என்னைக் கொல்ல சதி : ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி நளினி புகார் PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
on 13-05-2010 22:27
Favoured : 2
Published in : செய்திகள், தமிழகம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதியாக தண்டனை அனுபவித்து வருபவர் நளினி. இவர் மீது சமீபத்தில் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளும், சர்ச்சைகளும் கிளம்பிய வண்ணம் உள்ளன. இந்நிலையில், தன்னைக் கொல்ல சதி நடப்பதாகவும், தனது உணவில் மருந்தைக் கலந்து கொல்வதற்கு சதி வேலைகளும், முயற்சிகளும் நடப்பதாகவும் நளினி புகார் ஒன்றைத் தெரிவித்துள்ளார். அந்தப் புகார் சிறைத்துறை கூடுதல் டிஜிபி ஷ்யாம் சுந்தருக்கு அனுப்பப்பட்டுள்ளது.Image
இந்தப்புகாரில், தன்னைக் கொல்ல சதி நடப்பதாகத் தெரிவித்த நளினி, வேலூர் சிறையில, புதுக் குற்றவாளி தொகுதியில் இருந்த அனைவரையும் இடம் மாற்றி, பழைய குற்றவாளிகள் தொகுதியில் தங்க வைத்துள்ளனர். ஆனால், அங்கு என்னை மட்டும் புதுக்குற்றவாளித் தொகுதியிலேயே தங்க வைத்துள்ளனர். புதுக் குற்றவாளி தொகுதியான 6-ல் நான் மாத்திரமே உள்ளேன். 2, 3, 4, 5, 7 மற்றும் 8 தொகுதிகளிலும் சுமார் 200 பேர் அடைக்கக் கூடிய இடத்தில் தற்போது யாருமில்லை. மேலும், எனக்கு 'ஏ' வகுப்பு உண்டு, கூடவே ஒரு உதவியாளரும் உண்டு. ஆனால் அது எனக்கு மறுக்கப்பட்டுள்ளது. நான் இருக்கும் இடம் தனிமையாகவும், சுத்தம் செய்யப்படாமலும் உள்ளது. இந்நிலையில் என்னுடன் சமையல் அறையிலும், தொகுதியிலும் பணியில் இருக்கும் பெண் காவலர்கள் என் உணவில் மருந்து கலக்க முயற்சிக்கின்றனர். அங்கு பணி புரியும் ஜெயிலர்கள் நான் இருக்கும் இடத்தில் எதை வேண்டுமானாலும் கொண்டு வந்து போட்டுவிட்டு, என்னைச் சோதனை செய்து எடுத்ததாகவும் புகார் கூற வாய்ப்புக்கள் இருக்கின்றன என்று அந்தப் புகாரில் நளினி தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவருடைய புகாரை விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கோவை சிறைத்துறை அதிகாரி டிஐஜி கோவிந்தராசன் தலைமையிலான குழு முழு விசாரணை நடத்தி இரண்டு நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யும், இந்தக்குழுவில் பெண் சிறை அதிகாரி ஒருவரும் இடம்பெறுவார் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. நளினி தொடர்ந்து பலமுறை தான் சித்ரவதை செய்யப்படுவதாகப் புகார் கூறியுள்ளதும், கடந்த மாதம் அவரது அறையிலிருந்து செல்போன், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.