தனக்கு மேல் தன்பிள்ளை (சிறுகதை)
பூங்குடி ஒரு பெரிய கிராமம். அதைச் சுற்றிப் பல ஊர்கள் இருந்தன. பூங்குடியிலிருந்து பல மினி பஸ்கள் கிராமங்களுக்குச் சென்று வந்தன. அவ்வூரின் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய ஆய்வகக் கட்டடம் ஏற்பாடாகி இருந்தது. அந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் வருகை தருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதே சமயம் —
உள்ளூரில் இருவர் சிறப்பாக அழைக்கப்பட்டிருந்தனர். ஒருவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் குணசேகரன்; மற்றவர் ஊர் பெரியவர் புலிப்பாண்டியன்.
விழா தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் தலைமை ஏற்றார். மேடையில் ஆசிரியர் குணசேகரன், பெரியவர் புலிப்பாண்டியன் இருவரும் அமர்ந்திருந்தனர். மாவட்ட ஆட்சியர் பேசத் தொடங்கினார்.
""ஊர்ப் பெருமக்களே! நான் இன்று மாவட்ட ஆட்சியராக இருந்தாலும் இந்தப் பூங்குடியில் பிறந்தவனே! என் தந்தைதான் புலிப் பாண்டியன். என்னுடைய ஆசிரியர் தான் குணசேகரன். அவர்களால்தான் நான் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறேன்,'' என்று ஆட்சியர் பேசியதும் கூடியிருந்த மக்கள் கரவொலி எழுப்பினர்.
அதே சமயம் —
குணசேகரனும், புலிப்பாண்டியன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அந்தப் பார்வைகளில் பழைய கால நிகழ்ச்சி ஒன்று படம் போல் ஓடத் தொடங்கியது.
பூங்குடியில் புலிப்பாண்டியன் ஒரு வித்தியாசமானவர். பெயருக்கேற்ற குணமுடையவர். அவருடைய மகன் பாண்டியராசன் ஒன்பதாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தான். அவனைத் திடீரென்று பள்ளிக்குச் செல்லவிடாமல் தடுத்து விட்டார். பல நாட்கள் பள்ளிக்கு வராத பாண்டியராசனைப் பற்றி விசாரிக்க ஆசிரியர் குணசேகரன் புலிப்பாண்டியன் வீட்டிற்கு வந்தார்.
புலிப்பாண்டியன் வீட்டுத் திண்ணையில் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார்.
தன்னுடைய பெரிய மீசையினைத் திருகியவாறு, ""என்ன வாத்தியாரே? ஏது இந்தப் பக்கம் வந்து விட்டீர்கள்?'' என்று புலிப்பாண்டியன் கேட்டார்.
""உங்களைப் பார்க்கத்தான் வந்தேன் ஐயா!'' என்று குணசேகரன் பணிவுடன் கூறினார்.
இருவருக்கும் ஒரே வயதாகத்தான் இருக்கும். இருந்தாலும் ஆசிரியர் பணிவன்புடன் பேசினார். இருவருக்கும் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்தன.
""நீங்கள் எதற்காக வந்திருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். பாண்டியராசன் இனிமேல் படிக்க வரமாட்டான்.''
""ஏன் ஐயா?''
""எங்கள் வீட்டுப் பண்ணையாள் ஓடிவிட்டான். பாண்டியராசன் மாடு மேய்க்கப் போகிறான். நான் மற்ற வேலைகள் பார்க்கிறேன்!''
""ஐயோ! பாண்டியராசன் மிகவும் நன்றாகப் படிப்பவன். எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு வந்து விடுவான். அவனை மாடு மேய்க்க விடக் கூடாது ஐயா!''
""அப்படியானால் நீங்கள் வாருங்கள் வாத்தியாரே அல்லது வேறு யாராவது ஏற்பாடு செய்யுங்கள்! என் மகன் என் சொல்படித்தான் கேட்க வேண்டும். எனக்குத் தான் உதவ வேண்டும். தெரியுமா?''
""நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் ஐயா! படிக்க வேண்டிய வயதில் மாடு மேய்க்க அனுப்பக்கூடாது!''
""நான் ஒரு வகுப்புக் கூடப் படிக்கவே இல்லை! நான் என்ன கெட்டுப் போய் விட்டேனா? என்னைவிட என் மகன் படிக்க வேண்டும் என்பது கட்டாயமா வாத்தியாரே?'' என்று புலிப்பாண்டி கேட்டார்.
""ஐயா! இரண்டாயிரம் வருடத்திற்கு முன் வாழ்ந்த வள்ளுவரே சொல்லியிருக்கிறார்!''
""என்ன சொல்லி இருக்கிறார்?''
""தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது!''
""அப்படியானால் என்ன வாத்தியாரே?''
""தன்னைவிடத் தன் பிள்ளை நன்றாகப் படிப்பதுதான் உலக மக்களுக்கு இனிமையைத் தரும் என்று வள்ளுவர் சொல்லி இருக்கிறார். நாம் படிக்கவில்லை என்பதற்காக நம் பிள்ளைகள் படிக்கக்கூடாது என்று தடுக்கக் கூடாது. நாம் ஐந்து வகுப்புப் படித்து விட்டோம் என்பதற்காக நம் பிள்ளை நான்கு வகுப்புத்தான் படிக்க வேண்டும் என்று நினைக்கவே கூடாது!'' என்று குணசேகரன் விளக்கினார்.
""வாத்தியாரே! நீர் சொல்வதற்காக இல்லை என்றாலும் வள்ளுவர் சொன்னதற்காக என் மகனைப் படிக்க அனுப்புகிறேன். என் தந்தை நிறையத் திருக்குறள் படித்தவர். அவரைப் போல் நான் படிக்காமல் ஊர் சுற்றியாகத் திரிந்து விட்டேன். நீர் சொல்வது என் தந்தையும் வள்ளுவரும் சொல்வது போல் இருக்கிறது. நீர் போகலாம். நாளைக்குப் பாண்டியராசன் படிக்க வருவான். வேறு பண்ணையாளுக்கு ஏற்பாடு செய்யும் வரை நானே மாடு மேய்க்கப் போகிறேன்!'' என்று மீசையை மீண்டும் முறுக்கினார். குணசேகரன் கும்பிடு போட்டுப் புறப்பட்டார்.
பழைய நிகழ்ச்சி படம் போல ஓடி முடிந்த வேளை, மாவட்ட ஆட்சியர் பாண்டியராசன் இரு மாலைகளைக் கொண்டு வந்து தந்தைக்கும், ஆசிரியருக்கும் அணிவித்து வணங்கினார்.
""மகனே! நீ ஊருக்கும் நாட்டுக்கும் நன்றாக உழைக்க வேண்டும்!'' என்று புலிப்பாண்டியன் மகிழ்வுடன் கூறினார்.