ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இம்மாதம் 21ஆம் திகதி புதன்கிழமை அலரி மாளிகையில் நடைபெறும் விசேட நிகழ்வில் சம்பிரதாயபூர்வமாகப் பதவி ஏற்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதனை அடுத்து அடுத்த நாள் 22ஆம் திகதி வியாழக்கிழமை நாடாளுமன்றம் கூடும் என்றும் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட புதிய நடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.பிக்கள் சபாநாயகர் முன்னிலையில் அன்றைய தினம் பதவிப் பிரமாணம் செய்வர் என்றும் அரசாங்க வட்டாரங்கள் நேற்றிரவு தெரிவித்தன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன் புதிய அமைச்சர்கள் பதவியேற்பர். கடந்த அரசில் இருந்த 103 அமைச்சர்களின் எண்ணிக்கையை முப்பந்தைந்தாகக் குறைக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அமைச்சரவைப் பதவியேற்பை அடுத்து புதிய நாடாளுமன்றத்துக்கு தெரிவான உறுப்பினர்களின் பதவியேற்பு அடுத்த நாள் 22 ஆம் திகதி புதிய சபாநாயகர் முன்னிலையில் இடம்பெறும்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியேற்புக்கு முன்னர், புதிய சபாநாயகர், பிரதிச் சபாநாயகர் ஆகியோர் தெரிவு செய்யப்படுவர்.
இதேவேளை இதுவரை அறிவிக்கப்பட்ட 180 தொகுதி களுக்கான முடிவில் 117 ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புப் பெற்றுள்ளது. இந்த எண்ணிக்கை அறுதிப் பெரும்பான்மையான 113 ஆசனங்களை விட நான்கு ஆசனங்கள் அதிகமாகும்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 130 ஆசனங்களைப் பெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதுவரை முடிவு அறிவிக்கப்படாத கண்டி, திருகோணமலை மாவட்டங்களின் முடிவுகளுடன் 130 ஆச னங்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெறும்.
எதிர்வரும் 20ஆம் திகதி அந்த இரு மாவட்டங்களில் உள்ள சில வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு முடிந்த பின் அன்று முடிவுகள் அறிவிக்கப்படும்.
கடந்த 11 மாதங்களில் மூன்றாவது வெற்றியை ராஜபக்ஷ பெற்றுள்ளார் என வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அரசமைப்பை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மாற்றுவதற்கு 150 ஆசனங்கள் ஜனாதிபதிக்கு தேவையாகும். [b]