் புகார்ப் பட்டியலுமாகப் பல கவிதைகள் நீர்த்துப்போய்விட்டன. ஒழுங்கு நிறைந்த கொலைத்தன்மையைக் கொண்டியங்கும் அரச வன்முறையின் வாள்வீச்சுக்குப் பலியாகும் வரலாறுகள் இனிதான் எழுதப்பட வேண்டும். தீவிரமான அவமானங்களை மென்று விழுங்கித் திணறும் மனிதர்கள் எழுதவே வரவில்லை. கே. ஏ. குணசேகரனுக்கு மட்டுமா வடு வாய்த்திருக்கிறது? மொழி, வடிவரீதியிலான மேம்பாட்டை வாழ்வோடு இணைக்கும் இலாவகம் பயிலப்படத்தான் வேண்டும். அதிகாரத்தில் கரைந்து அதிகாரத்தைப் பெறும் கோட்பாடுகளுக்கு உரை எழுதிய படைப்பாளிகளின் திமிறல் தான் மீட்சியைத் தரும். தரட்டும்.

சிறுபத்திரிகைக் கனவான்களும் ஊடகக்காரர்களும் இணைந்து காத்த கள்ள மௌனமும் விளிம்பு நிலைப் படைப்புகளின் சரிவுக்குக் காரணம். அரச வன்முறையின் கொடூரங்களை நெஞ்சம்பதறச் சொன்ன பாலமுருகனின் சோளகர் தொட்டியைக் கண்டுகொள்ளாத தீவிர இலக்கியக்காரர்கள் தங்களைத் தமிழர்கள் கொண்டாடவில்லை என்று சொல்ல என்ன இருக்கிறது? திருநங்கையரின் வாழ்வை மொண்ணையாகச் சொன்னதாகச் சு. சமுத்திரத்தின் சங்கை நெறித்த அறிவுலகம், கைகளை நெறித்துக் கழுத்தைக் கொணட்டும் ஒன்பதுகளாகத் திருநங்கையரைக் காட்டிய சினிமாக்காரர்களின் கால் கழுவிய கையை முத்தியது எங்ஙனம் சரி?

ஓர்மைமிக்க ஆதவன் தீட்சண்யா, மதிவண்ணன், என்.டி. ராஜ்குமார், இமையம், அழகிய பெரியவன் போன்றோரின் பெண்கள் குறித்த சொற்கள் பிரக்ஞையைத் தவறவிட்டவை. தாய்மையையும் பெண்மையையும் தலித் ஆண் எழுத்தாளர்கள் கொண்டாடுகிறார்கள். தாய்மை, பெண்மை பற்றி ஆண் சொல்வதற்கும் பெண் எழுதுவதற்குமான வேறுபாடு நுண்ணியது. அது ஆண்மையைத் தக்கவைப்பதற்கும் ஆண்மைக்கு எதிராகத் தன் தாய்மையை முன்வைப்பதற்குமான செயல்பாடாகும். அன்பாதவனின் கவிதை விளிப்புகளில் ஆண் மையம் செயல்படுகிறது. ஆணாதிக்க ஒழுக்கநெறியின் கடுமையான பிரதிநிதிகளாகத் தலித் ஆண் எழுத்தாளர்கள் செயல்படும் குறிப்புகளை ஏராளமாய்த் தொகுக்க முடியும். தலித் பெண்களின் துயரங்களைத் தலித் ஆணால் சொல்ல முடியாது என்ற கருதுகோள் வெற்றி பெற்றுள்ளது உண்மைதான்.

III

கடந்த பத்தாண்டுகளில் உதிரக் கவிச்சியின் மணத்தையும் வனப்பையும் கொண்ட கவிதைகளைப் பெண் படைப்பாளிகள் தந்துள்ளனர். பெண்ணின் வாழ்வையும் வெளியையும் குறுக்கும் செயல்பாட்டுக்கு எதிரான அரசியலை சுகிர்தராணி, சல்மா, மாலதிமைத்ரி, குட்டிரேவதியிடம் உரக்கவும் தேன்மொழி, வெண்ணிலா போன்றோரிடம் சன்னமாகவும் கேட்க முடியும். உமா மகேஸ்வரி, அருள்ஜோதி, எழிலரசி, கீதாஞ்சலி பிரியதர்சினி, வத்ஸலா எனப் பல கவிஞர்கள் நலிந்த மனத்துக்கு உற்சாகம் தருகிறார்கள். உடல் பற்றிய ஓர்மை மிகுந்த பெண் கவிஞர்களின் கவிதைகள் சுகிர்தராணி சொல்லுவதைப் போலப் பலரின் பாலுறுப்புகளைத் தளரச் செய்துள்ளது. பெண்ணுடலின் நளினத்தைப் புகழ்வதும் இகழ்வதுமான குரல்களை முறையே நுகர்வியத்திடமும் சமயத்திடமும் காண முடியும். காமத்தை ஏற்பதும் மறுப்பதுமான பாலியல் செயல்பாடுகளை ஆண்நிலையில் இவை அணுகுகின்றன. சுகிர்தராணி, சல்மாவின் தீட்சண்யமான குரல்களில் வெளிப்படும் கோபமும் புதிய பாலியல் நெறிகளும் மலரினும் மெல்லிய தெய்வீகக் காம வரையறைகளை உலுக்குகின்றன. பெண் வெளிப்படுத்தும் காமம் ஆண் மனத்தைத் தொல்லைக்கு ஆளாக்குகிறது. பாமாவின் படைப்புகளில் பெண்ணிடமிருந்து காமத்தை அப்புறப்படுத்தும் துறவு மனத்தின் உபகுரலைக் கேட்க முடியும். புனிதப் பிரதிகளில் ஏற்றப்படும் ‘மாதவிலக்கு உதிரத் தீட்டும்’ ஆயுதம்போல் வெளிக்காட்டப்படும் யோனியும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இயங்குவெளிகளின் நீட்சியையும் கவிதைகள் கண்டெடுத்துள்ளன. சமையலறைகளின் கதவுகள் உடைபடும் சப்தத்தின் பின்னால் கடல், மலை, ஆறு, தாவரங்கள், பறவைகளோடு எல்லையற்ற நிலவெளியை நோக்கிப் பறக்கும் கவிதைகள் இருளில் புழங்கி வெளிச்சத்தில் திளைக்கின்றன.

முற்போக்குக் கவிதைகளின் சாயல்களோடு புறப்பட்ட குட்டி ரேவதி, சுகிர்தராணி, வெண்ணிலா போன்றோரிடம் ஏற்பட்ட மாற்றங்கள் எழுச்சியை நோக்கியவை. மாலதிமைத்ரியின் கவிதைகள் சர்வதேச அரசியலையும் பெண்ணரசியலையும் தீவிர ஓர்மையுடன் இணைக்கின்றன. இருப்பிற்கான போராட்டத்தின் நிறையை எட்டிய தலித் இலக்கியம் தேக்கத்திலும் போராட்டத்தை முன்னெடுக்கும் பெண் கவிஞர்கள் ஏற்றத்திலுமாக நிற்கிறார்கள். திருத்தங்களே அற்ற நாலாயிரப்படி சமய உரைகளாகத் தங்கள் படைப்புகளைக் கருதிக்கொண்டு விமர்சனங்களைப் புறந் தள்ளுவதைத் தலித் படைப்பாளிகள் விட்டுத்தள்ளுவதும் புதியவர்களைக் கண்டெடுத்துக் களத்தில் விடுவதும் தான் மீண்டெழுவதற்கான வாய்ப்பாக அமையும்.
[b]
Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

கடந்த பத்தாண்டுகளில் தமிழ் நாவல்களின் போக்குகள் கடந்து செல்ல வேண்டிய தூரம் Empty
PostSubject: தலித் அடையாளம் எழுத்தாகி வந்த வரலாறு   கடந்த பத்தாண்டுகளில் தமிழ் நாவல்களின் போக்குகள் கடந்து செல்ல வேண்டிய தூரம் Icon_minitimeSat Apr 10, 2010 1:14 pm

ஒரு காலகட்டத்தின் சமூகப் பண்பாட்டுத் தளத்தில் குறிப்பிட்ட ஒரு போக்கை முக்கியமானது எனத் தீர்மானிக்கலாம் என்றால் அதை எப்படி, யார் தீர்மானிப்பது? தலைவர்களா அறிவாளிகளா? அல்ல. குறிப்பிட்ட அந்தக் கட்டத்தின் இயங்கியல் விதியே அதைத் தீர்மானிக்கிறது. அக்காலகட்டத்தின் குரலைப் பிரதிப்பலிப்பவர்களாகத் தலைவர்களும் அறிவாளிகளும் இருந்துவிடும்போது அவர்களது குரலும் முக்கியமானதாகிவிடுகிறது. கடந்த இருபதாண்டு காலத் தலித் அடையாள உருவாக்கத்திற்கும் இதுவே பொருந்தும். 1990களில் தொடங்கி இதுவரையான தலித் அடையாளம் அரசியல், இலக்கியம், பதிப்புத் துறையில் ஏற்படுத்திய தாக்கங்களையும் அதன் விளைவுகளையும் குறித்த ஒரு விரிவான, ஆழமான பரிசீலனை அவசியமாகிறது.

தமிழில் தலித் இலக்கியம் சார்ந்த பதிப்பு முயற்சிகளின் தொடக்கமாக அம்பேத்கர் நூல்களின் பதிப்பு முயற்சிகளையும் சமூக அரசியல் தளத்தில் தலித் சமூகத்தைப் பாதித்த சில நிகழ்வுகள் தொடர்பான பிரசுரங்களையும் குறிப்பிடலாம். தொடக்கத்தில் அம்பேத்கர் எழுதிய நூல்கள், அவரது வாழ்வையும் பங்களிப்பையும் குறித்து எழுதப்பட்ட நூல்களின் பதிப்பு முயற்சிகள் அவ்வகையில் முக்கியமானவை. ஆனால் இத்தகைய நூல்களின் வெளியீடும் வாசிப்பும் அன்றைய தாழ்த்தப்பட்டோர் இயக்கங்கள் மத்தியில் மட்டுமே புழக்கத்திலிருந்தன. அம்பேத்கர் தாழ்த்தப்பட்டோர் தலைவர் என்னும் அடையாளம் அழுத்தம் பெற்றிருந்தது.

1983இல் அம்பேத்கர் எழுதிய Mr.Gandhi and the Emancipation of Untouchables என்னும் நூலில் ஒரு பகுதி ‘இந்துக்களிடமிருந்து விடுதலை’ என்னும் பெயரில் நீலக்கொடி வெளியீடாக வந்தது. நீலக்கொடி சென்னையிலிருந்து வந்துகொண்டிருந்த மாதமிருமுறை இதழ் - இவ்விதழ் விற்பனையிலிருந்து கிடைக்கப் பெறும் லாபம் சென்னை நகரில் தாழ்த்தப்பட்ட/பழங்குடி வகுப்பு மக்களுக்கு இடம் வாங்குவதற்காக அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அம்பேத்கரின் நூல்களில் காந்தியம் குறித்தும் பூனா ஒப்பந்தம் குறித்தும் எழுதப்பட்டவை மட்டுமே தமிழில் வெளியிடப்பட்டன. 1968இல் சென்னை சேத்துப்பட்டு அம்பேத்கர் சிந்தனைக் கூடம் சார்பாக ‘வட்டமேஜை மாநாடும் பூனா ஒப்பந்தமும்’ எனும் நூலை அன்பு பொன்னோவியம் பதிப்பித்தார். அதே ஆண்டில் பொன்னோவியத்தின் முன்முயற்சியில் 1927இல் எம். சி. ராஜா ஆங்கிலத்தில் எழுதிய Oppressed Hindus எனும் நூல் ஐவரின் கூட்டு மொழிபெயர்ப்பாகத் தமிழில் வெளியானது. 1980களில் பேரா. பெ. தங்கராசு அம்பேத்கர் குறித்து எழுதிய சில நூல்கள் முக்கியமானவை. அண்ணல் அம்பேத்கரின் அரும்பணி - ஓர் ஆய்வு, அம்பேத்கரின் மதமாற்றம், காந்தி - அம்பேத்காரின் கருத்து மோதல் போன்ற நூல்கள் அடிப்படையான ஆதாரங்களைக் கொண்டு எழுதப்பட்டவை. 1990க்கு முன்னர் பதிப்பிக்கப்பட்ட நூல்களில் பல எளிய நடையில் எழுதப்பட்டவை. அவற்றில் பிரச்சார நோக்கம் மேலோங்கியிருக்கும்.

இம்முயற்சியின் தொடக்கமாக தலித் எழில்மலை ‘தலித் சாகித்திய அகாடமி’ எனும் அமைப்பின் மூலம் வெளியிட்ட அம்பேத்கரின் நூல்களைக் கூறலாம். 1985இல் அம்பேத்கர் எழுதிய Untouchables நூலின் மொழிபெயர்ப்பு ‘மண்ணின் மைந்தர்கள்-மறைக்கப்பட்ட வரலாறு’ என்னும் பெயரில் வெளியானது. தொடர்ந்து அம்பேத்கரின் இந்துமத மாற்றம் ஏன்? (1988), ராமனும் கிருஷ்ணனும் ஓர் புதிர், காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாத மக்களுக்குச் செய்ததென்ன? (1998) என்னும் நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளும் வெளியாயின. 1912முதல் கோலார் தங்க வயல் சித்தார்த்தா பதிப்பகம் வெளியிட்டு வந்த அயோத்திதாசரின் நூல்களைத் தொகுத்து ஐந்து தொகுதிகளாகத் தலித் சாகித்திய அகாடமி வெளியிட்டது. அயோத்திதாசரின் தமிழன் இதழ்களைக் கொண்டு ஞான. அலாய்சியஸ் தொகுத்த அயோத்திதாசர் சிந்தனைகள் (3 தொகுதிகள்) நூலுக்கு முன்பும் பின்பும் அந்த ஐந்து தொகுதிகள் வெளியாயின. அதே போல இரட்டைமலை சீனிவாசன் எழுதிய ஜீவிய சரித்திரச் சுருக்கம் (1999) என்னும் வாழ்க்கை வரலாற்று நூல் தலித் சாகித்திய அகாடமியால் வெளியிடப்பட்டது. தலித் சாகித்திய அகாடமி வெளியிட்ட நூல்களின் தொகுப்பிலும் மொழிபெயர்ப்பிலும் ரவிக்குமார், கு. மு. ஜவகர், கண்ணன். எம் போன்றோர் இணைந்து செயல்பட்டுள்ளனர்.

அதன் அடுத்த கட்டமாகப் பல்வேறு அரசியல் மாற்றங்கள், விவாதங்கள் ஊடாக மார்க்சிய - லெனினிய இயக்கங்களும் முற்போக்கு இயக்கப் பின்னணி கொண்ட அறிவுஜீவிகளும் அம்பேத்கர் எழுதிய நூல்களை வெளியிட்டனர். திருப்பூர்ச் சமூகநீதிப் பதிப்பகம், பார்ப்பனியத்தின் வெற்றி என்னும் நூலை வெளியிட்டது. மதுரைக் கார்முகில் பதிப்பகம் வெளியிட்ட இந்தியாவில் சாதிகள், காந்தியம் ஆகிய நூல்களை வெளியிட்டது. தனஞ்செய்கீர் எழுதிய அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்று நூலை 1992இல் வே. ஆனைமுத்துவின் மார்க்சிய பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி சார்பாக முகிலன் மொழிபெயர்த்து வெளியிட்டார். தலித் அடையாளத்தை நவீனச் சொல்லாடல்களுடன் கட்டி எழுப்பிய அறிவாளிகளின் துணையோடு உருவான ‘விளிம்பு ட்ரஸ்ட்’ தலித் நூல்களை மட்டுமே வெளியிட்டது. ராஜ்கௌதமனின் தலித் பண்பாடு உள்ளிட்ட தொடக்க நூல்களையும் அ. மார்க்ஸ், ரவிக்குமார் ஆகியோரது நூல்களையும் வெளியிட்டது ‘விளிம்பு ட்ரஸ்ட்’. இதன் பின்னர் உருவான ‘விடியல் பதிப்பகம்’ இம்முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றது. இதே காலத்தில் அம்பேத்கர் குறித்த அருண்சோரியின் அவதூறுகளை மறுத்து ஒரு நூலை கி. வீரமணி எழுதினார். இவர்களுள் பெரும்பான்மையோர் பிராமண எதிர்ப்பும் இட ஒதுக்கீடு ஆதரவும் பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் ஒன்றுதாம் என்ற கருத்தியல் பின்னணி கொண்டு அம்பேத்கர்-தலித் நூல்களை வெளியிட்டனர். இக்கருத்தியல் வரம்பை மீறித் தலித் அரசியலும் அம்பேத்கர்மீதான வாசிப்பும் செயல்படுவதை அவர்கள் பிராமண ஆதரவாகவும் ஷிசி-ஙிசி ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிப்பதாகவும் காட்டி வருகின்றனர். இது ஒரு வகையில் ஆதரவு எனும் பெயரில் தலித் அரசியலைக் குறுக்கி நிறுத்தும் போக்காகும். பெரியார் காலத்தில் பேசப்பட்ட அம்பேத்கர் பற்றிய பேச்சுகளும்கூடப், பிராமண எதிர்ப்புத் தளத்தில் மட்டுமே வைத்து விளக்கப்பட்டன. தலித்துகளின் தனித்துவம், போராட்டக் களங்கள், அமைப்பாக்க முயற்சிகள் சார்ந்து பெரியாரின் ஆதரவு வெளிப்பட்டதில்லை. காந்தி, காங்கிரஸ், பிராமணர் ஆகியோர் எதிர்ப்பு எனும் அடிப்படையில் பெரியாரின் கருத்தியலுக்கு அணி சேர்ப்பதுபோல் அம்பேத்கரின் சாதி ஒழிப்பு எனும் நூலைக் குத்தூசி குருசாமி மொழிபெயர்ப்பில் 1937இல் சுயமரியாதை இயக்கம் வெளியிட்டது. ஆனால் அவ்வாறான முயற்சிகள் நீடிக்கவில்லை. பிற்காலத்தில் அம்பேத்கர் தனித்த இயக்கத்தை உருவாக்கித் தமிழ்நாட்டு தலித் மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்தார். அந்த இயக்கங்கள் பற்றிய பேச்சு வந்தபோது தலித்துகள் அவை குறித்து இருக்கட்டும் என்று சொல்ல முடிந்த பெரியார் அந்த இயக்கங்கள் குறித்த ஒவ்வாமையைக் கொண்டிருந்தார் என்று சொல்ல முடியும். 1954 குடியாத்தம் இடைத்தேர்தலில் ஒருவரான பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி. திமுகமீதான ஈகோவின் காரணமாகக் காமராஜரை வலியப்போய் ஆதரித்தார் பெரியார். இந்திய அரசியலமைப்பில் ஷிசி/ஷிஜி வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு உறுதிப்படுத்தப்பட்டபோது அம்பேத்கர் பார்ப்பனர்களோடு சேர்ந்துகொண்டு அவர் மக்களுக்கு மட்டுமே வழியமைத்துக்கொண்டார் என்னும் பொருள்படப் பேசினார் பெரியார். ( ஈவெரா சிந்தனைகள், தொ: வே. ஆனைமுத்து, பக்:813) இதே பிரச்சினை இன்றுவரையிலும் கருத்தியல் தளத்திலும் அரசியல் தளத்திலும் செயல்படுகிறது.)

தலித் பதிப்பு முயற்சியைப் பொறுத்தவரையில் 1990களில் உருவான தொண்டு நிறுவனப் பின்புலம் குறிப்பிடத்தக்கதாகும். மதுரை ஐடியாஸ் மையம் தேவகோட்டைப் பகுதியில் தலித் மக்கள் பெற்ற வழிபாட்டு உரிமை குறித்த போராட்ட நூலை 1992இல் சிறுவாச்சியில் ஒரு வெறியாட்சி எனும் பெயரில் வெளியிட்டது. தொடர்ந்து தேவகோட்டை திருவாடனை சாதியாக்க எதிர்ப்புப் போர் (1994). கிளர்ந்தெழுகிறது கிழக்கு முகவை(1996) 14. 3. 1992இல் திருநெல்வேலி குறிஞ்சாக்குளத்தில் நான்கு தலித்துகள் வெட்டிக் கொலைசெய்யப்பட்டதைக் குறித்து நெய்வேலி வெண்மணி கலைக்குழு வெளியிட்ட சிறுநூல் ஆகியன குறிப்பிடத்தக்கவை. பாமாவின் கருக்கு நாவலை வெளியிட்டதும் மதுரை ‘ஐடியாஸ் மையம்’தான். மதுரை ‘தலித் ஆதார மையம்’ சார்பாக 1995இல் வே. அலெக்ஸ் வெளியிட்ட பேரையூர் பெருமாள் பீட்டர் குறித்த கரிசலில் ஓர் ஊருணி எனும் நூல் களஆய்வு, ஆதாரங்கள், பின்னிணைப்புகளுடன் வெளியானது. இந்நூலும் 1996இல் ரவிக்குமார் கொணர்ந்த தலித் இதழ் மூலமாக வெளியிடப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட சிறுவெளியீடுகளும் தலித் கருத்தியல் தளத்தை விரிவாக்கின. இதே காலத்தில் சற்று முன்னும்பின்னுமாக வெளியிடப்பட்ட பள்ளிகொண்டா கிருஷ்ணகுமார் தனித்தும் வேறு சிலருடன் இணைந்தும் மொழிபெயர்த்து வெளியிட்ட ‘அண்ணலின் கடைசி செய்தி’, ‘மதமாற்றம் ஏன்?’, ‘அமைச்சர் பதவியை நான் ஏன் ராஜினாமா செய்தேன்?’ போன்ற அம்பேத்கர் நூல்களின் சிறு வெளியீடுகளும் குறிப்பிடத்தக்கவை.

தொண்டு நிறுவன வெளியீடுகள் தவிர்த்து தலித் செயல்பாட்டாளர்களாக இருந்த பலரும் தொண்டு நிறுவனப் பின்புலத்திலிருந்தும் தனித்தும் நூல்களைப் பதிப்பித்தனர். தலித் முரசு, கலகம், துடிபாரதிபிரபு ஆகியவை இவ்விதத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. விடியல் பதிப்பகமும் புத்தர் வழிகாட்டு மையமும் இணைந்து வெளிட்ட நூல்கள், திருச்சி சமூகச் சமத்துவப் பாசறை வெளியிட்ட வசந்த்மூனின் எழுத்துகள், ஆதித் தமிழர் பேரவையின் சார்பாக ம. மதிவண்ணன் எழுதிய ‘அருந்ததியர்களாகிய நாங்கள்’ என்னும் அருந்ததியர் இன மக்களுக்கான உள் ஒதுக்கீடு குறித்த நூல்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. திருமாவளவன் இந்தியா டுடே இதழில் எழுதி நூலாக்கம் பெற்ற அடங்க மறு, அத்துமீறு ஆகிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இம்முயற்சிகளின் தீவிரம் காரணமாக இன்றைக்குத் தலித் நூல்களுக்குப் பதிப்பக வாய்ப்பு பெருகியுள்ளது.

புத்தாயிரத்தில் தமிழ் தலித் இலக்கியத்தைப் பொறுத்தவரையில் சில புதிய போக்குகள் அழுத்தம் பெற்றன. தலித் படைப்புகள் பலவும் நூலாக்கம் பெற்றதோடு, பதிப்பகங்களின் விரிந்த ஆதரவையும் பெற்றன. புதிய படைப்பாளிகளின் வருகையை இது ஊக்குவித்தது. 1990களில் எழுதத் தொடங்கிய அழகிய பெரியவன், இமையம், என். டி. ராஜ்குமார் ஆகியோரது தொகை நூல்கள் அதிக அளவில் வெளியானது இக்கால கட்டத்தில்தான். இவர்களில் இமையம் தவிர்த்த பிறர் தலித் அரசியல் ஓர்மை பெற்றவர்களாக இருப்பதை விரும்புகிறவர்களாக உள்ளனர். இக்காலத்தின் புதிய படைப்பாளிகளாக ஜே. பி. சாணக்யா, ஆதவன் தீட்சண்யா, சோ. தர்மன், சுகிர்தராணி ஆகியோரைக் கூறலாம். தன் மொத்தப் படைப்புகளின் அளவை ஒரே நாவலின் மூலம் தாண்டிய சோ. தர்மனின் கூகை நாவல், தலித் இலக்கியத்தின் முக்கிய வரவு. தலித் இலக்கியம் எனும் வகைக்குள் மட்டுமே அடக்க முடியாதவை ஜே. பி. சாணக்யாவின் படைப்புகள். ஆதவன் தீட்சண்யாவின் படைப்புகளில் அரசியல்ரீதியான அழுத்தம் அதிகம். கு. உமாதேவி, பாரதி நிவேதன், யாழன் ஆதி, வெ. வெங்கடாசலம் போன்றோரும் இக்காலத்தில் எழுதியுள்ளனர். தலித் விமர்சனம், கலை என்று செயல்பட்ட ராஜ்கௌதமனும் கே. ஏ. குண சேகரனும் சுயசரிதை நூல்கள் தந்தனர். பாமா, சிவகாமி, இமையம் ஆகியோரின் படைப்புகளும் ரவிக்குமாரின் கட்டுரைகளும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் பெற்றுள்ளன.

இக்கால வெளியில் நிலைபெற்ற தலித் இலக்கியத்திற்கு அடிப்படையாக 1990களில் நடத்தப்பட்ட விவாதங்களும் சில அழுத்தமான படைப்பு முயற்சிகளும் இருந்தன. இப்புத்தாண்டில் எழுதப்பட்ட படைப்புகள்தாம் புத்தாயிரத்தில் தொகுப்புகளாயின. தலித் இலக்கியத்தின் போக்கு குறித்த குழப்பங்களும் அக்காலத்தில் எழுந்தன. தலித் வாழ்வைப் படைப்பாக்குதல், பொதுவான இலக்கியச் சூழலின் அங்கீகாரத்தைக் கோருதல் எனும் அம்சங்களை நிறைவுசெய்துவிட்ட தலித் இலக்கியம் அடுத்து என்ன செய்வது? என்று குழம்பி நிற்பது உண்மைதான்.

தற்காலத்தில் தலித் வாழ்வை எழுதிமுடித்துவிட்டதாகக் கருதும் எழுத்தாளர்கள் பலரும் எழுதுவதைக் குறைத்துக்கொண்டதோடு புனைவல்லாத எழுத்துக்களிலும் கவனம் செலுத்துபவர்களாக மாறிவிட்டனர். 1990களில் தலித் இலக்கியம் குறித்து முன்வைக்கப்பட்ட வரையறைகள் இவ்வெழுத்துக்களைக் கட்டுப்படுத்திவிட்டன. தலித் வாழ்வின் பல்வேறு பரிணாமங்களை முன்வைப்பதற்கு மாறாக வாழ்வைத் தட்டையாகப் புரிந்துகொள்ளவும் காரணமாகிவிட்டன. தலித் இலக்கியம்-பண்பாடு குறித்த வரையறைகளை சாதியச் சமூகம் தங்களுக்கு எதிரான ‘கலகமாக’க் கருதாமல் தலித்துகளுக்குரிய அடையாளங்களாக அங்கீகரித்ததுதான் மிச்சம். வரையறைகளை வகுத்தவர்களே அதைக் காப்பாற்ற முடியாமல் தடு மாறிப்போய்விட்டார்கள். பதிப்புச் சூழலின் சாதகமான நிலை, வரையறைக்கு வெளியே எழுதப்பட்ட படைப்புகள் ஆகிய பின்புலத்தில் தங்களின் எழுத்தைப் பொதுவான எழுத்தாகப் பார்க்கக் கோரும் தலித் படைப்பாளிகளின் குரல் இக்காலத்தில் முனைப்பாக வெளிப்பட்டது. அதைப் புரிந்துகொள்வதற்கு மாறாக இக்குரல்களைத் தலித்துகளுக்கு எதிரானதாகச் சித்தரிப்பதில் பயனேதுமில்லை. அடையாளம்சார் எழுத்தின் இவ்வகை “மயக்கம்” குறித்துத் தலித் படைப்பாளிகளே உப்பக்கம் காண வேண்டும்.

திராவிட இயக்கம், பெரியார் மீதான விமர்சனத்தை 1990களில் எழுந்த புதிய அரசியல் சொல்லாடல்களின் பின்னணியில் விவரித்த வகையில் தலித் அறிவுலகம் திருப்பத்தை எட்டியது. பிராமணரல்லாத திராவிடக் கட்சிகளில் செல்வாக்குப் பெற்ற இடைநிலைச் சாதியினரின் வன்முறைகள், வலிமைபெற்ற தலித் அமைப்புகள் ஆகியவற்றின் பின்புலத்தில் எழுப்பப்பட்ட இவ்விமர்சனங்களைத் தமிழ் அறிவுலகம் கடுமையாக எதிர்கொண்டது. இதன் தொடர்ச்சியாகத் தலித்துகளின் தனித்துவத்தை நிறுவிக்காட்டும் தலித் வரலாறு சார்ந்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. திராவிட இயக்கத்தின் மீதான விமர்சனத்திற்கு மாற்றாகத் தலித் அடையாளத்தை வளர்த்தெடுக்கும் நோக்கில் தலித் வரலாற்றைக் கட்டமைக்க, தலித் அறிவுஜீவிகள் எடுத்த முயற்சிகளைத் தலித் அரசியல் அமைப்புகளால் இனங்காண முடியவில்லை. எதிர்ப்பைக் கட்டமைக்கத் தேர்தலை மட்டுமே ஒரே வாய்ப்பாக அவை நம்பி இயங்கின. தேர்தல் அரசியல் தரும் நெருக்கடிகளும் தொலை நோக்குப் பார்வையற்ற அரசியல் தலைமைகளும் தலித் அரசியல் கட்சிகளைக் கூட்டணி, கூட்டணிக்கான சமரசம் என்னும் நிலைமையை நோக்கி விரட்டின. அமைப்பின் பயன், அரசியல் ஆதாயம் என்னும் எல்லைக்குள் அது சுருங்கிப்போனது. தலித் அடையாளங்களை நிறுவும் கருத்தியலை அந்த இயக்கங்களால் முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. திராவிட இயக்கம் குறித்த விமர்சனங்களையும் தலித் வரலாறு குறித்த ஓர்மையையும் முன்னிறுத்தி இயங்கிய ரவிக்குமார் அரசியலில் நுழைந்ததோடு திராவிடக் கட்சி அரசியல் குறித்த விமர்சனத்தைக் கைவிட்டுவிட்டார் என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். ஆனால் தலித் வரலாறு எனும் திசையில் நம்பிக்கை தரத்தக்க முயற்சிகள் வெளிப்பட்ட காலமாகப் புத்தாயிரத்தின் இந்த முதல் பத்தாண்டுகளைச் சொல்ல முடியும்.

ரவிக்குமார் 2003 முதல் 2004வரை தாய் மண் இதழில் நந்தன் வரலாறு குறித்து எழுதிய தொடர், சாகித்திய அகாடமி வெளியிட்டுள்ள கௌதம சன்னாவின் க. அயோத்திதாசர், கோ. ரகுபதியின் ஆதி மருத்துவர், பூவிழியன் எழுதிய கே. பி. எஸ். மணி, தலித் தலைவர்களுள் ஒருவரான டி.எம். மணி எழுதிய செந்தமிழ் நாட்டுச்சேரிகள், சாதி ஒழிந்தது ஆகிய நூல்கள், முதன்முறையாக 400 பக்க அளவில் நூலுருப் பெற்றுள்ள அன்பு பொன்னோவியத்தின் உணவில் ஒளிந்திருக்கும் சாதி, தமிழவேளும் வடிவேல் ராவணனனும் எழுதியுள்ள இம்மானுவேல் சேகரன் குறித்த நூல்கள், எழில். இளங்கோவன் எழுதிய அருந்ததியர் இயக்க வரலாறு உள்ளிட்ட சிறிதும் பெரிதுமான நூல்கள், 1920களில் இலங்கையிலிருந்து வெளிவந்த ஆதிதிராவிடன் இதழின் இரா. பாவேந்தன் தொகுத்த முதல் தொகுதி, நான் எழுதிய தீண்டப்படாத நூல்கள், வரலாற்றை மொழிதல் ஆகிய நூல்கள் கடந்த பத்தாண்டுகளில் வெளியாகியுள்ள வரலாறு சார்ந்த நூல்களாகும். 2009இல் மதுரை எழுத்துப் பதிப்பகம் வெளியிட்டுள்ள நான்கு நூல்கள் தலித் வரலாறு குறித்த திசையில் முக்கிய வரவுகளாகும். இக்காலகட்டத்தில் மறுபதிப்பு பெற்ற நூல்கள் முதுகுளத்தூர் கலவரம், முதுகுளத்தூர் பயங்கரம், புத்தர் அருள் அறம் ஆகியவை. அ. ஜெகநாதன் பதிப்பித்த முதுகுளத்தூர் குறித்த நூல்கள், தலித் அடையாளம் தீவிரமாகப் பேசப்பட்ட 1990களில் வெளியாகியிருந்தால் அதன் அர்த்தம் மேலும் பொருத்தம் பெற்றிருக்கும். மதுரையிலிருந்து அ. தமிழ்முரசு தொகுத்துள்ள சிவப்பு ஏடு எனும் நூல் பேசப்பட வேண்டிய ஒன்று. 1990களில் மதுரை வட்டாரத்தில் கொல்லப்பட்ட 27 தலித்துகளின் வரலாற்றை வாழ்க்கைக் குறிப்புகளோடும் புகைப்படத்தோடும் இத்தொகுப்பு தந்துள்ளது. இவை தவிர தீண்டப்படாத தியாகம், விடுதலை வீரர் ராஜீ, ரெட்டியூர் பாண்டியன், வஞ்சிநகரம் கந்தன், புதைந்த பாதை போன்ற சிறு நூல்கள் வெளியாகி வட்டார வரலாறு, நுண் வரலாறு என அர்த்தப்பட்டுள்ளன. 2008ஆம் ஆண்டு திருமாவளவனின் பிறந்த நாளை ஒட்டி 25 நூல்கள் வெளியிடப்பட்டன. திருமாவளவன் குறித்த நூல்களோடு சகஜானந்தர் போன்றோரின் நூல்களும் அவற்றில் அடங்கும். போதி, கலகம், பரிணாமம் போன்ற தலித் வரலாற்றைப் பேசும் இதழ்களும் இக்காலத்தில் வெளிவரத் தொடங்கியுள்ளன.

பத்தாண்டு என்னும் காலக் கோட்டில் வெளியான இவ்வரலாற்று நூல்கள் கூறும் சேதிகள் பல. தலித் ஆளுமைகள், போராட்டங்கள், இதழ்கள் என்று வெளிப்பட்ட இவற்றுள் தலித் இயக்கங்களின்/தலைவர்களின் கருத்தியல், வெற்றி தோல்விகள், அரசியல் பயணம் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள முடிகிறது. நம் வரலாற்று நம்பிக்கைகளைப் புரட்டிப் பார்க்கும் வலிமைகொண்ட ஆதாரங்கள் இவற்றில் உள்ளன. இக்காரணத்தினாலேயே இவை மௌனமாக்கப்படவும் செய்கின்றன. இந்நூல்கள் முன்வைக்கும் கருத்தியலுக்கு எந்த மதிப்பையும் தந்துவிடக் கூடாதென்று தமிழ் அறிவுலகம் விரும்புகிறது. தலித் அரசியலை, சூழலில் செல்வாக்குப் பெற்றிருக்கும் பெரும் அதிகார அரசியலின் உப அடையாளமாகக் காட்டும் போக்கை மறுப்பதோடு, இது போன்ற ஏமாற்றங்களிலிருந்து விடுபடும் விழிப்புணர்வையும் இப்பிரதிகள் கொண்டிருக்கின்றன.

ஆதிதிராவிடன் இதழ் குறித்து தொகுப்பு ஒன்று வெளியான பின்னாலும் அவ்விதழைக் கற்பனை இதழ் என்று சொன்ன பொய்யை யாரும் மாற்றிக்கொள்ளவில்லை. (எஸ்.வி. ராஜதுரையும் வ. கீதாவும் எழுதிய பெரியார் சுயமரியாதை சமதர்மம் என்னும் நூலின் முதல் பதிப்பில் (1996) இடம்பெற்ற இத்தவறான கருத்து அந்நூலின் திருத்தப்பட்ட பதிப்பிலும் (2009) மாற்றப்படவில்லை.) எம். சி. ராஜா பற்றித் தமிழில் உலவிய அத்துணை கதைகளும் அவரைக் குறித்த ஒருவரியைக் கூட வாசிக்காமலேயே உருவானவை என்பதைத் தற்போது வெளிவந்துள்ள எம். சி. ராஜா சிந்தனைகள் எனும் தொகுப்பைக் காணும்போது அறிய முடிகிறது. தலித் ஆவணங்களைப் பாதுகாத்து ஒன்றிரண்டு நூல்களை மட்டுமே எழுதிய அன்பு பொன்னோவியம், தி. பெ. கமலநாதன் ஆகியோரும் தலித் ஆளுமைகள் குறித்து எழுதிய ஏ. பி. வள்ளிநாயகமும் புத்தாயிரத்தில் மறைந்தனர். தலித் இயக்கம் குறித்த ஸ்தூலமான ஆதாரங்களோடு எழுதிய அன்பு பொன்னோவியம், தி. பெ. கமலநாதன் ஆகியோரைவிடவும் அரசியல் விருப்பத்தை எழுத்தாக்கிய ஏ. பி. வள்ளிநாயகம் தமிழ் அறிவுலகத்தால் கொண்டாடப்பட்டதன் காரணம், அவர் திராவிட அரசியலிலிருந்து தலித் அரசியலை வேறுபடுத்திக் காட்டாததுதான்.

இத்தலித் வரலாற்று நூல்களில் சில தவிர மற்றவை தேர்ந்த கோட்பாட்டு அணுகுமுறைகளோடு எழுதப்படாமல் பதிவு என்னும் அளவில் எழுதப்பட்டவையாகவே இருக்கின்றன என்பது ஒரு பலவீனம் என்றாலும் வளர்த் தெடுக்கப்பட வேண்டிய கூறுகள் இவற்றுள் நிரம்பவே உள்ளன. மேலும் இவ்வரலாற்று நூல்களிலிருந்து திரட்டப்படும் கருத்தியலை அரசியலோடு இணைக்கும் ஓர்மையும் அதற்கான சவாலை எதிர்கொள்ளும் துணிச்சல் மிக்க அரசியல் அமைப்புகளும் இல்லாமல் போய்விட்டன. இந்நிலையில் பழைய வரலாற்றைத் தேடுவது, எழுதுவது ஓர் அடையாளம் என்கிற அளவிலேயே நின்றுவிடக்கூடிய அபாயமும் இருக்கிறது. இந்நூல்கள் குறித்துத் தலித் அல்லாதோர் மட்டுமல்ல, தலித் அடையாளத்தின் மூலம் ஊடக வாய்ப்பைப் பெற்றுவிட்ட தலித் அறிவுஜீவிகள் சிலரும் மௌனம் காக்கின்றனர். அவர்களே இந்தப் பத்தாண்டுகளில் எதுவுமே நடைபெறவில்லை என்கிற தன்னல நோக்குடைய கருத்துகளையும் முன்வைக்கின்றனர்.

தலித் சாதிகளாகச் சொல்லப்படும் வகுப்பினரின் தனித்த வரலாற்றுத் தேடலும் வரலாற்று எழுதியலும் முக்கிய விடயங்களாக உள்ளன. தேவேந்திரர்களின் இம்மானுவேல் சேகரன் குறித்த வரலாறும் முதுகுளத்தூர் கலவரம் குறித்து அவ்வரலாற்றாளர்கள் பேசும் நோக்கும் புதியவை. அருந்ததியர்களின் வரலாற்றுத் தேடல் தொடக்க நிலையிலேயே உள்ளது எனினும் அது குறித்த தீவிர விழிப்புணர்வை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். தலித் அரசியலில் தங்கள் பிரதிநிதிகளின் இடம் குறித்த வேட்கை நிகழ்கால அரசியலில் தங்களின் இருப்பு குறித்த ஆதங்கமாகவும் இருக்கிறது. தீவிரம் பெற்றுள்ள தலித் அரசியல் கட்சிகள் சொந்தச் சாதி அடையாளத்தில் சுருங்கிப் போனதின் விளைவாகவே இதனைப் பார்க்க முடியும். அதே வேளையில் தங்களைத் தனித்த சாதியாக நிறுத்திக்காட்டிப் பிற தலித் சாதிகளைத் தாழ்ந்தவையாகப் பார்க்கும் சாதிய மனோபாவமும் வரலாற்றுரீதியான நியாயத்தைப் பெற்றுத் தந்துவிட இவ்வரலாற்று நூல்கள் முயல்கின்றன. இவ்வாறான நியாயங்கள் தவிர இத்தகைய போக்கிற்குப் பின்னால் நின்று தங்கள்மீதான தலித் விமர்சனத்திலிருந்து காப் பாற்றிக்கொள்ளும் பிராமணரல்லாத அரசியல்வாதிகளும் அறிவுஜீவிகளும் இதிலிருக்கிறார்கள். தலித்துகள் இலக்கியத் தளத்திலும் அரசியல் தளத்திலும் நடத்திய போராட்டங்களுக்கான பயன்களையே 2000த்தில் பதிப்பு வாய்ப்புகளாக அரசியல் அங்கீகாரமாகப் பெற்றனர். ஆனால் கடந்த காலத்தைப் போன்றே போராட்டங்கள் இப்பத்தாண்டில் குறைந்துள்ளன. அவர்கள் படைப்புத் தளத்திலும் அரசியல் தளத்திலும் எவ்விதச் சலுகையையும் கோராமல் செயல்பட்டால்தான் கடந்த காலப் போராட்டங்களின் மதிப்பு காப்பாற்றப்படும்.
[b]
Back to top Go down
Sponsored content





கடந்த பத்தாண்டுகளில் தமிழ் நாவல்களின் போக்குகள் கடந்து செல்ல வேண்டிய தூரம் Empty
PostSubject: Re: கடந்த பத்தாண்டுகளில் தமிழ் நாவல்களின் போக்குகள் கடந்து செல்ல வேண்டிய தூரம்   கடந்த பத்தாண்டுகளில் தமிழ் நாவல்களின் போக்குகள் கடந்து செல்ல வேண்டிய தூரம் Icon_minitime

Back to top Go down
 
கடந்த பத்தாண்டுகளில் தமிழ் நாவல்களின் போக்குகள் கடந்து செல்ல வேண்டிய தூரம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» தமிழ் குறுக்கெழுத்து போட்டி - உங்கள் தமிழ் திறமைக்கு சவால். உருவாக்கம் .திரு.கார்த்திகேயன்
» மதங்களைக் கடந்த மனிதர்கள்
» அழகாய் கடந்த நாட்களே
» இன்று ஒரு தகவல்
» இதுவும் கடந்து போகும்....

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: