சென்னை: பார்வதி அம்மாள் தமிழகம் வந்து சிகிச்சை பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சட்டசபையில் இதுகுறித்து சட்டமன்ற விதி 110ன் கீழ் முதலமைச்சர் கருணாநிதி அறிக்கை ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த ஏப்ரல் மாதம் 16ந் தேதி இரவு, பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மலேசியாவிலிருந்து சென்னைக்குச் சகிச்சைக்காக வந்த போது, அவர்கள் சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். பார்வதி அம்மாள் மின்னஞ்சலின் மூலம் கேட்டுக் கொண்டபடி, மருத்துவச் சிகிச்சைக்குத் தமிழ்நாட்டிற்கு வந்து மருத்துவமனையிலே சிகிச்சை பெறுவதை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு மத்திய அரசு ஆராய்ந்து அனுமதியளிக்கலாம் என்று பரிந்துரைக் கடிதம் மத்திய உள் துறைச் செயலாளருக்கு தமிழக அரசால் அனுப்பி வைக்கப்பட்டது. மனிதாபிமான அடிப்படையில் பார்வதி அம்மாளை சில நிபந்தனைகளின் பேரில் தமிழகத்திற்கு வர அனுமதிக்கலாம், பார்வதி அம்மாளின் தமிழக வருகை மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே இருக்க வேண்டும். அவர் மருத்துவமனையிலேதான் தங்க வேண்டும் தவிர, வேறெங்கும் தங்கக் கூடாது. அரசு மருத்துவமனையிலே அவர் சிகிச்சை பெற விரும்பினால், தமிழக அரசு அதற்குத் தேவையான உதவிகளையெல்லாம் செய்திட வேண்டும். அவர் எந்த அரசியல் கட்சியினரோடோ, குறிப்பாக தடை செய்யப்பட்ட இயக்கங்களோடு பங்கு வைத்திருப்பவர்களோடு, எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது. பெயர் குறிப்பிடப்பட்ட அவருடைய உறவினர்களோடு மட்டுமே தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.