விவேகானந்தரும் அவரது சக துறவிகளும் கல்கத்தா நகரில் ஆன்மீகப் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம், துறவிகளுக்கு சொத்து கூடாது என்றாலும் தன் குருநாதர் ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு ஒரு கோயில் கட்ட வேண்டும் என்பது விவேகானந்தரின் ஆசை. அதற்காகப் பல இடங்களில் பேசி, சிறுகச் சிறுக பணம் சேர்த்து கங்கைக் கரை அருகே பேளூரில் நிலம் வாங்கப்பட்டது. நிலம் கையகப்படுத்துவதில் சில சட்டச் சிக்கல்கள் வேறு. வக்கீல், நீதிமன்றம் என்று அலைந்து திரிந்து ஒரு வழியாய் நிலம் கைக்கு வந்த போது, கல்கத்தா நகரைக் கொடிய பிளேக் நோய் தாக்கியது. விவேகானந்தரும் அவருடைய சீடர்களும் பிளேக் நோய் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர்.
நோய் தீவிரமடைந்து நகரமெங்கும் பரவ, பல உயிர்கள் பலியாயின. ஒரு பெரிய கூட்டத்துக்கு நிவாரணப் பணிகள் செய்ய பணத்துக்கு எங்கே போவதென்று துறவிகள் கையைப் பிசைந்துகொண்டு நிற்க, விவேகானந்தர் தயக்கமே இல்லாமல் சொன்னார்: “நம் பேலூர் நிலத்தை விற்று விடுவோம்”. சீடர்கள் முகத்தில் ஈயாடவில்லை. எவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கிய நிலம்! பிளேக் நோய்க்காக விற்பதா! மீண்டும் வாங்க முடியுமா? ராமகிருஷ்ணருக்குக் கோயில் கட்ட முடியுமா? என்ற கேள்விகள் எழுந்த போது, ”கோயில் கட்டுவதை விட மக்கள் சேவையே முக்கியம்” என்றார் விவேகானந்தர். நல்லவேளையாக, வேறு வகையில் நிதி திரட்ட முடிந்ததால் அந்த பேளூர் நிலம் தப்பிப் பிழைத்தது!
இன்றும் ராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம் அங்கே செயல்படுகிறது. இப்படிக் கையில் காசு இல்லாத இந்தத் தலைவரையும், ஒரு மக்கள் மாபெரும் தலைவராக மதித்தார்கள்; இன்றும் மதிக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம், விவேகானந்தரிடம் குடி கொண்டிருந்த தலைமைப் பண்புதான்.
இன்று நம் நாட்டிலே என்ன பற்றாக்குறை என்ற கேள்வியைக் கேட்டோமேயானால் யாரைக் கேட்கிறோம் என்பதைப் பொறுத்து பதில் வரும். தண்ணீர்ப் பற்றாக்குறை, சில்லறைப் பற்றாக்குறை, வேலை பற்றாக்குறை, உணவுப் பற்றாக்குறை, நல்ல சினிமா பற்றாக்குறை, ஏன் உண்மைக்கும் நேர்மைக்கும் பற்றாக்குறை என பலவிதமான பதில்கள் வரலாம். இந்தப் பற்றாக்குறைக்கெல்லாம் விவேகானந்தரைப் போன்ற தலைமைப் பண்பு கொண்ட தலைவர்கள் பற்றாக்குறைதான் காரணம்.
இன்றைக்கும் பல தலைவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்குப் போகும் இடமெல்லாம் மிகப் பெரிய கூட்டம் கூடுகிறது. மீடியா வெளிச்சத்தோடு பவனி வரும் தலைவர்கள்தான் இங்கு அதிகம். ஆனால் ஆட்சி மாறும் போது காட்சியும் மாறுகிறது. செல்வாக்கு செல்லாக் காசாகிப் போகிறது! பதவி வேறு கைக்குப் போனால் திரும்பிப் பார்க்கவும் ஆள் கிடையாது. ஆக, இன்றைய தலைவர்கள் பதவி பலத்தாலும், பண பலத்தாலும் சாதி மத ‘வோட்டு வங்கி’ பலத்தாலும் தங்கள் பின்னால் பெரிய கூட்டத்தைக் கூட்டுகிறார்கள். காரணங்கள் காணாமல் போகும்போது மக்களும் கை கழுவிப் போய் விடுகிறார்கள். இப்படிப்பட்ட தலைமையிடமிருந்து எப்படி ஆக்கபூர்வமான தலைமைப் பண்பை எதிர்பார்க்க முடியும்? பதவியே இல்லாத ஒருவருக்கு மக்கள் கூட்டம் கூட சாத்தியமா? பணபலம் இல்லாமல் தொண்டர் படை அமையுமா? சாதி மத பலம் இல்லாமல் கூட்டம் சேர்க்க முடியுமா? இதெல்லாம் நடக்கிற காரியமா என்றால், நடந்திருக்கிறது. சற்று ஒரு நூறு ஆண்டுகள் மட்டும் பின் நோக்கி செல்லலாம். நாம் வாழும் இந்த மண்ணில் தலைவர்களை, அவர்களின் கொள்கைக்காகவும், அன்புக்காகவும், தலைமைப் பண்புகளுக்காகவும் மக்கள் நேசித்திருக்கிறார்கள்.
உலக சரித்திரத்தை எடுத்துப் பார்த்தால் ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்க விடுதலைப் போரைத் தலைமை தாங்கி நடத்தினார். அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவர் அவர்தான். சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா விடுதலை இயக்கத்தை நெல்சன் மண்டேலா முன் நின்று நடத்தினார். அவரும் தென்னாப்பிக்காவின் குடியரசுத் தலைவராய் இருந்திருக்கிறார். எல்லா நாடுகளிலும் சுதந்திரப் போரை வழி நடத்திய தலைவர்தான் நாட்டின் உயர் பதவியை ஏற்றுக் கொண்டதாகச் சரித்திரம் சொல்கிறது. ஒரே ஒரு விதிவிலக்கு நம் நாட்டு காந்தி மட்டும்தான்! சுதந்திர விழா கொண்டாடும் நேரத்தில் அவர் அந்த இடத்திலேயே இல்லை. கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள நேரமில்லாமல் அவருக்கு அடுத்த வேலை. வங்காளத்தில் இந்து-முஸ்லீம் கலவரங்களைச் சமாதானப்படுத்த அங்கே போய்விட்டார்! காந்தியின் மரணத்தின்போது பல தலைவர்கள் கலந்துகொண்டார்கள். அவருடைய ஆளுமைக்காக, தலைமைப் பண்புக்காகக் கூடிய கூட்டம் அது! பல்வேறு உலக நாடுகள் அவர் தபால் தலையை வெளியிட்டுப் பெருமை பெற்றன. அவர் இறந்துபோய் அறுபது ஆண்டுகள் கழித்தும் அவர் பெயர் சொல்லித்தான் அரசியல் நடத்த வேண்டியிருக்கிறது. இது அத்தனையும் எந்தப் பதவியிலும் இருந்திராத ஒரு தலைவனுக்காக!
பாரதி என்றாலே பலருக்கு நினைவுக்கு வருவது அவரது முறுக்கு மீசைதான்! மீசை வைத்துக்கொள்வது பெரிய விஷயமா என்றால் அந்தக் காலத்தில் அவர் பிறந்த சமூகத்தில் அது பெரிய புரட்சிதான். தேவையற்ற சட்டதிட்டங்களை மீறியதால் அவர் தன் சமூக மக்களால் தள்ளி வைக்கப்படும் நிலை ஏற்பட்டது. தாழ்த்தப்பட்டவனுக்குப் பூணூல் அணிவித்ததும், மனைவியுடன் கை கோர்த்து கிராம வீதிகளில் நடந்து போனதும், சாதி பேதங்களைச் சாடியதும், பாரதியைச் சாதி பிரஷ்டம் செய்யத் தூண்டினவே தவிர, ஒரு சாதி வோட்டு வங்கியை உருவாக்கப் பயன்படவில்லை.
காந்தியும், விவேகானந்தரும், பாரதியும் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர்கள். பதவி, பணம், சாதி பலம் எதுவும் இல்லாமலேயே இன்னமும் நாட்டில் சிறந்த தலைவர்கள் என்று போற்றப்படுகிறார்கள். “ஜெயிலுக்குப் போகத் தயங்காதே. சட்டப்படி அளிக்கப்பட்ட தண்டனையை ஏற்றுக் கொள்” என்று சொல்லி அதன்படி நடந்து காட்டிய மாகத்மா இருந்த இடத்தில், இன்றைய தலைவர்கள் அடாவடியாகத் தொண்டர்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து விடுவிக்கும் காட்சியைப் பார்க்கிறோம். கஷ்டப்பட்டுப் பணம் சேர்த்து வாங்கிய நிலத்தையும் பொது நன்மைக்காக விற்றுவிடத் தயாராக இருந்த விவேகானந்தர் இருந்த இடத்தில், சொத்துக் குவிப்பு வழக்கில் பல தலைவர்கள் பிடிபடுகிறார்கள். தன் சாதி செய்த தவறுகளைச் சாட்டையடி கவிதையால் விளாசிய பாரதி இருந்த நாட்டில் இன்று சாதி சங்கங்கள், சாதி அடிப்படையில் கட்சிகள்!
அரசியல் தலைவர்கள் மட்டுமே மாறினால் போதுமா? தலைமை என்பது எல்லா நிலைகளிலும் இருக்கும் ஒரு பதவி. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு தலைவன், தலைவி தேவை. ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். சென்ற நூற்றாண்டின் தலைவர்கள் போல் மீண்டும் பலர் எழ வேண்டுமானால் முதலில் அவர்களுடைய தலைமைப் பண்புகள் என்ன என்பதை ஆராய வேண்டும். காந்தி, விவேகானந்தர், பாரதியைப் போன்றோர் பணம், பதவி ஏதும் இல்லாமல், இருந்தாலும் மக்களின் மரியாதையை, அன்பை, ஆத்மார்த்த வணக்கத்தைப் பெற்ற தலைவர்களாக அவர்களுடைய குணநலன்கள் எவையெவை காரணமாக இருந்தன? இந்தத் தலைமுறை அவற்றைப் படித்துத் தெரிந்துகொண்டு நடக்க வழி இருக்கிறதா