BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஅமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Button10

 

 அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு

Go down 
2 posters
Go to page : 1, 2  Next
AuthorMessage
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Empty
PostSubject: அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு   அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Icon_minitimeMon May 24, 2010 1:59 pm

முதல் பாகம்
------------------

1. தோணித்துறை



காவேரி தீரம் அமைதி கொண்டு
விளங்கிற்று. உதயசூரியனின் செம்பொற் கிரணங்களால் நதியின்
செந்நீர்ப்
பிரவாகம் பொன்னிறம் பெற்றுத் திகழ்ந்தது. அந்தப் புண்ணிய
நதிக்குப் 'பொன்னி'
என்னும் பெயர் அந்த வேளையில் மிகப் பொருத்தமாய்த் தோன்றியது.
சுழிகள்
- சுழல்களுடனே விரைந்து சென்றுகொண்டிருந்த அந்தப் பிரவாகத்தின்
மீது
காலை இளங்காற்று தவழ்ந்து விளையாடி இந்திர ஜால வித்தைகள்
காட்டிக் கொண்டிருந்தது.
சின்னஞ்சிறு அலைகள் ஒன்றோடொன்று லேசாக மோதிய போது சிதறி
விழுந்த ஆயிரமாயிரம்
நீர்த்துளிகள் ஜாஜ்வல்யமான ரத்தினங்களாகவும்,
கோமேதகங்களாகவும், வைரங்களாகவும்,
மரகதங்களாகவும் பிரகாசித்துக் காவேரி நதியை ஒரு மாயாபுரியாக
ஆக்கிக்
கொண்டிருந்தன.

ஆற்றங்கரையில் ஆலமரங்கள் நெடுந்தூரத்துக்கு
நெடுந்தூரம் விழுதுகள் விட்டு விசாலமாய்ப் படர்ந்திருந்தன.
மரங்களில்
பழைய இலைகள் எல்லாம் உதிர்ந்து புதிதாய்த் தளிர்விட்டிருந்த
காலம். அந்த
இளந் தளிர்களின் மீது காலைக் கதிரவனின் பொற்கிரணங்கள் படிந்து
அவற்றைத்
தங்கத் தகடுகளாகச் செய்து கொண்டிருந்தன.

கண்ணுக்கெட்டிய தூரம் தண்ணீர் மயமாய்த்
தோன்றிய அந்த நதியின் மத்தியில் வடகிழக்குத் திசையிலே ஒரு
பசுமையான தீவு
காணப்பட்டது. தீவின் நடுவில் பச்சை மரங்களுக்கு மேலே
கம்பீரமாகத் தலை
தூக்கி நின்ற மாளிகையின் தங்கக் கலசம் தகதகவென்று ஒளிமயமாய்
விளங்கிற்று.


*******


அந்த மனோகரமான காலை நேரத்தில் அங்கு எழுந்த
பலவகைச் சத்தங்கள் நதி தீரத்தின் அமைதியை நன்று
எடுத்துக்காட்டுவனவாயிருந்தன.
விசாலமான ஆலமரங்களில் வாழ்ந்த பறவை இனங்கள் சூரியோதயத்தை
வரவேற்றுப்
பற்பல இசைகளில் கீதங்கள் பாடின. அந்த இயற்கைச் சங்கீதத்துக்கு
நதிப்
பிரவாகத்தின் 'ஹோ' என்ற ஓசை சுருதி கொடுத்துக் கொண்டிருந்தது.
உணவு தேடும்
பொருட்டு வெளியே கிளம்புவதற்கு ஆயத்தமான பறவைகள் தம் சிறகுகளை
அடித்து
ஆர்ப்பரித்தன. தாய்ப் பறவைகள் குஞ்சுகளிடம் கொஞ்சிக் கொஞ்சி
விடைபெற்றுக்
கொண்டிருந்தன.

ஆலமரங்களுக்கு நடுவே ஓங்கி வளர்ந்திருந்த
அரச மரம் தன் இலைகளைச் சலசலவென்று ஓசைப்படுத்தி 'நானும்
இருக்கிறேன்'
என்று தெரியப்படுத்திற்று.

நதி ஓரத்தில் ஆலம் விழுதுகளில் கட்டிப்
போட்டிருந்த தெப்பங்களைத் தண்ணீர்ப் பிரவாகம் அடித்துக் கொண்டு
போவதற்கு
எவ்வளவோ வீராவேசத்துடன் முயன்றது; அது முடியாமற் போகவே,
'இருக்கட்டும்,
இருக்கட்டும்' என்று கோபக் குரலில் இரைந்து கொண்டே சென்றது.

கரையில் சற்றுத் தூரத்தில் ஓர் ஆலமரத்தினடியில்
குடிசை வீடு ஒன்று காணப்பட்டது. அதன் கூரை வழியாக அடுப்புப்
புகை வந்து
கொண்டிருந்தது. அடுப்பில் கம்பு அடை வேகும் வாசனையும் லேசாக
வந்தது.


குடிசையின் பக்கத்தில் கறவை எருமை ஒன்று
படுத்து அசைபோட்டுக் கொண்டிருந்தது. அதன் கன்று அருகில் நின்று
தாய்
அசைபோடுவதை மிக்க ஆச்சரியத்துடனே உற்று நோக்கிக்
கொண்டிருந்தது.

டக்டக், டக்டக், டக்டக்!

அந்த நதிதீரத்தின் ஆழ்ந்த அமைதியைக் கலைத்துக்
கொண்டு குதிரைக் குளம்படியின் சத்தம் கேட்டது.

டக்டக், டக்டக், டக்டக்...!

வரவர அந்தச் சத்தம் நெருங்கி வந்து கொண்டிருந்தது.
இதோ வருகிறது, நாலு கால் பாய்ச்சலில் ஒரு கம்பீரமான குதிரை.
அதன் மேல்
ஆஜானுபாகுவான வீரன் ஒருவன் காணப்படுகிறான். வந்த வேகத்தில்
குதிரையும்
வீரனும் வியர்வையில் முழுகியிருக்கிறார்கள். தோணித்துறை
வந்ததும் குதிரை
நிற்கிறது. வீரன் அதன் மேலிருந்து குதித்து இறங்குகிறான்.



குடிசைக்குள்ளே இளம் பெண் ஒருத்தி அடுப்பில்
அடை சுட்டுக் கொண்டிருந்தாள். அருகில் திடகாத்திரமான ஒரு
வாலிபன் உட்கார்ந்து,
தைத்த இளம் ஆலம் இலையிலே போட்டிருந்த கம்பு அடையைக் கீரைக்
குழம்புடன்
ருசி பார்த்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். ஒரு தடவை அவன்
நாக்கைச்
சப்புக் கொட்டிவிட்டு "அடி வள்ளி, இன்னும் எத்தனை நாளைக்கு உன்
கையால்
கம்பு அடையும் கீரைக் குழம்பும் சாப்பிட எனக்குக் கொடுத்து
வைத்திருக்கிறதோ
தெரியவில்லை!" என்றான்.

"தினம் போது விடிந்தால் நீ இப்படித்தான்
சொல்லிக் கொண்டிருக்கிறாய். இன்னொரு தடவை சொன்னால் இதோ இந்த
அடுப்பை
வெட்டி காவேரியில் போட்டுவிடுவேன் பார்!" என்றாள் அந்தப் பெண்.


"நான் விளையாட்டுக்குச் சொல்லவில்லை,
வள்ளி! மகாராஜாவும் மகாராணியும் நேற்றுப்
பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டேன்.
யுத்தம் நிச்சயமாக வரப் போகிறது" என்றான் வாலிபன்.

"யுத்தம் வந்தால் உனக்கு என்ன என்றுதான்
கேட்கிறேன். உன்னை யார் யுத்தத்துக்கு அழைக்கிறார்கள்?
உன்பாட்டுக்குப்
படகோட்டிக்கொண்டு இருக்க வேண்டியதுதானே?"

"அதுதான் இல்லை. நான் மகாராஜாவின் காலிலே
விழுந்து கேட்டுக் கொள்ளப் போகிறன். என்னையும் யுத்தத்துக்கு
அழைத்துக்
கொண்டு போகச் சொல்லி."

"நான் உன் காலிலே விழுந்து என்னையும்
உன்னோடு அழைத்துக் கொண்டு போ என்று கேட்டுக் கொள்ளப் போகிறேன்.
அதற்கு
உனக்கு இஷ்டமில்லாவிட்டால் - காவேரி ஆற்றோடு போனவளை எடுத்துக்
காப்பாற்றினாயோ
இல்லையோ - மறுபடியும் அந்தக் காவேரியிலே இழுத்து விட்டு
விட்டுப் போய்விடு."


"அதுதான் சரி வள்ளி! சோழ தேசம் இப்போது
அப்படித்தான் ஆகிவிட்டது. பெண்பிள்ளைகள் யுத்தத்துக்குப்
போகவேண்டியது;
ஆண் பிள்ளைகள் வீட்டுக்குள் ஒளிந்து கொண்டிருக்க வேண்டியது....
இரு,
இரு குதிரை வருகிற சத்தம் போல் கேட்கிறதே."

ஆம்; அந்தச் சமயத்தில்தான் 'டக்டக், டக்டக்'
என்ற குதிரைக் காலடியின் சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்தினால்
அவ் வாலிபனின்
உடம்பில் ஒரு துடிப்பு உண்டாயிற்று. அப்படியே எச்சிற் கையோடு
எழுந்தான்.
வாசற்புறம் ஓடினான்.

அங்கே அப்போது தான் குதிரை மீதிருந்து
இறங்கிய வீரன், "பொன்னா! மகாராஜாவுக்குச் செய்தி கொண்டு
வந்திருக்கிறேன்.
சீக்கிரம் தோணியை எடு" என்றான்.

பொன்னன் "இதோ வந்து விட்டேன்!" என்று
சொல்லிவிட்டு உள்ளே ஓடினான். அச்சமயம் வள்ளி சட்டுவத்தில்
இன்னொரு அடை
தட்டுவதற்காக மாவை எடுத்துக் கொண்டிருந்தாள். "வள்ளி!
உறையூரிலிருந்து
செய்தி கொண்டு வந்திருக்கிறான். அவசரச் சேதியாம், நான் போய்
வருகிறேன்"
என்றான் பொன்னன்.

"நல்ல அவசரச் சேதி! அரை வயிறுகூட நிரம்பியிராதே?
எனக்குப் பிடிக்கவே இல்லை" என்று வள்ளி முகத்தைத் திருப்பிக்
கொண்டாள்.


"அதற்கென்ன செய்கிறது, வள்ளி! அரண்மனைச்
சேவகம் என்றால் சும்மாவா?" என்று பொன்னன் சொல்லிக் கொண்டே
அவளுடைய சமீபம்
சென்றான். கோபம் கொண்ட அவளது முகத்தைத் தன் கைகளால்
திருப்பினான். வள்ளி
புன்னகையுடன் தன் முகத்தின் மேல் விழுந்திருந்த கூந்தலை இடது
கையால்
எடுத்துச் சொருக்குப் போட்டுக் கொண்டு, "சீக்கிரம்
வந்துவிடுகிறாயா?"
என்று சொல்லி விட்டுப் பொன்னனை அண்ணாந்து பார்த்தாள். பொன்னன்
அவளுடைய
முகத்தை நோக்கிக் குனிந்தான். அப்போது வெளியிலிருந்து "எத்தனை
நேரம்
பொன்னா?" என்று கூச்சல் கேட்கவே, பொன்னன் திடுக்கிட்டவனாய்,
"இதோ வந்து
விட்டேன்!" என்று கூச்சலிட்டுக் கொண்டு வெளியே ஓடினான்.


****************

2. ராஜ குடும்பம்


பொன்னன் போன பிறகு, வள்ளி
வீட்டுக் காரியங்களைப் பார்க்கத் தொடங்கினாள். குடிசையை
மெழுகிச் சுத்தம்
செய்தாள். மரத்தடியில் கட்டியிருந்த எருமை மாட்டைக் கறந்து
கொண்டு வந்தாள்.
பிறகு காவேரியில் மரக் கிளைகள் தாழ்ந்திருந்த ஓரிடத்திலே
இறங்கிக் குளித்து
விட்டு வந்தாள். சேலை மாற்றிக் கொண்ட பிறகு மறுபடியும் அடுப்பு
மூட்டிச்
சமையல் செய்யத் தொடங்கினாள்.

ஆனால், அவளுடைய மனது என்னமோ பரபரவென்று
அலைந்து கொண்டிருந்தது. அடிக்கடி குடிசை வாசலுக்கு வந்து
தன்னுடைய கரிய
பெரிய கண்களைச் சுழற்றி நாலாபுறமும் பார்த்துவிட்டு உள்ளே
போனாள். ஏதோ
விசேஷ சம்பவங்கள் நடக்கப் போகின்றன என்று ஆவலுடன்
எதிர்பார்த்தவளாய்த்
தோன்றினாள்.

அவள் எதிர்பார்த்தது வீண் போகவில்லை.
சற்று நேரத்துக்கெல்லாம் உறையூர்ப் பக்கத்திலிருந்து பத்துப்
பதினைந்து
குதிரை வீரர்கள் வந்தார்கள். அவர்களுக்கு மத்தியில் அழகாக
அலங்கரிக்கப்பட்ட
இரண்டு வெள்ளைப் புரவிகளும் ஒரு தந்தப் பல்லக்கும் வந்தன. அந்த
வெண்
புரவிகளின் மேல் யாரும் வீற்றிருக்கவில்லை; பல்லக்கும்
வெறுமையாகவே இருந்தது.
திடகாத்திர தேகிகளான எட்டுப்பேர் பல்லக்கைச் சுமந்து கொண்டு
வந்தார்கள்.


எல்லாரும் தோணித்துறைக்குச் சற்று தூரத்தில்
வந்து நின்றார்கள்; பல்லக்குக் கீழே இறக்கப்பட்டது. குதிரை
மீதிருந்தவர்களும்
கீழே இறங்கிக் குதிரைகளை மரங்களில் கட்டினார்கள்.

இதையெல்லாம் குடிசை வாசலில் நின்று வள்ளி
கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் அப்படி நிற்பதைப் பார்த்த வீரர்களில்
ஒருவன், "அண்ணே! வள்ளியிடம் தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு
வரலாம்"
என்றான்.

"அடே, வேலப்பா! காவேரி நிறையத் தண்ணீர்
போகிறது. வள்ளியிடம் என்னத்திற்காகத் தண்ணீர் கேட்கப்
போகிறாய்?" என்றான்
மற்றவன்.

"இருந்தாலும் வள்ளியின் கையால் தண்ணீர்
குடிப்பது போல ஆகுமா, அண்ணே!"

இப்படி பேசிக் கொண்டு இருவரும் குடிசையருகில்
வந்து சேர்ந்தார்கள்.

"வள்ளி! கொஞ்சம் தாகத்துக்குத் தண்ணீர்
தருகிறாயா?" என்று வேலப்பன் கேட்டான்.

வள்ளி உள்ளே விரைவாகச் சென்று சட்டியில்
மோர் எடுத்துக் கொண்டு வந்து இரண்டு பேருக்கும் கொடுத்தாள்.
அவர்கள்
குடிக்கும்போதே "மகாராஜா இன்றைக்கு உறையூருக்குப் போகிறாராமே?
ஏன் இவ்வளவு
அவசரம்? இந்த மாதமெல்லாம் அவர் 'வசந்த மாளிகையில்' இருப்பது
வழக்கமாயிற்றே?"
என்று கேட்டாள்.

"எங்களை ஏன் கேட்கிறாய், வள்ளி? உன்னுடைய
புருஷனைக் கேட்கிறதுதானே? படகோட்டி பொன்னனுக்குத் தெரியாத ராஜ
ரகசியம்
என்ன இருக்கிறது?" என்றான் வேலப்பன்.

"காலையில் சாப்பிட உட்கார்ந்தார்; அதற்குள்
அவசரமாய் ஆள் வந்து, மகாராஜாவுக்குச் சேதி கொண்டு போக
வேண்டுமென்று சொல்லவே,
எழுந்து போய் விட்டார். சரியாகச் சாப்பிடக் கூட இல்லை!"
என்றாள் வள்ளி.


"பாரப்பா, புருஷன் பேரில் உள்ள கரிசனத்தை!
பெண்சாதி என்றால் இப்படியல்லவோ இருக்க வேணும்!" என்றான்
வேலப்பன். வள்ளியின்
கன்னங்கள் வெட்கத்தால் குழிந்தன. "சரிதான் போங்கள்! பரிகாசம்
போதும்"
என்றாள்.

"இல்லை வள்ளி! இந்த மாதிரி பரிகாசமெல்லாம்
இன்னும் எத்தனை நாளைக்குச் செய்யப் போகிறோம்?" என்றான்
வேலப்பன்.

"ஏன் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்? என்ன
சமாசாரம் என்றுதான் சொல்லுங்களேன்!" என்றாள் வள்ளி.

"பெரிய யுத்தம் வரப்போகிறதே, தெரியாதா
உனக்கு?"

"ஆமாம்; யுத்தம் யுத்தம் என்றுதான் பேச்சு
நடக்கிறது. ஆனால் என்னத்துக்காக யுத்தம் என்றுதான்
தெரியவில்லை."

"நாலைந்து வருஷமாய் நமது மகாராஜா, காஞ்சி
நரசிம்மவர்ம சக்கரவர்த்திக்குக் கப்பம் கட்டவில்லை. வடக்கே
படையெடுத்துப்
போயிருந்த சக்கரவர்த்தி திரும்பி வந்து விட்டாராம்; நமது
மகாராஜா நாலு
வருஷமாய்க் கப்பம் கட்டாததற்கு முகாந்திரம் கேட்பதற்காகத்
தூதர்களை அனுப்பியிருக்கிறாராம்.
அவர்கள் இன்றைக்கு வந்து சேர்வார்களாம்" என்றான் வேலப்பன்.

"இதற்காக யுத்தம் ஏன் வரவேண்டும்? நாலு
வருஷத்துக் கப்பத்தையும் சேர்த்துக் கொடுத்து விட்டால்
போகிறது!" என்றாள்
வள்ளி.

"அதுதான் நம்முடைய மகாராஜாவுக்கு இஷ்டமில்லை.
முன் வைத்த காலைப் பின்வைக்க முடியாது என்கிறார்."

இப்படி இவர்கள் பேசிக்கொண்டேயிருக்கும்
போது நடு ஆற்றில் படகு வருவது தெரிந்தது. வேலப்பனும்
இன்னொருவனும் உடனே
திரும்பிப் போய் மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.

சிறிது நேரத்துக்கெல்லாம் படகு துறையை
அடைந்தது. இது பொன்னன் போகும்போது தள்ளிக்கொண்டு போன சாதாரணப்
படகல்ல;
அழகிய வேலைப்பாடுகளுடன் ஒரு பக்கம் விமானம் அமைத்துச்
செய்திருந்த ராஜ
படகு. படகின் விமானத்தில் மூன்று பேர் அமர்ந்திருந்தார்கள்.
அவர்களைப்
பார்த்ததும் ராஜகுடும்பத்தினர் என்று தெரிந்து கொள்ளலாம்.
பார்த்திப
சோழ மகாராஜாவும், அருள்மொழி மகாராணியும், இளவரசர்
விக்கிரமனுந்தான் அவர்கள்.


அறையில் பூண்ட உடைவாளும், கையில் நெடிய
வேலாயுதம் தரித்த ஆஜானுபாகுகளான இரண்டு மெய்க்காவலர்கள் படகின்
இரு புறத்திலும்
நின்று கொண்டிருந்தார்கள். பொன்னனும் இன்னொருவனும் படகு
தள்ளிக் கொண்டு
வந்தார்கள்.

படகு கரை சேர்ந்ததும், மெய்க்காவலர்கள்
இருவரும் முதலில் இறங்கி, "ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட,
ராஜகம்பீர,
சோழ மண்டலாதிபதி பார்த்திப மகாராஜா, பராக்!" என்று
கூவினார்கள். கரையில்
நின்ற வீரர்கள் அவ்வளவு பேரும் கும்பிட்ட கைகளுடன் "மகாராஜா
வெல்க" என்று
எதிரொலி செய்தார்கள்.

படகைவிட்டு இறங்கியதும் மகாராஜா பொன்னனுடைய
குடிசைப் பக்கம் நோக்கினார். குடிசை வாசலில் நின்று பார்த்துக்
கொண்டிருந்த
வள்ளியின் பேரில் அவருடைய பார்வை விழுந்தது. உடனே கையினால்
சமிக்ஞை செய்து
அழைத்தார். வள்ளி விரைவாக ஓடிவந்து தண்டனிட்டாள். மகாராஜா
எழுந்திருக்கச்
சொன்னவுடன் எழுந்து பொன்னனுக்குப் பின்னால் அடக்க
ஒடுக்கத்துடன் நின்றாள்.
"வள்ளி! உன்னைப் பொன்னன் நன்றாகப் பார்த்துக் கொள்கிறானா?"
என்று மகாராஜா
கேட்டார். வள்ளி தலையைக் குனிந்து கொண்டு புன்னகை செய்தாள்.
பதில் சொல்ல
அவளுக்கு நா எழவில்லை. அப்போது மகாராணி "அவளை அப்படி நீங்கள்
கேட்டிருக்கக்கூடாது;
பொன்னனை நீ நன்றாகப் பார்த்துக் கொள்கிறாயா?" என்று கேட்டால்
பதில் சொல்லுவாள்"
என்றாள்.


மகாராஜா சிரித்துவிட்டு "வள்ளி! மகாராணி
சொன்னது காதில் விழுந்ததா? பொன்னனை ஜாக்கிரதையாகப் பார்த்துக்
கொள்.
அந்தண்டை இந்தண்டை போக விடாதே. உன்னை வெள்ளத்திலிருந்து கரை
சேர்த்தது
போல் இன்னும் யாரையாவது கொண்டு வந்து கரை சேர்த்து வைக்கப்
போகிறான்!"
என்றார்.

வள்ளிக்கு வெட்கம் ஒரு பக்கமும், சந்தோஷம்
ஒரு பக்கமும் பிடுங்கித் தின்றன. தேகம் நூறு கோணலாக வளைந்தது.

ஆனால், பொன்னனோ இந்த ஹாஸ்யப் பேச்சைக்
கவனித்ததாகவே தெரியவில்லை. அவன் இரு கரங்களையும் கூப்பி,
"மகாராஜா! ஒரு
வரங் கொடுக்க வேணும்! யுத்தத்துக்கு மகாராஜா போகும்போது
அடிமையையும்
அழைத்துப் போகவேணும்" என்றான்.

மகாராஜா சற்று நிதானித்தார். பிறகு சொன்னார்:
"பொன்னா! உன்னுடைய மனது எனக்குத் தெரியும். ஆனாலும் நீ கேட்ட
வரம் கொடுக்க
முடியாது. நீ இங்கே தான் இருக்க வேண்டும்.
போர்க்களத்திலிருந்து நான்
திரும்பி வராவிட்டால், இளவரசருக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கும்
பொறுப்பை
உன்னிடம் ஒப்புவிக்கிறேன் தெரிகிறதா?" என்றார். இதைக்
கேட்டதும் பொன்னன்
வள்ளி இருவருடைய கண்களிலும் நீர் ததும்பிற்று. மகாராணி
அருள்மொழித் தேவி
ஒரு நெடிய பெருமூச்சு விட்டாள். அவளுடைய உள்ளத்தில் என்னென்ன
சிந்தனைகள்
கொந்தளித்து எழுந்தனவோ, யார் கண்டது!

மகாராஜாவும் பரிவாரங்களும் வெகு தூரம்
போன பிறகுதான் வள்ளி பழைய வள்ளியானாள். அப்போது பொன்னனைப்
பார்த்து,
"பார்த்தாயா! மகாராஜா என்ன சொன்னார்கள்! என்னைக் கேட்காமல்
அந்தண்டை
இந்தண்டை போகக்கூடாது தெரியுமா?" என்றாள்.

"அப்படியானால் இப்போதே கேட்டு விடுகிறேன்.
வள்ளி, இன்று மத்தியானம் நான் உறையூர் போகவேண்டும்" என்றான்
பொன்னன்.


"உறையூரிலே என்ன?" என்று வள்ளி கேட்டாள்.


"இன்றைக்குப் பெரிய விசேஷமெல்லாம் நடக்கப்
போகிறது. காஞ்சியிலிருந்து கப்பம் கேட்பதற்காகத் தூதர்கள்
வரப்போகிறார்களாம்.
மகாராஜா 'முடியாது' என்று சொல்லப் போகிறாராம். நான் கட்டாயம்
போக வேணும்"
என்றான் பொன்னன்.

அப்போது வள்ளி இரு கரங்களையும் குவித்துக்
கொண்டு குரலைப் பொன்னன் குரல்போல் மாற்றிக் கொண்டு, "மகாராஜா!
எனக்கு
ஒரு வரம் கொடுக்க வேணும்; மகாராஜா யுத்தத்துக்குப் போனால்
அடிமையையும்
அழைத்துப் போகவேணும்" என்றாள்.

"சே, போ! இப்படி நீ பரிகாசம் செய்வதாயிருந்தால்
நான் போகவில்லை" என்றான் பொன்னன்.

இந்த உறுதியுடனேயே பொன்னன் சாவகாசமாகக்
காவேரியாற்றில் இறங்கி நீந்திக் கொம்மாளம் போட்டுக்
கொண்டிருந்தான்.
ஆனால், கொஞ்ச நேரத்துக்கெல்லாம் "டக்டக், டக்டக்" என்ற
குதிரைகளின் குளம்புச்
சத்தம் கேட்டதும் அவனுக்குச் சொல்ல முடியாத பரபரப்பு
உண்டாயிற்று. கரையேறி
ஓடி வந்து பார்த்தான். வள்ளியும் குடிசைக்குள்ளிருந்து வெளியே
வந்தாள்.
சிறிது நேரத்துக்கெல்லாம் முதலில் ஒரு குதிரையும், பின்னால்
நாலு குதிரைகளும்
கிழக்குத் திசையிலிருந்து அதிவேகமாய் வந்தன. முதல் குதிரையின்
மேல் இருந்தவன்
கையில் சிங்க உருவம் வரைந்து கொடி பிடித்துக் கொண்டிருந்தான்.
குதிரைகள்
உறையூரை நோக்கிப் பறந்தன.

"சிங்கக் கொடி போட்டுக் கொண்டு போகிறார்களே,
இவர்கள் யார்?" என்று வள்ளி கேட்டாள்.

மெய்ம்மறந்து நின்ற பொன்னன், திடுக்கிட்டவனாய்
"வள்ளி! இவர்கள்தான் பல்லவ தூதர்கள், நான் எப்படியும் இன்று
உறையூர்
போகவேணும், நீயும் வேணுமானால் வா! உன் பாட்டனையும்
பார்த்ததுபோல இருக்கும்"
என்றான்.

**************************************************


Last edited by Fréédóm Fightér on Mon May 24, 2010 11:13 pm; edited 1 time in total
Back to top Go down
http://wwww.myacn.eu
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Empty
PostSubject: பார்த்திபன் கனவு 3. பல்லவ தூதர்கள்   அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Icon_minitimeMon May 24, 2010 11:07 pm

3. பல்லவ தூதர்கள்




பொன்னனும் வள்ளியும் தங்கள்
குடிசையின் கதவைப் பூட்டிக் கொண்டு உறையூரை நோக்கிக்
கிளம்பினார்கள்.
அவர்கள் வசித்த தோணித் துறையிலிருந்து உறையூர் மேற்கே ஒரு காத
தூரத்தில்
இருந்தது. அந்தக் காலத்தில் - அதாவது சுமார் ஆயிரத்தி முந்நூறு
வருஷங்களுக்கு
முன்பு - செந்தமிழ் நாட்டில் ரயில் பாதைகளும் ரயில் வண்டிகளும்
இல்லை;
மோட்டார் வண்டிகளும் தார் ரோடுகளும் இல்லை. (இவையெல்லாம் அந்த
நாளில்
உலகில் எந்த நாட்டிலுமே கிடையாது) அரசர்களும் பிரபுக்களும்
குதிரைகள்
மீதும் யானைகள் மீதும் ஆரோகணித்துச் சென்றனர். குதிரை பூட்டிய
ரதங்களிலும்
சென்றனர். மற்ற சாதாரண மக்கள் நாட்டு மாட்டு வண்டிகளில்
பிரயாணம் செய்தார்கள்.
இந்த வாகனங்களெல்லாம் போவதற்காக விஸ்தாரமான சாலைகள்
அமைக்கப்பட்டிருந்தன.
குளிர்ந்த நிழல் தரும் மரங்கள் இருபுறமும் அடர்ந்து வளர்ந்த
அழகான சாலைகளுக்குச்
சோழவள நாடு அந்தக் காலத்திலே பெயர் போனதாயிருந்தது. அந்தச்
சாலைகளுக்குள்ளே
காவேரி நதியின் தென்கரையோரமாகச் சென்ற, ராஜபாட்டை மிகப்
பிரசித்தி பெற்றிருந்தது.


இந்த ராஜபாட்டை வழியாகத்தான் பொன்னனும்
வள்ளியும் சோழ நாட்டின் தலைநகரமான உறையூருக்குப் புறப்பட்டுச்
சென்றார்கள்.


சோழநாடு அந்த நாளில் தன்னுடைய புராதனப்
பெருமையை இழந்து ஒரு சிற்றரசாகத்தான் இருந்தது. தெற்கே
பாண்டியர்களும்
வடக்கே புதிதாகப் பெருமையடைந்திருந்த பல்லவர்களும் சோழ நாட்டை
நெருக்கி
அதன் பெருமையைக் குன்றச் செய்திருந்தார்கள். ஆனால், சோழ
நாட்டின் வளத்தையும்
வண்மையையும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்த
வளத்துக்குக்
காரணமாயிருந்த காவேரி நதியையும் அவர்களால் கொள்ளை கொண்டு போக
முடியவில்லை.
உறையூர் ராஜபாட்டையின் இருபுறமும் பார்த்தால் சோழ நாட்டு நீர்
வளத்தின்
பெருமையை ஒருவாறு அறிந்து கொள்ளும் படியிருந்தது. ஒரு
புறத்தில் கரையை
முட்டி அலை மோதிக்கொண்டு கம்பீரமாய்ச் சென்ற காவேரியின்
பிரவாகம்; ஆற்றுக்கு
அக்கரையில் நீல வானத்தைத் தொட்டுக் கொண்டிருந்த அடர்த்தியான
தென்னை மரத்
தோப்புகளின் காட்சி; இந்தப் புறம் பார்த்தாலோ கண்ணுக்கெட்டிய
தூரம் பசுமை,
பசுமை, பசுமைதான். கழனிகளெல்லாம் பெரும்பாலும் நடவு
ஆகியிருந்தன. இளம்
நெற்பயிர்கள் மரகதப் பச்சை நிறம் மாறிக் கரும் பசுமை அடைந்து
கொண்டிருந்த
காலம். 'குளு குளு' சத்தத்துடன் ஜலம் பாய்ந்து கொண்டிருந்த
மடைகளில்
ஒற்றைக் காலால் தவம் செய்து கொண்டிருந்த வெள்ளை நாரைகள் இளம்
பயிர்களின்
பசுமை நிறத்தை இன்னும் நன்றாய் எடுத்துக்காட்டின. நெல்
வயல்களுக்கு மத்தியில்
ஆங்காங்கே சில வாழைத் தோட்டங்களும், தென்னந் தோப்புகளும்
கரும்புக் கொல்லைகளும்
காணப்பட்டன.

இத்தகைய வளங்கொழிக்கும் அழகிய நாட்டின்
அமைதியைக் குலைப்பதற்கு யுத்தம் நெருங்கி வந்து கொண்டிருந்தது.
இதனால்
சோழ நாட்டுக் குடிகளின் உள்ளம் எவ்வளவு தூரம் பரபரப்பு
அடைந்திருந்ததென்பதைப்
பொன்னனும் வள்ளியும் உறையூர்ப் பிரயாணத்தின் போது நன்கு
கண்டார்கள்.
பக்கத்துக் கழனிகளில் வேலை செய்து கொண்டிருந்த உழவர்களும்,
பயிர்களுக்குக்
களைபிடுங்கிக் கொண்டிருந்த ஸ்திரீகளும், பொன்னனையும்
வள்ளியையும் கண்டதும்
கைவேலையைப் போட்டுவிட்டு ஓடோ டியும் வந்தார்கள்.

"பொன்னா! என்ன சேதி?" என்று சிலர் ஆவலுடன்
கேட்டார்கள். "சண்டை நிச்சயந்தானா?" என்று சிலர்
விசாரித்தார்கள். "தூதர்கள்
வந்த சமாசாரம் ஏதாவது தெரியுமா?" என்று வினவினார்கள். பொன்னன்
ஒவ்வொருவரிடமும்
ஒவ்வொரு விதமாய்ப் பதில் சொன்னான். "சண்டையைப் பற்றிச்
சந்தேகம் என்ன,
நமது மகாராஜா ஒரு நாளும் கப்பம் கட்டப் போவதில்லை. எல்லாரும்
அவரவர்கள்
வாளையும் வேலையும் தீட்டிக் கொண்டு வந்து சேருங்கள்" என்று
சிலரிடம்
சொன்னான். வேறு சிலரிடம் "எனக்கு என்ன தெரியும்? உங்களுக்குத்
தெரிந்ததுதான்
எனக்கும் தெரியும்?" என்றான். அவர்கள் நன்றாயிருக்கிறது,
பொன்னா! உனக்குத்
தெரியாமலிருக்குமா? சோழ நாட்டுக்கே இப்போது முக்கிய மந்திரி
நீதானே?
உனக்குத் தெரியாத ராஜ ரகசியம் ஏது?" என்றார்கள். அப்போது வள்ளி
அடைந்த
பெருமையைச் சொல்லி முடியாது.

ஆனால், வேறு சிலர் "பொன்னா! மகாராஜா யுத்தத்துக்குப்
போனால் நீயும் போவாயோ, இல்லையோ?" என்று கேட்டபோது வள்ளிக்கு
ரொம்ப எரிச்சலாயிருந்தது.
அவர்களுக்கு "அது என் இஷ்டமா? மகாராஜாவின் இஷ்டம்!" என்றான்
பொன்னன்.
அவர்கள் போன பிறகு வள்ளியிடம், "பார்த்தாயா வள்ளி! நான்
யுத்தத்துக்குப்
போகாமலிருந்தால் நன்றாயிருக்குமா? நாலு பேர்
சிரிக்கமாட்டார்களா?" என்றான்.
அதற்கு வள்ளி "உன்னை யார் போக வேண்டாமென்று சொன்னார்கள்?
மகாராஜா உத்தரவு
கொடுத்தால் போ, என்னையும் அழைத்துக் கொண்டு போ என்று தானே
சொல்லுகிறேன்"
என்றாள்.

இப்படி வழியெல்லாம் பொன்னன் நின்று நின்று,
கேட்டவர்களுக்கு மறுமொழி சொல்லிக்கொண்டு போக
வேண்டியதாயிருந்தது. உறையூர்க்
கோட்டை வாசலை அணுகியபோது, அஸ்தமிக்கும் நேரம் ஆகிவிட்டது.
அவர்கள் வந்து
சேர்ந்த அதே சமயத்தில் கோட்டை வாசல் திறந்தது, உள்ளிருந்து சில
குதிரை
வீரர்கள் வெளியே வந்து கொண்டிருந்தார்கள். முதலில் வந்த வீரன்
கையில்
சிங்கக் கொடியைப் பார்த்ததும், அவர்கள் தாம் மத்தியானம்
உறையூருக்குச்
சென்ற பல்லவ தூதர்கள் என்பது பொன்னனுக்குத் தெரிந்துவிட்டது.
இருவரும்
சிறிது ஒதுங்கி நின்றார்கள். கோட்டை வாசல் தாண்டியதும்
குதிரைகள் காற்றிலும்
கடிய வேகத்துடன் பறக்கத் தொடங்கின. அவற்றின் காற்குளம்பின்
புழுதி மறையும்
வரையில் அவை சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு,
பொன்னனும்
வள்ளியும் கோட்டை வாசல் வழியாகப் புகுந்து சென்று நகருக்குள்
பிரவேசித்தார்கள்.


நகரின் வீதிகளில் ஆங்காங்கே கும்பல் கும்பலாக
ஜனங்கள் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு கும்பலின்
ஓரத்தில் பொன்னனும்
வள்ளியும் போய் நின்றனர். பல்லவ தூதர்கள் வந்தபோது ராஜ சபையில்
நடந்த
சம்பவங்களை ஒருவன் வர்ணித்துக் கொண்டிருந்தான்: "ஆகா! அந்தக்
காட்சியை
நான் என்னவென்று சொல்லப் போகிறேன்! மகாராஜா சிங்காதனத்தில்
கம்பீரமாக
உட்கார்ந்திருந்தார். இளவரசரும் மந்திரி, சேனாதிபதி எல்லாரும்
அவரவர்களின்
இடத்தில் உட்கார்ந்திருந்தார்கள். எள் போட்டால் எள் விழுகிற
சத்தம் கேட்கும்;
அந்த மாதிரி நிசப்தம் சபையில் குடி கொண்டிருந்தது. "தூதர்களை
அழைத்து
வாருங்கள்!" என்று மகாராஜா சொன்னார். அவருடைய குரலில் எவ்வளவு
வேகம்
ததும்பிற்று இன்றைக்கு? தூதர்கள் வந்தார்கள், அவர்களுடைய
தலைவன் முன்னால்
வந்து நின்று மகாராஜாவுக்கு வந்தனம் செலுத்தினான்.

"தூதரே! என்ன சேதி?" என்று கேட்டார்.


"அந்தக் குரலின் கம்பீரத்திலேயே தூதன்
நடுங்கிப் போய்விட்டான். அவனுக்குப் பேசவே முடியவில்லை.
தட்டுத் தடுமாறிக்
கொண்டே 'திரிலோக சக்கரவர்த்தி காஞ்சி மண்டலாதிபதி சத்ரு
சம்ஹாரி நரசிம்மவர்ம
பல்லவராயருடைய தூதர்கள் நாங்கள்...." என்று அவன் ஆரம்பிக்கும்
போது நம்முடைய
அரண்மனை விதூஷகன் குறுக்கிட்டான். "தூதரே! நிறுத்தும்! எந்தத்
திரிலோகத்துக்குச்
சக்கரவர்த்தி! அதல ஸுதல பாதாளமா? இந்திரலோக, சந்திரலோக,
யமலோகமா?" என்றான்.
சபையில் எல்லோரும் 'கொல்லென்று' சிரித்தார்கள். தூதன் பாடு
திண்டாட்டமாய்ப்
போய்விட்டது. அவனுடைய உடம்பு நடுங்கிற்று; நாகுழறிற்று.
மெதுவாகச் சமாளித்துக்கொண்டு
'தங்கள் பாட்டனார் காலம் முதல் ஆண்டுதோறும் கட்டிவந்த
கப்பத்தைச் சென்ற
ஆறு வருஷமாய் மகாராஜா கட்டவில்லையாம். அதற்கு முகாந்திரம்
கேட்டு வரும்படி
சக்கரவர்த்தியின் கட்டளை' என்றான். ஆகா! அப்போது நமது
மகாராஜாவின் தோற்றத்தைப்
பார்க்கவேணுமே? 'தூதரே! உங்கள் சக்கரவர்த்தி கேட்டிருக்கும்
முகாந்திரத்தைப்
போர் முனையிலே தெரிவிப்பதாகப் போய்ச் சொல்லும்' என்றார்.
எனக்கு அப்போது
உடல் சிலிர்த்து விட்டது...."



இவ்விதம் வர்ணித்து வந்தவன் சற்றே நிறுத்தியதும்
பல பேர் ஏக காலத்தில் "அப்புறம் என்ன நடந்தது?" என்று ஆவலுடன்
கேட்டார்கள்.


"அந்தத் தூதன் சற்று நேரம் திகைத்து நின்றான்.
பிறகு, "அப்படியானால், யுத்தத்துக்குச் சித்தமாகும்படி
சக்கரவர்த்தி
தெரிவிக்கச் சொன்னார்கள். இதற்குள்ளே பல்லவ சைன்யம்
காஞ்சியிலிருந்து
கிளம்பியிருக்கும். போர்க்களமும் யுத்த ஆரம்ப தினமும் நீங்களே
குறிப்பிடலாமென்று
தெரியப்படுத்தச் சொன்னார்கள் என்றான். அதற்கு நம் மகாராஜா,
'புரட்டாசிப்
பௌர்ணமியில் வெண்ணாற்றங் கரையில் சந்திப்போம்' என்று
விடையளித்தார்.
உடனே சபையோர் அனைவரும், "வெற்றிவேல்! வீரவேல்! என்று வீர
கர்ஜனை புரிந்தார்கள்..."


இதைக் கேட்டதும் அந்தக் கும்பலில் இருந்தவர்களும்
"வெற்றிவேல்! வீரவேல்!" என்று முழங்கினார்கள். பொன்னனும் உரத்த
குரலில்
அம்மாதிரி வீர முழக்கம் செய்து விட்டு வள்ளியை அழைத்துக்
கொண்டு மேலே
சென்றான்.

இதற்குள் இருட்டிவிட்டது. வெண் மேகங்களால்
திரையிடப்பட்ட சந்திரன் மங்கலாய்ப் பிரகாசித்துக்
கொண்டிருந்தது. ஒவ்வொரு
வீதி மூலையிலும் நாட்டியிருந்த கல்தூணின் மேல் பெரிய அகல்
விளக்குகள்
இருந்தன. அவை ஒவ்வொன்றாய்க் கொளுத்தப்பட்டதும் புகை விட்டுக்
கொண்டு
எரிய ஆரம்பித்தன.

திடீரென்று எங்கேயோ உயரமான இடத்திலிருந்து
பேரிகை முழக்கம் கேட்கத் தொடங்கியது. 'தம்ம்ம்' 'தம்ம்ம்' என்ற
அந்தக்
கம்பீரமான சத்தம் வான வெளியில் எட்டுத் திக்கிலும் பரவி
'அதம்ம்ம்' 'அதம்ம்ம்'
என்ற பிரதித் தொனியை உண்டாக்கிற்று. உறையூரின் மண்டபங்களும்,
மாடமாளிகைகளும்,
கோபுரங்களும் கோட்டை வாசல்களும் சேர்ந்து ஏககாலத்தில்
'அதம்ம்ம்' 'அதம்ம்ம்'
என்று எதிரொலி செய்தன. சற்று நேரத்துக்கெல்லாம் அந்தச் சப்தம்
'யுத்தம்ம்
யுத்தம்ம்' என்றே கேட்கத் தொடங்கியது.

இடி முழக்கம் போன்ற அந்தப் பேரிகை ஒலியைக்
கேட்டதும் பொன்னனுடைய உடம்பில் மயிர்க் கூச்சம் உண்டாயிற்று.
அவனுடைய
ரத்தம் கொதித்தது. நரம்புகள் எல்லாம் புடைத்துக் கொண்டன.
வள்ளியோ நடுங்கிப்
போனாள்.

"இது என்ன இது? இம்மாதிரி ஓசை இதுவரையில்
நான் கேட்டதேயில்லை!" என்றாள்.

"யுத்த பேரிகை முழங்குகிறது" என்றான்
பொன்னன். அவனுடைய குரலைக் கேட்டுத் திடுக்கிட்ட வள்ளி, "ஐயோ,
உனக்கு
என்ன?" என்று கேட்டாள்.

"ஒன்றுமில்லை, வள்ளி! எனக்கு ஒன்றுமில்லை"
என்றான் பொன்னன். சற்றுப் பொறுத்து "வள்ளி! யுத்தத்துக்கு நான்
கட்டாயம்
போக வேண்டும்!" என்றான்.


******************************************


Last edited by Fréédóm Fightér on Mon May 24, 2010 11:16 pm; edited 1 time in total
Back to top Go down
http://wwww.myacn.eu
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Empty
PostSubject: 4. பாட்டனும் பேத்தியும்   அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Icon_minitimeMon May 24, 2010 11:14 pm

4. பாட்டனும் பேத்தியும்




உறையூர்க் கம்மாளத் தெருவில்
உள்ள ஒரு வீட்டு வாசலில் வந்து பொன்னனும் வள்ளியும்
நின்றார்கள். கதவு
சாத்தியிருந்தது. "தாத்தா!" என்று வள்ளி கூப்பிட்டாள். சற்று
நேரத்துக்கெல்லாம்
கதவு திறந்தது. திறந்தவன் ஒரு கிழவன் "வா வள்ளி! வாருங்கள்
மாப்பிள்ளை!"
என்று அவன் வந்தவர்களை வரவேற்றான். பிறகு வீட்டுக்குள்ளே
நோக்கி, "கிழவி
இங்கே வா! யார் வந்திருக்கிறது பார்" என்றான்.

மூன்று பேரும் வீட்டுக்குள் போனார்கள்.
"யார் வந்திருக்கிறது?" என்று கேட்டுக்கொண்டே அங்கு வந்த கிழவி
வள்ளியையும்
பொன்னனையும் பார்த்துப் பல்லில்லாத வாயினால் புன்னகை புரிந்து
தன் மகிழ்ச்சியைத்
தெரிவித்தாள். வள்ளியைக் கட்டிக்கொண்டு "சுகமாயிருக்கயா,
கண்ணு! அவர்
சுகமாயிருக்காரா" என்று கேட்டாள்.

பொன்னன் "தாத்தா, உங்கள் பேத்தியைக் கொண்டு
வந்து ஒப்புவித்து விட்டேன். நான் கொஞ்சம் வெளியே போய்விட்டு
வருகிறேன்"
என்றான்.

"வந்ததும் வராததுமாய் எங்கே போகிறாய்?"
என்று கிழவன் கேட்டான்.

"மகாராஜாவைப் பார்க்கப் போகிறேன்" என்றான்
பொன்னன்.

"மகாராஜா இப்போது அரண்மனையில் இல்லை,
மலைக்குப் போயிருக்கிறார். இங்கே வா காட்டுகிறேன்" என்று
கிழவன் அவர்களை
வீட்டு முற்றத்துக்கு அழைத்துப் போனான். முற்றத்திலிருந்து
அவன் காட்டிய
திக்கை எல்லோரும் பார்த்தார்கள். உச்சிப் பிள்ளையார் கோவில்
தீபம் தெரிந்தது.
அங்கிருந்து தீவர்த்திகளுடன் சிலர் இறங்கி வருவது தெரிந்தது.
இறங்கி
வந்த தீவர்த்திகள் வழியில் ஓரிடத்தில் சிறிது நின்றன.

"அங்கே நின்று என்ன பார்க்கிறார்கள்?"
என்று வள்ளி கேட்டாள்.

"மகேந்திர சக்கரவர்த்தியின் சிலை அங்கே
இருக்கிறது. மகாராஜா, இளவரசருக்கு அதைக் காட்டுகிறார் என்று
தோன்றுகிறது"
என்றான் கிழவன்.

"அவர்கள்தான் இறங்கி வருகிறார்களே, தாத்தா!
நான் அரண்மனை வாசலுக்குப் போகிறேன். இன்று ராத்திரி மகாராஜாவை
எப்படியும்
நான் பார்த்துவிட வேண்டும்" என்று சொல்லிக் கொண்டே பொன்னன்
வெளிக் கிளம்பினான்.
கிழவன் அவனோடு வாசல் வரை வந்து இரகசியம் பேசும் குரலில்,
"பொன்னா! ஒரு
முக்கியமான சமாசாரம் மகாராஜாவிடம் தெரிவிக்க வேணும். மாரப்ப
பூபதி விஷயத்தில்
கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லு. அதை அந்தரங்கமாக
அவரிடம் சொல்லவேணும்!"
என்றான்.

"மாரப்ப பூபதியைப் பற்றி என்ன?" என்று
பொன்னன் கேட்டான்.

"அதெல்லாம் அப்புறம் சொல்கிறேன். மகாராஜாவின்
காதில் எப்படியாவது இந்தச் சேதியைப் போட்டுவிடு" என்றான்
கிழவன்.

கிழவி விருந்தாளிகளுக்குச் சமையல் செய்வதற்காக
உள்ளே போனாள். பாட்டனும் பேத்தியும் முற்றத்தில்
உட்கார்ந்தார்கள்.

திடீரென்று வள்ளி, "ஐயோ தாத்தா! இதெல்லாம்
என்ன?" என்று கேட்டாள்.

முற்றத்தில் ஒரு பக்கத்தில் உலைக்களம்
இருந்தது. அதன் அருகில் கத்திகளும் வாள்களும் வேல்களும்
அடுக்கியிருந்தன.
அவைகளைப் பார்த்து விட்டுத்தான் வள்ளி அவ்விதம் கூச்சல்
போட்டாள்.

"என்னவா! வாளும் வேலும் சூலமுந்தான்.
நீ எங்கே பார்த்திருக்கப் போகிறாய்? முன்காலத்தில்...."

"இதெல்லாம் என்னத்திற்கு, தாத்தா?"

"என்னத்திற்காகவா? கோவிலில் வைத்து தூப
தீபம் காட்டிக் கன்னத்தில் போட்டுக் கொள்வதற்காகத்தான்!
கேள்வியைப் பார்
கேள்வியை! தேங்காய்க் குலை சாய்ப்பது போல் எதிராளிகளின் தலைகளை
வெட்டிச்
சாய்ப்பதற்கு வாள், பகைவர்களின் வயிற்றைக் கிழித்துக் குடலை
எடுத்து
மாலையாய்ப் போட்டுக் கொள்வதற்கு வேல், தெரிந்ததா!"

"ஐயையோ! பயமாயிருக்கிறதே!" என்று வள்ளி
கூவினாள்.

"இன்னும் கொஞ்ச நாள் போனால் இந்த நாட்டு
ஆண்பிள்ளைகள்கூட உன்னைப் போலேதான் ஆகிவிடுவார்கள். வாளையும்
வேலையும்
கொண்டு என்ன செய்கிறது என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.
வள்ளி! இந்தக்
கேள்வி என்னுடைய பாட்டன், முப்பாட்டன் காலங்களில் எல்லாம்
எப்படித் தெரியுமா?
அப்போது கொல்லுப் பட்டறையில் எல்லாம் வாளும் வேலும் சூலமும்
செய்த வண்ணமாயிருப்பார்களாம்.
ஒவ்வொரு பட்டணத்திலும் கம்மாளத் தெரு தான் எப்போதும் 'ஜே ஜே'
என்று இருக்குமாம்.
ராஜாக்களும் ராஜகுமாரர்களும் சேனாதிபதிகளும் கம்மாளனைத் தேடி
வந்து கொண்டிருப்பார்களாம்.
என் அப்பன் காலத்திலேயே இதெல்லாம் போய்விட்டது. வாழைக்கொல்லை
அரிவாள்களும்
வண்டிக்குக் கடையாணிகளும், வண்டி மாட்டுக்குத் தார்குச்சிகளும்
செய்து
கம்மாளன் வயிறுவளர்க்கும்படி ஆகிவிட்டது. என் வயதில் இப்போது
தான் நான்
வாளையும் வேலையும் கண்ணால் பார்க்கிறேன்.... ஆகா! இந்தக்
கைகளிலே மட்டும்
முன்னைப் போல வலிவு இருந்தால்? இருபது வருஷத்துக்கு முன்னாலே
இந்த யுத்தம்
வந்திருக்கக் கூடாதா!"

"சரியாய்ப் போச்சு, தாத்தா! இவருக்கு
நீ புத்தி சொல்லி திருப்புவாயாக்கும் என்றல்லவா பார்த்தேன்!
யுத்தத்துக்குப்
போகணும் என்று இவர் ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்...."

"பொன்னனா! அவன் எங்கே யுத்தத்துக்குப்
போகப் போகிறான் வள்ளி? பொன்னனாவது உன்னை விட்டு விட்டுப்
போகவாவது! துடுப்புப்
பிடித்த கை, வாளைப் பிடிக்குமா? பெண் மோகம் கொண்டவன்
சண்டைக்குப் போவானா?"


"அப்படி ஒன்றும் சொல்ல வேண்டாம் தாத்தா!
இவர் போகணும் போகணும் என்றுதான் துடித்துக் கொண்டிருக்கிறார்.
மகாராஜாதான்
வரக்கூடாது என்கிறார். இளவரசருக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க
இவர் இருக்க
வேணுமாம்."

"அடடா! உன்னுடைய அப்பனும் சித்தப்பன்மார்களும்
மட்டும் இப்போது இருந்தால், ஒவ்வொருவன் கையிலும் ஒரு வாளையும்
வேலையும்
கொடுத்து நான் அனுப்ப மாட்டேனா? எல்லாரையும் ஒரே நாளில்
காவேரியம்மன்
பலி கொண்டுவிட வேண்டுமா?" என்று சொல்லிக் கொண்டே கிழவன்
பெருமூச்சுவிட்டான்.


வள்ளிக்கு அந்தப் பயங்கரமான சம்பவம் ஞாபகம்
வந்தது.

நாலு வருஷத்துக்கு முன்பு கிழவனையும்
கிழவியையும் தவிர, குடும்பத்தார் அனைவரும் ஆற்றுக்கு
அக்கரையில் நடந்த
ஒரு கலியாணத்துக்குப் படகில் ஏறிப் போய்க் கொண்டிருந்தார்கள்.
நடு ஆற்றில்
திடீரென்று ஒரு சூறாவளிக் காற்று அடித்தது. படகு
கவிழ்ந்துவிட்டது. அச்சமயம்
கரையில் இருந்த பொன்னன் உடனே நதியில் குதித்து நீந்திப் போய்த்
தண்ணீரில்
விழுந்தவர்களைக் காப்பாற்ற முயன்றான். தெய்வ பத்தனத்தினால்
வள்ளியை மட்டுந்தான்
அவனால் காப்பாற்ற முடிந்தது. மற்றவர்கள் எல்லாரும் நதிக்குப்
பலியானார்கள்.


கிழவன் மேலும் சொன்னான். "என் குலத்தை
விளங்க வைக்க நீ ஒருத்தி தான் இருக்கிறாய். உன் வயிற்றில் ஒரு
குழந்தை
பிறந்துவிட்டால், பொன்னனை நானே கழுத்தைப் பிடித்துத் தள்ளுவேன்
யுத்தத்துக்குப்
போ" என்று.

"யுத்தம் என்னத்திற்காக நடக்கிறது, தாத்தா!
அதுதான் புரியவில்லை" என்றாள் வள்ளி.

"யுத்தம் என்னத்திற்காகவா - மானம் ஒன்று
இருக்கிறதே, அதுக்காகத்தான்! எருதுக் கொடிக்குப் புலிக் கொடி
தாழ்ந்து
போகலாமா? தொண்டை நாட்டுக்குச் சோழ நாடு பணிந்து போகிறதா? இந்த
அவமானத்தைப்
போக்குவதற்காகத்தான்"

"எருதுக்கொடி யாருடையது?"


"இது தெரியாதா உனக்கு? எருதுக் கொடி காஞ்சி
பல்லவ ராஜாவினுடையது."

"சிங்கக் கொடி என்று சொல்லு."

"இல்லை, எருதுக் கொடி தான்."

"நான் இன்றைக்குப் பார்த்தேன் தாத்தா!
தூதர்களின் கொடியில் சிங்கந்தான் போட்டிருந்தது."

"ஆமாம்; எருதுக் கொடியைச் சிங்கக் கொடியாக
மாற்றிவிட்டார்கள். ஆனால் எருது பன்றியை ஜயித்து விட்டதால்
சிங்கமாகி
விடுமா?" என்றான் கிழவன்.

"எனக்கு ஒன்றுமே புரியவில்லை. தாத்தா!
விபரமாய்ச் சொல்லேன்" என்றாள் வள்ளி.

"சரி, அடியிலிருந்து சொல்கிறேன் கேள்!"
என்று கிழவன் கதையை ஆரம்பித்தான்.

"நீ பிறந்த வருஷத்தில் இது நடந்தது. அப்போது
காஞ்சியில் மகேந்திர சக்கரவர்த்தி ஆண்டு கொண்டிருந்தார்.
அவருடைய வீரபராக்கிரமங்களைப்
பற்றி நாடெங்கும் பிரமாதமாய்ப் பேசிக்கொண்டிருந்த காலம். இந்த
உறையூருக்கும்
அவர் ஒருமுறை வந்திருந்தார். அவர் விஜயத்தின்
ஞாபகார்த்தமாகத்தான் நமது
மலையிலே கூட அவருடைய சிலையை அமைத்திருக்கிறது. இப்படி
இருக்கும் சமயத்தில்
வடக்கே இருந்து வாதாபியின் அரசன் புலிகேசி என்பவன் - பெரிய படை
திரட்டிக்
கொண்டு தென்னாட்டின் மேல் படையெடுத்து வந்தான். சமுத்திரம்
பொங்கி வருவதுபோல்
வந்த அந்தச் சைன்யத்துடன் யுத்தகளத்தில் நின்று போர் செய்ய
மகேந்திர
சக்கரவர்த்திக்குத் தைரியம் வரவில்லை. காஞ்சிக் கோட்டைக்குள்
சைன்யத்துடன்
பதுங்கிக் கொண்டார். கோட்டையைக் கொஞ்ச காலம் முற்றுகையிட்டுப்
பார்த்தான்
புலிகேசி. அதில் பயனில்லையென்று கண்டு தெற்குத் திக்கை நோக்கி
வந்தான்.
நமது கொள்ளிடத்தின் அக்கறைக்கு வந்து விட்டான். அப்பப்பா!
அப்போது இந்த
உறையூர் பட்ட பாட்டை என்னவென்று சொல்லுவேன்! நமது பார்த்திப
மகாராஜா
அப்போது பட்டத்துக்கு வந்து கொஞ்ச நாள்தான் ஆகியிருந்தது.
புலிகேசியை
எதிர்க்கப் பலமான ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தார். இதற்குள்
வடக்கே
புலிகேசியின் ராஜ்யத்துக்கே ஏதோ ஆபத்து வந்துவிட்டது
போலிருந்தது. புலிகேசி
கொள்ளிடத்தைத் தாண்டவேயில்லை திரும்பிப் போய்விட்டான்.
போகும்போது அந்தக்
கிராதகனும் அவனுடைய ராட்சத சைன்யங்களும் செய்த
அட்டூழியங்களுக்கு அளவேயில்லையாம்.
ஊர்களையெல்லாம் சூறையாடிக் கொண்டும் தீ வைத்துக் கொண்டும்
போனார்களாம்.
அதிலிருந்து மகேந்திர சக்கரவர்த்தியினுடைய புகழ் மங்கி
விட்டது. 'சளுக்கரின்
பன்றிக் கொடிக்குப் பல்லவரின் ரிஷபக் கொடி பயந்துவிட்டது'
என்று ஜனங்கள்
பேசத் தொடங்கினார்கள். இந்த அவமானத்துக்குப் பிறகு மகேந்திர
சக்கரவர்த்தி
அதிக நாள் உயிரோடிருக்கவில்லை. அவருக்குப் பிறகு நரசிம்மவர்ம
சக்கரவர்த்தி
பட்டதுக்கு வந்தார். இவர் பட்டத்திற்கு வந்ததிலிருந்து
புலிகேசியைப்
பழிக்குப் பழி வாங்கிப் பல்லவ குலத்துக்கு ஏற்பட்ட அவமானத்தைப்
போக்க
வேணுமென்று ஆயத்தங்கள் செய்து வந்தார். கடைசியில் ஆறு
வருஷங்களுக்கு
முன்பு பெரிய சைன்யத்தைத் திரட்டிக் கொண்டு வடக்கே போனார்.
புலிகேசியைப்
போர்க்களத்தில் கொன்று வாதாபி நகரையும் தீ வைத்துக் கொளுத்திச்
சாம்பலாக்கிவிட்டுத்
திரும்பி வந்தார். இந்தப் பெரிய வெற்றியின் ஞாபகார்த்தமாகப்
பல்லவர்களின்
ரிஷபக் கொடியை நரசிம்ம சக்கரவர்த்தி சிங்கக் கொடியாக
மாற்றிவிட்டார்.
அவர் திரும்பி வந்து இப்போது ஒரு மாதந்தான் ஆகிறது. வள்ளி!
அதற்குள்ளே...."


இத்தனை நேரமும் கவனமாய்க் கேட்டுக் கொண்டிருந்தவள்,
"அப்பேர்ப்பட்ட சக்கரவர்த்தியுடன் நமது மகாராஜா எதற்காக
யுத்தம் செய்யப்
போகிறார் தாத்தா! அவருடன் சிநேகமாயிருந்தாலென்ன?" என்று
கேட்டாள்.

"அடி பைத்தியக்காரி..." என்று கிழவன்
மறுமொழி சொல்ல ஆரம்பித்தான்.

அப்போது வீதியில் குதிரை வரும் சத்தம்
கேட்டது. அந்த வீட்டின் வாசலிலேதான் வந்து நின்றது.

"வீரபத்திர ஆச்சாரி!" என்று யாரோ அதிகாரக்
குரலில் கூப்பிட்டார்கள். உடனே கிழவன், "அந்தச் சண்டாளன்
மாரப்ப பூபதி
வந்துவிட்டான். வள்ளி, நீ அவன் கண்ணில் படக்கூடாது,
சமையற்கட்டுக்குள்
போ, அவன் தொலைந்ததும் உன்னைக் கூப்பிடுகிறேன்" என்றான்.


************************************************
Back to top Go down
http://wwww.myacn.eu
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Empty
PostSubject: 5. மாரப்ப பூபதி   அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Icon_minitimeTue May 25, 2010 10:23 pm

5. மாரப்ப பூபதி



வாசலில் குதிரையில் வந்திறங்கியவன்
திடகாத்திரமுள்ள யௌவன புருஷன்; வயது இருபத்தைந்து இருக்கும்.
ஆடை ஆபரணங்கள்
உயர்ந்த ராஜரீக பதவியைக் குறிப்பிட்டன. ஆசா பாசங்களிலும்
மதமாச்சரியங்களிலும்
அலைப்புண்ட உள்ளத்தை முகக்குறி காட்டியது.

"சேனாதிபதி வரவேணும்" என்று சொல்லிக்
கிழவன் வந்தவனை வரவேற்று உள்ளே அழைத்துக் கொண்டு வந்தான்.

"இனிமேல் என்னை அப்படிக் கூப்பிடாதே!
நான் சேனாதிபதி இல்லை; நான் மாரப்ப பூபதி இல்லை, நான் என்
தகப்பனுக்குப்
பிள்ளையே இல்லை!" என்று கோபமான குரலில் சொல்லிக் கொண்டு மாரப்ப
பூபதி
உள்ளே வந்தான். முற்றத்தில் ஏற்கெனவே கிழவன் உட்கார்ந்திருந்த
பீடத்தில்
அமர்ந்தான்.

"யுவராஜா ரொம்பக் கோபமாய் இருப்பது போல்
தெரிகிறது!"

"யுவராஜாவா? யார் யுவராஜா? நானா? நேற்றுப்
பிறந்த அந்தப் பரதைப் பயல் அல்லவா யுவராஜா? இளவரசர் விக்கிரம
சிங்கர்
வாழ்க! ஜய விஜயீபவ!" என்று பரிகசிக்கும் குரலில் கூறிவிட்டு
மாரப்ப பூபதி
'இடி இடி' யென்று சிரித்தான்.

சற்றுப் பொறுத்து, "அது போகட்டும், ஆச்சாரி!
உன் சோழி என்ன தெரிவிக்கிறது? அதைச் சொல்லு!" என்றான்.

வீரபத்திர ஆச்சாரி கொல்லு வேலை செய்ததுடன்,
சோதிட சாஸ்திரத்தில் வல்லவன் என்று பெயர் வாங்கியிருந்தான்.
சோழிகளை
வைத்துக் கொண்டு அவன் கணக்குப் போட்டு ஜோசியம் பார்ப்பது
வழக்கம்.

"யுவராஜா! எதற்காக இந்தப் பிரமை உங்களுக்கு....?"
என்று ஆரம்பித்தான் கிழவன்.

"அந்தக் கதையெல்லாம் அப்புறம் வைத்துக்
கொள்ளலாம். நீ ஏதாவது பார்த்தாயா இல்லையா? வெறுமனே என்னை
அலைக்கழிக்க
உத்தேசமா?"

"பார்த்தேன் யுவராஜா! உங்களுக்கு என்ன
வேணுமோ, கேட்டால் சொல்லுகிறேன்."

"முக்கியமான விஷயம் சண்டைதான். அதன் முடிவு
என்ன ஆகும்? இதைத் தெரிந்து சொல்ல முடியாவிட்டால் உன்
ஜோசியத்தினால்
என்ன பிரயோஜனம்? சுவடிகளையும் சோழிகளையும் தூக்கி நானே காவேரி
ஆற்றில்
எறிந்து விடுகிறேன்!" என்றான் மாரப்பன்.

"அப்படியே செய்துவிடுங்கள், யுவராஜா!
எனக்கு ரொம்ப அனுகூலமாயிருக்கும். பாருங்கள்! என்னுடைய சொந்த
விஷயத்தில்
இந்த சாஸ்திரம் பிரயோஜனப்படவில்லை. ஒரே நாளில் குடும்பம்
முழுவதும் அழிந்து
விட்டது. குலத்தை வளர்ப்பதற்கு ஒரு பெண் குழந்தை தான்
மிஞ்சியிருக்கிறது."


"வள்ளி சுகமாயிருக்கிறாளா, ஆச்சாரி?"
என்று மாரப்ப பூபதி கேட்டான். அப்பொழுது அவன் முகத்தில் ஒரு
விகாரம்
காணப்பட்டது.

"ஏதோ இருக்கிறாள்" என்றான் கிழவன்.

"ஆமாம் பொன்னன் சண்டைக்குப் போய்விட்டால்
வள்ளி என்ன செய்வாள்?"

"அதற்கென்ன, யுவராஜா! வள்ளியைக் காப்பாற்றக்
கடவுள் இருக்கிறார்; இந்தக் கிழவனும் இருக்கிறேன்!" என்று
அழுத்திச்
சொன்னான் வீரபத்திர ஆச்சாரி.


"ஆமாம், நீ இருக்கும்போது அவளுக்கு என்ன
வந்தது? இருக்கட்டும் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறோம். இந்தச்
சண்டையின்
முடிவு என்ன ஆகும்? உன் சோழிக் கணக்கில் ஏதாவது
தெரிகிறதாயிருந்தால்
சொல்லு; இல்லாவிட்டால் உன் ஜோசியக் கடையைக் கட்டு!"

"கடையை அப்போதே கட்டிவிட்டேன் யுவராஜா!
உங்களுடைய தொந்தரவினால்தான் மறுபடியும் அதைத் திறந்தேன்!"

"திறந்ததில் என்ன தெரிந்தது?"

"கிரகங்களின் சேர்க்கை ரொம்ப பயங்கரமான
முடிவைக் காட்டுகிறது. சண்டையில் ஒரு பக்கத்துச் சேனை அடியோடு
அழிந்து
போகும். யுத்த களத்துக்குப் போனவர்களில் ஒருவராவது திரும்பி வர
மாட்டார்கள்.
ஆனால் எந்தப் பக்கத்துச் சேனை என்று எனக்குத் தெரியாது."

"அது எனக்குத் தெரியும். எந்தப் பக்கத்துச்
சேனை அழியும் என்று சொல்வதற்கு நீயும் வேண்டாம்; உம் சோழியும்
வேண்டாம்.
திரும்பி வராமல் நிர் மூலமாகப் போகிறது சோழ சைன்யந்தான்.
அந்தப் பெரும்
புண்ணியத்தைத்தான் உங்கள் பார்த்திப சோழ மகாராஜா கட்டிக்
கொள்ளப் போகிறார்!"


"யுவராஜா! நீங்களே இப்படிச் சொல்லலாமா?
நமக்குள் எவ்வளவு மனஸ்தாபங்கள் இருந்தாலும் பகைவனுக்கு
முன்னால்...."


"யார் பகைவன்? பல்லவ சக்கரவர்த்தியா?
நமக்குப் பகைவன்? இல்லவே இல்லை! சோழநாட்டுக்கு இப்போது பெரிய
பகைவன்
பார்த்திபன்தான். இவன் கையிலே வாள் எடுத்து அறியமாட்டான். வேல்
வீசி
அறிய மாட்டான்! இப்பேர்ப்பட்ட வீராதிவீரன் பல்லவ சைன்யத்துடன்
போர் செய்யக்
கிளம்புகிறான். பல்லவ சைன்யம் என்றால் லேசா! சமுத்திரத்தின்
மணலை எண்ணினாலும்
எண்ணலாம். பல்லவ சைன்யத்திலுள்ள வீரர்களை எண்ண முடியாது.
காவேரியிலிருந்து
கோதாவரி வரையில் பரந்து கிடக்கும் பல்லவ சாம்ராஜ்யம் எங்கே?
ஒரு கையகலமுள்ள
சோழ நாடு எங்கே? நரசிம்ம சக்கரவர்த்தி தான் லேசுப்பட்டவரா?
நூறு யோசனை
தூரம் வடக்கே சென்று ராட்சதப் புலிகேசியைப் போர்க்களத்தில்
வென்று, வாதாபியைத்
தீ வைத்துக் கொளுத்தி விட்டு வந்தவர், அவருடன் நாம் சண்டை போட
முடியுமா?
யானைக்கு முன்னால் கொசு!"

"யுவராஜா! இதையெல்லாம் என்னிடம் ஏன் சொல்லுகிறீர்கள்?
மகாராஜாவிடம் சொல்வதுதானே?"

"மகாராஜாவிடம் சொல்லவில்லையென்றா நினைத்துக்
கொண்டாய் கிழவா? சொன்னதன் பலன் தான் எனக்குச் சேனாதிபதிப் பதவி
போயிற்று.
மகாராஜாவே சேனாதிபதிப் பதவியையும் ஏற்றுக் கொண்டு விட்டார்.
சைனியத்தை
அவரே நடத்திக் கொண்டு யுத்த களத்துக்குப் போகப் போகிறாராம்!
தாராளமாய்ப்
போகட்டும். இந்தப் பிரமாத சேனாதிபதி பதவி இல்லையென்று யார்
அழுதார்கள்?"


"அப்படியானால் யுவராஜா! நீங்கள் யுத்தத்துக்கே
போகமாட்டீர்களோ?"

"நானா? நானா? என்னைக் கூப்பிட்டால் போவேன்;
கூப்பிடாவிட்டால் போக மாட்டேன்; கிழவா! சண்டையின் முடிவைப்
பற்றிச் சொன்னாயே,
அதை இன்னொரு தடவை விவரமாய்ச் சொல்லு!"

"ஆமாம், யுவராஜா! ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள்
எல்லோரும் யுத்த களத்தில் அழிந்து போவார்கள். ஒருவராவது
உயிரோடு திரும்பி
வரமாட்டார்கள்?"

"உயிரோடு திரும்பி வரமாட்டார்களா? பின்
உயிரில்லாமல் திரும்பி வருவார்களோ? ஹா ஹா ஹா ஹா!" என்று மாரப்ப
பூபதி
உரக்கச் சிரித்தான். பிறகு, "ஆமாம் ஆமாம்; நான் யுத்தத்தில்
செத்துப்
போனால் நிச்சயமாய்ப் பிசாசாகத் திரும்பி வருவேன்; திரும்பி
வந்து வள்ளியைப்
பிடித்துக் கொண்டு ஆட்டுவேன்" என்று கூறி மறுபடியும்
பயங்கரமாகச் சிரித்தான்.


சமையலறையிலிருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த
வள்ளி தன் இரண்டு கையையும் நெறித்து, "உன் கழுத்தை இந்த மாதிரி
நெறித்துக்
கொல்லுவேன்!" என்று முணுமுணுத்தாள். கொஞ்சம் காது மந்தமுள்ள
கிழவி "என்ன
சொல்லுகிற, வள்ளி?" என்று கேட்கவும் வள்ளி அவளுடைய வாயைப்
பொத்தி, "சும்மா
இரு!" என்றாள்.

"உள்ளே யார் பேசுகிறது?" என்று கேட்டான்
மாரப்ப பூபதி.

"யார் பேசுவார்கள்? என்னைப் பிடித்திருக்கிறதோ,
இல்லையோ ஒரு கிழப் பிசாசு - அதுதான் தனக்குத் தானே பேசிக்
கொண்டிருக்கும்"
என்றான் கிழவன்.

"சரி, எனக்கு நேரமாச்சு; போகவேணும். என்
கிரக பலன்களைப் பற்றி நீ சொன்னதெல்லாம் நிஜந்தானே ஆச்சாரி!
பொய் சொல்லி
ஏமாற்றியிருந்தாயோ...!"

"தங்களை ஏமாற்றி எனக்கு என்ன ஆகவேணும்
யுவராஜா!"

மாரப்ப பூபதி எழுந்து நின்று சுற்று முற்றும்
பார்த்தான். முற்றத்தில் அடுக்கி வைத்திருந்த வாள்களையும்
வேல்களையும்
கத்தி கேடயங்களையும் பார்த்துவிட்டுச் சிரித்தான். "ஆஹா! ரொம்ப
முனைந்து
வேலை செய்கிறாயாக்கும்! கத்தி! கேடயம்! வாள்! வேல்! இந்த
வாழைப்பட்டைக்
கத்திகளையும், புல் அரியும் அரிவாள்களையும் வைத்துக்
கொண்டுதான் உங்கள்
பார்த்திப மகாராஜா, பல்லவ சக்கரவர்த்தியை ஜயித்து விடப்
போகிறார்? நல்ல
வேடிக்கை! ஹா ஹா ஹா" என்று உரக்கச் சிரித்துக் கொண்டே ஒரு
பக்கத்தில்
அடுக்கி வைத்திருந்த வாள்களைக் காலால் உதைத்துத் தள்ளினான்.
அப்படியே
வாசற் பக்கம் போனான்.

உலைக் களத்தில் கிளம்பும் அனற் பொறிகளைப்
போல் கிழவன் கண்களிலே தீப்பொறி பறந்தது.

------------------------------------------------------------------------------------
Back to top Go down
http://wwww.myacn.eu
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Empty
PostSubject: பார்த்திபன் கனவு 6. போர் முரசு   அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Icon_minitimeThu May 27, 2010 12:40 am

போர் முரசு









வீட்டு வாசலிலிருந்து குதிரை கிளம்பிப் போன சத்தம் கேட்டதும், வள்ளி
முற்றத்துக்கு வந்தாள். மாரப்ப பூபதி உதைத்துத் தள்ளிய கத்திகளில் ஒன்றைக்
கையில் எடுத்துக் கொண்டு "தாத்தா! இந்தக் கத்தி கேடயம் எல்லாம் நீ செய்து
என்ன பிரயோஜனம்? நமது மகாராஜாவைப் பற்றி அப்படிக் கேவலமாய்ப் பேசியவனைச்
சும்மா தானே விட்டு விட்டாய்?" என்று ஆத்திரத்துடன் கேட்டாள்.

"ஏன் வள்ளி உனக்கு இவ்வளவு கோபம்? நீ சொன்னதைத் தானே நமது
பழைய சேனாதிபதியும் சொன்னார், சண்டை வேண்டாம் என்று?" என்றான் கிழவன்.

"சேச்சே! நான் சண்டை வேண்டாமென்று சொன்னேனா? சண்டை
எதற்காக என்று தெரியாமல்தானே கேட்டேன்!" என்று வள்ளி சொன்ன போது அவள்
கண்களில் நீர்ததும்பிற்று.

"ஆமாம், வள்ளி! அதை நான் சொல்ல ஆரம்பித்த போதுதான் இந்தப்
பாவி வந்துவிட்டான். வாதாபிச் சக்கரவர்த்தி புலிகேசி, தென்தேசத்தின் மீது
படையெடுத்து வந்து பல அட்டூழியங்கள் செய்து விட்டுத் திரும்பப் போனதைச்
சொன்னேனல்லவா? அதற்குப் பழிக்குப்பழி வாங்குவதற்காக நரசிம்ம சக்கரவர்த்தி
வெகுகாலம் ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். கடைசியில் ஆறு வருஷத்துக்கு
முன்பு அவர் வாதாபியின் மேல் படையெடுத்துச் சென்றார். அப்போது நமது
பார்த்திப மகாராஜாவையும் தமது படைகளுடன் வந்து சேர்ந்து கொள்ளும்படி ஓலை
அனுப்பினார். அதற்குப் பார்த்திப ராஜா அப்படியே செய்வதாகவும், ஆனால்
அதற்குப் பிரதியாக அன்று முதல் உறையூரிலிருந்து கப்பம் வாங்குவதை
நிறுத்திவிட வேண்டுமென்றும், சோழநாட்டின் புலிக்கொடிக்குச் சமமரியாதை
கொடுக்க வேண்டுமென்றும் செய்தி அனுப்பினார். இதை நரசிம்ம சக்கரவர்த்தி
கவனிக்கவேயில்லை. மறு ஓலைகூட அனுப்பாமல் படை கிளம்பிப் போய்விட்டார். அன்று
முதல் பார்த்திப மகாராஜாவும் காஞ்சிக்குக் கப்பம் அனுப்புவதை
நிறுத்திவிட்டார். அது காரணமாகத்தான் யுத்தம் வந்திருக்கிறது வள்ளி!
இப்போது நீயே சொல்லு. பார்த்திப மகாராஜா முன் வைத்த காலைப் பின்வைத்துச்
சக்கரவர்த்தியிடம் சரணாகதி அடைந்து விடலாமா? நமது சிராப்பள்ளி மலையில்
போட்ட புலிக்கொடியைத் தாழ்த்திப் பல்லவர்களின் எருதுக் கொடியை மறுபடியும்
பறக்க விடலாமா? அந்த அவமானத்தைச் சகித்துக் கொண்டாவது இந்தச் சோழ தேசத்து
மக்கள் எதற்காக உயிரை வைத்துக் கொண்டிருக்க வேண்டும்?"

"அந்த நியாயமெல்லாம் எனக்குத் தெரியாது தாத்தா! நமது
பார்த்திப மகாராஜா என்ன செய்கிறாரோ, அதுதான் சரி. அவருக்கு விரோதமாய்ப்
பேசுகிறவர்கள் எல்லாரும் பொல்லாத பாவிகள். அவர்கள் நரகத்துக்குத் தான்
போவார்கள். இந்த மாரப்ப பூபதியை நீ சும்மா விட்டு விட்டாயே என்று எனக்கு
இருக்கிறது தாத்தா! நமது மகாராஜா எவ்வளவு நல்லவர் தெரியுமா....?"

"ஆமாம்; நமது மகாராஜா ரொம்ப நல்லவர்தான். ஆகையினால்தான்
இந்தக் குலங்கெட்ட மாரப்பனுக்கு இவ்வளவு இடங்கொடுத்துத் தலையில் தூக்கி
வைத்துக் கொண்டு கூத்தாடினார்!"

"என்ன சொல்லுகிறாய், தாத்தா?"

"சரியாகத்தான் சொல்லுகிறேன். இந்த மாரப்ப பூபதி நமது
மகாராஜாவின் சொந்தச் சகோதரன் அல்ல. பழைய மகாராஜா ஐம்பது வயதுக்குமேல் சபலம்
தட்டி யாரோ ஒரு மூதேவியைக் கல்யாணம் செய்து கொண்டார். ஊரில் யாருக்குமே
அந்தக் கலியாணம் பிடிக்கவில்லை. அந்த மூதேவியின் பிள்ளைதான் இந்த மாரப்பன்.
பழைய மகாராஜா செத்துப் போகும்போது, பார்த்திபருக்குப் பிள்ளைக் குழந்தை
இல்லாவிட்டால் இவனுக்குப் பட்டத்தைக் கொடுக்க வேணுமென்று சொல்லிவிட்டுப்
போனாராம். விக்கிரம இளவரசர் பிறக்கும் வரையில் இவன்தான் 'யுவராஜா'வாக
விளங்கினான். பார்த்திப மகாராஜா எவ்வளவோ இவனிடம் அன்பு காட்டிக் கௌரவம்
அளித்துச் சேனாதிபதிப் பதவியும் கொடுத்திருந்தார். இவனோ நன்றி கெட்ட
பாதகனாயிருக்கிறான். குலத்தின் குணம் எங்கே போகும்?"

"இவனோடு உனக்கு என்னத்திற்காகச் சகவாசம் தாத்தா? இவனுக்கு
நீ ஜோசியம் சொல்வது என்ன வேண்டிக் கிடந்தது?"

"உன்னால் ஏற்பட்ட சகவாசந்தான் வள்ளி!" என்றான் கிழவன்.

வள்ளி திடுக்கிட்டு "என்னால் ஏற்பட்டதா? நன்றாயிருக்கிறதே
கதை!" என்றாள்.

"உன்னால் ஏற்பட்டதுதான். இத்தனை நாளும் உன்னிடம்
சொல்லாமல் வைத்திருந்ததை இப்போது சொல்லப் போகிறேன். வள்ளி! காலம் ரொம்ப
அபாயமான காலம். நமது மகாராஜாவுக்கு என்ன நேருமோ, ராஜ்யம் என்ன கதியடையுமோ
தெரியாது. இந்த மாரப்ப பூபதி யுத்தத்துக்குப் போகமாட்டான் என்று மட்டும்
எனக்கு நிச்சயமாய்த் தெரியும். நீ இவன் விஷயத்தில் ரொம்ப
எச்சரிக்கையாயிருக்க வேண்டும்."

"என்ன தாத்தா, ரொம்பப் பயமுறுத்துகிறாய்? இந்தக்
கரிமூஞ்சியிடம் எனக்கு என்ன பயம்?" என்று வள்ளி கேட்டாள்.

"நான் சொல்கிறதைக் கொஞ்சம் கேள், அம்மா! ஒரு காலத்தில்
இந்த மாரப்ப பூபதி தன்னை உனக்குக் கட்டிக் கொடுக்க வேணுமென்று கேட்டுக்
கொண்டிருந்தான்..."

"அவன் தலையிலே இடி விழ!" என்றாள் வள்ளி.

"அவன் தலையிலே இடி விழவில்லையே, அம்மா! என் தலையிலே
அல்லவா விழுந்தது! கிரக சஞ்சார ரீதியாக அப்போது நம் குடும்பத்துக்கு ஏதோ
பெரிய விபத்து வரப்போகிறதென்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த
மாரப்ப பூபதி தன் ஆட்களை அழைத்துக் கொண்டு வந்து உன்னைத் தூக்கிக் கொண்டு
போவதாக இருந்தான் இதுவும் எனக்குத் தெரிந்தது. நீயும் உன் தமையன்மார்களும்
அப்போது வீட்டில் இருந்தால் ரத்தக்களரியாகுமென்று எண்ணித்தான் எல்லோரையும்
அக்கரையில் உள்ள கலியாணத்துக்குப் போங்கள் என்று அனுப்பினேன். யமன் நடு
ஆற்றில் சூறாவளிக் காற்றாக வந்தான். உன் அண்ணன்மார் எல்லாரும் செத்துப்
போனார்கள். சுவாமி உன்னை மட்டும் எனக்குக் கொடுத்தார்...."

இப்படிச் சொல்லிவிட்டுக் கிழவன் பெருமூச்சு விட்டான்.
ஆகாயத்தைப் பார்த்து ஏதோ யோசனையில் ஆழ்ந்தான்.

வள்ளி, "இத்தனை நாளும் சொல்லவில்லையே தாத்தா? இவன்தானா
என் அண்ணன்மார்களுக்கெல்லாம் யமனாக வந்தவன்? அப்புறம் என்ன நடந்தது?" என்று
கேட்டாள்.

"நீங்கள் எல்லோரும் படகேறிப் போன பிறகு நான்
எதிர்பார்த்தபடியே இவன் தன் ஆட்களுடன் வந்தான். வீட்டில் நீ இல்லை என்று
கண்டதும் தம், தம் என்று குதித்தான். அவனைச் சமாதானப்படுத்துவதற்காக நான்
சோதிட சாஸ்திரத்தை உபயோகப்படுத்தினேன். 'நீ பெரிய சக்கரவர்த்தியின் மருமகன்
ஆகப் போகிறாய், அப்பா! இந்த அற்ப ஆசையெல்லாம் விட்டுவிடு" என்று சொன்னேன்.
அது முதல் இவன் என்னவெல்லாமோ ஆகாசக் கோட்டைகள் கட்ட ஆரம்பித்து விட்டான்.
ஜோசியம் கேட்பதற்கு அடிக்கடி வந்து என் பிராணனை வாங்கிக்
கொண்டிருக்கிறான்."

"இப்போதுதான் அவன் என்னைப் பற்றிப் பேசியதன் அர்த்தம்
புரிகிறது, தாத்தா! ஓடக்காரர் யுத்தத்துக்குப் போய் விட்டால் நான் என்ன
செய்வேன்? நீதான் என்னைக் காப்பாற்றவேணும்?" என்று சொல்லிக் கிழவனுடைய கையை
வள்ளி கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். அவளுடைய உடம்பு நடுங்கிற்று.

கிழவன், "பைத்தியமே! ஏன் இப்படி நடுங்குகிறாய்? பொன்னன்
சண்டைக்குப் போகமாட்டான். அவனை மகாராஜா அழைத்துக் கொண்டு போகமாட்டார். என்
குடும்பத்துக்கு நேர்ந்த பெரிய விபத்து மகாராஜாவுக்குத் தெரியும். என்
குலத்தை வளர்க்க நீ ஒருத்திதான் இருக்கிறாய் என்றும் தெரியும். ஆகையால்தான்
பொன்னனைச் சண்டைக்கு வரவேண்டாம் என்றார். நிச்சயமாக அழைத்துப்
போகமாட்டார்!" என்றான்.

அச்சமயம் வாசலில் முரசடிக்கும் ஓசை கேட்டது. பின்வருமாறு
கூவும் குரலும் கேட்டது:- "வெற்றிவேல்! வீரவேல்! யுத்தம் வருகுது! யுத்தம்
வருகுது! சோழ தேசத்தின் மானத்தைக் காக்க யுத்தம் வருகுது! படையில்
சேர்வதற்கு மீசை முளைத்த ஆண் பிள்ளைகள் எல்லோரும் வரலாம். நொண்டி, குருடு,
சப்பாணி, ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை தவிர மற்றவர்களெல்லாம் வரலாம். உடம்பிலே
சுத்த ரத்தம் ஓடுகிறவர்கள் எல்லாரும் வரலாம். வெற்றிவேல்! வீரவேல்!" -
இதைத் தொடர்ந்து முரசின் சத்தம் ஊர் அதிரும்படியாக எழுந்தது.

இந்தப் போர்முழக்கத்தைக் கேட்ட வள்ளியும் கிழவனும் தெருப்
பக்கம் சென்றார்கள். முரச யானையும் அதைச் சுற்றிச் சில வீரர்களும் போய்க்
கொண்டிருந்தார்கள். முரசும் முரசு அடித்தவனும் அறைகூவியவனும் யானை மேல்
இருந்தனர். இந்த ஊர்வலம் தெருக் கோடி போகும்வரையில் பாட்டனும் பேத்தியும்
கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

ஊர்வலம் தெருக்கோடியில் திரும்பியதும் கிழவன் ஒரு
பெருமூச்சு விட்டு விட்டுச் சொன்னான்:- "வள்ளி, உன்னைப் பொன்னனும் பகவானும்
காப்பாற்றுவார்கள்! இந்த யுத்தத்தில் சேர்ந்து வீர சொர்க்கம் அடைய என்
குடும்பத்திலே வேறு யாரும் இல்லை, நான்தான் போகப் போகிறேன்" என்றான்.

தெற்கு வானத்தில் திடீரென்று ஒரு நட்சத்திரம் நிலை
பெயர்ந்தது; ஒரு வினாடி நேரம் அது பளீரென்று ஒளி வீசி வானவெளியில் அதி
வேகமாய்ப் பிரயாணம் செய்தது; அடுத்த வினாடி மாயமாய் மறைந்தது.

இதை பார்த்த வள்ளிக்கு உடம்பு சிலிர்த்தது.

அதே சமயத்தில் அதே காட்சியைப் பொன்னனும் பார்த்து உடல்
சிலிர்த்தான்.

அப்போது அவன் உறையூர் ராஜ வீதிகளின் வழியாகப் போய்க்
கொண்டிருந்தான்.

பௌர்ணமிக்கு இன்னும் நாலு தினங்கள்தான் இருந்தன. சுக்கில
பட்சத்துச் சந்திரன் வான வெளியில் ராஜ ஹம்சத்தைப் போல் சஞ்சரித்து வெள்ளி
நிலவைப் பொழிந்து கொண்டிருந்தான். உறையூரின் மாடமாளிகைகளெல்லாம் அந்த
வெண்ணிலவில் ஒளியும் மோகனமும் பெற்று சொப்பன லோகம்போல் காட்சியளித்தன.

"ஓடம் வண்டியில் ஏறும்; வண்டி ஓடத்தில் ஏறும்" என்று
சொல்வதுண்டல்லவா? இந்தக் காலத்தில் திருச்சிராப்பள்ளி பெரிய நகரமாகவும்
உறையூர் சிற்றூராயுமிருக்கிறது. அந்த நாளிலோ உறையூர் தான் தலைநகரம்;
திருச்சிராப்பள்ளி சிற்றூர். இரண்டு ஊர்களுக்கும் நடுவில் இடைவெளியில்லாமல்
கடை வீதிகளும், பலவகைத் தொழில் செய்யும் மக்கள் வாழ்ந்த தெருக்களும்
இருந்தன. சிராப்பள்ளி மலையிலிருந்து மகாராஜா இறங்கி வந்து சேர்வதற்கு
முன்னால் பொன்னன் அரண்மனை வாசலை அடைந்துவிட விரும்பினான்.

மகாராஜா, சுவாமி தரிசனம் செய்துவிட்டு மலை
உச்சியிலிருந்து இறங்கி வரும்போது வழியில் நின்று இளவரசருக்கு என்னத்தைக்
காட்டியிருப்பார் என்பது அவனுக்கு ஒருவாறு தெரிந்திருந்தது. அங்கே தான் சோழ
வம்சத்தின் அவமானச் சின்னங்கள் இருந்தன. பார்த்திப மகாராஜாவின் தந்தை,
மகேந்திரவர்ம சக்கரவர்த்தியின் முன்னால் வாளையும் வில்லையும் வைத்து
அடிபணிந்து, விதவிதமான இரத்தினங்களையும் ஆபரணங்களையும் காணிக்கையாக
ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிக்கொள்ளும் காட்சி அங்கே
சித்தரிக்கப்பட்டிருந்தது. அதை நினைக்கும் போதே பொன்னனுக்கு இரத்தம்
கொதித்தது. "சோழ நாடு இந்த அவமானத்தை எத்தனை நாளைக்குச் சகித்துக்
கொண்டிருப்பது? யுத்த களத்தில் பல்லவர்களின் இரத்தத்தைப் பெருக்கி அந்த
அவமானத்தைத் துடைத்துக் கொள்ள வேண்டாமா?" என்று எத்தனையோ முறை பொன்னன்
சிந்தித்ததுண்டு. அப்படிப்பட்ட சந்தர்ப்பம் இப்போது ஏற்பட்டிருக்கும்போது
தான் மட்டும் யுத்தத்துக்குப் போகாமல் வீட்டில் முக்காடிட்டுக்
கொண்டிருப்பதா?- இவ்விதம் யோசித்துக் கொண்டே பொன்னன் விரைவாக நடந்து
சென்றான்.


************************************************************
Back to top Go down
http://wwww.myacn.eu
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Empty
PostSubject: பார்த்திபன் கனவு 1.7. அருள்மொழித் தேவி   அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Icon_minitimeThu May 27, 2010 12:41 am

1.7. அருள்மொழித் தேவி



பொன்னனும் வள்ளியும் உறையூர்க் கோட்டை வாசலுக்கு வந்த அதே சமயத்தில், ராணி
அருள்மொழித் தேவி அரண்மனை உத்தியான வனத்துக்குள் பிரவேசித்தாள். பல்லவ
தூதருக்கு மகாராஜா கூறிய பதிலை ஏவலாளர்கள் உடனே வந்து மகாராணிக்குத்
தெரிவித்தார்கள். மன்னர் வரும் வரையில் பொழுது போக்குவதற்காக ராணி உத்தியான
வனத்துக்குள் சென்றாள். அவ்வனத்தில் சண்பக மலர்கள் அடர்ந்து வளர்ந்திருந்த
ஒரு மூலைக்குப் போய் அங்கே அமைதியாக பளிங்குக்கல் மேடையில் உட்கார்ந்து
கொண்டாள்.

அங்கிருந்து பார்த்தபோது மேற்குத் திக்கில் சூரியன்
அஸ்தமனமாய்க் கொண்டிருந்த காட்சி அடி மரங்களின் வழியாகத் தெரிந்தது. மேல்
வானம் முழுவதும் பத்தரை மாற்றுத் தங்க விதானத்தைப் போல் தகதகவென்று
பிரகாசித்தது. பார்த்துக் கொண்டிருக்கும் போதே தங்கநிறத்தின் சோபை மங்கிக்
கொண்டு வந்தது; அடி வானத்தில் சூரியன் மறைந்தது. சற்று நேரத்திற்கெல்லாம்
மேல் வானம் முழுவதும் ஒரே ரத்தச் சிவப்பாய் மாறிற்று. இந்தக் காட்சி
அருள்மொழித் தேவிக்கு ரண களத்தையும் அங்கே இரத்த ஆறு பெருக்கெடுத்து
ஓடுவதையும் ஞாபகப்படுத்திற்று. தேவி நடு நடுங்கிக் கண்களை மூடிக் கொண்டாள்.


மறுபடி அவள் கண்ணைத் திறந்து பார்த்தபோது, வெள்ளி நிலவின்
இன்பக் கிரணங்கள் மரக் கிளைகளின் வழியாக எட்டிப் பார்க்கத்
தொடங்கியிருந்தன. ராணி உள்ளத்தில் பழைய ஞாபகங்கள், குமுறிக் கொண்டிருந்தன.
பன்னிரண்டு வருஷத்துக்கு முன்னால் பார்த்திப மன்னனுக்கு மாலையிட்டு இந்த
அரண்மனைக்கு அவள் வந்தாள். அந்த நாளிலிருந்து இம்மாதிரி வெண்ணிலவு
பிரகாசித்த எத்தனையோ இரவுகளில் அவளும் பார்த்திபனும் இந்த உத்தியான
வனத்தில் கைகோத்துக்கொண்டு உலாவியதுண்டு. இந்தப் பளிங்குக்கல் மேடைமீது
உட்கார்ந்து இருவரும் நேரம் போவதே தெரியாமல் இருந்ததுண்டு. அந்த நாளில்
பார்த்திபன் சில சமயம் புல்லாங்குழல் கொண்டு வந்து இசைப்பான். அருள்மொழி
மெய் மறந்து கேட்டுக் கொண்டிருப்பாள். கண்ண பெருமானே பார்த்திபனாக
உருக்கொண்டு வந்து மணம் புரிந்ததாக எண்ணிப் பூரிப்படைவாள். இப்படி சில
காலம் வாழ்க்கையே ஓர் இன்பக் கனவாகச் சென்று கொண்டிருந்தது.

பிறகு விக்கிரமன் பிறந்த போது இன்ப வாழ்க்கையின் சிகரத்தை
அவர்கள் அடைந்தார்கள். அதே உத்தியான வனத்தில் அதே பளிங்குக் கல்லின்மீது
குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு கொஞ்சியதெல்லாம் அருள்மொழிக்கு நினைவு
வந்தது. ஆஹா! அந்த ஆனந்தமான நாட்கள் அப்படியே நீடித்திருக்கக் கூடாதா?

ஆனால் எப்படியிருக்க முடியும்? பார்த்திபனுடைய
இருதயத்தின் அடிவாரத்திலே சொல்லமுடியாத வேதனையொன்று பதுங்கிக் கிடந்து
அவனுடைய நெஞ்சை அரித்துக் கொண்டிருக்கையில், அவர்களுடைய ஆனந்த வாழ்க்கை
எப்படி நீடித்திருக்க முடியும்? பார்த்திபனுடைய இந்த அந்தரங்க வேதனையை
வெகுகாலம் கழித்தே அருள்மொழி அறிந்தாள். அறிந்தது முதல் அந்த வேதனையில்
அவளும் பங்கு கொண்டாள். அதற்குத் தானே காரணமோ என்று எண்ணி எண்ணி மனம்
நொந்தாள்.

ஆமாம்; அவர்களுடைய கலியாணத்தின்போதே அந்தக் காரணமும்
ஏற்பட்டு விட்டது. அருள்மொழி, சேர வம்சத்தைச் சேர்ந்த ஒரு சிற்றரசன் மகள்.
அந்த நாளில் அவளைப் போல் சௌந்தரியவதியான ராஜகுமாரி இல்லையென்று
தென்னாடெங்கும் பிரசித்தியாகியிருந்தது. அவளைப் பார்த்திபனுக்கு மணம்
செய்விக்க ஏற்பாடுகள் நடந்த பிறகு, காஞ்சி மகேந்திரவர்ம
சக்கரவர்த்தியிடமிருந்து சேர மன்னனுக்குத் தூதர்கள் வந்தார்கள். பட்டத்து
இளவரசர் நரசிம்மவர்மருக்கு அருள்மொழியைத் திருமணம் முடிக்க விரும்புவதாகச்
சக்கரவர்த்தி செய்தி அனுப்பியிருந்தார். அருள்மொழியின் உற்றார்
உறவினருக்கெல்லாம் இது பெரிதும் சம்மதமாயிருந்தது. ஆனால் அருள்மொழி அதற்கு
இணங்கவில்லை; பார்த்திப சோழரையே பதியாகத் தம் மனத்தில் வரித்து
விட்டதாகவும், வேறொருவரை மணக்க இசையேனென்றும் கண்டிப்பாய்ச் சொன்னாள்.
மகேந்திர சக்கரவர்த்தி மிகவும் பெருந்தன்மையுள்ளவராதலால் அதற்கு மேல்
வற்புறுத்தவில்லை. இளவரசர் நரசிம்மவர்மருக்குப் பாண்டியன் மகளை மணம்
முடித்து வைத்தார்.

பார்த்திபனுக்கும் அருள்மொழிக்கும் மணம் நடந்த பிறகுதான்
பார்த்திபனுக்கு மேற்கூறிய சம்பவம் தெரிய வந்தது. அவர் சில சமயம், "நீ
சாம்ராஜ்ய சக்கரவர்த்தினியாய் காஞ்சி சிம்மாசனத்தில் வீற்றிருக்க
வேண்டியவள்; அதற்கு மாறாக, இந்த உள்ளங்கை அகல சோழ ராஜ்யத்திற்கு
ராணியாயிருக்கிறாய்" என்று சொல்வதுண்டு. முதலில் இதை ஒரு விளையாட்டுப்
பேச்சாகவே அருள்மொழி எண்ணியிருந்தாள். நாளாக ஆக, தன் பதியினுடைய மனத்தில்
இந்த எண்ணம் மிக்க வேதனையை அளித்து வந்தது என்று தெரிந்து கொண்டாள். அதைப்
போக்குவதற்காக அவள் எவ்வளவோ பிரயத்தனம் செய்தும் முடியவில்லை. விக்கிரமன்
பிறந்ததிலிருந்து மகாராஜாவின் அந்தரங்க வேதனை அதிகமாகியே வந்ததாகத்
தெரிந்தது. ஒரு சமயம் அவர் "உன் வயிற்றில் பிறந்த பிள்ளை ஒரு பெரிய
சாம்ராஜ்யத்திற்குச் சக்கரவர்த்தியாயிருக்க வேண்டியவன். என்னாலல்லவா
இன்னொருவருக்குக் கப்பம் கட்டும் சிற்றரசு அவனுக்கு லபிக்கிறது!" என்பார்.
இன்னொரு சமயம், "அருள்மொழி! உன் பிள்ளைக்கு என்னால் சாம்ராஜ்யப்
பட்டாபிஷேகம் செய்து வைக்க முடியாது. ஆனால் வீரத்தந்தையின் புதல்வன் என்ற
பட்டத்தை நிச்சயம் அளிப்பேன்!" என்றார்.

அவருடைய வாக்கை நிறைவேற்றும் சமயம் இப்போது வந்துவிட்டது.
பழைய காலத்து வீர பத்தினிகளைப் போல் அவருடன் தானும் உயிர்
விடுகிறதாயிருந்தால் பாதகமில்லை. அந்தப் பாக்கியத்தையும் தனக்கு அளிக்க
மறுக்கிறாரே? தான் வீரத்தாயாக இருந்து விக்கிரமனை வீர மகனாக வளர்க்க
வேணுமாமே? ஐயோ, அவரைப் பிரிந்த பிறகு உயிரைத்தான் தாங்க முடியுமா?

இப்படி எண்ணியபோது அருள்மொழிக்கு நெஞ்சு பிளந்து விடும்
போலிருந்தது. திடீரென்று அழுகை பீறிக் கொண்டு வந்தது. "ஓ!" வென்று
கதறிவிட்டாள்.

"அருள்மொழி! உன்னை வீர பத்தினி என்றல்லவா நினைத்தேன்?
இவ்வளவு கோழையா நீ?" என்று கடினமான குரலில் கூறிய வார்த்தைகளைக் கேட்டுத்
திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். பார்த்திப மகாராஜா அங்கு நின்றார்.
உடனே அவளுடைய அழுகை நின்றது. கண்ணீரும் வறண்டு விட்டது.

"வா! அரண்மனைக்குப் போகலாம்! அழுவதற்கும்
சமாதானப்படுத்துவதற்கும் இப்போது நேரமில்லை" என்றார் மகாராஜா.

இருவரும் கைகோத்துக் கொண்டு வாய் பேசாமல் அரண்மனைக்குள்
போனார்கள்.

பார்த்திபனும், அருள்மொழியும் அரண்மனைக்குள் பிரவேசித்து,
பூஜாக்கிரஹத்துக்கு வந்தபோது தீபாராதனை நடக்கும் சமயமாயிருந்தது.
பூஜாக்கிரகத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. இடது
பக்கத்தில் பார்வதி தேவியின் அற்புதச் சிலை ஒன்று இருந்தது. தேவியின்
இருபுறத்திலும் விநாயகரும் முருகக் கடவுளும் வீற்றிருந்தார்கள். இன்னொரு
பக்கத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதரான மகாவிஷ்ணு தரிசனம் தந்தார். எல்லா
விக்கிரகங்களும் சண்பகம், பன்னீர், பாரிஜாதம் முதலிய மலர்களால்
அலங்கரிக்கப்பட்டிருந்தன.

தெய்வ சந்நிதியில் இளவரசர் விக்கிரமன், கைகூப்பிய வண்ணம்
நின்று ஆராதனையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அர்ச்சகர் தீபாராதனை செய்து மூவருக்கும் பிரஸாதம்
கொடுத்துவிட்டு வெளியே சென்றார். விக்கிரமன் மகாராஜாவைப் பார்த்து, "அப்பா!
சித்திர மண்டபத்துக்குப் போகலாம் என்றீர்களே?" என்று கேட்டான். "இதோ நான்
வருகிறேன்; விக்கிரமா! நீ முன்னால் போ!" என்றார் மகாராஜா.

விக்கிரமன் வெளியே சென்றதும், மகாவிஷ்ணுவின்
பாதத்தினடியில் வைத்திருந்த நீள வாட்டான மரப்பெட்டியை மகாராஜா சுட்டிக்
காட்டிச் சொன்னார்:-"தேவி! அந்தப் பெட்டிக்குள்ளே என்ன இருக்கிறது என்று
என்னை நீ பல தடவை கேட்டிருக்கிறாய். நானும் 'காலம் வரும் போது
சொல்லுகிறேன்!' என்று சொல்லி வந்திருக்கிறேன். சொல்ல வேண்டிய காலம் இப்போது
வந்துவிட்டது. சோழ வம்சத்தின் புராதன பொக்கிஷம் இந்தப் பெட்டிக்குள்ளே
இருக்கிறது. இதோ திறந்து காட்டுகிறேன் பார்!"

இவ்விதம் சொல்லிக் கொண்டே மகாராஜா அந்த மரப்பெட்டியைத்
திறந்தார். பெட்டிக்குள்ளே பளபளவென்று ஜொலித்த ஓர் உடைவாளும் ஓர்
ஓலைச்சுவடியும் காணப்பட்டன. உடைவாளின் பிடி தங்கத்தினாலானது, இரத்தினங்கள்
இழைத்தது. வாளும் எண்ணெய் பூசிக் கூர்மையாய்த் தீட்டி வைத்திருந்தது. ஆகவே
பிடியும் வாளும் ஒன்றோடொன்று போட்டியிட்டு ஒளி வீசின. இதற்கு மாறாக,
ஓலைச்சுவடியோ மிகப் பழமையானதாய்க் கருநிறமாயிருந்தது.

பார்த்திபன் சொன்னான்:- "தேவி! இந்த உடைவாள் சோழ
வம்சத்திலே முற்காலத்திலே பிரசித்தி பெற்றிருந்த சக்கரவர்த்திகள்
காலத்திலிருந்து வந்தது. கரிகால் வளவனும் நெடுமுடிக் கிள்ளியும் இந்த
உடைவாளைத் தரித்து உலகத்தை ஆண்டார்கள். ஓலைச் சுவடியில் உள்ளது நமது
தமிழகத்தின் தெய்வப் புலவர் அருளிய திருக்குறள். இந்த உடைவாளும்,
குறள்நூலும்தான் சோழர் குலத்தின் புராதன பொக்கிஷங்கள். இவற்றை நீ வைத்துக்
காப்பாற்றி விக்கிரமனுக்கு வயது வரும்போது அவனிடம் சேர்ப்பிக்க வேண்டும்.
அருள்மொழி! இந்தப் புராதன உடைவாளை என் தகப்பனார் அணிந்திருந்தார்; ஆனால்
நான் அணியவில்லை. கப்பங் கட்டும் சிற்றரசனாயிருந்து கொண்டு கரிகால் வளவனும்
நெடுமுடிக் கிள்ளியும் அணிந்த உடைவாளை அணிய நான் விரும்பவில்லை.
விக்கிரமனிடம் நீ இதையும் சொல்ல வேண்டும். எப்போது அவன் ஒரு சின்னஞ்சிறு
பிரதேசத்துக்காவது சுதந்தர மன்னனாகிறானோ அப்போது தான் இந்த உடைவாளைத்
தரிக்கலாமென்று கூற வேண்டும். அக்காலத்தில் இந்த உடைவாளைத் தரித்து, இந்தத்
தெய்வத் திருக்குறளில் சொல்லியிருக்கும் வண்ணம் இராஜ்ய பாரம் செய்யும்
படியும் கூற வேண்டும். இந்தப் பொறுப்பை உன்னிடம் ஒப்புவிக்கிறேன்.
அருள்மொழி! அதை நிறைவேற்றுவதாகத் தெய்வ சன்னிதானத்தில் எனக்கு வாக்குறுதி
அளிக்க வேண்டும். விக்கிரமனை வீரமகனாக நீ வளர்க்க வேண்டும்."

இதைக் கேட்ட அருள்மொழித் தேவி கண்களில் நீர் ததும்ப,
விம்முகின்ற குரலில், "அப்படியே செய்கிறேன்; மகாராஜா!" என்றாள்.
பார்த்திபன் அப்போது "இறைவன் அதற்கு வேண்டிய தைரியத்தை உனக்கு
அளிக்கட்டும்!" என்று சொல்லி அருள்மொழியைத் தழுவிக் கொண்டு அவளுடைய
கண்களில் பெருகிய கண்ணீரைத் தம்முடைய மேலாடையால் துடைத்தார்.






*************************************************************
Back to top Go down
http://wwww.myacn.eu
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Empty
PostSubject: 1.8. சித்திர மண்டபம் (பார்த்திபன் கனவு)   அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Icon_minitimeSat May 29, 2010 5:12 am

(பார்த்திபன் கனவு)


1.8. சித்திர மண்டபம்




உறையூர்த் தெற்கு ராஜவீதியிலிருந்த சித்திர மண்டபம் அந்தக் காலத்தில்
தென்னாடெங்கும் புகழ் வாய்ந்திருந்தது. காஞ்சியிலுள்ள மகேந்திர
சக்கரவர்த்தியின் பேர் பெற்ற சித்திர மண்டபம் கூட உறையூர்ச் சித்திர
மண்டபத்துக்கு நிகராகாது என்று ஜனங்கள் பேசுவது சகஜமாயிருந்தது. பார்த்திப
மகாராஜாவும் இளவரசர் விக்கிரமனும் வெண் புரவிகளின் மீதேறி இந்தச் சித்திர
மண்டபத்தின் வாசலை அடைந்த அதே சமயத்தில், அங்கே படகோட்டி பொன்னனும் வந்து
சேர்ந்தான். இந்த அகாலவேளையில் மகாராஜாவைப் பார்க்க முடியுமோ என்னவோ என்ற
கவலையுடன் வந்த பொன்னன் திடீரென்று மகாராஜாவைப் பார்த்ததும் இன்னது
சொல்வதென்று தெரியாமல் திகைத்தான். "மகாராஜா..." என்னும்போதே அவனுக்கு
நாக்குழறியது. அந்தக் குழறிய குரலைக் கேட்டு மகாராஜாவும் இளவரசரும் அவனைத்
திரும்பிப் பார்த்தார்கள். "பொன்னா! நீ எங்கே வந்தாய்?" என்றார் மகாராஜா.
பொன்னனின் மௌனத்தைக் கண்டு ஒருவாறு அவன் வந்த காரணத்தை ஊகித்தவராய், குதிரை
மீதிருந்து கீழிறங்கினார். இளவரசர் விக்கிரமனும் லாவகமாய்க் குதிரை
மீதிருந்து குதித்தார். "பொன்னா! இந்தத் தீவர்த்தியை வாங்கிக் கொள்!"
என்றார் மகாராஜா. அருகே தீவர்த்தி வைத்துக் கொண்டு நின்ற ஏவலாளனிடமிருந்து
பொன்னன் தீவர்த்தியை வாங்கிக் கொண்டான். அந்த வேளையில் மகாராஜா எதற்காக
சித்திர மண்டபத்துக்கு வந்திருக்கிறார் எதற்காகத் தன்னை தீவர்த்தியுடன்
பின் தொடரச் சொல்லுகிறார் என்பதொன்றும் அவனுக்குப் புரியாவிட்டாலும்,
மகாராஜா தன்னைத் திரும்பிப் போகச் சொல்லாமல் தம்முடன் வரும்படி சொன்னதில்
அளவிலாத குதூகலமுண்டாயிற்று. மகாராஜாவும் இளவரசரும் முன் செல்ல; பொன்னன்
தீவர்த்தியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு சித்திர மண்டபத்துக்குள்
புகுந்தான்.


அந்த சித்திர மண்டபத்துக்குள் முதல் முதலாகப்
பிரவேசிக்கிறவர்களுக்கு "நமக்குள்ள இரண்டு கண் போதாது; இரண்டாயிரம் கண்
இருந்தால் இங்கேயுள்ள சித்திரங்களை ஒருவாறு பார்த்துத் திருப்தியடையலாம்"
என்று தோன்றும். அந்த விஸ்தாரமான மண்டபத்தின் விசாலமான சுவர்களில்
விதவிதமான வர்ணங்களில் பலவகைச் சித்திரங்கள் தீட்டப் பெற்றிருந்தன. அந்த
மண்டபத்தைத் தாங்கிய சிற்ப வேலைப்பாடுள்ள தூண்களிலும் சித்திரங்கள்
காணப்பட்டன. மேல் விமானத்தின் உட்புறங்களையும் சித்திரங்கள் அலங்கரித்தன.
ஒரு சுவரில் ததீசி முனிவரிடம் இந்திரன் வச்சிராயுதத்தைப் பெறுவது, இந்திரன்
விருத்திராசுரனைச் சம்ஹரிப்பது, பிறகு இந்திரலோகம் வருவது, தேவர்களும்
தேவமாதர்களும் இந்திரனை எதிர்கொண்டு வரவேற்பது. இந்திரனுடைய சபையில் தேவ
மாதர்கள் நடனம் புரிவது முதலிய காட்சியைச் சித்திரித்திருக்கிறது. இன்னொரு
பக்கத்தில், திருப்பாற்கடலில் மந்திரகிரியை மத்தாகவும் வாஸுகியைக்
கயிறாகவும் கொண்டு தேவர்கள் ஒருபக்கமும் அசுரர்கள் ஒரு பக்கமும் நின்று
கடையும் பிரம்மாண்டமான காட்சியைச் சித்திரித்திருந்தது. அடுத்தாற்போல,
பரமசிவனுடைய தவத்தைக் கலைப்பதற்குக் காமதேவன் மலர்க்கணை தொடுப்பது முதல்
குமரப் பெருமான் ஜனனம் வரையிலும் உள்ள காட்சிகள் காணப்பட்டன. இந்த
உருவங்கள் எல்லாம் கேவலம் உயிரற்ற சித்திரங்களாகத் தோன்றவில்லை. கால், கை,
முகம் இவற்றின் சரியான அளவு எடுத்துச் சாமுத்திரிகா லட்சணத்துக்கு இணங்க
எழுதப்பட்டிருக்கவுமில்லை. ஆனாலும், அந்த உருவங்களின் ஒவ்வொரு அவயத்திலும்,
காணப்பட்ட நெளிவும் முகத்தில் பொலிந்த பாவமும், தத்ரூபமாய் அந்தத்
தேவர்களின் முன்னால் நாம் நிற்கிறோமென்னும் மயக்கத்தை உண்டாக்கின.

பிரதி மாதம் மூன்று தினங்கள் இந்தச் சித்திர மண்டபம்
பிரஜைகள் எல்லோரும் பார்ப்பதற்கென்று திறந்து வைக்கப்படுவதுண்டு. அவ்வாறு
திறந்திருந்த நாட்களில் பொன்னன் இரண்டு மூன்று தடவை இந்தச் சித்திரங்களைப்
பார்த்து மகிழ்ந்திருக்கிறான். இப்போதும் அந்தச் சித்திரங்கள் அவனுடைய
கண்ணையும் கருத்தையும் கவரத்தான் செய்தன. ஆனாலும் இன்று அவற்றை நின்று
பார்க்க முடியாதபடி மகாராஜாவும் இளவரசரும் முன்னால் விரைந்து போய்க்
கொண்டிருந்தபடியால், பொன்னனும் அவர்களைப் பின்தொடர்ந்து விரைந்து சென்றான்.


சித்திர மண்டபத்தின் இரண்டு மூன்று கட்டுக்களையும்
தாண்டிச் சென்று கடைசியாக, பூட்டிய கதவையுடைய ஒரு வாசற்படியண்டை மகாராஜா
நின்றார். முன்னொரு தடவை பொன்னன் இதே இடத்தில் நின்று இந்த வாசற்படிக்கு
உட்புறத்தில் என்ன இருக்குமோ என்று யோசித்திருக்கிறான். இந்தக் கதவைத்
திறக்கக் கூடாதென்பது மகாராஜாவின் கட்டளை என்று காவலாளர்கள் அப்போது
தெரிவித்ததுண்டு. மகாராஜா இப்போது அந்தக் கதவண்டை வந்து நின்று, தம்
கையிலிருந்த சாவியினால் பூட்டைத் திறக்கத் தொடங்கியதும் பொன்னனுடைய ஆவல்
அளவு கடந்ததாயிற்று. "இதனுள்ளே ஏதோ பெரிய அதிசயம் இருக்கிறது. அதை நாம்
இப்போது பார்க்கப் போகிறோம்" என்று எண்ணியபோது அவனுடைய நெஞ்சு படபடவென்று
அடித்துக் கொண்டது.

கதவு திறந்ததும், "பொன்னா! நீ முதலில் உள்ளே போ!
தீவர்த்தியை நன்றாய்த் தூக்கிப் பிடி! சுவருக்கு ரொம்பச் சமீபமாய்க் கொண்டு
போகாதே! தீவர்த்தி புகையினால் சித்திரங்கள் கெட்டுப் போகும்" என்றார்
மகாராஜா.

பொன்னன் உள்ளே போய் தீவர்த்தியைத் தூக்கிப் பிடித்தான்.
அங்கிருந்த சுவர்களிலும் சித்திரங்கள்தான் தீட்டியிருந்தன. ஆனால் அவை என்ன
சித்திரங்கள், எதைக் குறிப்பிடுகின்றன என்பது அவனுக்குத் தெரியவில்லை.

பொன்னனுக்குப் பின்னால், விக்கிரமனுடைய கையைப் பிடித்து
அழைத்துக் கொண்டு பார்த்திப மகாராஜா அந்த இருள் சூழ்ந்த மண்டபத்துக்குள்ளே
புகுந்தார்.

"குழந்தாய்! பூட்டி வைத்திருக்கும் இந்த
மண்டபத்துக்குள்ளே என்ன இருக்கிறது என்று பல தடவை என்னைக்
கேட்டிருக்கிறாயே! உனக்கு இன்னும் கொஞ்ச வயதான பிறகு இந்தச் சித்திரங்களைக்
காட்ட வேணுமென்றிருந்தேன். ஆனால் இப்போதே காட்ட வேண்டிய அவசியம்
நேர்ந்திருக்கிறது. விக்கிரமா! இந்த மண்டபத்தை நான் வேணுமென்றே
இருளடைந்ததாய் வைத்திருந்தேன். இதற்குள்ளே என்னைத் தவிர வேறு யாரும்
வந்ததில்லை. யாரும் இந்தச் சுவரிலுள்ள சித்திரங்களைப் பார்த்ததில்லை!
பொன்னா தீவர்த்தியைத் தூக்கிப்பிடி!" என்றார் மகாராஜா.

அவருடைய பேச்சில் கவனமாயிருந்த பொன்னன் சட்டென்று
தீவர்த்தியைத் தூக்கிப் பிடித்தான்.

"அதோ, அந்த முதல் சித்திரத்தைப் பார்! குழந்தாய் அதில்
என்ன தெரிகிறது?" என்று மகாராஜா கேட்டார்.

"யுத்தத்துக்கு படை கிளம்புகிறது. ஆஹா எவ்வளவு பெரிய
சைன்யம்! எவ்வளவு யானைகள், எவ்வளவு தேர்கள்; குதிரைகள்; எவ்வளவு காலாட்
படைகள்" என்று விக்கிரமன் வியப்புடன் கூறினான்.

பிறகு, சட்டென்று திரும்பித் தந்தையின் முகத்தைப்
பார்த்து, "அப்பா..." என்று தயங்கினான்.

"என்ன விக்கிரமா! கேள்?" என்றார் மகாராஜா.

"ஒன்றுமில்லை, அப்பா! இந்தச் சித்திரங்கள் யார்
எழுதியவையென்று யோசித்தேன்" என்றான் விக்கிரமன்.

"நீ நினைத்தது சரிதான் குழந்தாய்! என் கையினால், நானே
எழுதிய சித்திரங்கள்தாம் இவை. இந்தப் பன்னிரண்டு வருஷ காலமாய் இரவிலும்,
பகலிலும் தூங்கும்போதும் விழித்திருக்கும் போதும் நான் கண்டு வந்த
கனவுகளைத் தான் இங்கே எழுதியிருக்கிறேன். குழந்தாய்! நன்றாய்ப் பார்!
யாருடைய சைன்யங்கள் இவை, தெரிகிறதா?"

"ஆஹா! தெரிகிறது. முன்னால் புலிக்கொடி போகிறதல்லவா? சோழ
ராஜ்யத்தின் படைகள்தான் இவை. ஆனால் அப்பா!..." என்று மறுபடியும் தயங்கினான்
விக்கிரமன்.

"என்ன கேட்க வேணுமோ, கேள் விக்கிரமா?"

"அவ்வளவு கம்பீரமாக நடந்துபோகும் அந்தப் பட்டத்து
யானையின் மேல், யானைப்பாகன் மட்டுந் தானே இருக்கிறான் அம்பாரியில் யாரும்
இல்லையே, அப்பா!"

"நல்ல கேள்வி கேட்டாய்! வேண்டுமென்றேதான் அப்படி யானையின்
மேல் யாரும் இல்லாமல் விட்டிருக்கிறேன். இந்தச் சோழ வம்சத்திலே எந்தத்
தீரன் இம்மாதிரி பெரிய சைன்யத்தைத் திரட்டிக் கொண்டு திக்விஜயம்
செய்வதற்காகக் கிளம்பிப் போகிறானோ, அவனுடைய உருவத்தை அந்த யானையின் மேல்
எழுதவேணும், குழந்தாய்! தற்சமயம் இந்தச் சோழராஜ்யம் ஒரு கையலகமுள்ள
சிற்றரசாக இருக்கிறது. வடக்கே பல்லவர்களும், தெற்கே பாண்டியர்களும் மேற்கே
சேரர்களும் இந்தச் சோழ நாட்டை நெருக்கிச் சிறைப்பிடித்திருக்கிறார்கள்.
ஆனால் இந்த நாடு எப்போதும் இப்படியிருந்ததில்லை. ஒரு காலத்தில் நம்முடைய
வம்சம் மிக்க புகழ் வாய்ந்திருந்தது. விக்கிரமா! உன்னுடைய மூதாதைகளிலே
கரிகால் வளவன் நெடுமுடிக் கிள்ளி முதலிய மாவீரர்கள் இருந்திருக்கிறார்கள்.
சோழர் என்ற பெயரைக் கேட்டதும் மாற்றரசர்கள் நடுங்கும்படியாக அவர்கள் வீரச்
செயல்கள் புரிந்திருக்கிறார்கள். அப்போது பல்லவர் என்ற பெயரே இந்தத்
தென்னாட்டில் இருந்ததில்லை. சோழ சாம்ராஜ்யம் வடக்கே வெகுதூரம்
பரவியிருந்தது. அந்நாளில் பாண்டியர்களும் சேரர்களும் சோழ மன்னர்களுக்குத்
திறை செலுத்திக் கொண்டிருந்தார்கள். கடல்களுக்கு அப்பால் எத்தனையோ
தூரத்திலுள்ள அரசர்களெல்லாம் சோழ சக்கரவர்த்திகளுக்குக் காணிக்கைகளுடன்
தூதர்களை அனுப்பி வந்தார்கள். இப்போது கடல்மல்லைத் துறைமுகம் பிரசித்தி
பெற்றிருப்பது போல அந்நாளில் காவேரிப்பட்டினம் பெரிய துறைமுகமாயிருந்தது.
காவேரிப்பட்டினத்திலிருந்து பெரிய கப்பல்கள் கிளம்பித் தூர தூர
தேசங்களுக்கெல்லாம் சென்று பொன்னும் மணியும் கொண்டுவந்து, சோழ மன்னர்களின்
பொக்கிஷத்தை நிரப்பி வந்தன. குழந்தாய்! மறுபடியும் இந்தச் சோழநாடு
அம்மாதிரி மகோன்னத நிலை அடையவேண்டுமென்பது என் உள்ளத்தில் பொங்கும் ஆசை;
நான் இரவிலும் பகலிலும் காணும் கனவு! அதோ, அந்தச் சித்திரத்தைப் பார்!"

இவ்விதம் மகாராஜா ஆவேசம் கொண்டவர்போல் பேசிக் கொண்டு
மேலும் மேலும் சித்திரங்களைக் காட்டிக் கொண்டே போனார். அடுத்த
சித்திரத்தில், சோழ சைன்யம் ஒரு பெரிய நதியைக் கடக்கும் காட்சி
காணப்பட்டது. பிறகு அப்படைகள் பெரியதோர் மலையில் ஏறிச் சென்றன. அப்பால் ஒரு
பெரிய யுத்தக் காட்சி காணப்பட்டது. அதிலே சோழர் சைன்யம் வெற்றியடைந்த
பிறகு மாற்றரசர்கள் காணிக்கைகளுடன் வந்து சரணாகதி செய்கிறார்கள்.

இம்மாதிரி பல நதிகளைக் தாண்டியும் பல மலைகளைக் கடந்தும்
பல மன்னர்களை வென்றும் கடைசியில் சோழ சைனியம் இமய மலையை அடைகிறது. பர்வத
ராஜாவான இமயத்தின் உச்சியில் சோழர்களின் புலிக்கொடி நாட்டப்படுகிறது.
இதற்குப் பிறகு சோழ நாட்டின் தலைநகருக்குச் சைன்யம் திரும்பி வருவதும் நகர
மாந்தர் அந்த வீரப்படையை எதிர் கொண்டழைப்பதுமான கோலாகலக் காட்சிகள்.

இன்னொரு பக்கத்தில் புலிக்கொடி பறக்கும் பெரிய பெரிய
கப்பல்கள் துறைமுகங்களிலிருந்து கிளம்பும் காட்சியை அற்புதமாகச்
சித்திரித்திருந்தது. அந்தக் கப்பல்கள் தூர தூர தேசங்களுக்குப் போய்ச்
சேருகின்றன. அந்தந்தத் தேசங்களின் மன்னர்கள் பரிவாரங்களுடன் எதிர்கொண்டு
வந்து சோழநாட்டின் தூதர்களை உபசரிக்கிறார்கள். கடல் சூழ்ந்த அந்நாடுகளில்
சோழர்களின் புலிக்கொடி கம்பீரமாய்ப் பறக்கிறது; புலிக்கொடி பறக்கும்
தேசங்களிலெல்லாம் பெரிய பெரிய கோயில்களும் கோபுரங்களும் வானை அளாவி
எழுகின்றன. இத்தகைய அற்புதமான சித்திரங்களே அந்த மண்டபம் முழுவதும்
நிறைந்திருந்தன.



***********************************************
Back to top Go down
http://wwww.myacn.eu
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Empty
PostSubject: (பார்த்திபன் கனவு) 1.9. விக்கிரமன் சபதம்   அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Icon_minitimeSat May 29, 2010 5:15 am

(பார்த்திபன் கனவு)


1.9. விக்கிரமன் சபதம்



சித்திரங்கள் எல்லாம் பார்த்து முடித்ததும் விக்கிரமன் தயங்கிய குரலில்
"அப்பா!" என்றான். மகாராஜா அவனை அன்பு கனியப் பார்த்து "என்ன கேட்க
வேண்டுமோ கேள், குழந்தாய்! சொல்ல வேண்டியதையெல்லாம் தயங்காமல் சொல்லிவிடு;
இனிமேல் சந்தர்ப்பம் கிடைப்பது அரிது" என்றார்.

"ஒன்றுமில்லை அப்பா! இந்தச் சித்திரங்கள் எல்லாம் எவ்வளவு
நன்றாயிருக்கின்றன என்று சொல்ல ஆரம்பித்தேன். இவ்வளவு அற்புதமாய்ச்
சித்திரம் எழுத எப்போது கற்றுக் கொண்டீர்கள்? நமது சித்திர மண்டபத்தில்கூட
இவ்வளவு அழகான சித்திரங்கள் இல்லையே!" என்றான் விக்கிரமன்.

மகாராஜா மைந்தனைக் கட்டி அணைத்துக் கொண்டார். "என் கண்ணே!
என்னுடைய சித்திரத் திறமையை நீ ஒருவன் வியந்து பாராட்டியதே எனக்குப்
போதும். வேறு யாரும் பார்த்துப் பாராட்ட வேண்டியதில்லை. என் மனத்திலிருந்த
ஏக்கம் இன்று தீர்ந்தது" என்றார்.

"ஆனால் அப்பா! எதற்காக உங்கள் வித்தையை நீங்கள் இவ்விதம்
ஒளித்து வைத்திருக்க வேண்டும்? இந்த ஆச்சரியமான சித்திரங்களைப் பற்றி
நீங்கள் வெட்கப்பட வேண்டிய அவசியம் என்ன? ஆகா! இந்த உருவங்கள் எல்லாம்
எவ்வளவு தத்ரூபமாக, உணர்ச்சி பெற்று விளங்குகின்றன? முகங்களிலே தான் எத்தனை
ஜீவகளை! இவ்வளவு ஆச்சரியமான சித்திரங்களை வேறு யார் எழுத முடியும்? ஏன்
இந்தத் திருட்டு மண்டபத்தில் இவற்றைப் பூட்டி வைத்திருக்க வேண்டும்?
எல்லாரும் பார்த்து சந்தோஷப்பட்டாலென்ன?" என்று விக்கிரமன் ஆத்திரமாய்ப்
பேசினான்.

அப்போது பார்த்திப மகாராஜா சொல்லுகிறார்:- "கேள்,
விக்கிரமா! இந்த உலகத்தில் எவன் அதிகாரமும் சக்தியும் பெற்றிருக்கிறானோ,
அவனிடம் உள்ள வித்தையைத்தான் உலகம் ஒப்புக் கொண்டு பாராட்டும். காஞ்சியில்
மகேந்திர சக்கரவர்த்தி இருந்தாரல்லவா? ஒரு தடவை பெரிய வித்வசபைகூடி
அவருக்குச் 'சித்திரக்காரப் புலி' என்ற பட்டம் அளித்தார்கள்.
மகேந்திரவர்மருடைய சித்திரங்கள் மிகவும் சாமானியமானவை; ஆனாலும் அவற்றைப்
புகழாதவர் கிடையாது. இப்போதுள்ள நரசிம்ம சக்கரவர்த்திக்கு இது மாதிரி
எத்தனையோ பட்டப் பெயர்கள் உண்டு. சித்திரக் கலையில் சிங்கம்! கான
வித்தையில் நாரதர்! சிற்பத்தில் விசுவகர்மா! - உலகம் இப்படியெல்லாம் அவரைப்
போற்றுகிறது. ஏன்? அவரிடம் பெரிய சைன்யம் இருப்பதினால்தான். குழந்தாய்!
தெய்வத்துக்கு ஏழை, செல்வன் என்ற வித்தியாசம் இல்லை. இறைவனுக்குச்
சக்கரவர்த்தியும் ஒன்றுதான்! செருப்பு தைக்கும் சக்கிலியனும் ஒன்றுதான்.
ஆனாலும் இந்த உலகத்தில் தெய்வத்தின் பிரதிநிதிகளாயிருப்பவர்கள் கூட, பெரிய
படை பலம் உள்ளவன் பக்கமே தெய்வமும் இருப்பதாய்க் கருதுகிறார்கள்.
மகேந்திரன் வெகுகாலம் ஜைன மதத்தில் இருந்தான்! சிவனடியார்களை எவ்வளவோ
துன்பங்களுக்கு உள்ளாக்கினான். பிறகு அவனுக்குத் திடீரென்று ஞானோதயம்
உண்டாயிற்று. சிவபக்தன் என்று வேஷம் போட்டு நடித்தான் விக்கிரமா!
மகேந்திரனும் சரி, அவன் மகன் நரசிம்மனும் சரி, நடிப்புக் கலையில்
தேர்ந்தவர்கள்; விதவிதமான வேஷங்கள் போட்டுக் கொள்வார்கள்; நம்பினவர்களை
ஏமாற்றுவார்கள். இவர்களுடைய சிவபக்தி நடிப்பு உலகத்தை ஏமாற்றிவிட்டது.
புராதன காலத்திலிருந்து சோழ வம்சத்தினர்தான் சைவத்தையும், வைஷ்ணவத்தையும்
வளர்த்து வந்தார்கள். சிராப்பள்ளிப் பெருமானையும், ஸ்ரீரங்கநாதனையும், குல
தெய்வங்களாகப் போற்றி வந்தார்கள். ஆனால் இன்றைய தினம் சிவனடியார்களும்,
வைஷ்ணவப் பெரியார்களும் யாருடைய சபா மண்டபத்திற்குப் போகிறார்கள்?
திரிலோகாதிபதியான காஞ்சி நரசிம்ம சக்கரவர்த்தியின் ஆஸ்தான மண்டபத்துக்குத்
தான்! என்னுடைய சித்திரங்களைப் பிறர் பார்ப்பதை நான் ஏன் விரும்பவில்லை
என்று இப்போது தெரிகிறதா? சோழ நாடு சிற்றரசாயிருக்கும் வரையில்
'பார்த்திபன் சித்திரம் வேறு எழுத ஆரம்பித்து விட்டானா' என்று உலகம்
பரிகசிக்கும். விக்கிரமா! இன்னொரு விஷயம் நீ மறந்து விட்டாய்..." என்று
நிறுத்தினார் மகாராஜா.

"என்ன அப்பா?" என்று விக்கிரமன் கேட்டான்.

"இவை கேவலம் சித்திரத் திறமையைக் காட்டுவதற்காக மட்டும்
எழுதிய சித்திரங்கள் அல்லவே, குழந்தாய்! என்னுடைய மனோரதங்களை என் இருதய
அந்தரங்கத்தில் பொங்கிக் கொண்டிருக்கும் ஆசைகளையல்லவா இப்படிச்
சித்திரித்திருக்கிறேன்? இந்தச் சித்திரங்களை இப்போது பார்க்கிறவர்கள்
சிரிக்கமாட்டார்களா? 'வீணாசை கொண்டவன்' 'எட்டாத பழத்துக்கு கொட்டாவி
விடுகிறவன்' என்றெல்லாம் பரிகசிக்க மாட்டார்களா? ஆகையினாலேயே, இந்த
மண்டபத்தை இப்படி இருள் சூழ்ந்ததாய் இப்போது வைத்திருக்கிறேன். இந்தச்
சித்திரக் காட்சிகள் எப்போது உண்மைச் சம்பவங்களாகத் தொடங்குமோ, அப்போதுதான்
மண்டபத்தில் வெளிச்சம் வரச் செய்ய வேண்டும். அப்போதுதான் எல்லா ஜனங்களும்
வந்து பார்க்கும்படி மண்டபத்தைத் திறந்துவிடவேண்டும். அந்தப் பாக்கியம்,
விக்கிரமா என் காலத்தில் எனக்குக் கிடைக்கப் போவதில்லை. உன்னுடைய
காலத்திலாவது நிறைவேற வேண்டுமென்பது என் ஆசை. என்னுடன் நீயும்
போர்க்களத்துக்கு வருவதாகச் சொல்வதை நான் ஏன் மறுக்கிறேன் என்று இப்போது
தெரிகிறதல்லவா?"

"தெரிகிறது அப்பா!"

"என் கனவை நிறைவேற்றுவதற்காக நீ உயிர்வாழ வேண்டும். சோழ
நாட்டின் உன்னதமே உன் வாழ்க்கையின் நோக்கமாயிருக்க வேண்டும். சோழர் குலம்
பெருமையடைவதே அல்லும் பகலும் உன்னுடைய நினைவாயிருக்க வேண்டும். சோழரின்
புலிக்கொடி வேறு எந்த நாட்டின் கொடிக்கும் தாழாமல் வானளாவிப்
பறக்கவேண்டுமென்று சதா காலமும் நீ சிந்திக்க வேண்டும். நாளை மறுதினம் நான்
போருக்குக் கிளம்புகிறேன். யுத்த களத்திலிருந்து திரும்பி வருவேனென்பது
நிச்சயமில்லை. விக்கிரமா! போர்க்களத்தில் மடிகிறவர்கள் வீர சொர்க்கம்
அடைகிறார்களென்று புராணங்கள் சொல்லுகின்றன. ஆனால், நான் வீர சொர்க்கம்
போகமாட்டேன். திரும்பி இந்தச் சோழ நாட்டுக்குத்தான் வருவேன். காவேரி நதி
பாயும் இந்தச் சோழ வளநாடுதான் எனக்குச் சொர்க்கம். நான் இறந்த பிற்பாடு
என்னுடைய ஆன்மா இந்தச் சோழ நாட்டு வயல் வெளிகளிலும், கோயில் குளங்களிலும்,
நதிகரைகளிலும், தென்னந் தோப்புகளிலும்தான் உலாவிக் கொண்டிருக்கும். அப்போது
'பார்த்திபன் மகனால் சோழர் குலம் பெருமையடைந்தது' என்று ஜனங்கள் பேசும்
வார்த்தை என் காதில் விழுமானால், அதைவிட எனக்கு ஆனந்தமளிப்பது
வேறொன்றுமிராது. எனக்கு நீ செய்ய வேண்டிய ஈமக்கடன் இதுதான். செய்வாயா,
விக்கிரமா?"

இளவரசன் விக்கிரமன், "செய்வேன், அப்பா! சத்தியமாய்ச்
செய்வேன்!" என்று தழுதழுத்த குரலில் சொன்னான். அவன் கண்களில் நீர்துளித்து
முத்து முத்தாகக் கீழே சிந்திற்று.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்த
பொன்னனுடைய கண்களிலிருந்தும் தாரை தாரையாகக் கண்ணீர் பெருகிக்
கொண்டிருந்தது.

மகாராஜா அவனைப் பார்த்து, "பொன்னா! எல்லாம் கேட்டுக்
கொண்டிருந்தாயல்லவா? இளவரசரிடம் உண்மையான அன்புள்ள சிலராவது அவருக்குத்
துணையாக இருக்கச் சொல்லுகிறேன். என்னுடன் நீ யுத்தத்துக்கு வருவதைக்
காட்டிலும் இளவரசருக்குத் துணையாக இருந்தாயானால், அதுதான் எனக்குத்
திருப்தியளிக்கும் இருக்கிறாயல்லவா?" என்று கேட்டார்.

பொன்னன் விம்மலுடன் "இருக்கிறேன், மகாராஜா!" என்றான்.


*****************************************
Back to top Go down
http://wwww.myacn.eu
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Empty
PostSubject: (பார்த்திபன் கனவு) 1.10. படை கிளம்பல்   அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Icon_minitimeSat May 29, 2010 5:17 am

(பார்த்திபன் கனவு)


1.10. படை கிளம்பல்





உறையூரில் அன்று அதிகாலையிலிருந்து அல்லோலகல்லோலமாயிருந்தது. பார்த்திப
மகாராஜாவின் பட்டாபிஷேகத்தின் போதும் மகேந்திர வர்ம சக்கரவர்த்தியின்
விஜயத்தின் போதும்கூட, உறையூர் வீதிகள் இவ்வளவு அழகாக
அலங்கரிக்கப்படவில்லையென்று ஜனங்கள் பேசிக் கொண்டார்கள். வீட்டுக்கு வீடு
தென்னங்குருத்துக்களினாலும் மாவிலைகளினாலும் செய்த தோரணங்கள் தொங்கிக்
கொண்டிருந்தன. வீடுகளின் திண்ணைப் புறங்களிலெல்லாம், புதிய சுண்ணாம்பும்
சிவப்புக் காவியும் மாறிமாறி அடித்திருந்தது. ஸ்திரீகள் அதிகாலையிலேயே
எழுந்திருந்து, தெருவாசலைச் சுத்தம் செய்து, அழகான கோலங்கள் போட்டு,
வாசலில் குத்து விளக்கு ஏற்றி வைத்தார்கள். பிறகு, ஆடை ஆபரணங்களினால் நன்கு
அலங்கரித்துக் கொண்டு, போருக்குப் படை கிளம்பும் வேடிக்கை பார்ப்பதற்காக
வாசல் திண்ணைகளிலோ மேல் மாடிகளின் சாளரங்களின் அருகிலோ வந்து நின்று
கொண்டார்கள்.

விடிய ஒரு சாமம் இருக்கும்போதே, அரண்மனையிலுள்ள பெரிய ரண
பேரிகை முழங்கத் தொடங்கியது. அதனுடன் வேறு சில சத்தங்களும் கலந்து கேட்கத்
தொடங்கின. குதிரைகள் கனைக்கும் சத்தம், யுத்த வீரர்கள் ஒருவரையொருவர் கூவி
அழைக்கும் குரல், அவர்கள் இடையிடையே எழுப்பிய வீர முழக்கங்களின் ஒலி,
வேல்களும் வாள்களும் ஒன்றோடொன்று உராயும் போது உண்டான கண கண ஒலி,
போருக்குப் புறப்படும் வீரர்களை அவர்களுடைய தாய்மார்கள் வாழ்த்தி அனுப்பும்
குரல், காதலிகள் காதலர்களுக்கு விடை கொடுக்கும் குரல் - இவ்வளவுடன்,
வழக்கத்துக்கு முன்னதாகவே துயில் நீங்கி எழுந்த பறவைகளின் கல கல சத்தமும்
சேர்ந்து ஒலித்தது.

சூரிய உதயத்துக்கு முன்னாலிருந்தே அரண்மனை வாசலில் போர்
வீரர்கள் வந்து குவியத் தொடங்கினார்கள். படைத் தலைவர்கள் அவர்களை
அணிவகுத்து நிற்கச் செய்தார்கள். வரிசை வரிசையாகக் குதிரைப் படைகளும்,
யானைப் படைகளும், காலாட் படைகளும் அணிவகுத்து நிறுத்தப்பட்டன. எல்லாப்
படைகளுக்கும் முன்னால் சோழர்களின் புலிக்கொடி வானளாவிப் பறந்தது. சங்கு,
கொம்பு, தாரை, தப்பட்டை முதலிய வாத்தியங்களை முழக்குகிறவர்கள் படைகளுக்கு
இடையிடையே நிறுத்தப்பட்டார்கள். பெரிய பேரிகைகளைச் சுமந்த ரிஷபங்களும்
ஆங்காங்கு நின்றன. பட்டத்துப் போர் யானை அழகாக அலங்கரிக்கப்பட்டு அரண்மனை
வாசலில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

இந்த மாதிரி அணிவகுப்பு நடந்து கொண்டிருக்கையில் அடிக்கடி
போர் வீரர்கள் "வீரவேல்" "வெற்றிவேல்" என்று முழங்கிக் கொண்டிருந்தார்கள்.


சிறிது நேரத்திற்கெல்லாம் அரண்மனை முன் வாசலில் கலகலப்பு
ஏற்பட்டது. "மகாராஜா வருகிறார்!" "மகாராஜா வருகிறார்!" என்று ஜனங்கள்
பேசிக் கொண்டார்கள். அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே
அரண்மனைக்குள்ளேயிருந்து கட்டியக்காரர்கள் இருவர், "சோழ மண்டலாதிபதி
பார்த்திப மகாராஜா வருகிறார்! பராக் பராக்!" என்று கூவிக் கொண்டு வெளியே
வந்தார்கள். வீதியில் கூடியிருந்த அந்தணர்களும் முதியோர்களும் "ஜய
விஜயீபவா!" என்று கோஷித்தார்கள்.

மகாராஜா அரையில் மஞ்சள் ஆடையும் மார்பில் போர்க்கவசமும்,
இடையில் உடைவாளும் தரித்தவராய் வெளியே வந்தார். அவரைத் தொடர்ந்து ராணியும்
இளவரசரும் வந்தார்கள். அரண்மனை வாசலில் மகாராணி தன் கையில் ஏந்தி வந்த
ஆத்திமாலையை அவர் கழுத்தில் சூட்டினாள். அருகில் சேடி ஏந்திக் கொண்டு நின்ற
மஞ்சள் நீரும் தீபமும் உள்ள தட்டை வாங்கி மகாராஜாவுக்கு முன்னால் மூன்று
சுற்றுச் சுற்றிவிட்டு, கையில் ஒரு துளி மஞ்சள் நீர் எடுத்து மகாராஜாவின்
நெற்றியில் திலகமிட்டாள். அப்போது மீண்டும் மீண்டும் "ஜய விஜயீ பவ" "வெற்றி
வேல்" வீர வேல்" என்னும் முழக்கங்கள் ஆகாயத்தை அளாவி எழுந்து
கொண்டிருந்தன. சங்கு, கொம்பு, தாரை, தப்பட்டை முதலிய வாத்தியங்கள் காது
செவிடுபடும்படி அதிர்ந்தன.

மகாராஜா வீதியில் நின்ற கூட்டத்தை ஒரு தடவை தம் கண்களால்
அளந்தார். அப்போது ஒரு ஏவலாளன் விரைந்து வந்து, மகாராஜாவின் காலில்
விழுந்து எழுந்து கைகட்டி வாய் பொத்தி நின்றான். "என்ன சேதி?" என்று
மகாராஜா கேட்கவும் "மாரப்ப பூபதி இன்று காலை கிளம்பும்போது, குதிரை
மீதிருந்து தவறிக் கீழே விழுந்து மூர்ச்சையானார். மாளிகைக்குள்ளே கொண்டு
போய்ப் படுக்க வைத்தோம். இன்னும் மூர்ச்சை தெளியவில்லை" என்றான்.

இதைக் கேட்ட மகாராஜாவின் முகத்தில் லேசாகப் புன்னகை
பரவிற்று. அந்த ஏவலாளனைப் பார்த்து, "நல்லது, நீ திரும்பிப் போ! பூபதிக்கு
மூர்ச்சை தெளிந்ததும், உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளச் சொன்னேன்
என்று தெரிவி!" என்றார்.

மேற்கண்ட சம்பாஷணை மகாராஜாவுக்கு அருகிலிருந்த ஒரு
சிலருடைய காதிலேதான் விழுந்தது. ஆனாலும் வெகு சீக்கிரத்தில் "மாரப்ப
பூபதிக்கு ஏதோ விபத்தாம்! அவர் போருக்கு வரவில்லையாம்" என்ற செய்தி
பரவிவிட்டது.

பிறகு, மகாராஜா அருகில் நின்ற விக்கிரமனை வாரி எடுத்து
மார்போடணைத்துக் கொண்டு உச்சி மோந்தார். "குழந்தாய், நான் சொன்னதெல்லாம்
ஞாபகம் இருக்கிறதா? மறவாமலிருப்பாயா?" என்றார். "நினைவில் இருக்கிறது.
அப்பா! ஒரு நாளும் மறக்க மாட்டேன்" என்றான் விக்கிரமன். பிறகு மகாராஜா
மைந்தனின் கையைப் பிடித்து அருள்மொழியினிடம் கொடுத்து, "தேவி! நீ
தைரியமாயிருக்க வேண்டும். சோழர் குலச் செல்வத்தையும் புகழையும் உன்னிடம்
ஒப்புவிக்கிறேன். வீர பத்தினியாயிருந்து என் கோரிக்கையை நிறைவேற்ற
வேண்டும். முகமலர்ச்சியுடன் இப்போது விடை கொடுக்க வேண்டும்" என்றார்.

அருள்மொழி, கண்களில் நீர் பெருக, நெஞ்சை அடைக்க,
"இறைவனுடைய அருளால் தங்கள் மனோரதம் நிறைவேறும்; போய் வாருங்கள்" என்றார்.

மகாராஜா போர் யானைமீது ஏறிக் கொண்டார். மறுபடியும் போர்
முரசுகளும், தாரை தப்பட்டை எக்காளங்களும் ஏககாலத்தில் காது செவிடுபடும்படி
முழங்கின - உடனே அந்தச் சோழநாட்டு வீரர்களின் படை அங்கிருந்து பிரயாணம்
தொடங்கிற்று.

புரட்டாசி மாதத்துப் பௌர்ணமி இரவில் வெண்ணாற்றங்கரை
மிகவும் கோரமான காட்சியை அளித்தது. வானத்தில் வெண்ணிலவைப் பொழிந்த வண்ணம்
பவனி வந்து கொண்டிருந்த பூரணச் சந்திரனும், அந்தக் கொடுங் காட்சியைக் காணச்
சகியாதவன் போல், அடிக்கடி வெள்ளி மேகத் திரையிட்டுத் தன்னை மறைத்துக்
கொண்டான்.

பகலெல்லாம் அந்த நதிக்கரையில் நடந்த பயங்கரமான
யுத்தத்தில் மடிந்தவர்களின் இரத்தம் வெள்ளத்துடன் கலந்தபடியால், ஆற்றில்
அன்றிரவு இரத்த வெள்ளம் ஓடுவதாகவே தோன்றியது. அந்த வெள்ளத்தில் பிரதிபலித்த
பூரணச் சந்திரனின் பிம்பமும் செக்கச் செவேலென்ற இரத்த நிறமடைந்து
காணப்பட்டது.

நதியின் மேற்குக் கரையில் கண்ணுக்கெட்டிய தூரம்,
கொடும்போர் நடந்த ரணகளத்தின் கோரமான காட்சி தான். வீர சொர்க்கம் அடைந்த
ஆயிரக்கணக்கான போர்வீரர்களின் உடல்கள் அந்த ரணகளமெங்கும் சிதறிக் கிடந்தன.
சில இடங்களில் அவை கும்பல் கும்பலாகக் கிடந்தன. கால் வேறு, கை வேறாகச்
சிதைவுண்டு கிடந்த உடல்கள் எத்தனையோ! மனிதர்களைப் போலவே போரில் மடிந்த
குதிரைகளும் ஆங்காங்கே காணப்பட்டன. வெகுதூரத்தில் குன்றுகளைப் போல் சில
கறுத்த உருவங்கள் விழுந்து கிடந்தன. அவை போர் யானைகளாகத் தான் இருக்க
வேண்டும்.

அந்த ரணகளத்தில் விருந்துண்ண ஆசைகொண்ட நூற்றுக்கணக்கான
கழுகுகளும், பருந்துகளும் நாலா பக்கங்களிலிருந்தும் பறந்து வந்து
வட்டமிட்டுக் கொண்டிருந்தன. அவற்றின் விரிந்த சிறகுகளின் நிழல் பெரிதாகவும்
சிறிதாகவும் ரணகளத்தின் மேல் ஆங்காங்கு விழுந்து, அதன் பயங்கரத்தை
மிகுதிப்படுத்திக் கொண்டிருந்தன.

நதியின் இனிய 'மர்மர' சத்தத்தைப் பருந்துகள், கழுகுகளின்
கர்ண கடூரமான குரல்கள் அடிக்கடி குலைத்துக் கொண்டிருந்தன.

அந்தக் கோரமான ரணகளத்தில், மெல்லிய மேகத் திரைகளினாலும்
வட்டமிட்ட பருந்துகளின் நிழலினாலும் மங்கிய நிலவொளியில், ஒரு மனித உருவம்
மெல்ல மெல்ல நடந்து போய்க்கொண்டிருந்தது. அது சுற்றுமுற்றும் உற்றுப்
பார்த்துக் கொண்டே போயிற்று.

சற்று நெருங்கிப் பார்த்தால், அது ஒரு சிவனடியாரின்
உருவம் என்பது தெரியவரும்.

தலையில் சடை முடியும், நெற்றி நிறையத் திருநீறும்,
அப்போதுதான் நரை தோன்றிய நீண்ட தாடியும், கழுத்தில் ருத்திராட்ச மாலையும்,
அரையில் காவி வஸ்திரமும், மார்பில் புலித்தோலுமாக அந்தச் சிவனடியார்
விளங்கினார். அவர் கையில் கமண்டலம் இருந்தது. அவருடைய முகத்தில் அபூர்வமான
தேஜஸ் திகழ்ந்தது. விசாலமான கண்களில் அறிவொளி வீசிற்று. தோற்றமோ வெகு
கம்பீரமாயிருந்தது. நடையிலும் ஒரு பெருமிதம் காணப்பட்டது. இந்த மகான்
சிவனடியார் தானோ, அல்லது சிவபெருமானே இத்தகைய உருவம் பூண்டு வந்தாரோ என்று
திகைக்கும்படியிருந்தது.

இந்தப் பயங்கர ரணகளத்தில் இந்தப் பெரியாருக்கு என்ன வேலை?
யாரைத் தேடி அல்லது என்னத்தை தேடி இவர் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டு
போகிறார்?

சிவனடியார் எந்தத் திசையை நோக்கிப் போனாரோ, அதற்கு
எதிர்த் திசையில் கொஞ்ச தூரத்தில் கருங்குன்று ஒன்று நகர்ந்து வருவது போல்
ஒரு பிரம்மாண்டமான உருவம் அசைந்து வருவது தெரிந்தது. அது சோழ மன்னர்களின்
பட்டத்துப் போர் யானைதான்.

அதைக் கண்டதும் சிவனடியார் சிறிது தயங்கித் தாம் நின்ற
இடத்திலேயே நின்றார்.

யானையின் தேகத்தில் பல இடங்களில் காயம் பட்டு இரத்தம்
வடிந்து கொண்டிருந்தது. நடக்க முடியாமல் அது தள்ளாடி நடந்தது என்பது
நன்றாய் தெரிந்தது. கீழே கிடந்த போர் வீரர்களின் உயிரற்ற உடல்களை மிதிக்கக்
கூடாதென்று அது ஜாக்கிரதையாக அடி எடுத்து வைத்து நடந்தது. துதிக்கையை
அப்படியும் இப்படியும் நீட்டி அங்கே கிடந்த உடல்களைத் தடவிப் பார்த்துக்
கொண்டே வந்ததைப் பார்த்தால், அந்த யானை எதையோ தேடி வருவதுபோல் தோன்றியது.

சற்று நேரத்துக்கெல்லாம், அந்தப் பட்டத்து யானையானது,
உயிரற்ற குவியலாக உடல்கள் ஒன்றன்மேல் ஒன்றாகக் கிடந்த ஓர் இடத்துக்கு வந்து
நின்றது. அந்த உடல்களை ஒவ்வொன்றாக எடுத்து அப்பால் மெதுவாக வைக்கத்
தொடங்கியது.

இதைக் கண்டதும் சிவனடியார் இன்னும் சற்று நெருங்கிச்
சென்றார். சமீபத்தில் தனித்து நின்ற ஒரு கருவேல மரத்தின் மறைவில் நின்று
யானையின் செய்கையை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

யானை, அந்த உயிரற்ற உடல்களை ஒவ்வொன்றாய் எடுத்து
அப்புறப்படுத்திற்று. எல்லாவற்றுக்கும் அடியில் இருந்த உடலை உற்று
நோக்கிற்று. அதைத் துதிக்கையினால் மூன்று தடவை மெதுவாகத் தடவிக் கொடுத்தது.


பிறகு அங்கிருந்து நகர்ந்து, சற்றுத் தூரத்தில்
வெறுமையாயிருந்த இடத்துக்குச் சென்றது. துதிக்கையை வானத்தை நோக்கி
உயர்த்திற்று.

சொல்ல முடியாத சோகமும் தீனமும் உடைய ஒரு பெரிய பிரலாபக்
குரல் அப்போது அந்த யானையின் தொண்டையிலிருந்து கிளம்பி, ரணகளத்தைத் தாண்டி,
நதியின் வெள்ளத்தைத் தாண்டி, நெல் வயல்களையெல்லாம் தாண்டி, வான முகடு
வரையில் சென்று, எதிரொலி செய்து மறைந்தது.

அவ்விதம் பிரலாபித்து விட்டு அந்த யானை குன்று சாய்ந்தது
போல் கீழே விழுந்தது. சில வினாடிக்கெல்லாம் பூகம்பத்தின்போது மலை
அதிர்வதுபோல் அதன் பேருடல் இரண்டு தடவை அதிர்ந்தது. அப்புறம் ஒன்றுமில்லை!
எல்லையற்ற அமைதிதான்.

சிவனடியார் கருவேல மரத்தின் மறைவிலிருந்து வெளிவந்து,
யானை தேடிக் கண்டுபிடித்த உடல் கிடந்த இடத்தை நோக்கி வந்தார். அதன் அருகில்
வந்து சிறிது நேரம் உற்றுப் பார்த்தார். பார்த்திப மகாராஜாவின் உடல் தான்
அது என்பதைக் கண்டார்.

உடனே அவ்விடத்தில் உட்கார்ந்து அவ்வுடலின் நெற்றியையும்
மார்பையும் தொட்டுப் பார்த்தார். பிறகு, தலையை எடுத்து தம் மடிமீது
வைத்துக் கொண்டார். கமண்டலத்திலிருந்து கொஞ்சம் ஜலம் எடுத்து முகத்தில்
தெளித்தார்.

உயிரற்றுத் தோன்றிய அந்த முகத்தில் சிறிது
நேரத்துக்கெல்லாம் ஜீவகளை தளிர்த்தது. மெதுவாகக் கண்கள் திறந்தன. பாதி
திறந்த கண்களால் பார்த்திபன் சிவனடியாரை உற்றுப் பார்த்தான்.

"சுவாமி....தாங்கள் யார்?" என்ற தீனமான வார்த்தைகள் அவன்
வாயிலிருந்து வந்தன.

"அம்பலத்தாடும் பெருமானின் அடியார்க்கு அடியவன் நான்
அப்பா! இன்று நடந்த யுத்தத்தில் உன்னுடைய ஆச்சரியமான வீரச் செயல்களைப்
பற்றிக் கேள்விப்பட்டேன். அப்பேர்ப்பட்ட மகாவீரனைத் தரிசிக்க வேண்டுமென்று
வந்தேன். பார்த்திபா! உன்னுடைய மாசற்ற சுத்த வீரத்தின் புகழ் என்றென்றும்
இவ்வுலகிலிருந்து மறையாது!" என்றார் அப்பெரியார்.

"யுத்தம் - என்னவாய் முடிந்தது, சுவாமி!" என்று
பார்த்திபன் ஈனஸ்வரத்தில் கேட்டான். அவனுடைய ஒளி மங்கிய கண்களில் அப்போது
அளவிலாத ஆவல் காணப்பட்டது.

"அதைப்பற்றிச் சந்தேகம் உனக்கு இருக்கிறதா, பார்த்திபா?
அதோ கேள், பல்லவ சைன்யத்தின் ஜய கோலாகலத்தை!"

பார்த்திபன் முகம் சிணுங்கிற்று. "அதை நான் கேட்கவில்லை.
சுவாமி! சோழ சைன்யத்திலே யாராவது..." என்று மேலே சொல்லத் தயங்கினான்.

"இல்லை, இல்லை. சோழ சைன்யத்தில் ஒருவன் கூடத் திரும்பிப்
போகவில்லை அப்பா! ஒருவனாவது எதிரியிடம் சரணாகதி அடையவும் இல்லை. அவ்வளவு
பேரும் போர்க்களத்திலே மடிந்து வீர சொர்க்கம் அடைந்தார்கள்!" என்றார்
சிவனடியார். பார்த்திபனுடைய கண்கள் மகிழ்ச்சியினால் மலர்ந்தன.

"ஆகா! சோழ நாட்டுக்கு நற்காலம் பிறந்துவிட்டது. சுவாமி!
இவ்வளவு சந்தோஷமான செய்தியைச் சொன்னீர்களே? - உங்களுக்கு என்ன கைம்மாறு
செய்யப் போகிறேன்?" என்றான்.

"எனக்கு ஒரு கைம்மாறும் வேண்டாம். பார்த்திபா! உன்னைப்
போன்ற சுத்த வீரர்களுக்குத் தொண்டு செய்வதையே தர்மமாகக் கொண்டவன் நான். உன்
மனத்தில் ஏதாவது குறை இருந்தால் சொல்லு; பூர்த்தியாகாத மனோரதம் ஏதாவது
இருந்தால் தெரிவி; நான் நிறைவேற்றி வைக்கிறேன்" என்றார் சிவனடியார்.

"மெய்யாகவா? ஆகா என் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம். சுவாமி!
உண்மைதான். என் மனத்தில் ஒரு குறை இருக்கிறது. சோழநாடு தன் புராதனப்
பெருமையை இழந்து இப்படிப் பராதீனமடைந்திருக்கிறதே என்பதுதான் அந்தக் குறை.
சோழநாடு முன்னைப்போல் சுதந்திர நாடாக வேண்டும் - மகோன்னதமடைய வேண்டும். தூர
தூர தேசங்களில் எல்லாம் புலிக்கொடி பறக்க வேண்டும் என்று கனவு கண்டு
வந்தேன்; என்னுடைய வாழ்க்கையில் அது கனவாகவே முடிந்தது. என்னுடைய மகன்
காலத்திலாவது அது நனவாக வேண்டுமென்பதுதான் என் மனோரதம். விக்கிரமன்
வீரமகனாய் வளர வேண்டும். சோழ நாட்டின் மேன்மையே அவன் வாழ்க்கையின்
இலட்சியமாயிருக்க வேண்டும். உயிர் பெரிதல்ல - சுகம் பெரிதல்ல - மானமும்
வீரமுமே பெரியவை என்று அவனுக்குப் போதிக்க வேண்டும். அன்னியருக்குப்
பணிந்து வாழும் வாழ்க்கையை அவன் வெறுக்க வேண்டும். சுவாமி! இந்த வரந்தான்
தங்களிடம் கேட்கிறேன். "தருவீர்களா?" என்றான் பார்த்திபன்.

சக்தியற்ற அவனது உடம்பில் இவ்வளவு ஆவேசமாக பேசும் வலிமை
அப்போது எப்படித்தான் வந்ததோ, தெரியாது. சிவனடியார் சாந்தமான குரலில்
"பார்த்திபா! உன்னுடைய மனோரதத்தை நிறைவேற்றுவேன் - நான் உயிரோடிருந்தால்"
என்றார்.

பார்த்திபன் "என் பாக்கியமே பாக்கியம்! இனி எனக்கு ஒரு
மனக்குறையுமில்லை. ஆனால், ஆனால் - தாங்கள் யார், சுவாமி? நான் அல்லும்
பகலும் வழிபட்ட சிவபெருமான் தானோ? ஆகா! தங்கள் முகத்தில் அபூர்வ தேஜஸ்
ஜொலிக்கிறதே! எங்கள் குல தெய்வமான ஸ்ரீரங்கநாதனே தான் ஒருவேளை இந்த
உருவெடுத்து..." என்பதற்குள், சிவனடியார், "இல்லை, பார்த்திபா! இல்லை,
அப்படியெல்லாம் தெய்வ நிந்தனை செய்யாதே!" என்று அவனை நிறுத்தினார். பிறகு
அவர் "நானும் உன்னைப் போல் அற்ப ஆயுளையுடைய மனிதன்தான். நான் யாரென்று
உனக்கு அவசியம் தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இதோ பார்!" என்று
சொல்லி தம் தலை மீதிருந்த ஜடாமுடியையும் முகத்தை மறைத்த தாடி மீசையையும்
லேசாகக் கையிலெடுத்தார்.

கண் கூசும்படியான தேஜஸுடன் விளங்கிய அவருடைய திவ்ய
முகத்தைப் பார்த்திபன் கண் கொட்டாமல் பார்த்தான்.

"ஆகா தாங்களா?" என்ற மொழிகள் அவன் வாயிலிருந்து குமுறிக்
கொண்டு வந்தன.

அளவுக்கடங்காத, ஆழங்காண முடியாத ஆச்சரியத்தினால் அவனுடைய
ஒளியிழந்த கண்கள் விரிந்தன.

சற்று நேரத்துக்கெல்லாம் அந்தக் கண்கள் மூடிவிட்டன;
பார்த்திபனுடைய ஆன்மா அந்தப் பூத உடலாகிய சிறையிலிருந்து விடுதலையடைந்து
சென்றது.


***********************************************
Back to top Go down
http://wwww.myacn.eu
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Empty
PostSubject: பார்த்திபன் கனவு   அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Icon_minitimeSun May 30, 2010 10:59 am

பார்த்திபன் கனவு



இரண்டாம் பாகம்


2.1. சிவனடியார்



பொழுது புலர இன்னும் அரை ஜாமப் பொழுது இருக்கும். கீழ்வானத்தில் காலைப்
பிறையும் விடிவெள்ளியும் அருகருகே ஒளிர்ந்து கொண்டிருந்தன. உச்சிவானத்தில்
வைரங்களை வாரி இறைத்தது போல் நட்சத்திரங்கள் பிரகாசித்தன. வடக்கே ஸப்த ரிஷி
மண்டலம் அலங்காரக் கோலம் போட்டதுபோல் காட்சியளித்தது. தெற்கு மூலையில்
சுவாமி நட்சத்திரம் விசேஷ சோபையுடன் தனி அரசு புரிந்தது.

அந்த மனோகரமான அதிகாலை நேரத்தில், காவேரி பிரவாகத்தின்
'ஹோ' என்ற சத்தத்தைத் தவிர வேறு சத்தம் ஒன்றுமேயில்லை. திடீரென்று அத்தகைய
அமைதியைக் கலைத்துக் கொண்டு 'டக் டக் டக்' என்று குதிரையின் காலடிச் சத்தம்
கேட்கலாயிற்று. ஆமாம்; இதோ ஒரு கம்பீரமான உயர்ந்த ஜாதிக் குதிரை காவேரி
நதிக் கரைச் சாலை வழியாகக் கிழக்கேயிருந்து மேற்கு நோக்கி வருகிறது. அது
விரைந்து ஓடி வரவில்லை; சாதாரண நடையில் தான் வருகிறது. அந்தக் குதிரைமீது
ஆஜானுபாகுவான ஒரு வீரன் அமர்ந்திருக்கிறான். போதிய வெளிச்சமில்லாமையால்,
அவன் யார், எப்படிப்பட்டவன் என்று அறிந்து கொள்ளும்படி அங்க அடையாளங்கள்
ஒன்றும் தெரியவில்லை. நெடுந்தூரம் விரைந்து ஓடிவந்த அக்குதிரையை இனிமேலும்
விரட்ட வேண்டாமென்று அவ்வீரன் அதை மெதுவாக நடத்தி வந்ததாகத் தோன்றியது.
அவன் தான் சேரவேண்டிய இடத்துக்குக் கிட்டத்தட்ட வந்துவிட்டதாகவும்
காணப்பட்டது.

அவனுக்கு வலதுகைப் புறத்தில் காவேரி நதியில் பிரவாகம்.
இடது புறத்திலோ அடர்ந்த மரங்களும் புதர்களும் நிறைந்த காடாகத் தோன்றியது.
வீரன், இடது புறத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டு வந்தான். ஓரிடத்துக்கு
வந்ததும் குதிரையை இடதுபுறமாகத் திருப்பினான். குதிரையும் அந்த இடத்தில்
திரும்பிப் பார்க்கப் பழக்கப்பட்டது போல் அநாயாசமாகச் செடி கொடிகள் அடர்ந்த
காட்டுக்குள் புகுந்து சென்றது. கவனித்துப் பார்த்தால் அந்த இடத்தில் ஒரு
குறுகிய ஒற்றையடிப் பாதை போவது தெரியவரும்.

அந்தப் பாதை வழியாகக் குதிரை மிகவும் சிரமப்பட்டுக்
கொண்டு தான் சென்றது. இரண்டு பக்கங்களிலும் நெருங்கி வளர்ந்திருந்த
புதர்களும், கொடிகளும், மேலே கவிந்திருந்த மரக் கிளைகளும் குதிரை எளிதில்
போக முடியாதபடி செய்தன. குதிரை மீதிருந்த வீரனோ அடிக்கடி குனிந்தும்,
வளைந்து கொடுத்தும், சில சமயம் குதிரையின் முதுகோடு முதுகாய்ப் படுத்துக்
கொண்டும் மரக்கிளைகளினால் கீழே தள்ளப்படாமல் தப்பிக்க வேண்டியிருந்தது.
இத்தகைய பாதை வழியாகக் கொஞ்சதூரம் சென்ற பிறகு திடீரென்று சிறிது
இடைவெளியும் ஒரு சிறு கோயிலும் தென்பட்டன. கோயிலுக்கெதிரே பிரம்மாண்டமான
யானை, குதிரை முதலிய வாகனங்கள் நின்றதைப் பார்த்தால், அது ஐயனார்
கோயிலாயிருக்க வேண்டுமென்று ஊகிக்கலாம். வேண்டுதலுக்காக பக்தர்கள்
செய்துவைத்த அந்த மண் யானை - குதிரைகளில் சில வெகு பழமையானவை; சில புத்தம்
புதியவை. அவற்றின் மீது பூசிய வர்ணம் இன்னும் புதுமை அழியாமலிருந்தது.
பலிபீடம், துவஜ்தம்பம் முதலியவையும் அங்குக் காணப்பட்டன.

கீழ்வானம் வெளுத்துப் பலபலவென்று பொழுது விடியும்
சமயத்தில் மேற்சொன்ன வீரன் குதிரையின்மீது அங்கே வந்து சேர்ந்தான். வீரன்
குதிரையிலிருந்து கீழே குதித்து அவசர அவசரமாகச் சில அதிசயமான காரியங்களைச்
செய்யத் தொடங்கினான். மண் யானைகளுக்கும் மண் குதிரைகளுக்கும் மத்தியில்
தான் ஏறிவந்த குதிரையை நிறுத்தினான். குதிரைமீது கட்டியிருந்த ஒரு மூட்டையை
எடுத்து அவிழ்த்தான். அதற்குள் இருந்த புலித்தோல், ருத்திராட்சம், பொய்
ஜடாமுடி முதலியவைகளை எடுத்துத் தரித்துக் கொள்ளத் தொடங்கினான். சற்று
நேரத்தில் பழைய போர் வீரன் உருவம் அடியோடு மாறி, திவ்ய தேஜஸுடன் கூடிய
சிவயோகியாகத் தோற்றம் கொண்டான்.

ஆம்; வெண்ணாற்றங் கரையில் ரணகளத்தில் பார்த்திபனுக்கு
வரமளித்த சிவனடியார்தான் இவர்.

தம்முடைய பழைய உடைகளையும், ஆபரணங்களையும், ஆயுதங்களையும்
மூட்டையாகக் கட்டி, உடைந்து விழுந்திருந்த மண் யானை ஒன்றின் பின்னால்
வைத்தார் அந்தச் சிவயோகி. குதிரையை ஒரு தடவை அன்புடன் தடவிக் கொடுத்தார்.
குதிரையும் அந்தச் சமிக்ஞையைத் தெரிந்து கொண்டது போல் மெதுவான குரலில்
கனைத்தது.

பிறகு அங்கிருந்து அச்சிவனடியார் கிளம்பி ஒற்றையடிப்பாதை
வழியாகத் திரும்பிச் சென்று காவேரிக் கரையை அடைந்தார். மறுபடியும் மேற்கு
நோக்கித் நடக்க ஆரம்பித்தார்.

ஒரு நாழிகை வழி நடந்த பிறகு சூரியன் உதயமாகும் தருணத்தில்
இந்தச் சரித்திரத்தின் ஆரம்ப அத்தியாயத்தில் நாம் பார்த்திருக்கும் தோணித்
துறைக்கு வந்து சேர்ந்தார். அங்கே படகோட்டி பொன்னனுடைய குடிசைக்கு அருகில்
வந்து நின்று, "பொன்னா!" என்று கூப்பிட்டார்.

உள்ளிருந்து "சாமியார் வந்திருக்கிறார் வள்ளி" என்று
குரல் கேட்டது. அடுத்த விநாடி பொன்னன் குடிசைக்கு வெளியே வந்து சிவனடியார்
காலில் விழுந்தான். அவன் பின்னோடு வள்ளியும் வந்து வணங்கினாள். பிறகு
மூவரும் உள்ளே போனார்கள். வள்ளி பயபக்தியுடன் எடுத்துப் போட்ட மணையில்
சிவனடியார் அமர்ந்தார். "பொன்னா! மகாராணியும் இளவரசரும்
வஸந்தமாளிகையில்தானே இருக்கிறார்கள்?" என்று அவர் கேட்டார்.

"ஆம் சுவாமி! இன்னும் கொஞ்ச நாளில் நமது இளவரசரையும்
'மகாராஜா' என்று எல்லோரும் அழைப்பார்களல்லவா?"

"ஆமாம்; எல்லாம் சரியாக நடந்தால், நீ உடனே போய் அவர்களை
அழைத்துக் கொண்டுவா!" என்றார் சிவனடியார்.

"இதோ போகிறேன், வள்ளி சுவாமியாரைக் கவனித்துக் கொள்!"
என்று சொல்லிவிட்டுப் பொன்னன் வெளியேறினான். சிறிது நேரத்திற்கெல்லாம் படகு
தண்ணீரில் போகும் சலசலப்புச் சத்தம் கேட்கத் தொடங்கியது.




**************************************
Back to top Go down
http://wwww.myacn.eu
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Empty
PostSubject: பார்த்திபன் கனவு   அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Icon_minitimeSun May 30, 2010 11:02 am

பார்த்திபன் கனவு



2.2. வம்புக்கார வள்ளி


பொன்னன் போனதும், வள்ளி சிவனடியாருக்கு மிகுந்த சிரத்தையுடன் பணிவிடைகள்
செய்யத் தொடங்கினாள். அவருடைய காலை அனுஷ்டானங்கள் முடிவடைந்ததும்,
அடுப்பில் சுட்டுக் கொண்டிருந்த கம்பு அடையைச் சுடச்சுடக் கொண்டுவந்து
சிவனடியார் முன்பு வைத்தாள். அவர்மிக்க ருசியுடன் அதைச் சாப்பிட்டுக்
கொண்டே வள்ளியுடன் பேச்சுக் கொடுத்தார்.


"வள்ளி! ராணி எப்படி இருக்கிறாள், தெரியுமா?" என்று
கேட்டார் சிவனடியார்.

"இளவரசர் பக்கத்தில் இருக்கும்போதெல்லாம் தேவி
தைரியமாகத்தான் இருக்கிறார். அவர் அப்பால் போனால் கண்ணீர் விடத் தொடங்கி
விடுகிறார்" என்றாள் வள்ளி.

பிறகு, "சுவாமி! இதெல்லாம் எப்படித்தான் முடியும்?
இளவரசர் நிஜமாக மகாராஜா ஆகிவிடுவாரா? அவருக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால்,
ராணி பொறுக்க மாட்டாள்; உயிரையே விட்டுவிடுவார்" என்றாள்.

"எனக்கென்ன தெரியும் அம்மா! கடவுளுடைய சித்தம் எப்படியோ
அப்படித் தான் நடக்கும். உனக்குத் தெரிந்த வரை ஜனங்கள் என்ன சொல்லிக்
கொண்டிருக்கிறார்கள்?"

"ஜனங்கள் எல்லோரும் இளவரசர் பக்கந்தான் இருக்கிறார்கள்.
பல்லவ அதிகாரம் ஒழிய வேண்டுமென்று தான் ஆசைப்படுகிறார்கள். பார்த்திப
மகாராஜாவின் வீர மரணத்தைப் பற்றித் தெரியாத பிஞ்சு குழந்தைகூடக் கிடையாது.
சுவாமி! அந்தச் செய்தியைத் தாங்கள் தானே ஆறு வருஷத்துக்கு முன்னால்
எங்களுக்கு வந்து சொன்னீர்கள்? அதை நானும் ஓடக்காரரும் இதுவரையில் லட்சம்
ஜனங்களுக்காவது சொல்லியிருப்போம்" என்றாள்.

"நானும் இன்னும் எத்தனையோ பேரிடம் சொல்லியிருக்கிறேன்.
இருக்கட்டும்; மாரப்ப பூபதி எப்படியிருக்கிறான்? இப்போது உன் பாட்டனிடம்
ஜோஸியம் கேட்க அவன் வருவதுண்டா?" என்று கேட்டார் சிவனடியார்.

"ஆகா! அடிக்கடி வந்துகொண்டுதானிருக்கிறான்" என்றாள்
வள்ளி. உடனே எதையோ நினைத்துக் கொண்டவள் போல் இடி இடி என்று சிரித்தாள்.

சிவனடியார் "என்னத்தைக் கண்டு அம்மா இப்படிச்
சிரிக்கிறாய்? என்னுடைய மூஞ்சியைப் பார்த்தா?" என்றார். "இல்லை சுவாமி!
மாரப்ப பூபதியின் ஆசை இன்னதென்று உங்களுக்குத் தெரியாதா? காஞ்சி
சக்கரவர்த்தியின் மகளை இவன் கட்டிக் கொள்ளப் போகிறானாம்! கல்யாணத்துக்கு
முகூர்த்தம் வைக்க வேண்டியது தான் பாக்கி" என்றாள்.

சிவனடியார் முகத்தில் ஒரு விநாடி நேரம் இருண்ட மேகம்
படர்ந்தது போல் தோன்றியது. உடனே அவர் புன்னகையை வருவித்துக் கொண்டு "ஆமாம்;
உனக்கென்ன அதில் அவ்வளவு சிரிப்பு?" என்று கேட்டார்.

"சக்கரவர்த்தியின் மகள் எங்கே? இந்தப் பேதை மாரப்பன்
எங்கே? உலகத்தில் அப்படி ஆண் பிள்ளைகளே அற்றுப் போய்விடவில்லையே. நரசிம்ம
பல்லவரின் மகளை இந்தக் கோழைப் பங்காளிக்குக் கொடுப்பதற்கு?" என்றாள் வள்ளி.


"ஆனால், உன் பாட்டன்தானே மாரப்பனை இப்படிப் பைத்தியமாய்
அடித்தது வள்ளி, இல்லாத பொல்லாத பொய் ஜோசியங்களையெல்லாம் சொல்லி?" என்றார்
சிவனடியார்.

"அப்படிச் சொல்லியிராவிட்டால், அந்தப் பாவி என் பிராணனை
வாங்கியிருப்பான்; சுவாமி! போகட்டும்; சக்கரவர்த்தியின் குமாரி ரொம்ப
அழகாமே, நிஜந்தானா! நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?" என்று வள்ளி ஆவலுடன்
கேட்டாள்.

சிவனடியார் புன்னகையுடன் "பார்த்திருக்கிறேன் அம்மா,
பார்த்திருக்கிறேன். ஆனால் அழகைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? நான்
துறவி!" என்றார்.

"எங்கள் ராணியை விட அழகாயிருப்பாளா? சொல்லுங்கள்."

"உங்கள் ராணி அவ்வளவு அழகா என்ன?"

"எங்கள் ராணியா? இல்லை! இல்லை! எங்கள் ராணி அழகேயில்லை.
சுத்த அவலட்சணம், உங்கள் சக்கரவர்த்தி மகள்தான் ரதி..."

"என்ன வள்ளி, இப்படிக் கோபித்துக் கொள்கிறாய்?"

"பின்னே என்ன? எங்கள் ராணியை நீங்கள் எத்தனையோ தடவை
பார்த்திருந்தும் இப்படிக் கேட்கிறீர்களே? அருள்மொழித் தேவியைப் போல்
அழகானவர் இந்த ஈரேழு பதினாலு உலகிலும் கிடையாது...."

"நான்தான் சொன்னேனே, அம்மா! ஆண்டியாகிய எனக்கு அழகு என்ன
தெரியும். அவலட்சணந்தான் என்ன தெரியும்?"

"உங்களுக்குத் தெரியாது என்றுதான் தெரிகிறதே! ஆனால்
காஞ்சி சக்கரவர்த்தியை எப்போதாவது பார்த்தால் கேளுங்கள்; அவர் சொல்லுவார்.
அருள்மொழித் தேவிக்கும் பார்த்திப மகாராஜாவுக்கும் கலியாணம் ஆவதற்கு
முன்னால் நடந்த செய்தி உங்களுக்குத் தெரியுமா? அருள்மொழித் தேவியின் அழகைப்
பற்றி நரசிம்மவர்மர் கேள்விப்பட்டு "அருள்மொழியைக் கல்யாணம் செய்து
கொண்டால் செய்து கொள்வேன்; இல்லாவிட்டால் தலையை மொட்டையடித்துக் கொண்டு
புத்த சந்நியாசியாகப் போய் விடுவேன்" என்று பிடிவாதம் செய்தார். ஆனால்
அருள்மொழித் தேவிக்கு அதற்கு முன்பே பார்த்திப மகாராஜாவுடன் கலியாணம்
நிச்சயமாகி விட்டது. இன்னொரு புருஷனை மனதினால்கூட நினைக்கமாட்டேன் என்று
கண்டிப்பாய்ச் சொல்லி, கடைசியில் பார்த்திப மகாராஜாவையே கலியாணம் செய்து
கொண்டார்."

சிவனடியார் முகத்தில் மந்தகாசம் தவழ, "ஆமாம் அம்மா!
நரசிம்மவர்மர் அப்புறம் என்ன செய்தார்? தலையை மொட்டை அடித்துக்கொண்டு பௌத்த
பிக்ஷு ஆகிவிட்டாரா?" என்று கேட்டார்.

"ஆண் பிள்ளைகள் சமாசாரம் கேட்க வேண்டுமா? சுவாமி! அதிலும்
ராஜாக்கள், சக்கரவர்த்திகள் என்றால் மனது ஒரே நிலையில் நிற்குமா? அப்புறம்
அவர் பாண்டிய ராஜகுமாரியைக் கல்யாணம் செய்து கொண்டார். இன்னும் எத்தனை
பேரோ, யார் கண்டது? நான் மட்டும் ராஜகுமாரியாய்ப் பிறந்திருந்தால் எந்த
ராஜாவையும் கலியாணம் செய்து கொள்ள மாட்டேன். அரண்மனையில் பத்துச்
சக்களத்திகளோடு இருப்பதைக் காட்டிலும், கூரைக் குடிசையில்
ஒருத்தியாயிருப்பது மேலில்லையா?"

சிவனடியார் கலகலவென்று சிரித்தார். "நீ சொல்வது
நிஜந்தான், அம்மா! ஆனால் நரசிம்மவர்மன் நீ நினைப்பது போல் அவ்வளவு
பொல்லாதவனல்ல..." என்றார்.

"இருக்கட்டும் சுவாமி! அவர் நல்லவராகவே இருக்கட்டும்.
அவர்தான் உங்களுக்கு ரொம்ப வேண்டியவர் போலிருக்கிறதே! ஒரு காரியம்
செய்யுங்களேன்? சக்கரவர்த்தியின் மகளை எங்கள் இளவரசருக்குக் கலியாணம்
செய்து வைத்து விடுங்களேன்! சண்டை, சச்சரவு எல்லாம் தீர்ந்து சமாதானம்
ஆகிவிடட்டுமே."

"நல்ல யோசனைதான் வள்ளி! ஆனால் என்னால் நடக்கக்கூடிய
காரியம் அல்ல. நீ வேண்டுமானால் சக்கரவர்த்தியைப் பார்த்துச் சொல்லேன்...."

"நான் சக்கரவர்த்தியை எப்போதாவது பார்த்தால் நிச்சயமாய்ச்
சொல்லத்தான் போகிறேன் எனக்கு என்ன பயம்?" என்றாள்.

அச்சமயத்தில் படகு கரைக்கு வந்து சேர்ந்த சத்தம் கேட்டது.


வள்ளி, "படகு வந்துவிட்டது" என்று சொல்லிக் கொண்டு
குடிசைக்கு வெளியே வந்தாள்.





******************************************
Back to top Go down
http://wwww.myacn.eu
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Empty
PostSubject: 2.3. சதியாலோசனை   அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Icon_minitimeWed Jun 09, 2010 7:59 am

2.3. சதியாலோசனை



சற்று நேரத்துக்கெல்லாம் அருள்மொழித் தேவியும் இளவரசர் விக்கிரமனும்
குடிசைக்குள் வந்து "சுவாமி!" என்று சொல்லி சிவனடியாரின் பாதத்தில்
வணங்கினார்கள். சிவனடியார் விக்கிரமனைத் தூக்கி எடுத்து அணைத்துக் கொண்டு
ஆசீர்வதித்தார். ஆறு வருஷத்துக்கு முன் அறியாப் பாலகனாயிருந்த விக்கிரமன்
இப்போது, இளங்காளைப் பருவத்தை அடைந்து ஆஜானுபாகுவாக விளங்கினான். அவன்
முகத்தில் வீரக் களை திகழ்ந்தது. உள்ளத்தில் பொங்கிய ஆர்வத்தின் வேகம்
கண்களில் அலையெறிந்தது. படபடவென்று பேசத் தொடங்கினான்:- "சுவாமி! நேற்றிரவு
கனவில் என் தந்தை வந்தார். என்னை அழைத்துக் கொண்டு சிராப்பள்ளி மலைக்குப்
போனார். அங்கே உச்சியில் பறந்து கொண்டிருந்த பல்லவர்களின் சிங்கக் கொடியைக்
காட்டினார்.... சுவாமி! இனிமேல் என்னால் பொறுத்திருக்க முடியாது. நீங்கள்
என்னை ஆசீர்வதிக்க வேண்டும்" என்றான்.

"என்னுடைய ஆசீர்வாதம் உனக்கு எப்போதும் இருக்கிறது.
விக்கிரமா! சரியான காலம் வரையில் காத்திருக்கும்படி தானே சொன்னேன்? இப்போது
காலம் வந்துவிட்டது. நீ என்ன செய்ய உத்தேசித்திருக்கிறாய் சொல்லு. வெறும்
பதற்றத்தினால் மட்டும் காரியம் ஒன்றும் ஆகிவிடாது. தீர யோசித்து ஒரு
காரியத்தில் இறங்க வேண்டும். உன் தந்தை உனக்குக் கொடுத்து விட்டுப்போன
குறள் நூலில் தெய்வப் புலவர் என்ன சொல்லியிருக்கிறார்?

"எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்
எண்ணுவம் என்ப(து) இழுக்கு"

இதை நீ எப்போதும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்."

"ஆம், சுவாமி! எண்ணித்தான் துணிந்திருக்கிறேன்.
வரப்போகும் புரட்டாசிப் பௌர்ணமியன்று சிராப்பள்ளி மலைமீது பறக்கும் பல்லவர்
கொடியை எடுத்தெறிந்து விட்டு அங்கே புலிக்கொடியைப் பறக்க விடப் போகிறேன்.
யார் என்ன சொன்ன போதிலும் இந்தத் தீர்மானத்தை நான் மாற்றிக் கொள்ளப்
போவதில்லை."

"மிக்க சந்தோஷம் விக்கிரமா! உன் தீர்மானத்தை மாற்றிக்
கொள்ளும்படி நானும் சொல்லப் போவதில்லை. இந்த நாள் எப்போது
வரப்போகிறதென்றுதான் நான் காத்துக்கொண்டிருந்தேன். ஆனால் உன் தீர்மானத்தைக்
காரியத்தில் நிறைவேற்ற என்ன ஏற்பாடு செய்திருக்கிறாய்? அதைத் தெரிந்து
கொள்ள மட்டும் விரும்புகிறேன். புலிக்கொடியைப் பறக்க விட்டுவிட்டால்
போதுமா? அதைக் காத்து நிற்கப் படைகள் வேண்டாமா? பல்லவ தளபதி அச்சுதவர்மன்
சும்மா பார்த்துக் கொண்டிருப்பானா?"

"சுவாமி! அந்தக் கவலை தங்களுக்கு வேண்டவே வேண்டாம்.
சோழநாட்டு மக்கள் எல்லோரும் சித்தமாயிருக்கிறார்கள். பொன்னனைக் கேளுங்கள்,
சொல்லுவான். புரட்டாசிப் பௌர்ணமியில் வீரர்கள் பலர் உறையூரில் வந்து
கூடுவார்கள்; புலிக்கொடி உயர்ந்ததும் அவர்கள் என்னுடைய படையில்
பகிரங்கமாய்ச் சேர்ந்து விடுவார்கள். உறையூரிலுள்ள பல்லவ சைன்யத்தைச்
சின்னாபின்னம் செய்து அச்சுதவர்மனையும் சிறைப்படுத்தி விடுவோம்...!"

"இந்த அபாயகரமான முயற்சியில் உனக்கு யார் ஒத்தாசை
செய்கிறார்கள்? யார் உனக்காகப் படை திரட்டுகிறார்கள்? நீயோ வசந்த மாளிகையை
விட்டு வெளியே போனது கிடையாதே...."

"என் சித்தப்பா மாரப்ப பூபதிதான் எல்லா ஏற்பாடுகளும்
செய்கிறார். அவர் இரகசியமாக ஒரு பெரிய படை திரட்டி வந்திருக்கிறார்...."

மாரப்ப பூபதி என்றதுமே சிவனடியாரின் முகம் கறுத்தது. அவர்
விக்கிரமனை நடுவில் நிறுத்தி "யார்? மாரப்ப பூபதியா இதெல்லாம் செய்கிறான்;
அவனிடம் உன் உத்தேசத்தை எப்போது சொன்னாய்?" என்று கேட்டார்.

"சித்தப்பா முன்மாதிரி இல்லை! நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
அடியோடு புது மனிதர் ஆகிவிட்டார். என் தகப்பனார் விஷயத்தில் நடந்து
கொண்டதற்காக மிகவும் பச்சாதாபப்படுகிறார். அதற்குப் பரிகாரமாக இப்போது
சோழநாட்டின் விடுதலைக்கு உயிரையும் கொடுக்கச் சித்தமாயிருக்கிறார்" என்றான்
விக்கிரமன்.

சிவனடியார் அருள்மொழியைப் பார்த்து, "தேவி! இது
நிஜந்தானா?" என்று கேட்டார்.

"ஆம், சுவாமி! மாரப்ப பூபதி மனந்திருந்தியவராகத் தான்
காணப்படுகிறார்" என்றாள் அருள்மொழி.

மிக்க சந்தோஷம். விக்கிரமா! உன்னுடைய முயற்சி
நிறைவேறட்டும். சேனாதிபதியான கார்த்திகேயர் உன்னைக் காத்து நிற்கட்டும்.
உன் தோளுக்கும் வாளுக்கும் பராசக்தி பலம் அளிக்கட்டும். அவசியமான சமயத்தில்
மறுபடியும் வருவேன். இப்போது போய் வருகிறேன்" என்று எழுந்தார் சிவனடியார்.


"சுவாமி! என் சித்தப்பா இப்போது வருவதாகச்
சொல்லியிருக்கிறாரே; அவர் தங்களைப் பார்க்க மிகவும் ஆவலாயிருக்கிறார்;
தாங்கள் கொஞ்சம் இருந்து போக வேண்டும்" என்றான் விக்கிரமன்.

"இல்லை, விக்கிரமா எனக்கு இருக்க நேரமில்லை. எது
எப்படியானாலும் நீ உன் உறுதியைக் கைவிடாதே. உன் தந்தை வாக்கை மறந்து
விடாதே" என்றார்.

அருள்மொழித் தேவி அப்போது பொன்னனைப் பார்த்து, "பொன்னா!
இளவரசரை அழைத்துக் கொண்டு நீ படகுக்குப் போ; இதோ நான் வந்துவிடுகிறேன்"
என்று சொல்ல, பொன்னனும் விக்கிரமனும் உடனே வெளியேறினார்கள்.

அருள்மொழித் தேவி அப்போது சிவனடியார் பாதத்தில்
நமஸ்கரித்து, அந்தப் பாதங்களைப் பிடித்துக் கொண்ட வண்ணம் சொன்னாள்:-
"சுவாமி தாங்கள் யாரோ எனக்கு தெரியாது. என்னவெல்லாமோ தங்களைப்பற்றி நான்
சந்தேகித்தது உண்டு. ஆனால் தாங்கள் எங்கள் நன்மையை நாடுகிறவர் என்பதில்
சந்தேகப்பட்டதே இல்லை; அதனால் தங்களை யாரென்று தெரிந்து கொள்ளவும் நான்
ஆசைப்படவில்லை. தாங்கள் யாராயிருந்தாலும் சரி, அடியாளுக்கு ஒரு வரந்தர
வேண்டும். எனக்குத் தங்களைத் தவிர வேறு கதி கிடையாது."

சிவனடியாரின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

"என்னால் முடிகிற காரியமாயிருந்தால் கட்டாயம் செய்கிறேன்,
அம்மா! கேள்" என்றார்.

"தாங்கள் மகான், தங்களால் முடியாத காரியம் ஒன்றுமே இருக்க
முடியாது. வேறென்ன நான் கேட்கப் போகிறேன்? என் பிள்ளையின் உயிரைத் தாங்கள்
காப்பாற்றித் தரவேண்டும் சுவாமி! இவன் இப்போது செய்யப் போகிற காரியம்
வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. மகா சக்தி வாய்ந்த பல்லவ
சக்கரவர்த்தியை எதிர்த்து இளம் பிள்ளையால் என்ன செய்ய முடியும்? எல்லாம்
தெரிந்த தாங்களும் இந்தக் காரியத்தில் இவனை ஏவி விட்டிருக்கிறீர்கள்.
தங்களுடைய நோக்கம் என்னவோ தெரியாது. சுவாமி! என்னவாயிருந்தாலும், அவனுடைய
உயிரைக் காப்பாற்றிக் கொடுக்கும் பொறுப்பு தங்களுடையது" என்று ராணி
தழுதழுத்த குரலில் கூறினாள்.

"உயிரைக் காப்பாற்றும் சக்தி வாய்ந்தவர் கடவுள்
ஒருவர்தான் அம்மா! ஆனாலும் உனக்கு ஒரு உறுதி சொல்லுகிறேன். விக்கிரமனுடைய
வீரத் தந்தையின் ஆத்மா அவன் பக்கத்திலிருந்து அவனைக் காப்பாற்றும். நீ
கவலைப்படாதே. எழுத்திரு!" என்றார்.

அச்சமயம் மேற்குத் திசையில் தூரத்தில் குதிரையின்
குளம்படிச் சத்தம் கேட்கவே, சிவனடியார் விரைவாக விடை பெற்றுக் கொண்டு
கிழக்குத் திசையை நோக்கிச் சென்றார்.

சிவனடியார் சென்ற சற்று நேரத்திற்கெல்லாம் மாரப்ப பூபதி
குதிரை மீது வந்து இறங்கினான். உடனே, "விக்கிரமா! சிவனடியார் வரப்
போகிறாரென்று சொன்னாயே? வந்துவிட்டாரா?" என்று கேட்டான்.

"இப்போதுதான் போனார்! சித்தப்பா! போய்ச் சில விநாடி
நேரங்கூட ஆகவில்லை. சற்று முன்னால் வந்திருக்கப்படாதா!" என்று விக்கிரமன்
சொல்லிச் சிவனடியார் போன திசையை நோக்கினான்.

அதைப் பார்த்த மாரப்பன். "இந்தச் சாலை வழியாகத் தானே
போனார்? இதோ அவர் முகத்தைப் பார்த்துவிட்டு வந்து விடுகிறேன்" என்று கூறி,
மறுபடியும் குதிரை மேலேறி விரைந்து சென்றான்.

ஆனால், அவன் அந்த நதிக்கரைச் சாலையோடு வெகுதூரம் குதிரையை
விரட்டிக் கொண்டு போயும் சிவனடியார் தென்படவில்லை. அவர் மாயமாய் மறைந்து
விட்டார்.


************************************************
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Empty
PostSubject: 2.4. மாமல்லபுரம்   அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Icon_minitimeWed Jun 09, 2010 8:02 am

2.4. மாமல்லபுரம்



கடற்கரைப் பட்டினமாகிய மாமல்லபுரத்தில் அன்று அல்லோல கல்லோலமாயிருந்தது.
வீடுகள் எல்லாம் மாவிலைகளினாலும், தென்னங் குருத்துக்களினாலும் சிங்க
உருவந் தாங்கிய கொடிகளினாலும், பல வர்ணத் தோரணங்களினாலும்
அலங்கரிக்கப்பட்டு விளங்கின. தெரு வீதிகளில் சித்திர விசித்திரமான கோலங்கள்
போடப்பட்டிருந்தன. தேர்கள், யானைகள், குதிரைகள், கோபுரங்கள், பலவித
விருட்சங்கள், பூஞ்செடிகள் - இவை போலெல்லாம் போட்ட கோலங்கள் கண்ணுக்கு
விருந்தாயிருந்தன. அதிகாலையிலிருந்து ஸ்திரீகளும், புருஷர்களும் சிறுவர்
சிறுமிகளும் பட்டுப் பட்டாடைகளினாலும், பசும் பொன் ஆபரணங்களினாலும் தங்களை
அலங்கரித்துக் கொண்டு தெருவீதிகளிலும் திண்ணைகளிலும் கூட்டங் கூட்டமாக
நின்று கொண்டிருந்தனர். எங்கே பார்த்தாலும் பேரிகை முழக்கம், மற்றும் மங்கள
வாத்தியங்களின் ஒலியும் கேட்டுக் கொண்டிருந்தன. இந்த ஒலிகளுக்கிடையில் "
சக்கரவர்த்தி காஞ்சியிலிருந்து கிளம்பி விட்டாராம்!" "பாதி வழி வந்தாகி
விட்டதாம்!" "சக்கரவர்த்தியின் கோமகள் குந்தவி தேவியும் வருகிறாராம்!"
என்றெல்லாம் ஜனங்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் கலகல சத்தமும்
கேட்டுக் கொண்டிருந்தது.


மாமல்லபுரம் வாசிகள் அத்தனை அதிக உற்சாகத்துடனும்
ஆனந்தத்துடனும் அன்று உற்சவம் கொண்டாடியதின் காரணம் என்னவென்றால்,
அந்நகருக்கு அன்று மாமல்ல நரசிம்மவர்ம சக்கரவர்த்தி விஜயம் செய்வதாக
இருந்தது தான். சக்கரவர்த்தி விஜயம் செய்து, ஏழெட்டு வருஷங்களுக்கு
முன்னால் நின்றுபோன சிற்பப் பணியை மறுபடியும் ஆரம்பித்து வைப்பார் என்றும்
அறிவிக்கப்பட்டிருந்தது. சக்கரவர்த்தியுடன் கூட அவருடைய செல்வக் குமாரி
குந்தவி தேவியும் வரப்போவதாகத் தெரிந்திருந்தபடியால் மாமல்லபுர வாசிகள்
எல்லையற்ற குதூகலத்துடன் அந்த நாளைத் திருநாளாகக் கொண்டாடினார்கள்.

அந்தக் காலத்தில், காஞ்சி நரசிம்மவர்ம சக்கரவர்த்தியின்
புகழ் எண்டிசையிலும் பரவியிருந்தது. பாரத நாடெங்கும் அவருடைய கீர்த்தி
வியாபித்திருந்ததோடு, கடல் கடந்து வெளிநாடுகளுக்கும் சென்றிருந்தது. தெற்கே
காவேரியாற்றங்கரையிலிருந்து வடக்கே கிருஷ்ணா நதிக்கரை வரையில்
பல்லவர்களின் சிங்கக்கொடி கம்பீரமாகப் பறந்தது. அந்தப் பிரதேசத்திலுள்ள
ஜனங்கள் எல்லாரும் நரசிம்மவர்மரிடம் அளவிலாத பக்தி கொண்டிருந்தார்கள்.
அறிவிலும் வீரத்திலும் தயாள குணத்திலும் நடுக் கண்ட நீதி வழங்குவதிலும்,
குடிகளின் நலங்களைக் கண்ணுங் கருத்துமாய்ப் பாதுகாப்பதிலும், சிற்பம்,
சித்திரம், சங்கீதம் முதலிய கலைகளை வளர்ப்பதிலும் நரசிம்மவர்மர் மிகச்
சிறந்து விளங்கியது பற்றி அவருடைய பிரஜைகள் மிக்க பெருமை
கொண்டிருந்தார்கள். வடக்கே நர்மதை நதி வரையில் படையெடுத்துச் சென்று
பொல்லாத புலிகேசியைப் போரில் கொன்று, வாதாபி நகரையும் தீக்கிரையாக்கி
விட்டு வந்ததன் பின்னர், மாமல்ல சக்கரவர்த்தியைப் பற்றி அவருடைய குடிகள்
கொண்டிருந்த பெருமை பன்மடங்கு பெருகியிருந்தன. "தட்சிண தேசத்தில்
நரசிம்மவர்மரைப் போல் ஒரு சக்கரவர்த்தி இதுவரையில் தோன்றியதுமில்லை;
இனிமேல் தோன்றப் போவதுமில்லை! என்று அந்தக் காலத்தில் பல்லவ
சாம்ராஜ்யத்தில் வாழ்ந்த ஜனங்கள் நம்பினார்கள். முன்னூறு வருஷத்துக்குப்
பிறகு தஞ்சையில் இராஜராஜன், இராஜேந்திர சோழன் என்னும் மகாசக்கரவர்த்திகள்
தோன்றப் போகிறார்கள் என்பதை அந்தக் காலத்து மக்கள் அறிந்திருக்க
முடியாதல்லவா?

இவ்விதம் பல்லவ சாம்ராஜ்யத்தின் பிரஜைகள் எல்லாருமே
நரசிம்மவர்ம சக்கரவர்த்தியிடம் பக்தி விசுவாசம் கொண்டிருந்தவர்களாயினும்,
மாமல்லபுரம் வாசிகளுக்குச் சக்கரவர்த்தியிடம் ஒரு தனித்த உறவு
ஏற்பட்டிருந்தது. அந்தப் பட்டினத்துக்குப் பெயரும் புகழும் அளித்தவர்
அவரேயல்லவா?

மகேந்திரவர்ம சக்கரவர்த்தியின் காலத்தில், நரசிம்மவர்மர்
இளம் பருவத்தினராயிருந்தபோது, ஒரு தடவை மல்யுத்தத்தில் பிரசித்தி பெற்ற
மல்லர்களையெல்லாம் தோற்கடித்து வெற்றி பெற்றார். அப்போது அவருக்கு
'மகாமல்லன்' என்ற பட்டம் அவருடைய தந்தை மகேந்திரவர்மரால் அளிக்கப்பட்டது.
சில காலத்திற்குப் பிறகு இந்தப் பட்டப் பெயரை வைத்தே அந்தக் கடற்கரைப்
பட்டினத்துக்குப் பெயர் வழங்கலாயிற்று.

"அப்பா! இந்தப் பட்டினத்துக்கு உங்கள் பட்டப் பெயரை
எதற்காக வைத்தார்கள்?" என்று கோமகள் குந்தவி தேவி, தந்தை நரசிம்மவர்மரைப்
பார்த்துக் கேட்டாள்.

இருவரும் பல்லவ சாம்ராஜ்யத்தின் பட்டத்து யானை மீது
அம்பாரியில் வீற்றிருந்தார்கள்.

அந்தப் பட்டத்து யானைக்கு முன்னாலும் பின்னாலும் வேலும்
வாளும் தாங்கிய போர் வீரர்கள் அணிவகுத்துச் சென்றார்கள். இன்னும்
பலவகைப்பட்ட விருதுகளும் சென்றன.

எல்லாருக்கும் முன்னால் பெரிய ரிஷபங்கள் முதுகில்
முரசுகளைச் சுமந்து கொண்டு சென்றன. சற்று நேரத்துக்கொரு தடவை அந்த முரசுகள்
அடிக்கப்பட்டபோது உண்டான சத்தம் அலைமோதிக்கொண்டு நாலாபுறமும் பரவியது.

அம்பாரியின் மீது வீற்றிருந்த நரசிம்மவர்ம
சக்கரவர்த்தியையும் அவர் அருமைப் புதல்வியையும் ஏக காலத்தில்
பார்த்தவர்கள், உதய சூரியனையும் பூரணச் சந்திரனையும் அருகருகே
பார்த்தவர்களைப் போல் திணறித் திண்டாடிப் போவார்கள்.

இருவருடைய திருமுகத்திலும் அத்தகைய திவ்ய தேஜஸ்
ஜொலித்துக் கொண்டிருந்தது. அவர்கள் அணிந்திருந்த கிரீடங்களிலும், மற்ற
ஆபரணங்களிலும் பதிந்த நவரத்தினங்களின் காந்தி பார்ப்பவர்களின் கண்களைக்
கூசச் செய்தன.

பல்லவ சக்கரவர்த்தி ஆஜானுபாகுவாய், கம்பீரமான
தோற்றமுடையவராகயிருந்தார். வலிமையும் திறமையுங் கொண்ட அவருடைய திருமேனியில்
மென்மையும் சௌந்தரியமும் கலந்து உறவாடின. இராஜ களை ததும்பிய அவருடைய
முகத்தில் காணப்பட்ட காயங்களின் வடுக்கள், அவர் எத்தனையோ கோர யுத்தங்களில்
கைகலந்து போரிட்டு ஜயபேரிகை முழக்கத்துடன் திரும்பி வந்தவர் என்பதை
ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தன.

கோமகள் குந்தவி தேவியோ பெண் குலத்தின் அழகெல்லாம் திரண்டு
உருக்கொண்டவள் போலிருந்தாள். பல்லவ சாம்ராஜ்யத்திலிருந்த மகா சிற்பிகளும்
ஓவியக்காரர்களும் குந்தவி தேவியிடம் தங்கள் கலைத்திறன் தோற்றுவிட்டதென்பதை
ஒப்புக் கொண்டார்கள். "கோமகளின் கருவிழிகளில்தான் என்ன மாய சக்தி
இருக்கிறதோ தெரியவில்லை. தேவி தமது அஞ்சனந் தீட்டிய கண்களை அகல விரித்து
எங்களைப் பார்த்தவுடனேயே நாங்கள் உணர்விழந்து மெய்ம்மறந்து போய்
விடுகிறோம். அப்புறம் சிற்பம் அமைப்பதெங்கே? சித்திரம் வரைவதெங்கே?"
என்றார்கள். "எங்களையெல்லாம் கர்வ பங்கம் செய்வதற்கென்றே பிரம்மன் குந்தவி
தேவியைப் படைத்திருக்க வேண்டும்!" என்று அவர்கள் சொன்னார்கள்.

"அப்பா! இந்த நகருக்குத் தங்கள் பட்டப் பெயரை எதற்காக
வைத்தார்கள்? சொல்லுகிறேன், சொல்லுகிறேன் என்று ஏமாற்றிக் கொண்டு
வருகிறீர்களே, இன்றைக்குக் கட்டாயம் சொல்லியாக வேண்டும்" என்று மறுபடியும்
கேட்டாள் குந்தவி.

"அப்படியானால் இப்போது இந்த யானைமேலிருந்து நாம்
இறங்கியாக வேண்டும்" என்றார் சக்கரவர்த்தி.

"இப்படியே நான் தரையில் குதித்து விடட்டுமா" என்றாள்
குந்தவி.

"நீ சாதாரண மனுஷியாகயிருந்தால் குதிக்கலாம் அம்மா!
குதித்துக் காலையும் ஒடித்துக் கொள்ளலாம்! சக்கரவர்த்தியின்
மகளாயிருப்பதால் அப்படியெல்லாம் செய்யக்கூடாது!" என்றார் சக்கரவர்த்தி.

"எதற்காக அப்பா, அப்படி. சக்கரவர்த்தின் மகளாயிருப்பதால்,
யானை மேலிருந்து குதித்துக் காலை ஒடித்துக் கொள்ளக்கூடவா பாத்தியதை
இல்லை?" என்று சிரித்துக் கொண்டே குந்தவி கேட்டாள்.

"ஆமாம், ஆமாம்! அப்படி நீ இருந்தால் 'காஞ்சி
சக்கரவர்த்தியின் மகள் குந்தவி யானை மேலிருந்து குதித்தாளாம்" என்ற செய்தி
உலகமெல்லாம் பரவிவிடும். அப்புறம் அங்க, வங்க, கலிங்கம் முதலான ஐம்பத்தாறு
தேசத்து இராஜ குமாரர்களில் யாரும் உன்னைக் கலியாணம் செய்து கொள்ள முன்
வரமாட்டார்கள்! அப்புறம் உன் கலியாணத்துக்குச் சீதை விஷயத்தில் ஜனகர்
செய்ததுபோல் நானும் ஏதாவது தந்திரம் செய்தாக வேண்டும்."

"ஜனகர் தந்திரம் செய்தாரா? என்ன தந்திரம் அப்பா?" என்று
குந்தவி கேட்டாள்.

"அது தெரியாதா உனக்கு? சீதை சிறு பெண்ணாயிருந்த போது ஒரு
நாள் வில்லைத் தெரியாத்தனமாய்த் தூக்கி நிறுத்திவிட்டாள். இதற்காக அவளை
ஐம்பத்தாறு தேசத்து இராஜகுமாரர்களும் கலியாணம் செய்து கொள்ள மறுத்து
விட்டார்கள். கடைசியில் சீதையின் தகப்பனார் என்ன செய்தார் தெரியுமா?
விசுவாமித்திர ரிஷியை அனுப்பி இராமன் என்ற அசட்டு இராஜகுமாரனைத் தந்திரமாய்
அழைத்துவரப் பண்ணினார். ஒரு பெரிய வில்லை நடுவில் முறித்து, முறிந்தது
தெரியாதபடி தந்திரமாய்ப் பெட்டிக்குள் வைத்திருந்தார்! இராமன் அந்த வில்லை
விளையாட்டாக எடுத்ததும், வில் முறிந்து இரண்டு துண்டாக விழுந்து விட்டது!
உடனே ஜனகர், "ஐயையோ! எங்கள் குல சம்பத்தாகிய வில்லை ஒடித்து விட்டாயே!
ஒன்று ஒடிந்த வில்லைச் சேர்த்துக் கொடு; இல்லாவிட்டால் என் மகள் சீதையைக்
கலியாணம் பண்ணிக் கொள்" என்றார். இராமன் வேறு வழியில்லாமல் சீதையைக்
கலியாணம் செய்து கொள்ள வேண்டியதாயிற்று!"

குந்தவி விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டே, "அப்பா!
நானும் இராமாயணக் கதையைக் கேட்டிருக்கிறேன். நீங்கள் சொல்லுவது புதிய
இராமாயணமாயிருக்கிறதே!" என்றாள்.

சற்று சிரிப்பு அடங்கிய பிறகு அவள், "ஆனால் உங்களுக்கு
அதைப் பற்றிக் கவலை வேண்டாம் அப்பா! நான் கலியாணமே செய்து கொள்ளப்
போவதில்லை" என்று சொன்னாள்.

சக்கரவர்த்தி மூக்கின்மேல் விரலை வைத்துக் கொண்டு, "அது
என்ன சமாசாரம்? கலியாணம் உன்னை என்ன பண்ணிற்று? அதன்மேல் ஏன் அவ்வளவு
கோபம்?" என்று கேட்டார்.

அப்போது குந்தவி "கலியாணம் செய்து கொண்டால் நான் உங்களை
விட்டுப் பிரியத்தானே வேண்டும்? உங்களை விட்டுவிட்டுப் போக எனக்கு
இஷ்டமில்லை. உங்களுடனேயே நான் எப்போதும் இருப்பேன்" என்றாள்.

"அப்படியா சமாசாரம் குந்தவி? இன்னொரு தடவை சொல்லு"
என்றார் சக்கரவர்த்தி.

"அதெல்லாம் ஒரு தடவைக்குமேல் சொல்ல மாட்டேன் அப்பா!
நீங்கள் ஏக சந்தக்கிராகி என்பது உலகமெல்லாம் பிரசித்தியாயிருக்கிறதே! ஒரு
தடவைக்கு மேல் ஏன் கேட்கிறீர்கள்?"

"ஓ ஆபத்பாந்தவா! அநாதரட்சகா! இந்த வாயாடிப் பெண்ணைக்
கட்டிக் கொண்டு எந்த இராஜகுமாரன் திண்டாடப் போகிறானோ? யார் தலையில்
அவ்விதமிருக்கிறதோ? அவனை நீதான் காப்பாற்றியருள வேண்டும்" என்று சொல்லியபடி
சக்கரவர்த்தி தலைமேல் கைகூப்பி வானத்தை அண்ணாந்து நோக்கினார்.

"உங்களுடைய பரிகாசம் இருக்கட்டும். இப்போது யானையை
நிறுத்துகிறீர்களா, இல்லையா? இல்லாவிடில் நான் கீழே குதித்து விட்டேனானால்,
அப்புறம் என்னை ஒரு இராஜகுமாரனும் கலியாணம் செய்து கொள்ள மாட்டான்.
எப்போதும் உங்கள் பிராணனைத்தான் வாங்கிக் கொண்டிருப்பேன்" என்று குந்தவி
சொல்லி எழுந்து நின்று அம்பாரியிலிருந்து கீழே குதிப்பது போல் பாசாங்கு
செய்தாள்.

"வேண்டாம், வேண்டாம் அப்படிப்பட்ட விபரீதம் பண்ணி
வைக்காதே!" என்று கூறி பல்லவ சக்கரவர்த்தி யானைப்பாகனைக் கூப்பிட்டு யானையை
நிறுத்தச் சொன்னார்.

யானை நின்றதும், தந்தையும் மகளும் கீழே இறங்கினார்கள்.
சக்கரவர்த்தி குதிரையும் பல்லக்கும் கொண்டு வரும்படி சமிக்ஞை காட்டினார்.
அவை அருகில் வந்ததும், பரிவாரத் தலைவனை அழைத்து, "நீங்கள் நேரே போய் நகர்
வாசலருகில் நில்லுங்கள். நாங்கள் அங்கே வந்து சேர்ந்து கொள்கிறோம்"
என்றார். பிறகு, குதிரைமீது ஆரோகணித்து இராஜ மார்க்கத்திலிருந்து பிரிந்து
குறுக்கு வழியாகப் போகத் தொடங்கினார். இளவரசி ஏறியிருந்த பல்லக்கும் அவரைத்
தொடர்ந்து சென்றது.

சக்கரவர்த்தி இம்மாதிரியெல்லாம் எதிர்பாராத காரியங்களைச்
செய்வது சர்வ சகஜமாய்ப் போயிருந்தபடியால், அவரைத் தொடர்ந்து வந்த
பரிவாரங்கள் சிறிதும் வியப்பு அடையாமல் இராஜ மார்க்கத்தோடு மேலே சென்றன.





**************************************************
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Empty
PostSubject: 2.5. உறையூர்த் தூதன்   அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Icon_minitimeWed Jun 09, 2010 8:03 am

2.5. உறையூர்த் தூதன்




இயற்கையாகப் பூமியிலெழுந்த சிறு குன்றுகளை அழகிய இரதங்களாகவும்
விமானங்களாகவும் அமைத்திருந்த ஓர் இடத்திற்குச் சக்கரவர்த்தியும் குந்தவி
தேவியும் வந்து சேர்ந்தார்கள். அந்த விமானக் கோயில்களையொட்டி, ஒரு
கல்யானையும் கற்சிங்கமும் காணப்பட்டன. இவையும் இயற்கையாகப் பூமியில் எழுந்த
பாறைகளைச் செதுக்கிச் செய்த வடிவங்கள்தாம்.

அவற்றுள் யானையின் சமீபமாகச் சக்கரவர்த்தி வந்தார்.

"குந்தவி! இந்த யானையைப் பார்த்தாயா? தத்ரூபமாய் உயிருள்ள
யானை நிற்பது போலவே தோன்றுகிறதல்லவா? முப்பது வருஷத்துக்கு முன்னால் இங்கே
இந்த யானை இல்லை; ஒரு மொட்டைக் கற்பாறைதான் நின்றது!"

"இந்தக் கோயில்கள் எல்லாமும் அப்படித்தானே மொட்டை
மலைகளாயிருந்தன?" என்று குந்தவி கேட்டாள்.

"ஆமாம் குழந்தாய்! இன்று நீயும் நானும் வந்திருப்பது போல்
முப்பது வருஷத்துக்கு முன்னால் என் தகப்பனாருடன் நான் இங்கு வந்தேன். உன்
தாத்தாவைப் பற்றித் தான் உனக்கு எல்லாம் தெரியுமே. சிற்பம் சித்திரம்
என்றால் அவருக்கு ஒரே பைத்தியம்!"

"உங்களுக்குப் பைத்தியம் ஒன்றும் குறைவாயில்லையே?" என்று
குந்தவி குறுக்கிட்டாள்.

சக்கரவர்த்தி புன்னகையுடன் "என்னைவிட அவருக்குத்தான்
பைத்தியம் அதிகம். செங்கல்லினாலும் மரத்தினாலும் அவர் ஆயிரம் கோயில்கள்
கட்டினார். அப்படியும் அவருக்குத் திருப்தி உண்டாகவில்லை. என்றும் அழியாத
பரம்பொருளுக்கு என்றும் அழியாக் கோயில்களைக் கட்ட வேண்டுமென்று
ஆசைப்பட்டார். மலையைக் குடைந்து கோயில்கள் அமைக்க விரும்பினார். அந்தக்
காலத்திலே தான் ஒரு நாள் அவரும் நானும் இந்தப் பக்கம் சுற்றிக் கொண்டு
வந்தோம். அப்போது எனக்கு உன் வயது தானிருக்கும். தற்செயலாக ஆகாசத்தைப்
பார்த்தேன். வெண்ணிறமான சிறு சிறு மேகங்கள் வானத்தில் அங்குமிங்கும்
அலைந்து கொண்டிருந்தன. அந்த மேகங்கள் அவ்வப்போது வெவ்வேறு ரூபங் கொண்டு
தோன்றின. ஒரு சிறு மேகம் யானையைப் போல் காணப்பட்டது. அதைப் பார்த்ததும்
எனக்கு ஒரு யோசனை தோன்றியது. இந்தப் பாறையண்டை வந்தேன். கையில் கொண்டு
வந்திருந்த காசிக் கட்டியினால் யானையின் உருவத்தை இதன்மேல் வரைந்தேன். அதை
அப்பா பார்த்துக் கொண்டேயிருந்தார். யானை உருவத்தை நான் எழுதி முடித்ததும்
என்னைக் கட்டி தூக்கிக் கொண்டு கூத்தாடத் தொடங்கினார். "நரசிம்மா! என்ன
அற்புதமான யோசனை உன் யோசனை! இங்குள்ள பெரிய பாறைகளையெல்லாம் கோயில்களாக்கி
விடுவோம். சின்னச்சின்னப் பாறைகளையெல்லாம் வாகனங்களாகச் செய்துவிடுவோம்.
இந்த உலகமுள்ள அளவும் அழியாதிருக்கும் அற்புதச் சிற்பங்களை எழுப்புவோம்!
என்று வெறி பிடித்தவர்போல் கூறினார். அவ்விதமே சீக்கிரத்தில் இங்கே சிற்ப
வேலைகளை ஆரம்பித்தார். அதுமுதல் இருபது வருஷகாலம் இந்தப் பிரதேசத்தில்
இடைவிடாமல் ஆயிரக்கணக்கான கல்லுளிகளின் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.
நான் வட தேசத்துக்குப் படையெடுத்துப் போன போதுதான் நின்றது..."

இவ்விதம் சொல்லிச் சக்கரவர்த்தி நிறுத்தி ஏதோ யோசனையில்
ஆழ்ந்தவர் போல் இருந்தார்.

சற்றுப் பொறுத்துக் குந்தவி, "ஆமாம் அப்பா, இருபது
வருஷமாய் நடந்து வந்த சிற்பப் பணியை நிறுத்தி விட்டீர்களே என்ற
சந்தோஷத்தினால்தான் உங்கள் பெயரை இந்தப் பட்டினத்துக்கு வைத்தார்கள்
போலிருக்கிறது!" என்று சொல்லிவிட்டுக் குறும்பாக புன்னகை செய்தாள். அதைக்
கேட்ட சக்கரவர்த்தி உரக்கச் சிரித்துவிட்டு "இல்லை அம்மா! இந்தச்
சிற்பப்புரி தோன்றுவதற்கு நான் காரணமாயிருந்த படியினால் என் தகப்பனார்
இப்பட்டினத்துக்கு என் பெயரை அளித்தார். 'நரசிம்மன்' என்ற பெயருடன்
எத்தனையோ இராஜாக்கள் வரக்கூடும். 'மாமல்லன்' என்ற பட்டப் பெயர் வேறொருவரும்
வைத்துக் கொள்ளமாட்டார்கள் என்று யோசித்து, அப்பா இந்தப் பட்டினத்துக்கு
'மாமல்லபுரம்' என்று பெயர் சூட்டினார். அப்பாவுக்கு என்மேலே தான் எவ்வளவு
ஆசை!" என்று கூறி மறுபடியும் யோசனையில் ஆழ்ந்தார்.

"ஆமாம்; தாத்தாவுக்கு உங்கள் பேரில் இருந்த ஆசையில்
நூறில் ஒரு பங்குகூட உங்களுக்கு என் அண்ணா மேல் கிடையாது. இருந்தால்
அண்ணாவைக் கப்பல் ஏற்றிச் சிங்களத்துக்கு அனுப்புவீர்களா?" என்று கேட்டாள்
குந்தவி.

"குழந்தாய், கேள்! என்னுடைய இளம் வயதில் எனக்கு எத்தனையோ
மனோரதங்கள் இருந்தன. அவற்றில் பல நிறைவேறின, ஆனால் ஒரே ஒரு மனோரதம் மட்டும்
நிறைவேறவில்லை. கப்பல் ஏறிக் கடல் கடந்து தூர தூர தேசங்களுக்கெல்லாம்
போய்வர வேண்டுமென்று நான் அளவில்லாத ஆசை கொண்டிருந்தேன். அதற்கு என் தந்தை
அனுமதிக்கவில்லை. நான் இந்தப் பல்லவ சிம்மாசனத்தில் ஏறிய பிறகு
கடற்பிரயாணம் செய்வதென்பது முடியாத காரியமாகி விட்டது. எனக்குக் கிடைக்காத
பாக்கியம் என் பிள்ளைக்காவது கிடைக்கட்டுமே- என்றுதான் உன் தமையனைச் சிங்கள
தீவுக்கு அனுப்பினேன். இன்னும் எனக்கு எந்தச் சிறுபிள்ளையினிடமாவது
அதிகமான பிரியம் இருந்தால், அவனையும் கடற் பிரயாணம் செய்து வரும்படி
அனுப்புவேன்" என்றார் சக்கரவர்த்தி.

"அப்படியானால் உங்களுக்கு என்னிடம் மட்டும் பிரியம் இல்லை
போலிருக்கிறது" என்று குந்தவி சொல்வதற்குள்ளே, "உன்னைக் கப்பல் ஏற்றி
அனுப்ப எனக்குப் பூர்ண சம்மதம்! ஆனால் நீ பெண்ணாய்ப் பிறந்து விட்டாயே,
என்ன செய்கிறது? ஒவ்வொரு சமயம் நீ பிள்ளையாய்ப் பிறந்திருந்து, உன் தமையன்
பெண்ணாய்ப் பிறந்திருக்கக் கூடாதா? - என்று எனக்குத் தோன்றுவதுண்டு"
என்றார் சக்கரவர்த்தி.

"நான் மட்டும் ஆண் பிள்ளையாய்ப் பிறந்திருந்தால், உங்களை
இத்தனைக் காலமும் இந்தச் சிம்மாசனத்தில் வைத்திருப்பேனா? கம்ஸன் செய்ததைப்
போல் உங்களைச் சிறையில் போட்டுவிட்டு நான் பட்டத்துக்கு வந்திருக்க
மாட்டேனா? அண்ணாவுக்கு ஒன்றுமே தெரியாது, சாது! அதனால் நீங்கள் சொன்னதும்
கப்பலேறிப் போய்விட்டான்" என்று குந்தவி சொல்லிவிட்டு அந்த மலைக்
கோயில்களைச் சுற்றி ஓடியாடிப் பார்க்கத் தொடங்கினாள்.

சிறிது நேரத்துக்கெல்லாம் சக்கரவர்த்தி "வா! குழந்தாய்!
இன்னொரு தடவை சாவகாசமாய்ப் பார்க்கலாம், ஊரில் ஜனங்கள் எல்லோரும் நம்மை
எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்" என்றதும் குந்தவி வரண்டை வந்து "அப்பா!
இந்தக் கோயில்கள் இன்னும் அரைகுறையாகத்தானே இருக்கின்றன? மீண்டும் நீங்கள்
ஆரம்பிக்க போகும் திருப்பணி வேலை இங்கேயும் நடக்குமல்லவா? இந்தக்
கோயில்களுக்குள்ளே எல்லாம் என்னென்ன சுவாமியைப் பிரதிஷ்டை செய்யப்
போகிறீர்கள்?" என்று கேட்டாள்.

சற்று தூரத்தில் பல்லக்கும் குதிரையும் ஒரு மரத்தடியில்
நிறுத்தப்பட்டிருந்தன. அந்த மரத்தை நோக்கி இருவரும் நடக்கத்
தொடங்கினார்கள். குந்தவியின் கேள்விக்குப் பதிலாகச் சக்கரவர்த்தி
பின்வருமாறு சொன்னார்:-

"இல்லை, குழந்தாய்! இந்தக் கோயில்கள் இப்படியே தான்
பூர்த்தி பெறாமல் இருக்கும். இந்த இடத்தைத் தவிர மற்ற இடங்களில் எல்லாம்
வேலை நடக்கும். குந்தவி! ஆயனர் என்ற மகாசிற்பி இந்த ஊரில் இருந்தார்.
அவருடைய தலைமையில்தான் இந்தக் கோயில்களின் வேலை ஆரம்பமாயிற்று. அவர்தான்
இவ்வளவு வரை செய்து முடித்தவர். பிறகு அவர் சில துரதிர்ஷ்டங்களுக்கு
ஆளானார்; கொஞ்ச நாளைக்கு முன் சொர்க்கம் சென்றார். அவர் தொடங்கிய வேலையைச்
செய்து முடிக்கக்கூடிய சக்தியுள்ளவர்கள் இப்போது யாரும் இல்லை, இனிமேல்
வரப்போவதும் இல்லை!"

"ஆயனரைப் பற்றிக் கேட்டிருக்கிறேன் அப்பா! அவருடைய
மகள்....?" என்று குந்தவி சொல்வதற்குள் "அதோ யாரோ குதிரைமேல் வருகிறானே
யாராயிருக்கும்?" என்றார் மகாமல்லர்.

பேச்சை மாற்றுவதற்காகவே அவர் சொன்ன போதிலும் உண்மையில்
கொஞ்ச தூரத்தில் ஒரு குதிரை வந்து கொண்டுதானிருந்தது. சக்கரவர்த்தியும்
குந்தவியும் மரத்தடிக்குப் போய் நின்றதும், அங்கே குதிரை வந்து நின்றதும்
சரியாயிருந்தன.

குதிரைமேலிருந்தவன் விரைவாக இறங்கிப் பயபக்தியுடன்
சக்கரவர்த்தியின் அருகில் வந்து ஓர் ஓலையை நீட்டினான்.

"அடியேன் தண்டம்! உறையூரிலிருந்து வந்தேன்! அச்சுத
பல்லவராயர் இந்த ஓலையை ஒரு கணமும் தாமதியாமல் சக்கரவர்த்தியின் திருச்
சமூகத்தில் சேர்ப்பிக்க வேண்டுமென்று கட்டளையிட்டார்!" என்றான்.

சக்கரவர்த்தி ஓலையை வாங்கிக் கொண்டார். அதில் என்ன
எழுதியிருக்கிறதென்று பார்க்காமலே தூதனை நோக்கி "நீ போகலாம்! இதில் அடங்கிய
விஷயத்தைப் பற்றிய கட்டளை நேற்றே அனுப்பிவிட்டோ ம்" என்றார்.

தூதன் தண்டம் சமர்ப்பித்துவிட்டுத் திரும்பி விரைந்து
சென்றான்.

"நன்றாயிருக்கிறது அப்பா, நீங்கள் ராஜ்ய பாரம் செய்கிற
இலட்சணம்? ஓலை வந்தால் அதைப் படித்துக் கூடப் பார்க்கிறதில்லையா?" என்று
கோமகள் கேட்டாள்.

"என்னுடைய ஞான திருஷ்டியில் உனக்கு நம்பிக்கை இல்லை
போலிருக்கிறது! இந்த ஓலையில் என்ன எழுதியிருக்கிறதென்று சொல்லட்டுமா?
சோழராஜ குமாரன் விக்கிரமன் இந்தப் புரட்டாசிப் பௌர்ணமியன்று சோழ நாட்டின்
சுதந்திரக் கொடியை உயர்த்த உத்தேசித்திருக்கிறான். அவனை என்ன செய்வது என்று
தளபதி அச்சுத பல்லவராயன் கேட்டிருக்கிறான். நீ வேணுமானால் படித்துப்
பார்!" என்று ஓலையைக் குந்தவியிடம் கொடுத்தார்.

குந்தவி அதைப் படித்துவிட்டு வியப்புடன் சக்கரவர்த்தியை
நோக்கினாள்.

"உங்களிடம் ஏதோ மந்திர சக்தி இருக்கிறது, அப்பா! அந்த
மந்திரத்தை எனக்கும் சொல்லிக் கொடுக்கக் கூடாதா?" என்றாள்.

சக்கரவர்த்தி குதிரையின் மேலும், குந்தவி பல்லக்கிலும்
அமர்ந்தார்கள். வழியில் கோமகள், "அப்பா! அந்த இராஜகுமாரனுக்கு என்ன அவ்வளவு
அகந்தை? மாமல்ல சக்கரவர்த்தியின் கீழ் கப்பம் கட்டிக் கொண்டு வாழக்
கொடுத்துவைக்க வேண்டாமா? அவனை நீங்கள் சும்மா விடக்கூடாது; தகுந்த தண்டனை
கொடுக்க வேண்டும்" என்றாள்.

"ஆமாம், குழந்தாய்! ஆமாம்! அவனைச் சும்மாவிடப் போவதில்லை.
காஞ்சிக்கு அழைத்து வரச் செய்து நானே தகுந்த தண்டனை விதிக்கப் போகிறேன்"
என்றார் சக்கரவர்த்தி.






*********************************************
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Empty
PostSubject: 2.6. கலைத் திருநாள்   அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Icon_minitimeWed Jun 09, 2010 8:05 am

2.6. கலைத் திருநாள்



மாமல்லபுரத்தில் சக்கரவர்த்தி மூன்று தினங்கள் தங்கியிருந்தார். அந்த
மூன்று நாட்களும் அந்நகரம் ஆனந்த கோலாகலத்தில் மூழ்கிக் கிடந்தது.

முதல் நாள் பட்டணப் பிரவேச ஊர்வலம் வந்தது.
சக்கரவர்த்தியையும் அவருடைய திருமகளையும் மாமல்லபுர வாசிகள் அவரவர்களுடைய
வீட்டு வாசலில் தரிசித்து உபசரித்து மகிழ்ந்தார்கள்.

மறுநாள் சரஸ்வதி பூஜையன்று காலையில் நகர வாசிகள் தத்தம்
வீடுகளில் வாணி பூஜை நடத்தினார்கள். பிற்பகலிலும் சாயங் காலத்திலும் பொது
இடங்களில் கலைமகளின் திருநாளைக் கொண்டாடினார்கள். கோயில்கள், மடாலயங்கள்,
கலா மண்டபங்கள், வித்யாசாலைகள் எல்லாம் அமோகமான அலங்காரங்களுடன் விளங்கின.

அன்று சக்கரவர்த்தியும் குந்தவி தேவியும் சிவன்
கோயில்களுக்கும் விஷ்ணு ஆலயங்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்து,
அர்ச்சகர்களுக்குக் சன்மானம் அளித்தார்கள். கலைக் கூடங்களுக்கும்,
வித்யாசாலைகளுக்கும் விஜயம் செய்து, ஆசாரியர்களுக்குப் பொன்னும்
புதுவஸ்திரங்களும் பரிசளித்தார்கள். அவர்கள் நகரில் ஓரிடத்திலிருந்து
மற்றோரிடத்திற்குப் போகும் போதெல்லாம் வீதியில் ஜனங்கள் கும்பல் கும்பலாக
நின்று பலவித வாழ்த்தொலிகளினால் தங்களுடைய குதூகலத்தைத் தெரிவித்துக்
கொண்டார்கள்.

ஆனால், மாமல்லபுர வாசிகளுடைய குதூகலத்தின் முழு அளவையும்
மறுநாள் விஜய தசமியன்றுதான் பார்க்கக் கூடியதாயிருந்தது. அன்று திருவிழா
நகருக்கு வெளியே நடந்தது.

மாமல்லபுரத்துக்குத் தெற்கே நெடுந் தூரத்துக்கு
நெடுந்தூரம் பரவி நின்ற சிறு குன்றுகளும், பாறைகளும் அன்று அற்புதமான
தோற்றங்கொண்டு விளங்கின. பாறைகளின் சுவர்களிலெல்லாம் விதவிதமான வர்ண
வேறுபாடுகளுடன் புராணக் கதைகள் சித்திரிக்கப்பட்டிருந்தன. ஒரு விசாலமான
பாறையிலே, நந்த கோகுலத்தில் பாலகோபாலன் செய்த லீலைகள், பூதனை
சம்ஹாரத்திலிருந்து காளிங்க நர்த்தனம் வரையில் வெகு அழகாகச்
சித்திரிக்கப்பட்டிருந்தன. தயிர் கடைந்து கொண்டிருந்த யசோதையின் கழுத்தைக்
கட்டிக்கொண்டு வெண்ணெய் வேண்டுமென்று கண்ணன் கெஞ்சிக் கொண்டிருந்த
சித்திரத்தைப் பார்த்த வண்ணமே வாழ்நாளைக் கழித்துவிடலாமென்று தோன்றியது.

இரு பிளவாகப் பிளந்திருந்த இன்னொரு பாறையில் ஆகாச
கங்கையைப் பூமிக்குக் கொண்டு வருவதற்காகப் பகீரதன் கடுந்தவம் செய்த காட்சி
சித்திரிக்கப்பட்டிருந்தது. அவனுடைய தவ மகிமையினால் கவரப்பட்டுத் தேவர்கள்
முனிவர்கள் எல்லாரும் வந்து இருபுறமும் நிற்கிறார்கள். அவர்களுடைய
முகங்களில் வியப்பும் பக்தியும் காணப்படுகின்றன. இந்த ஒப்பற்ற சித்திரக்
காட்சியை எழுதிய ஓவியக்காரன் நகைச்சுவை நிரம்ப உள்ளவனாகவும் இருந்திருக்க
வேண்டும். ஏனெனில் ஒரு மூலையில் கண்ணை மூடிக் கொண்டு தவஞ் செய்வதாகப்
பாசாங்கு செய்த ஒரு பூனையின் உருவத்தையும் அவன் எழுதியிருந்தான்.

இந்த மாதிரி எத்தனையோ அற்புதச் சித்திரங்கள் காட்சிகள்
ஒவ்வொரு பாறை முகப்பிலும் காணப்பட்டன. இந்தக் காட்சிகளைப் பார்த்துக்
கொண்டு ஸ்திரீகளும் புருஷர்களும் சிறுவர் சிறுமிகளும் கும்பல் கும்பலாக
அங்குமிங்கும் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லாரும் பட்டுப்
பட்டாடைகளை அணிந்து, திவ்ய ஆபரணங்களைப் பூண்டிருந்தார்கள். ஸ்திரீகள்
கூந்தலில் மலர் சூடியிருந்தார்கள். புருஷர்கள் கழுத்தில் பூமாலைகளை
அணிந்திருந்தார்கள். எங்கே பார்த்தாலும் ஒரே கோலாகலமாகவும் குதூகலமாகவும்
இருந்தது.

ஜனங்களின் குதூகலத்தை அதிகப்படுத்துவதற்குச் சித்திரக்
காட்சிகளைத் தவிர இன்னும் பல சாதனங்களும் அங்கேயிருந்தன. ஆங்காங்கு வாழை
மரங்களாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட சிறு சிறு பந்தல்கள்
காணப்பட்டன. அந்தப் பந்தல்களில் இசை விருந்துகள் நடந்து கொண்டிருந்தன. ஒரு
பந்தலிலிருந்து வீணையின் ஒலி எழுந்தது. இன்னொரு பந்தலிலிருந்து குழலோசை
வந்து கொண்டிருந்தது. வேறொரு பந்தலில் வேதியர்கள் ஸாமகானம் செய்து
கொண்டிருந்தார்கள். மற்றொரு பந்தலில் ஓர் இசைப் புலவர் அப்பர் பெருமானின்
தேவாரப் பதிகங்களைப் கல்லுங்கனியப் பாடிக் கொண்டிருந்தார்.

ஜனங்கள் அவரவர்களுக்கு இஷ்டமான இடத்திலே போய் நின்று
சித்திரக் காட்சிகளையும், இசை விருந்துகளையும் அனுபவித்துக்
கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த தண்ணீர்ப் பந்தல்களிலும்
கூட்டத்துக்குக் குறைவில்லை. அவல் பொரியும் சர்க்கரையும் பானகமும்
நீர்மோரும் வந்தவர்களுக்கெல்லாம் உபசரிப்புடன் வழங்கப்பட்டன.

இவ்விதம் கண்ணுக்கெட்டிய தூரம் ஒரே ஜன சமுத்திரமாய்த்
தோன்றியதாயினும் அந்த ஜனத்திரளுக்கு மத்தியில் ஓரிடத்தில் மிகவும்
நெருங்கிய ஜனக் கூட்டம் காணப்பட்டது. இக்கூட்டம் ஒரே இடத்தில் நிலைத்து
நில்லாமல் போய்க் கொண்டிருந்தது. அந்தக் காட்சியானது சிறு சிறு அலைகள்
எழுந்து விழுந்து கொண்டிருக்கும் சமுத்திரத்தில் ஒரே ஒரு பெரிய அலை மட்டும்
தொடர்ச்சியாகப் போய்க் கொண்டிருப்பது போல் தோன்றியது. இந்தப் பெரிய
அலைக்குக் காரணமாயிருந்தவர்கள் சக்கரவர்த்தியும் அவருடைய செல்வப்
புதல்வியுந்தான். நரசிம்மவர்மர் உயர்ந்த ஜாதிப் புரவி ஒன்றின் மேல்
வீற்றிருந்தார். குந்தவி தேவியோ பக்கத்தில் இருந்தாள். இவர்களுக்கு
முன்னாலும் பின்னாலும் கூட்டத்தை விலக்கி வழி செய்வதற்காக ஒரு சில வீரர்கள்
மட்டுமே சென்றார்கள். அவர்களுக்குச் சற்று முன்னால், சக்கரவர்த்தியின்
வருகையை அறிவிப்பதற்காக, ஒரு பெரிய ரிஷபத்தின் மேல் முரசு வைத்து அடித்துக்
கொண்டு போனார்கள்.

ஜனத் திரளுக்கு இடையே சென்று கொண்டிருந்த இந்த ஊர்வலம்
ஆங்காங்கு நின்று நின்று போகவேண்டியதாயிருந்தது. சித்திரக் காட்சியைப்
பார்ப்பதற்காகச் சக்கரவர்த்தி நின்ற இடங்களில் எல்லாம் அவர் மேலும் குந்தவி
தேவியின் மேலும் பூமாரி பொழிந்தார்கள். நறுமணம் பொருந்திய பனி நீரை
இரைத்தார்கள். சந்தனக் குழம்பை அள்ளித் தெளித்தார்கள். "ஜய விஜயீ பவ!"
என்றும், "தர்ம ராஜாதிராஜர் வாழ்க!" "திருபுவனச் சக்கரவர்த்தி வாழ்க!"
"நரசிம்ம பல்லவரேந்திரர் வாழ்க!" "மாமல்ல மன்னர் வாழ்க" என்றும்
கோஷித்தார்கள்.

சக்கரவர்த்தி ஒவ்வொரு சித்திரக் காட்சியையும் விசேஷ
சிரத்தையுடன் பார்வையிட்டு, ஆங்காங்கு பயபக்தியுடன் நின்று கொண்டிருந்த
ஓவியக்காரர்களிடமும், சிற்பக் கலைஞர்களிடமும் தமது பாராட்டுதலைத்
தெரிவித்துக் கொண்டு வந்தார்.

இவ்விதம் சுற்றிப் பார்த்துக்கொண்டு கடைசியாக ஊர்வலம்
துர்க்கை ஆலயத்தண்டை வந்து சேர்ந்தது. இந்தத் துர்க்கை ஆலயம்
மகேந்திரவர்மனின் காலத்திலே குன்றில் குடைந்து நிர்மாணித்தது. திருப்பணி
வேலை இடையில் தடைப்பட்டுப் பூர்த்தியாகாமல் இருந்தது. அன்று நடந்த
கோலாகலமான விழாக் கொண்டாட்டத்தில் இந்தத் துர்க்கை ஆலயந்தான்
நடுநாயகமாயிருந்தது. அந்தப் பாறைக் கோயிலுக்கு எதிரே மிகவும் விஸ்தாரமான
பந்தல் போடப்பட்டிருந்தது. அந்தப் பந்தலுக்கு உள்ளேயிருந்து அண்ணாந்து
பார்த்தால் அமாவாசையன்று நள்ளிரவில் துல்லியமான ஆகாயத்தைப் பார்க்கிறோமோ?
என்ற பிரமை உண்டாகும். அவ்விதம் பிரகாசமான நட்சத்திரங்களைப் போல ஜொலித்த
எண்கோணப் பொட்டுக்கள் அமைந்த நீலப் பட்டாடையினால் மேல் விதானம்
கட்டியிருந்தார்கள். பந்தலின் தூண்களில் விதவிதமான வர்ணப் பட்டாடைகளைச்
சுற்றியிருந்தார்கள். பந்தலுக்கு மேலே வரிசையாகச் சிங்கக் கொடிகள் மாலைக்
கடற்காற்றில் அசைந்து ஆடிக் கொண்டிருந்தன. பந்தலின் விளிம்புகளில்
இளந்தென்னங் குருத்துக்களினாலான தோரணங்கள் தொங்கி ஆடிக் கொண்டிருந்தன.

பந்தலின் மத்தியில், தேவியின் சன்னதிக்கு எதிரே,
சக்கரவர்த்திக்கும் அவருடைய புதல்விக்கும் இரண்டு அழகிய சிம்மாசனங்களும்,
அவற்றைச் சுற்றிலும் வரிசை வரிசையாகிய இன்னும் பல ஆசனங்களும்
அமைக்கப்பட்டிருந்தன. புலிகேசியின் படையெடுப்பினால் தடைப்பட்டுப் போன
சிற்பத் திருப்பணியை இந்தத் துர்க்கா தேவியின் கோயிலில் விஜயதசமி தினத்தில்
மீண்டும் தொடங்குவதற்காக ஏற்பாடாகி இருந்தது. சக்கரவர்த்தி வருவதற்கு
நெடுநேரத்திற்கு முன்னமேயே பந்தலில் மந்திரி மண்டலத்தாரும், மற்ற
அதிகாரிகளும் வந்து அவர்களுக்குரிய ஆசனங்களில் அமர்ந்து விட்டார்கள்.
சக்கரவர்த்தியும் குந்தவி தேவியும் பந்தலுக்குள் வந்ததும் சபையினர்
அனைவரும் எழுந்து நின்றதுடன், ஜய கோஷங்களும் வாழ்த்தொலிகளும் வாத்திய
முழக்கங்களும் வானை அளாவி எழுந்தன.


************************************************
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Empty
PostSubject: 2.7. திருப்பணி ஆலயம்   அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Icon_minitimeWed Jun 09, 2010 8:06 am

2.7. திருப்பணி ஆலயம்



சக்கரவர்த்தியும் குந்தவியும் முதலில் கோவிலுக்குள்ளே சென்று அம்பிகையைத்
தரிசித்து விட்டு வந்தார்கள். பந்தலின் நடுவில் அமைந்திருந்த
சிம்மாசனங்களில் சக்கரவர்த்தியும் குந்தவி தேவியும் வந்து அமர்ந்ததும்
மந்திரி மண்டலத்தாரும் மற்றவர்களும் தத்தம் ஆசனங்களில் அமர்ந்தனர். கோயில்
குருக்கள்மார் தொடர்ந்து வந்து சக்கரவர்த்திக்கும் மற்றவர்களுக்கும் விபூதி
குங்குமப் பிரசாதங்களை அளித்து, மலர் மாலைகள் சூட்டி முழக்கங்களுக்கிடையே
சக்கரவர்த்தி தம் திருக்கரத்தினால் ஆசாரிய ஸ்தபதியின் தலையில் பட்டுப்
பரிவட்டம் கட்டினார். பிறகு உயர்ந்த பட்டு வஸ்திரங்களும் நூறு பொன்
கழஞ்சுகளும் வைத்திருந்த தாம்பூலத் தட்டையும் அவரிடம் கொடுத்தார். அவற்றை
ஆசாரிய ஸ்தபதி வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டார். அவ்விதமே அங்கு
வந்திருந்த நூற்றுக்கணக்கான சிற்பிகளுக்கும் மந்திரி மண்டலத்தாருக்கும்
மற்ற அதிகாரிகளுக்கும் தலையில் பரிவட்டம் கட்டிப் பட்டு வஸ்திரங்களையும்
பொன் கழஞ்சுகளையும் பரிசளித்தார்கள்.


பின்னர் மந்திரி மண்டலத்தின் தலைவரான விஷ்ணு சர்மர்
எழுந்து சபையோரைப் பார்த்துப் பேசினார். பல்லவ ராஜ வம்சத்தில் தோன்றிய
பெயர் பெற்ற மன்னர்களின் வீரதீர பராக்கிரமங்களை அவர் வர்ணித்தார்.
அவர்களில் கடைசி மன்னரான மகேந்திர வர்மரின் அற்புத குணாதிசயங்களைப்
புகழ்ந்தார். அவருடைய அருந்தவப் புதல்வரான மாமல்ல சக்கரவர்த்தி
பட்டத்துக்கு வந்த பிறகு பல்லவ சாம்ராஜ்யத்தின் புகழ் கடல்களுக்கு
அப்பாலும் பரவியிருக்கிறதென்றும், அதற்கு உதாரணமாக இந்தச் சபையிலேயே ஒரு
சம்பவம் நடக்கப்போகிறதென்றும், செண்பகத் தீவிலிருந்து வந்திருக்கும்
பிரதிநிதிகள் தங்களுடைய தீவைப் பல்லவ சாம்ராஜ்யத்தில் சேர்த்துக்கொண்டு
பரிபாலிக்கும் படி சக்கரவர்த்தியை வேண்டிக்கொள்ளப் போகிறார் என்றும் விஷ்ணு
சர்மர் தெரிவித்த போது, சபையோர் தங்களுடைய குதூகலத்தைப் பலவித
கோஷங்களினால் வௌதயிட்டனர்.

மீண்டும் அமைச்சர் தலைவர் கூறியதாவது:- "மகாஜனங்களே!
காஞ்சியும் மாமல்லபுரமும் பல்லவ சாம்ராஜ்யத்தின் இரு கண்களாகும்.
சாம்ராஜ்யத்துக்குத் தலை நகரமான காஞ்சி எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு
துறைமுகப்பட்டினமான மாமல்லபுரம் நெடுநாளாக முக்கியமாயிருந்து வந்தது. ஆனால்
காலஞ்சென்ற மகேந்திர சக்கரவர்த்தி இங்கே சிற்பத் திருப்பணியை ஆரம்பித்த
பிறகு, காஞ்சியின் பெருமை சிறிது தாழ்ந்து மாமல்லபுரத்தின் புகழ்
ஓங்கிவிட்டது. எட்டு வருஷங்களுக்கு முன்பு நமது சக்கரவர்த்திப் பெருமான்
வடதேசத்துக்குப் படையெடுத்துச் சென்ற போது, இங்கு நடந்துவந்த சிற்பத்
திருப்பணியை நிறுத்த வேண்டியிருந்தது. பாதகனான புலிகேசியைக் கொன்று
வாதாபியைத் தீக்கிரையாக்கி விட்டுத் திரும்பிய பிறகு சில காலம்
தேசத்திலிருந்து பஞ்சம் பிணிகளை நீக்கும் முக்கியமான பிரயத்தனங்களிலும்,
உள்நாட்டுச் சிறு பகைகளை அழிக்கும் முயற்சியிலும் சக்கரவர்த்தி
ஈடுபட்டிருந்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். பராசக்தியின் அருளினாலும்,
பல்லவ குலத்தின் பரம்பரையான தர்ம பலத்தினாலும், சக்கரவர்த்தி ஈடுபட்டிருந்த
அந்தக் காரியங்கள் எல்லாம் இனிது நிறைவேறிவிட்டன. சக்கரவர்த்தியின்
திருப்பெயரைப் பூண்ட இந்தப் பட்டினத்திலே சிற்பத் திருப்பணிகள் இன்று
மறுபடியும் ஆரம்பமாகின்றன. இனிமேல் சக்கரவர்த்தியும் இந்த நகருக்கு
அடிக்கடி விஜயம் செய்து திருப்பணி வேலைகளை மேற்பார்வை செய்வதாகக் கிருபை
கூர்ந்து வாக்களித்திருக்கிறார்."

இவ்விதம் அமைச்சர் தலைவர் கூறிச் சபையோரை ஆனந்தக் கடலில்
ஆழ்த்திய பிறகு, செண்பகத் தீவின் தூதர்கள் சக்கரவர்த்தியின் சமூகத்துக்கு
அழைத்துவரப்பட்டனர். அவர்களுடைய தலைவன் பேசியது தமிழ் மொழியேயானாலும் சற்று
விசித்திரமான தமிழாயிருந்த படியால், சபையோர்களுக்குப் புன்னகை உண்டு
பண்ணிற்று.

அந்தத் தூதர் தலைவன் கூறியதின் சாராம்சம் பின்வருமாறு:-

செண்பகத் தீவின் வாசிகள், சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு
முன்னால் கரிகால் சோழரின் காலத்தில் சோழ நாட்டிலிருந்து அங்கே போய்க்
குடியேறிய தமிழர்களின் சந்ததிகள், அந்தத் தீவை ஆண்டு வந்த ராஜ வம்சம்
சந்ததியில்லாமல் சில ஆண்டுகளுக்கு முன்பு நசிந்துப் போய்விட்டது. ஆகவே,
செண்பகத் தீவு தற்சமயம் ராஜா இல்லாத ராஜ்யமாயிருந்து வருகிறது. இதை
அறிந்ததும் பக்கத்துத் தேசங்களிலுள்ள மக்கள் - முக்கியமாகத் தட்டை மூக்குச்
சாதியினர் - அடிக்கடி செண்பகத் தீவில் வந்திறங்கிக் கொள்ளையிட்டும்,
இன்னும் பலவித உபத்திரங்களை விளைவித்தும் செல்லுகிறார்கள். இதையெல்லாம்
உத்தேசித்துச் செண்பகத் தீவின் ஜனங்கள் மகாசபை கூட்டி ஏக மனதாக ஒரு
முடிவுக்கு வந்தார்கள். அதாவது தற்சமயம் தாய்நாட்டிலே பிரசித்த
சக்கரவர்த்தியாய் விளங்கும் நரசிம்ம பல்லவேந்திரருக்குத் தூதனுப்பி,
செண்பகத் தீவைப் பல்லவ சாம்ராஜ்யத்தில் சேர்த்துக் கொண்டு சக்கரவர்த்தியின்
சார்பாகத் தீவை ஆட்சி புரிவதற்கு இராஜ வம்சத்தைச் சேர்ந்த வீர புருஷர்
ஒருவரை அனுப்பும்படி பிரார்த்திக்க வேண்டியது.

சக்கரவர்த்தி தூதர்களின் பிரார்த்தனைக்கு உடனே மறுமொழி
சொல்லவில்லை. சில நாள் யோசித்தே முடிவு செய்யவேண்டுமென்றும், அதுவரை அந்தத்
தூதர்கள் பல்லவ சாம்ராஜ்யத்திலுள்ள காஞ்சி முதலிய நகரங்களைப் பார்த்துக்
கொண்டிருக்கலாமென்றும், ஒருவாரத்துக்குள் அவர்களுக்கு மறுமொழி
சொல்லக்கூடும் என்றும் தெரிவித்தார்.

இதன் பின்னர் நரசிம்மவர்மரும் குந்தவி தேவியும்
மந்திரிகளும் ஸ்தபதிகளும் பின் தொடர்ந்துவர துர்க்கா தேவியின் கோயிலுக்கு
மறுபடியும் வந்தனர். அந்தக் கோயிலின் வெளி மண்டபத்தில் இருபுறத்துச்
சுவர்களும் வெறுமையாக இருந்தன. சக்கரவர்த்தி ஒரு பக்கத்துச் சுவரின்
அருகில் வந்து, குந்தவிதேவியின் கையிலிருந்த காவிக் கட்டியை வாங்கி, அந்தச்
சுவரில் சித்திரம் வரையத் தொடங்கினார். அருகில் இருந்தவர்கள் கண்
கொட்டாமல் பார்த்துக் கொண்டு நிற்கும்போதே, வெகு சீக்கிரத்தில்
சிம்மவாகனத்தின் மீது போர்க்கோலத்துடன் வீற்றிருக்கும் துர்க்கை தேவியின்
திரு உருவம் அந்தச் சுவரில் சாக்ஷாத் காரமாய்த் தோன்றியது. குந்தவி தேவி
பயம் தொனித்த குரலில், "அப்பா! தேவியின் உக்கிரம் தாங்க முடியவில்லை.
யாருடன் அம்பிகை சண்டையிடுகிறாளோ, அந்த அசுரனுடைய உருவத்தையும்
எழுதிவிடுங்கள்" என்றாள். உடனே சக்கரவர்த்தி தேவிக்கு எதிரே கையில்
கதாயுதம் தரித்த மகிஷாசுரனுடைய உருவத்தையும் எழுதினார். "இப்போது தான்
பயமின்றிப் பார்க்க முடிகிறது!" என்றாள் குந்தவி. பிறகு, சக்கரவர்த்தி
அங்கே அருகில் நின்ற ஆசாரிய ஸ்தபதியைப் பார்த்து, "ஸ்தபதியாரே, இந்த
விஜயதசமி தினத்தில் தான் அம்பிகை மகிஷாசுரனை வதம் செய்தாள். நமது
திருப்பணியை அந்தக் காட்சியுடனேயே ஆரம்பித்து வைக்கலாமல்லவா?" என்றார்.
ஆசாரிய ஸ்தபதியும் வணக்கத்துடன் ஆமோதித்துத் தம் கையிலிருந்த கல்லுளியைச்
சக்கரவர்த்தியின் பால் நீட்ட, சக்கரவர்த்தி அதை வாங்கிக் கொண்டு தாம்
எழுதிய சித்திரத்தின் மேல் கல்லுளியால் சில முறை பொளிந்தார். பிறகு
கல்லுளியை ஸ்தபதியிடம் கொடுத்தார். ஸ்தபதியார் அதைப் பக்தியுடன் பெற்றுக்
கொண்டு அம்பிகைக்கும் சக்கரவர்த்திக்கும் வணக்கம் செலுத்தி விட்டுச் சிற்ப
வேலையை ஆரம்பித்தார்.

அன்று முதற்கொண்டு பல வருஷ காலம் மாமல்லபுரத்தில்
ஆயிரக்கணக்கான கல்லுளிகள் சத்தம் இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தது.



*************************************************
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Empty
PostSubject: 2.8. குந்தவியின் கலக்கம்   அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Icon_minitimeWed Jun 09, 2010 8:08 am

2.8. குந்தவியின் கலக்கம்



"புஷ்பேஷு ஜாதி புருஷேஷு விஷ்ணு;
நாரீஷுரம்பா நகரேஷு காஞ்சி"

என்று வடமொழிப் புலவர்களால் போற்றப்பட்ட காஞ்சிமா நகரின்
மாடவீதியிலே குந்தவிதேவி பல்லக்கில் சென்று கொண்டிருந்தாள்.
திருக்கோயில்களுக்குச் சென்று உச்சிகால பூஜை நடக்கும்போது சுவாமி தரிசனம்
செய்து விட்டு வரும் நோக்கத்துடன் அவள் சென்றாள். ஆனால் அவளுடைய உள்ளம்
மட்டும் ஒரு வாரத்துக்கு முன்பு மாமல்லபுரத்தில் விஜயதசமியன்று கண்ட
கோலாகலக் காட்சியிலேயே ஈடுபட்டிருந்தது.

அன்று ஆரம்பித்த திருப்பணிகளில் உலகம் உள்ள வரையில் தன்
தந்தையின் புகழ் குன்றாதிருக்குமல்லவா? என்று அவள் எண்ணமிட்டாள்.
இப்படிப்பட்ட தந்தைக்குப் புதல்வியாய்ப் பிறக்கத் தான் பாக்கியம்
செய்திருக்க வேண்டுமென்று நினைத்தாள். இத்தகைய சக்கரவர்த்தியின் ஆட்சியில்
வாழும் பிரஜைகள்தாம் எவ்வளவு பாக்கியம் பண்ணியவர்கள் என்ற எண்ணமும்
தோன்றியது. இப்படிப்பட்ட சிந்தனைகளில் ஆழ்ந்தவளாய்ப் பல்லக்கிலே போய்க்
கொண்டிருக்கையில், திடீரென்று வீதியில் ஒருமதில் சுவரின் திருப்பத்தில்
அபூர்வமான காட்சி ஒன்றைக் கண்டாள். சகல இராஜ லட்சணங்களும் பொருந்திக்
களைததும்பும் முகத்தினனான ஓர் இளங்குமரன் ஒரு குதிரைமீது வந்து
கொண்டிருந்தான். அவனுடைய உடம்பையும் கைகளையும் குறுக்கும் நெடுக்குமாய்
இரும்புச் சங்கிலியினால் பிணைத்திருந்தார்கள். குதிரையின் இரு பக்கத்திலும்
முன்னாலும் பின்னாலும் அந்தச் சங்கிலிகளைப் பிடித்துக் கொண்டு போர்
வீரர்கள் சிலர் விரைந்து நடந்து வந்தார்கள்.

அந்த இளங்குமரன் மிகவும் களைத்துப்போன
தோற்றமுடையவனாயிருந்தாலும், அவனுடைய முகத்தில் கொஞ்சமாவது அதைரியத்தின்
அறிகுறி காணப்படவில்லை. அஞ்சா நெஞ்சங் கொண்ட தீர புருஷனாகவே தோன்றினான்.
"என் உடம்பைத்தானே சங்கிலிகளால் பிணைக்க முடியும்? என் உள்ளத்தை யாராலும்
சிறைப்படுத்த முடியாதல்லவா?" என்று அலட்சியத்துடன் கேட்பதுபோல் இருந்தது
அவனுடைய திருமுகத்தின் தோற்றம்.

இந்தக் காட்சியைக் கண்டதும் குந்தவி தேவியின் விசாலமான
நயனங்கள் ஆச்சரியத்துடன் இன்னும் அதிகமாக விரிந்தன. அதே சமயத்தில் அந்த
இளைஞனும் சக்கரவர்த்தியின் குமாரியைப் பார்த்தான். சொல்லுக் கெட்டாத
அவளுடைய திவ்ய சௌந்தரியம் ஒரு கணநேரம் அவனைத் திகைப்படைந்து நிற்கும்படி
செய்திருக்க வேண்டும். அடுத்த நிமிஷத்தில் பல்லக்கும் குதிரையும்
ஒன்றையொன்று தாண்டிச் சென்று விட்டன. குந்தவி பல்லக்கிலிருந்த வண்ணம்
இரண்டொரு தடவை திரும்பித் திரும்பிப் பார்த்தாள். குதிரைமீது சங்கிலியால்
கட்டுண்டிருந்த அந்த இளங்குமரனும் தன்னைப் போலவே ஆவல் கொண்டவனாய்த்
திரும்பிப் பார்ப்பான் என்று அவள் எதிர்பார்த்தாளோ என்னவோ, தெரியாது. ஆனால்
அந்தக் குமரன் மட்டும் தலையை ஓர் அணுவளவு கூடப் பின்புறமாகத்
திருப்பவில்லை. திருப்ப முடியாதபடி அவனைப் பிணித்திருந்த சங்கிலிகள்தான்
தடுத்தனவோ, அல்லது அவனுடைய மனத்தின் திட சங்கற்பந்தான் அவ்விதம் திரும்பிப்
பார்க்காத வண்ணம் தடை செய்ததோ அதுவும் நமக்குத் தெரியாது.

குந்தவி தேவியின் திவ்ய சௌந்தரியத்தைப் போலவே அந்தச்
சக்கரவர்த்தி திருமகளின் தெய்வ பக்தியும் அந்நாளில் தேசப்
பிரசித்தமாயிருந்தது. சாதாரணமாய் அவள் சிவன் கோயிலுக்குப் போனாலும்,
பெருமாள் கோயிலுக்குப் போனாலும் பராசக்தியின் சந்நிதிக்குச் சென்றாலும்,
அந்தந்தத் தெய்வங்களின் தியானத்திலே ஈடுபட்டுத் தன்னை மறந்துவிடுவது
வழக்கம். ஆனால் இன்றைய தினம் குந்தவியின் மனம் அவ்விதம் சலனமற்ற
தியானத்தில் ஈடுபடவில்லை. தெய்வ சந்நிதானத்தில் நின்றபோது கூட, கட்டுண்டு
குதிரை மேல் வீற்றிருந்த இளங்குமரனுடைய முகம் வந்து நின்றது. அவள் எவ்வளவோ
முயன்றும் அந்த முகத்தை மறக்க முடியவில்லை. இது வரையில் அவள்
அனுபவித்தறியாத இந்தப் புதிய அனுபவமானது அவளுக்கு ஒருவித அபூர்வ இன்பக்
கிளர்ச்சியையும் அதே சமயத்தில் பயத்தையும் உண்டு பண்ணிற்று!

ஒருவாறு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு குந்தவி தேவி
அரண்மனைக்குத் திரும்பினாள். திரும்புங் காலையில் மனத்தை அந்த இளங்குமரன்
மேல் செல்லாமல் வேறு நினைவில் செலுத்தும் முயற்சியையே அவள் விட்டு
விட்டாள். "அவ்வளவு ராஜ லக்ஷணங்கள் பொருந்திய இளங்குமரன் யாராயிருக்கலாம்?
அவனை எதற்காகச் சங்கிலியால் பிணைத்திருக்கிறார்கள்? எங்கே அழைத்துச்
செல்கிறார்கள்? அவன் அத்தகைய குற்றம் என்னதான் செய்திருப்பான்?"
என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்கினாள். திடீரென்று ஒரு ஞாபகம் வந்தது.
"உறையூர் இளங்குமாரன் ஏதோ சக்கரவர்த்திக்கு விரோதமாகக் கலகம் செய்யப்
போகிறான் என்று மாமல்லபுரத்துக்கு ஓலை வந்ததல்லவா? அது விஷயமாக முன்னமே
ஏற்பாடு செய்தாகிவிட்டது என்று சக்கரவர்த்தி மறுமொழி தந்தாரல்லவா? அந்தச்
சோழ இராஜ குமாரன்தானோ என்னவோ இவன்?" இந்த எண்ணம் தோன்றியதும் குந்தவிக்கு
அக்குமரன் மேல் கோபம் உண்டாயிற்று. 'என்ன அகந்தை, என்ன இறுமாப்பு அவனுக்கு?
எவ்வளவு பெரிய துரோகமான காரியத்தைச் செய்துவிட்டு, எவ்வளவு அலட்சியமாய்க்
கொஞ்சங்கூடப் பயப்படாமலும் வெட்கப்படாமலும் இறுமாந்து
உட்கார்ந்திருக்கிறான்! நரசிம்ம பல்லவேந்திரருக்கு எதிராகக் கலகம்
செய்யும்படி அவ்வளவு வந்துவிட்டதா அவனுக்கு? எத்தனையோ தூர தூர தேசங்களில்
உள்ள ஜனங்கள் எல்லாரும், நரசிம்ம சக்கரவர்த்தியின் வெண்கொற்றக் குடையின்
நிழலில் வாழ்வதற்குத் தவஞ் செய்கிறார்களே! செண்பகத் தீவின் வாசிகள்
இதற்காகத் தூது அனுப்பியிருக்கிறார்களே! இந்த அற்பச் சோழநாட்டு இளவரசனுக்கு
என்ன வந்துவிட்டது? ஆமாம், இவன் மட்டும் கலகம் செய்த இளவரசனாயிருந்தால்
தந்தையிடம் சொல்லிக் கடுமையான தண்டனை விதிக்கச் செய்ய வேண்டும்! அப்போது
தான் புத்தி வரும்.'

இவ்வாறு எண்ணிய குந்தவியின் மனம் மறுபடியும் சஞ்சலம்
அடைந்தது. "ஐயோ பாவம்! முகத்தைப் பார்த்தால் அப்படியொன்றும் கெட்டவனாகத்
தோன்றவில்லையே! அவன் தானாக ஒன்றும் செய்திருக்க மாட்டான். ஒருவேளை யாராவது
கெட்ட மனிதர்கள் பக்கத்தில் இருந்து தூண்டி விட்டிருப்பார்கள். அவர்களைப்
பிடித்துத் தண்டிக்க வேண்டுமேயன்றி, இந்தச் சுகுமாரனைக் கடுமையாகத்
தண்டிப்பதில் என்ன பயன்? அவனுடைய மார்பையும், தோள்களையும், கைகளையும்
பிணித்திருக்கும் இரும்புச் சங்கிலிகள் அந்த மிருதுவான தேகத்தை எப்படித்
துன்புறுத்துகின்றனவோ? நல்ல புத்தி சொல்லி, எச்சரிக்கை செய்து; அவனை
விட்டுவிட்டால் என்ன? - அப்பாவிடம் இராத்திரி சொல்ல வேண்டும். ஆனால்
அவருக்குத் தெரியாத விஷயமா? "தர்ம ராஜாதி ராஜன்" என்று புகழ்
பெற்றவராயிற்றே? நியாயமும் தர்மமும் தவறி அவர் ஒன்றும் செய்யமாட்டார். இந்த
இளங்குமரனை மன்னித்துத்தான் விடுவார்...." இப்படியெல்லாம் கொந்தளித்துக்
கொண்டிருந்த உள்ளத்துடன் குந்தவி தேவி அரண்மனையை அடைந்தாள். சூரியன்
எப்போது அஸ்தமிக்கும்? தகப்பனார் எப்போது ராஜசபையிலிருந்து அரண்மனைக்குத்
திரும்பி வருவார் என்று எதிர்பார்த்த வண்ணம் ஒவ்வொரு வினாடியையும் ஒவ்வொரு
யுகமாகக் கழித்துக் கொண்டிருந்தாள்.





***************************************
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Empty
PostSubject: 2.7. திருப்பணி ஆலயம்   அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Icon_minitimeMon Jun 14, 2010 9:39 pm

2.7. திருப்பணி ஆலயம்



சக்கரவர்த்தியும் குந்தவியும் முதலில் கோவிலுக்குள்ளே சென்று அம்பிகையைத்
தரிசித்து விட்டு வந்தார்கள். பந்தலின் நடுவில் அமைந்திருந்த
சிம்மாசனங்களில் சக்கரவர்த்தியும் குந்தவி தேவியும் வந்து அமர்ந்ததும்
மந்திரி மண்டலத்தாரும் மற்றவர்களும் தத்தம் ஆசனங்களில் அமர்ந்தனர். கோயில்
குருக்கள்மார் தொடர்ந்து வந்து சக்கரவர்த்திக்கும் மற்றவர்களுக்கும் விபூதி
குங்குமப் பிரசாதங்களை அளித்து, மலர் மாலைகள் சூட்டி முழக்கங்களுக்கிடையே
சக்கரவர்த்தி தம் திருக்கரத்தினால் ஆசாரிய ஸ்தபதியின் தலையில் பட்டுப்
பரிவட்டம் கட்டினார். பிறகு உயர்ந்த பட்டு வஸ்திரங்களும் நூறு பொன்
கழஞ்சுகளும் வைத்திருந்த தாம்பூலத் தட்டையும் அவரிடம் கொடுத்தார். அவற்றை
ஆசாரிய ஸ்தபதி வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டார். அவ்விதமே அங்கு
வந்திருந்த நூற்றுக்கணக்கான சிற்பிகளுக்கும் மந்திரி மண்டலத்தாருக்கும்
மற்ற அதிகாரிகளுக்கும் தலையில் பரிவட்டம் கட்டிப் பட்டு வஸ்திரங்களையும்
பொன் கழஞ்சுகளையும் பரிசளித்தார்கள்.


பின்னர் மந்திரி மண்டலத்தின் தலைவரான விஷ்ணு சர்மர்
எழுந்து சபையோரைப் பார்த்துப் பேசினார். பல்லவ ராஜ வம்சத்தில் தோன்றிய
பெயர் பெற்ற மன்னர்களின் வீரதீர பராக்கிரமங்களை அவர் வர்ணித்தார்.
அவர்களில் கடைசி மன்னரான மகேந்திர வர்மரின் அற்புத குணாதிசயங்களைப்
புகழ்ந்தார். அவருடைய அருந்தவப் புதல்வரான மாமல்ல சக்கரவர்த்தி
பட்டத்துக்கு வந்த பிறகு பல்லவ சாம்ராஜ்யத்தின் புகழ் கடல்களுக்கு
அப்பாலும் பரவியிருக்கிறதென்றும், அதற்கு உதாரணமாக இந்தச் சபையிலேயே ஒரு
சம்பவம் நடக்கப்போகிறதென்றும், செண்பகத் தீவிலிருந்து வந்திருக்கும்
பிரதிநிதிகள் தங்களுடைய தீவைப் பல்லவ சாம்ராஜ்யத்தில் சேர்த்துக்கொண்டு
பரிபாலிக்கும் படி சக்கரவர்த்தியை வேண்டிக்கொள்ளப் போகிறார் என்றும் விஷ்ணு
சர்மர் தெரிவித்த போது, சபையோர் தங்களுடைய குதூகலத்தைப் பலவித
கோஷங்களினால் வௌதயிட்டனர்.

மீண்டும் அமைச்சர் தலைவர் கூறியதாவது:- "மகாஜனங்களே!
காஞ்சியும் மாமல்லபுரமும் பல்லவ சாம்ராஜ்யத்தின் இரு கண்களாகும்.
சாம்ராஜ்யத்துக்குத் தலை நகரமான காஞ்சி எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு
துறைமுகப்பட்டினமான மாமல்லபுரம் நெடுநாளாக முக்கியமாயிருந்து வந்தது. ஆனால்
காலஞ்சென்ற மகேந்திர சக்கரவர்த்தி இங்கே சிற்பத் திருப்பணியை ஆரம்பித்த
பிறகு, காஞ்சியின் பெருமை சிறிது தாழ்ந்து மாமல்லபுரத்தின் புகழ்
ஓங்கிவிட்டது. எட்டு வருஷங்களுக்கு முன்பு நமது சக்கரவர்த்திப் பெருமான்
வடதேசத்துக்குப் படையெடுத்துச் சென்ற போது, இங்கு நடந்துவந்த சிற்பத்
திருப்பணியை நிறுத்த வேண்டியிருந்தது. பாதகனான புலிகேசியைக் கொன்று
வாதாபியைத் தீக்கிரையாக்கி விட்டுத் திரும்பிய பிறகு சில காலம்
தேசத்திலிருந்து பஞ்சம் பிணிகளை நீக்கும் முக்கியமான பிரயத்தனங்களிலும்,
உள்நாட்டுச் சிறு பகைகளை அழிக்கும் முயற்சியிலும் சக்கரவர்த்தி
ஈடுபட்டிருந்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். பராசக்தியின் அருளினாலும்,
பல்லவ குலத்தின் பரம்பரையான தர்ம பலத்தினாலும், சக்கரவர்த்தி ஈடுபட்டிருந்த
அந்தக் காரியங்கள் எல்லாம் இனிது நிறைவேறிவிட்டன. சக்கரவர்த்தியின்
திருப்பெயரைப் பூண்ட இந்தப் பட்டினத்திலே சிற்பத் திருப்பணிகள் இன்று
மறுபடியும் ஆரம்பமாகின்றன. இனிமேல் சக்கரவர்த்தியும் இந்த நகருக்கு
அடிக்கடி விஜயம் செய்து திருப்பணி வேலைகளை மேற்பார்வை செய்வதாகக் கிருபை
கூர்ந்து வாக்களித்திருக்கிறார்."

இவ்விதம் அமைச்சர் தலைவர் கூறிச் சபையோரை ஆனந்தக் கடலில்
ஆழ்த்திய பிறகு, செண்பகத் தீவின் தூதர்கள் சக்கரவர்த்தியின் சமூகத்துக்கு
அழைத்துவரப்பட்டனர். அவர்களுடைய தலைவன் பேசியது தமிழ் மொழியேயானாலும் சற்று
விசித்திரமான தமிழாயிருந்த படியால், சபையோர்களுக்குப் புன்னகை உண்டு
பண்ணிற்று.

அந்தத் தூதர் தலைவன் கூறியதின் சாராம்சம் பின்வருமாறு:-

செண்பகத் தீவின் வாசிகள், சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு
முன்னால் கரிகால் சோழரின் காலத்தில் சோழ நாட்டிலிருந்து அங்கே போய்க்
குடியேறிய தமிழர்களின் சந்ததிகள், அந்தத் தீவை ஆண்டு வந்த ராஜ வம்சம்
சந்ததியில்லாமல் சில ஆண்டுகளுக்கு முன்பு நசிந்துப் போய்விட்டது. ஆகவே,
செண்பகத் தீவு தற்சமயம் ராஜா இல்லாத ராஜ்யமாயிருந்து வருகிறது. இதை
அறிந்ததும் பக்கத்துத் தேசங்களிலுள்ள மக்கள் - முக்கியமாகத் தட்டை மூக்குச்
சாதியினர் - அடிக்கடி செண்பகத் தீவில் வந்திறங்கிக் கொள்ளையிட்டும்,
இன்னும் பலவித உபத்திரங்களை விளைவித்தும் செல்லுகிறார்கள். இதையெல்லாம்
உத்தேசித்துச் செண்பகத் தீவின் ஜனங்கள் மகாசபை கூட்டி ஏக மனதாக ஒரு
முடிவுக்கு வந்தார்கள். அதாவது தற்சமயம் தாய்நாட்டிலே பிரசித்த
சக்கரவர்த்தியாய் விளங்கும் நரசிம்ம பல்லவேந்திரருக்குத் தூதனுப்பி,
செண்பகத் தீவைப் பல்லவ சாம்ராஜ்யத்தில் சேர்த்துக் கொண்டு சக்கரவர்த்தியின்
சார்பாகத் தீவை ஆட்சி புரிவதற்கு இராஜ வம்சத்தைச் சேர்ந்த வீர புருஷர்
ஒருவரை அனுப்பும்படி பிரார்த்திக்க வேண்டியது.

சக்கரவர்த்தி தூதர்களின் பிரார்த்தனைக்கு உடனே மறுமொழி
சொல்லவில்லை. சில நாள் யோசித்தே முடிவு செய்யவேண்டுமென்றும், அதுவரை அந்தத்
தூதர்கள் பல்லவ சாம்ராஜ்யத்திலுள்ள காஞ்சி முதலிய நகரங்களைப் பார்த்துக்
கொண்டிருக்கலாமென்றும், ஒருவாரத்துக்குள் அவர்களுக்கு மறுமொழி
சொல்லக்கூடும் என்றும் தெரிவித்தார்.

இதன் பின்னர் நரசிம்மவர்மரும் குந்தவி தேவியும்
மந்திரிகளும் ஸ்தபதிகளும் பின் தொடர்ந்துவர துர்க்கா தேவியின் கோயிலுக்கு
மறுபடியும் வந்தனர். அந்தக் கோயிலின் வெளி மண்டபத்தில் இருபுறத்துச்
சுவர்களும் வெறுமையாக இருந்தன. சக்கரவர்த்தி ஒரு பக்கத்துச் சுவரின்
அருகில் வந்து, குந்தவிதேவியின் கையிலிருந்த காவிக் கட்டியை வாங்கி, அந்தச்
சுவரில் சித்திரம் வரையத் தொடங்கினார். அருகில் இருந்தவர்கள் கண்
கொட்டாமல் பார்த்துக் கொண்டு நிற்கும்போதே, வெகு சீக்கிரத்தில்
சிம்மவாகனத்தின் மீது போர்க்கோலத்துடன் வீற்றிருக்கும் துர்க்கை தேவியின்
திரு உருவம் அந்தச் சுவரில் சாக்ஷாத் காரமாய்த் தோன்றியது. குந்தவி தேவி
பயம் தொனித்த குரலில், "அப்பா! தேவியின் உக்கிரம் தாங்க முடியவில்லை.
யாருடன் அம்பிகை சண்டையிடுகிறாளோ, அந்த அசுரனுடைய உருவத்தையும்
எழுதிவிடுங்கள்" என்றாள். உடனே சக்கரவர்த்தி தேவிக்கு எதிரே கையில்
கதாயுதம் தரித்த மகிஷாசுரனுடைய உருவத்தையும் எழுதினார். "இப்போது தான்
பயமின்றிப் பார்க்க முடிகிறது!" என்றாள் குந்தவி. பிறகு, சக்கரவர்த்தி
அங்கே அருகில் நின்ற ஆசாரிய ஸ்தபதியைப் பார்த்து, "ஸ்தபதியாரே, இந்த
விஜயதசமி தினத்தில் தான் அம்பிகை மகிஷாசுரனை வதம் செய்தாள். நமது
திருப்பணியை அந்தக் காட்சியுடனேயே ஆரம்பித்து வைக்கலாமல்லவா?" என்றார்.
ஆசாரிய ஸ்தபதியும் வணக்கத்துடன் ஆமோதித்துத் தம் கையிலிருந்த கல்லுளியைச்
சக்கரவர்த்தியின் பால் நீட்ட, சக்கரவர்த்தி அதை வாங்கிக் கொண்டு தாம்
எழுதிய சித்திரத்தின் மேல் கல்லுளியால் சில முறை பொளிந்தார். பிறகு
கல்லுளியை ஸ்தபதியிடம் கொடுத்தார். ஸ்தபதியார் அதைப் பக்தியுடன் பெற்றுக்
கொண்டு அம்பிகைக்கும் சக்கரவர்த்திக்கும் வணக்கம் செலுத்தி விட்டுச் சிற்ப
வேலையை ஆரம்பித்தார்.

அன்று முதற்கொண்டு பல வருஷ காலம் மாமல்லபுரத்தில்
ஆயிரக்கணக்கான கல்லுளிகள் சத்தம் இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தது.



******************************************
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Empty
PostSubject: 2.8. குந்தவியின் கலக்கம்   அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Icon_minitimeMon Jun 14, 2010 9:40 pm

2.8. குந்தவியின் கலக்கம்



"புஷ்பேஷு ஜாதி புருஷேஷு விஷ்ணு;
நாரீஷுரம்பா நகரேஷு காஞ்சி"

என்று வடமொழிப் புலவர்களால் போற்றப்பட்ட காஞ்சிமா நகரின்
மாடவீதியிலே குந்தவிதேவி பல்லக்கில் சென்று கொண்டிருந்தாள்.
திருக்கோயில்களுக்குச் சென்று உச்சிகால பூஜை நடக்கும்போது சுவாமி தரிசனம்
செய்து விட்டு வரும் நோக்கத்துடன் அவள் சென்றாள். ஆனால் அவளுடைய உள்ளம்
மட்டும் ஒரு வாரத்துக்கு முன்பு மாமல்லபுரத்தில் விஜயதசமியன்று கண்ட
கோலாகலக் காட்சியிலேயே ஈடுபட்டிருந்தது.

அன்று ஆரம்பித்த திருப்பணிகளில் உலகம் உள்ள வரையில் தன்
தந்தையின் புகழ் குன்றாதிருக்குமல்லவா? என்று அவள் எண்ணமிட்டாள்.
இப்படிப்பட்ட தந்தைக்குப் புதல்வியாய்ப் பிறக்கத் தான் பாக்கியம்
செய்திருக்க வேண்டுமென்று நினைத்தாள். இத்தகைய சக்கரவர்த்தியின் ஆட்சியில்
வாழும் பிரஜைகள்தாம் எவ்வளவு பாக்கியம் பண்ணியவர்கள் என்ற எண்ணமும்
தோன்றியது. இப்படிப்பட்ட சிந்தனைகளில் ஆழ்ந்தவளாய்ப் பல்லக்கிலே போய்க்
கொண்டிருக்கையில், திடீரென்று வீதியில் ஒருமதில் சுவரின் திருப்பத்தில்
அபூர்வமான காட்சி ஒன்றைக் கண்டாள். சகல இராஜ லட்சணங்களும் பொருந்திக்
களைததும்பும் முகத்தினனான ஓர் இளங்குமரன் ஒரு குதிரைமீது வந்து
கொண்டிருந்தான். அவனுடைய உடம்பையும் கைகளையும் குறுக்கும் நெடுக்குமாய்
இரும்புச் சங்கிலியினால் பிணைத்திருந்தார்கள். குதிரையின் இரு பக்கத்திலும்
முன்னாலும் பின்னாலும் அந்தச் சங்கிலிகளைப் பிடித்துக் கொண்டு போர்
வீரர்கள் சிலர் விரைந்து நடந்து வந்தார்கள்.

அந்த இளங்குமரன் மிகவும் களைத்துப்போன
தோற்றமுடையவனாயிருந்தாலும், அவனுடைய முகத்தில் கொஞ்சமாவது அதைரியத்தின்
அறிகுறி காணப்படவில்லை. அஞ்சா நெஞ்சங் கொண்ட தீர புருஷனாகவே தோன்றினான்.
"என் உடம்பைத்தானே சங்கிலிகளால் பிணைக்க முடியும்? என் உள்ளத்தை யாராலும்
சிறைப்படுத்த முடியாதல்லவா?" என்று அலட்சியத்துடன் கேட்பதுபோல் இருந்தது
அவனுடைய திருமுகத்தின் தோற்றம்.

இந்தக் காட்சியைக் கண்டதும் குந்தவி தேவியின் விசாலமான
நயனங்கள் ஆச்சரியத்துடன் இன்னும் அதிகமாக விரிந்தன. அதே சமயத்தில் அந்த
இளைஞனும் சக்கரவர்த்தியின் குமாரியைப் பார்த்தான். சொல்லுக் கெட்டாத
அவளுடைய திவ்ய சௌந்தரியம் ஒரு கணநேரம் அவனைத் திகைப்படைந்து நிற்கும்படி
செய்திருக்க வேண்டும். அடுத்த நிமிஷத்தில் பல்லக்கும் குதிரையும்
ஒன்றையொன்று தாண்டிச் சென்று விட்டன. குந்தவி பல்லக்கிலிருந்த வண்ணம்
இரண்டொரு தடவை திரும்பித் திரும்பிப் பார்த்தாள். குதிரைமீது சங்கிலியால்
கட்டுண்டிருந்த அந்த இளங்குமரனும் தன்னைப் போலவே ஆவல் கொண்டவனாய்த்
திரும்பிப் பார்ப்பான் என்று அவள் எதிர்பார்த்தாளோ என்னவோ, தெரியாது. ஆனால்
அந்தக் குமரன் மட்டும் தலையை ஓர் அணுவளவு கூடப் பின்புறமாகத்
திருப்பவில்லை. திருப்ப முடியாதபடி அவனைப் பிணித்திருந்த சங்கிலிகள்தான்
தடுத்தனவோ, அல்லது அவனுடைய மனத்தின் திட சங்கற்பந்தான் அவ்விதம் திரும்பிப்
பார்க்காத வண்ணம் தடை செய்ததோ அதுவும் நமக்குத் தெரியாது.

குந்தவி தேவியின் திவ்ய சௌந்தரியத்தைப் போலவே அந்தச்
சக்கரவர்த்தி திருமகளின் தெய்வ பக்தியும் அந்நாளில் தேசப்
பிரசித்தமாயிருந்தது. சாதாரணமாய் அவள் சிவன் கோயிலுக்குப் போனாலும்,
பெருமாள் கோயிலுக்குப் போனாலும் பராசக்தியின் சந்நிதிக்குச் சென்றாலும்,
அந்தந்தத் தெய்வங்களின் தியானத்திலே ஈடுபட்டுத் தன்னை மறந்துவிடுவது
வழக்கம். ஆனால் இன்றைய தினம் குந்தவியின் மனம் அவ்விதம் சலனமற்ற
தியானத்தில் ஈடுபடவில்லை. தெய்வ சந்நிதானத்தில் நின்றபோது கூட, கட்டுண்டு
குதிரை மேல் வீற்றிருந்த இளங்குமரனுடைய முகம் வந்து நின்றது. அவள் எவ்வளவோ
முயன்றும் அந்த முகத்தை மறக்க முடியவில்லை. இது வரையில் அவள்
அனுபவித்தறியாத இந்தப் புதிய அனுபவமானது அவளுக்கு ஒருவித அபூர்வ இன்பக்
கிளர்ச்சியையும் அதே சமயத்தில் பயத்தையும் உண்டு பண்ணிற்று!

ஒருவாறு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு குந்தவி தேவி
அரண்மனைக்குத் திரும்பினாள். திரும்புங் காலையில் மனத்தை அந்த இளங்குமரன்
மேல் செல்லாமல் வேறு நினைவில் செலுத்தும் முயற்சியையே அவள் விட்டு
விட்டாள். "அவ்வளவு ராஜ லக்ஷணங்கள் பொருந்திய இளங்குமரன் யாராயிருக்கலாம்?
அவனை எதற்காகச் சங்கிலியால் பிணைத்திருக்கிறார்கள்? எங்கே அழைத்துச்
செல்கிறார்கள்? அவன் அத்தகைய குற்றம் என்னதான் செய்திருப்பான்?"
என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்கினாள். திடீரென்று ஒரு ஞாபகம் வந்தது.
"உறையூர் இளங்குமாரன் ஏதோ சக்கரவர்த்திக்கு விரோதமாகக் கலகம் செய்யப்
போகிறான் என்று மாமல்லபுரத்துக்கு ஓலை வந்ததல்லவா? அது விஷயமாக முன்னமே
ஏற்பாடு செய்தாகிவிட்டது என்று சக்கரவர்த்தி மறுமொழி தந்தாரல்லவா? அந்தச்
சோழ இராஜ குமாரன்தானோ என்னவோ இவன்?" இந்த எண்ணம் தோன்றியதும் குந்தவிக்கு
அக்குமரன் மேல் கோபம் உண்டாயிற்று. 'என்ன அகந்தை, என்ன இறுமாப்பு அவனுக்கு?
எவ்வளவு பெரிய துரோகமான காரியத்தைச் செய்துவிட்டு, எவ்வளவு அலட்சியமாய்க்
கொஞ்சங்கூடப் பயப்படாமலும் வெட்கப்படாமலும் இறுமாந்து
உட்கார்ந்திருக்கிறான்! நரசிம்ம பல்லவேந்திரருக்கு எதிராகக் கலகம்
செய்யும்படி அவ்வளவு வந்துவிட்டதா அவனுக்கு? எத்தனையோ தூர தூர தேசங்களில்
உள்ள ஜனங்கள் எல்லாரும், நரசிம்ம சக்கரவர்த்தியின் வெண்கொற்றக் குடையின்
நிழலில் வாழ்வதற்குத் தவஞ் செய்கிறார்களே! செண்பகத் தீவின் வாசிகள்
இதற்காகத் தூது அனுப்பியிருக்கிறார்களே! இந்த அற்பச் சோழநாட்டு இளவரசனுக்கு
என்ன வந்துவிட்டது? ஆமாம், இவன் மட்டும் கலகம் செய்த இளவரசனாயிருந்தால்
தந்தையிடம் சொல்லிக் கடுமையான தண்டனை விதிக்கச் செய்ய வேண்டும்! அப்போது
தான் புத்தி வரும்.'

இவ்வாறு எண்ணிய குந்தவியின் மனம் மறுபடியும் சஞ்சலம்
அடைந்தது. "ஐயோ பாவம்! முகத்தைப் பார்த்தால் அப்படியொன்றும் கெட்டவனாகத்
தோன்றவில்லையே! அவன் தானாக ஒன்றும் செய்திருக்க மாட்டான். ஒருவேளை யாராவது
கெட்ட மனிதர்கள் பக்கத்தில் இருந்து தூண்டி விட்டிருப்பார்கள். அவர்களைப்
பிடித்துத் தண்டிக்க வேண்டுமேயன்றி, இந்தச் சுகுமாரனைக் கடுமையாகத்
தண்டிப்பதில் என்ன பயன்? அவனுடைய மார்பையும், தோள்களையும், கைகளையும்
பிணித்திருக்கும் இரும்புச் சங்கிலிகள் அந்த மிருதுவான தேகத்தை எப்படித்
துன்புறுத்துகின்றனவோ? நல்ல புத்தி சொல்லி, எச்சரிக்கை செய்து; அவனை
விட்டுவிட்டால் என்ன? - அப்பாவிடம் இராத்திரி சொல்ல வேண்டும். ஆனால்
அவருக்குத் தெரியாத விஷயமா? "தர்ம ராஜாதி ராஜன்" என்று புகழ்
பெற்றவராயிற்றே? நியாயமும் தர்மமும் தவறி அவர் ஒன்றும் செய்யமாட்டார். இந்த
இளங்குமரனை மன்னித்துத்தான் விடுவார்...." இப்படியெல்லாம் கொந்தளித்துக்
கொண்டிருந்த உள்ளத்துடன் குந்தவி தேவி அரண்மனையை அடைந்தாள். சூரியன்
எப்போது அஸ்தமிக்கும்? தகப்பனார் எப்போது ராஜசபையிலிருந்து அரண்மனைக்குத்
திரும்பி வருவார் என்று எதிர்பார்த்த வண்ணம் ஒவ்வொரு வினாடியையும் ஒவ்வொரு
யுகமாகக் கழித்துக் கொண்டிருந்தாள்.



***************************************************
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Empty
PostSubject: 2.9. தந்தையும் மகளும்   அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Icon_minitimeMon Jun 14, 2010 9:50 pm

2.9. தந்தையும் மகளும்



குந்தவி தாயில்லாப் பெண். அவளுடைய அன்னையும் பாண்டிய ராஜகுமாரியும்
நரசிம்மவர்மரின் பட்ட மகிஷியுமான வானமாதேவி, குந்தவி ஏழு வயதுக்
குழந்தையாயிருந்தபோதே சுவர்க்கமடைந்தாள்.

இந்தத் துக்கத்தை அவள் அதிகமாக அறியாத வண்ணம் சில காலம்
சிவகாமி அம்மை அவளைச் செல்லமாய் வளர்த்து வந்தாள். இந்தச் சிவகாமி
பிரசித்தி பெற்ற ஆயனச் சிற்பியின் மகள். நரசிம்மவர்மரால் வாதாபியிலிருந்து
சிறை மீட்டு வரப்பட்டவள், பட்ட மகிஷியின் மரணத்துக்குப் பிறகு
நரசிம்மவர்மர் சிவகாமியை மணம் புரிந்து கொள்வாரென்று சில காலம்
பேச்சாயிருந்தது. ஆனால் அவ்விதம் நடக்கவில்லை. சில வருஷகாலத்துக்கெல்லாம்
சிவகாமி தேவியும் சொர்க்கம் புகுந்து விட்டாள்.

பிறகு, சக்கரவர்த்தியே குந்தவிக்குத் தாயும்
தகப்பனுமாயிருந்து அவளை வளர்க்க வேண்டியதாயிற்று. அந்தப்புரத்தில்
குந்தவிக்குப் பாட்டிமார்கள்- மகேந்திரவர்மருடைய பத்தினிகள் சிலர்
இருந்தனர். ஆனால் அவர்களுக்கும் குந்தவிக்கும் அவ்வளவாக மனப் பொருத்தம்
ஏற்படவில்லை. குந்தவி தாயாரைக் குறித்து "தெற்கத்தியாள்" என்று அவர்கள்
குறை கூறியதையும் சிவகாமி தேவியைப் பலவிதமான நிந்தை செய்ததையும் குந்தவி
குழந்தைப் பருவத்தில் கேட்டிருந்தாள். இதனாலேயே பாட்டிமார்களிடத்தில்
அவளுக்குப் பற்றுதல் உண்டாகவில்லை. குந்தவியின் நடை உடை பாவனைகளும், அவள்
எதேச்சையாகச் செய்த காரியங்களும் அந்தப் பாட்டிமார்களுக்குப்
பிடிக்கவில்லை. நரசிம்மவர்மர் இந்தப் பெண்ணுக்கு ரொம்பவும் இடங்கொடுத்துக்
கெடுத்து வருகிறார் என்ற குறையும் அவர்களுக்கு உண்டு.

இக்காரணங்களினால் குந்தவிக்குத் தன் தந்தையிடமுள்ள
இயற்கையான பாசம் பன்மடங்கு வளர்ந்திருந்தது. அப்பாவுடன் இருக்கும்போதுதான்
அவளுக்குக் குதூகலம்; அவருடன் வார்த்தையாடுவதில்தான் அவளுக்கு உற்சாகம்.
அவருடன் சண்டை பிடிப்பதில்தான் அவளுக்கு ஆனந்தம். அவர் தன்னை உடன்
அழைத்துப் போகாமல் ராஜரீகக் காரியங்களுக்காக வெளியூர்களுக்குப்
போயிருந்தால், அவளுக்கு ஒரு நாள் போவது ஒரு யுகம் போவது போலிருக்கும்.

சக்கரவர்த்திக்கோ அவருடைய பிராணனே குந்தவியாக உருக்கொண்டு
வெளியில் நடமாடுகிறது என்று கருதும்படி இருந்தது. அவருடைய விசால
இருதயமானது ஓரானொரு காரணத்தினால் பல ஆண்டுக் காலம் வறண்டு பசையற்றுப்
பாலைவனமாயிருந்தது. அப்படிப்பட்ட இருதயத்தில் குந்தவியின் காரணமாக மீண்டும்
அன்பு தளிர்த்து ஆனந்தம் பொங்கத் தொடங்கியது. குந்தவியின் ஒவ்வொரு
சொல்லும், செயலும், நோக்கும், சமிக்ஞையும் சக்கரவர்த்திக்குப் புளகாகிதம்
உண்டாக்கின.

தந்தையின் வரவை எதிர்நோக்கிக் குந்தவி தேவி அரண்மனை
உப்பரிகையில் நிலா மாடத்தில் உட்கார்ந்திருந்தாள். பௌர்ணமிக்குப் பிறகு
மூன்று நாள் ஆகியிருக்கலாம். கிழக்கு அடிவானத்தில் வரிசையாக உயர்ந்திருந்த
பனை மரங்களுக்கு நடுவில், சிறிது குறைந்த சந்திரன், இரத்தச் சிவப்பு
ஒளியுடன் உதயமாகிக் கொண்டிருந்தான். மற்ற நாட்களாயிருந்தால் அழகு மிகுந்த
இந்த வானக் காட்சியின் வனப்பில் ஈடுபட்டு மெய் மறந்திருப்பாள். ஆனால்,
இன்று இரவு அவளுக்கு எதிலுமே மனம் செல்லவில்லை. வீதியில் குதிரைமீது
வைத்துச் சங்கிலியால் பிணைத்துக் கொண்டு போகப்பட்ட இராஜகுமாரனுடைய
ஞாபகமாகவே அவள் இருந்தாள். அவனைப் பற்றி விசாரிப்பதற்காகவே தந்தையின்
வருகையை வழக்கத்தைவிட அதிக ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.

கடைசியாக, நரசிம்மவர்மரும் வந்து சேர்ந்தார். குந்தவி
அவரை ஓடி வரவேற்று, அவருடைய விசாலமான இரும்புத் தோள்களைத் தன் இளங்
கரங்களினால் கட்டிக் கொண்டு தொங்கினாள். "ஏன் அப்பா, இன்றைக்கு இத்தனை
நேரம்?" என்று கேட்டாள். என்றுமில்லாத அவளுடைய பரபரப்பையும் ஆர்வத்தையும்
பார்த்து நரசிம்மவர்மர் ஆச்சரியப்பட்டுப் போனார். அப்படியொன்றும்
நேரமாகிவிடவில்லை அம்மா! தினம் போலத் தானே வந்திருக்கிறேன். ஏதாவது விசேஷம்
உண்டா?" என்று கேட்டார்.

குந்தவி ஏதோ சொல்ல ஆரம்பித்தவள் சட்டென்று நிறுத்திக்
கொண்டாள். "ஒரு விசேஷம் இருக்கிறது அப்பா! ஆனால் இப்போது சொல்லமாட்டேன்.
நீங்கள் முதலில் சொல்லுங்கள், சபையில் ஏதாவது விசேஷம் உண்டா?" என்று
கேட்டாள்.

"ஆமாம்; உண்டு இலங்கையிலிருந்து இன்றைக்குச் செய்தி
வந்தது; அங்கே நடந்த பெரும் போரில் நமது சைன்யங்கள் மகத்தான
வெற்றியடைந்தனவாம். 'இலங்கை மன்னன் சமாதானத்தைக் கோருகிறான்; என்ன
செய்யட்டும்?' என்று உன் தமையன் ஓலை அனுப்பியிருக்கிறான்."

"ரொம்ப சந்தோஷம், அப்பா! அப்படியானால் அண்ணா சீக்கிரம்
திரும்பி வந்து விடுவானோ இல்லையோ?"

"கொஞ்ச காலம் கழித்துத்தான் வருவான். மதுரையில் உன்
மாமாவுக்குக் கொஞ்ச நாளாகத் தேக அசௌகர்யமாயிருக்கிறதாம்; அங்கே போய்க்
கொஞ்ச காலம் இருந்து விட்டு வரச் சொல்லியிருக்கிறேன். நீயும் வேணுமானால்
மதுரைக்குப் போய் வருகிறாயா, குழந்தாய்! உன் மாமா உன்னைப் பார்க்க
வேணுமென்று எவ்வளவோ ஆசைப்படுகிறாராம்."

"அதெல்லாம் முடியாது; நான் உங்களை விட்டுப் போகமாட்டேன்.
இருக்கட்டும். இன்னும் ஏதாவது விசேஷம் உண்டா, அப்பா!"

"உண்டு; சோழ நாட்டில்"

"சோழநாட்டில்" என்றதும் குந்தவியின் உடம்பில் படபடப்பு
உண்டாயிற்று. இதைக் பார்த்த சக்கரவர்த்தி மிகவும் வியப்படைந்தவராய் "என்ன
குந்தவி! உனக்கு என்ன உடம்பு?" என்று கேட்டார்.

"ஒன்றுமில்லை, அப்பா! சோழ நாட்டில் என்ன விசேஷம்!
சொல்லுங்கள்" என்றாள் குந்தவி.

"சோழ நாட்டில் காழி என்னும் ஊரில் ஒரு இளம் பிள்ளை தெய்வ
சாந்நித்யம் பெற்று மகா ஞானியாய் விளங்குகிறாராம். சிவபெருமான் பேரில்
தீந்தமிழ்ப் பாடல்களைத் தேனிசையாய்ப் பொழிகிறாராம். தீராத வியாதிகள்
எல்லாம் அவர் கையினால் திருநீறு வாங்கி இட்டுக் கொண்டால் தீர்ந்து
விடுகிறதாம். ஞானசம்பந்தர் என்று பெயராம்!"

"நன்றாயிருக்கிறது போங்கள். யமனுக்கு அப்படி ஒரு விரோதி
கிளம்பியிருக்கிறாரா? அந்தப் பிள்ளை திருநீறு கொடுத்து வியாதிகள்
எல்லாவற்றையும் தீர்த்துக் கொண்டு போனால், யமலோகமல்லவா சூனியமாய்ப்
போய்விடும்? நீங்களுந்தான் இப்போதெல்லாம் யுத்தம் செய்வதையே
நிறுத்திவிட்டீர்கள்!" என்றாள் குந்தவி.

"எல்லாம் உன்னாலேதான்! நீ என் கழுத்தைக்கட்டிக் கொண்டு
விடமாட்டேனென்றால், நான் யுத்தத்துக்குப் போவது எப்படி? உன்னை வேறொருவன்
கழுத்தில் கட்டிவிட்டால், அப்புறம்...."

"அப்புறம் அவன் பாடு அதோ கதிதான்! அது கிடக்கட்டும்,
அப்பா! இன்றைக்கு வேறு விசேஷம் ஒன்றுமில்லையா!" என்றாள் குந்தவி.

"ஆமாம், இன்னும் ஒரே ஒரு விசேஷம் இருக்கிறது. கடல்
மல்லைக்கு நாம் போயிருந்தபோது உறையூரிலிருந்து ஒரு தூதன் வந்தானே, ஞாபகம்
இருக்கிறதா? நீ கூட விஷயத்தைக் கேட்டு விட்டு, 'அந்தச் சோழ ராஜகுமாரனை
நன்றாய்த் தண்டிக்க வேண்டும்' என்று சொன்னாயே? அவனைச் சிறைப்பிடித்து
இன்றைக்கே கொண்டு வந்துசேர்த்தார்கள்..."

"அப்பா! அவனைச் சங்கிலிகளால் கட்டிக் குதிரை மேல்
வைத்துக் கொண்டு வந்தார்களா?" என்று குந்தவி கேட்டாள்.

"ஆமாம்; உனக்கு எப்படித் தெரிந்தது" என்றார்
சக்கரவர்த்தி.

"மத்தியானம் கோயிலுக்குப் போய்க் கொண்டிருந்தபோது
வீதியில் பார்த்தேன்."

குந்தவியிடம் வழக்கமில்லாத படபடப்பு அன்று
ஏற்பட்டிருந்ததின் காரணத்தை நரசிம்மவர்மர் அப்போது அறிந்து கொண்டார்.

"ஒருவேளை அவனாய்த்தானிருக்கும். அது போகட்டும்.
குழந்தாய்! நமது அப்பர் பெருமானின் பதிகம் ஒன்றைப் பாடு பார்க்கலாம்!"
என்றார் சக்கரவர்த்தி.

"அப்பா இந்த இராஜ குமாரனை இராத்திரி எங்கே
வைத்திருப்பார்கள்?" என்று குந்தவி கேட்டாள்.

"வேறு எங்கே வைத்திருப்பார்கள்? காராக்கிரகத்தில்
வைத்திருப்பார்கள்!"

"ஐயையோ!"

"என்ன குழந்தாய்! எதைக் கண்டு பயப்படுகிறாய்?" என்று
நரசிம்மவர்மர் தூக்கி வாரிப் போட்டாற்போல் எழுந்து நாலாபுறமும் பார்த்தார்.


குந்தவி அவரைக் கீழே அமர்த்தி, "ஒன்றுமில்லை, அப்பா!
காராக்கிரகத்திலிருந்து அந்த ராஜ குமாரன் தப்பித்துக் கொண்டு போய்விட்டால்
என்ன செய்கிறது என்று பயந்தேன்!" என்றாள்.

"இவ்வளவுதானே!" என்று சக்கரவர்த்தி புன்னகை செய்து "அந்த
மாதிரியெல்லாம் பயப்படாதே! பல்லவ ராஜ்யாதிகாரம் இன்னும் அவ்வளவு கேவலமாய்ப்
போய்விடவில்லை. விக்கிரமன் தப்ப முயன்றானானால் அந்த க்ஷணமே பல்லவ
வீரர்களின் பன்னிரண்டு ஈட்டி முனைகள் அவன் மீது ஏக காலத்தில் பாய்ந்து
விடும்!" என்று சொன்னார்.

இந்தக் கடூரமான வார்த்தைகளைக் கேட்டு, குந்தவியின் உடம்பு
இன்னும் அதிகமாகப் பதறிற்று.

"அப்பா! நான் ஒன்று சொல்கிறேன், கேட்கிறீர்களா?" என்றாள்
குந்தவி.

"நான் கேட்காவிட்டால் நீ என்னை விடத்தான் போகிறாயா?"
என்றார் சக்கரவர்த்தி.

"அந்த இராஜ குமாரனுடைய முகத்தைப் பார்த்தால்
அப்படியொன்றும் பொல்லாதவனாகத் தோன்றவில்லை. அப்பா! யாரோ துஷ்ட மனிதர்கள்
அவனுக்குத் துர்ப்போதனை செய்து இப்படி அவனை உங்களுக்கு விரோதமாய்க் கிளப்பி
விட்டிருக்க வேண்டும்."

"நீ சொல்லுவது ரொம்ப வாஸ்தவம். நான் கூட அவ்வாறு தான்
கேள்விப்பட்டேன். யாரோ ஒரு சிவனடியார் அடிக்கடி இந்த விக்கிரமனையும்
அவனுடைய தாயாரையும் போய்ப் பார்ப்பதுண்டாம். அந்த வேஷதாரி தான் விக்கிரமனை
இப்படிக் கெடுத்திருக்க வேண்டுமென்று தகவல் கிடைத்திருக்கிறது."

"பார்த்தீர்களா? நான் எண்ணியது சரியாய்ப் போயிற்றே!
உறையூரில் என்னதான் நடந்ததாம்? பெரிய சண்டை நடந்ததோ? ரொம்பப் பேர் செத்துப்
போனார்களோ?"

"பெரிய சண்டையுமில்லை; சின்னச் சண்டையுமில்லை; இந்த
அசட்டுப் பிள்ளை ஏமாந்து அகப்பட்டுக் கொண்டதுதான் லாபம். மாரப்ப பூபதி
என்று இவனுக்கு ஒரு சித்தப்பன் இருக்கிறான். அவன் பெரிய படைகளைத்
திரட்டிக்கொண்டு வருகிறேன் என்று இந்த பிள்ளையிடம் ஆசை காட்டியிருக்கிறான்.
அவன் அன்றைக்குக் கிட்டவே வரவில்லை. அதோடு நமது தளபதி அச்சுதவர்மரிடம்
சமாசாரத்தையும் தெரியப்படுத்தி விட்டான். அன்று பல்லவ வீரர்கள் ஆயத்தமாய்
இருந்தார்கள். வெளியூர்களிலிருந்து வந்த சில ஜனங்களை ஊருக்கு வெளியிலேயே
வளைத்துக் கொண்டு விரட்டி விட்டார்கள். விக்கிரமனோடு கடைசியில்
சேர்ந்தவர்கள் ஒரு கிழக் கொல்லனும், ஒரு படகோட்டியும் இன்னும் நாலைந்து
பேருந்தான். கிழவன் அங்கேயே செத்து விழுந்து விட்டான். மற்றவர்களையெல்லாம்
சிறைப்படுத்தி விக்கிரமனை மட்டும் என் கட்டளைப்படி இங்கே அனுப்பினார்கள்.

"ஐயோ பாவம்!" என்றாள் குந்தவி.

"எதற்காகப் பரிதாப்படுகிறாய், அம்மா! இராஜத் துரோகம்
ஜயிக்கவில்லையே என்று பரிதாபப்படுகிறாயா?"

"இல்லை, இல்லை, இந்த இராஜ குமாரன் இப்படி ஏமாந்து
போய்விட்டானே என்றுதான். ஆமாம் அப்பா! இந்த மாதிரி நடக்கப்போகிறதென்று
உங்களுக்கு முன்னாலேயே தெரிந்திருக்கிறதே அது எப்படி?"

"என்னிடந்தான் மந்திர சக்தி இருக்கிறது என்று உனக்குத்
தெரியுமே? ஆமாம், அப்பர் பெருமானின் பதிகம் பாடப் போகிறாயா, இல்லையா?"
என்று மீண்டும் சக்கரவர்த்தி கேட்டுப் பேச்சை மாற்ற முயன்றார்.

"அப்பா எனக்கு ஒன்று தோன்றுகிறது. இந்தத் தடவை மட்டும்
அந்த இராஜகுமாரனை நீங்கள் மன்னித்து விட்டால்...."

"என்ன சொன்னாய் குந்தவி! பெண்புத்தி என்பது கடைசியில்
சரியாய்ப் போய்விட்டதே! அன்றைக்கு அவனைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்
என்றாயே! அதனால்தான் பெண்களுக்கு இராஜ்ய உரிமை கிடையாதென்று பெரியவர்கள்
வைத்திருக்கிறார்கள்..."

"சுத்தப் பிசகு! பெண்களுக்கு இராஜ்ய உரிமை இருந்தால்
உலகத்தில் சண்டேயேயிராது. அந்த இராஜ குமாரனை மட்டும் நான் சந்தித்துப்
பேசினேனானால் அவனுடைய மனத்தை மாற்றி விடுவேன். முடியுமா முடியாதா என்று
பார்க்கலாமா, அப்பா?"

"முடியலாம்! குழந்தாய் முடியலாம். அவனுடைய மனத்தை
மாற்றுவது உன்னால் முடியாத காரியம் என்று நான் சொல்லவில்லை. உனக்கு
முன்னால் எத்தனையோ ஸ்திரீகள் புத்திசாலிகளை அசடுகளாக்கியிருக்கிறார்கள்.
வைராக்கிய சீலர்களைப் பைத்தியமாக்கியிருக்கிறார்கள். வீரர்களைக்
கோழைகளாக்கியிருக்கிறார்கள். இதற்கு மாறாக சாதாரண மனுஷ்யர்களைப்
புத்திசாலிகளாகவும், வைராக்கிய புருஷர்களாகவும், வீரர்களாகவும் செய்த
ஸ்திரீகளும் இருந்திருக்கிறார்கள். பெண் குலத்துக்கு இந்தச் சக்தி உண்டு.
உண்மைதான்; நீ நினைத்தாயானால், விக்கிரமனைச் சுதந்திரம் என்ற பேச்சையே
மறந்துவிடும்படி செய்து விடலாம். ஆனால் உன்னுடைய சாமர்த்தியத்தை நீ கொஞ்சம்
முன்னாலேயே காட்டியிருக்க வேண்டும். அவன் குற்றம் செய்வதற்கு முன் உன்
பிரயத்தனத்தைச் செய்திருக்க வேண்டும். இனிமேல் பிரயோஜனமில்லை அம்மா!
குற்றவாளியைத் தண்டித்தே தீரவேண்டும். இன்று விக்கிரமனைச் சும்மா விட்டு
விட்டால் நாளைக்கு ஒவ்வொரு ஊரிலும் ஒருவன் கலகம் செய்யக் கிளம்புவான்.
அப்புறம் இராஜ்யம் போகிற வழி என்ன?"

இந்த வார்த்தைப் புயலில் அகப்பட்ட குந்தவி பதில் சொல்லத்
தெரியாமல் திகைத்து நின்றாள். சற்று நேரம் பொறுத்து, "அப்பா! அவனுக்கு என்ன
தண்டனை விதிப்பீர்கள்?" என்று கேட்டாள்.

"இப்போது சொல்ல முடியாது குந்தவி! நாளைக்கு தர்மாசனத்தில்
உட்கார்ந்து விசாரணை செய்யும் போது என்ன தண்டனை நியாயமென்று தோன்றுகிறதோ,
அதைத் தான் அளிப்பேன். நியாயத்திலிருந்து ஒரு அணுவளவேனும் தவறினார்கள் என்ற
அவச்சொல் இதுவரையில் பல்லவ வம்சத்துக்கு ஏற்பட்டதில்லை; இனிமேலும்
ஏற்படாது" என்றார் சக்கரவர்த்தி.


**********************************************
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Empty
PostSubject: 2.10. துறைமுகத்தில்   அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Icon_minitimeMon Jun 14, 2010 9:54 pm

2.10. துறைமுகத்தில்







அன்றிரவு குந்தவி சரியாகத் தூங்கவில்லை. சோழ ராஜகுமாரனுடைய சோகமும்
கம்பீரமும் பொருந்திய முகம் அவள் மனக்கண்ணின் முன்னால் இடைவிடாமல் தோன்றி
அவளுக்குத் தூக்கம் வராமல் செய்தது. நள்ளிரவுக்குப் பிறகு சற்றுக்
கண்ணயர்ந்த போது, என்னவெல்லாமோ பயங்கரமான கனவுகள் தோன்றியதால் அவள்
திடுக்கிட்டு கண் விழிக்க வேண்டியதாயிற்று.

சோழ ராஜகுமாரனைக் கழுத்து வரையில் பூமியில்
புதைந்திருக்கிறது. அவனை நோக்கி ஒரு மத யானை அதிவேகமாக ஓடி வருகிறது.
அடுத்த நிமிஷம் ஐயோ! யானையின் கால்கள்- தூணையொத்த கால்கள், அந்தச்
சுகுமாரனுடைய தலையை இடறிவிடப்போகின்றன! குந்தவி பதைபதைப்புடன் ஓடி வந்து
யானை வரும் வழியில் நிற்கிறாள். யானை தன் துதிக்கையினால் அவளை லாவகமாகத்
தூக்கித் தன் முதுகின்மேல் வைத்துக் கொண்டு மேலும் ஓடுகிறது. குந்தவி
பயங்கரத்துடன் எதிரே பூமியில் புதைந்து நிற்கும் ராஜகுமாரனுடைய முகத்தைப்
பார்க்கிறாள்! அந்தச் சமயத்திலும் அந்த முகத்தில் அலட்சியமும் அவமதிப்பும்
கலந்து புன்னகை குடிகொண்டிருப்பதைக் காண்கிறாள். "ஐயோ!" என்று கதறிக்
கொண்டு கண் விழிக்கிறாள். கண்டதெல்லாம் கனவென்று தெரிகிறது. ஆனாலும் அவள்
உடம்பு வெகுநேரம் நடுங்கிக் கொண்டிருக்கிறது.

சற்று நேரத்துக்கெல்லாம் மறுபடியும் கண்ணயர்ந்து
வருகிறது. அரைத் தூக்கத்தில் மீண்டும் பயங்கரமான கனவு. கழு மரங்கள்
வரிசையாக நட்டிருக்கின்றன. சோழ ராஜகுமாரனைக் கழுவேற்றுவதற்காகக் கொண்டு
வந்து நிறுத்தியிருக்கிறார்கள். குந்தவி அவ்விடத்துக்கு ஓடோ டியும்
வருகிறாள். துர்க்கை அம்மனை மனத்தில் தியானித்துக் கொண்டு அந்தக் கழு
மரங்கள் பற்றி எரிய வேண்டுமென்று பிராத்திக்கிறாள். அவையெல்லாம் தீப்பற்றி
எரிகின்றன. குந்தவி அளவில்லாத மகிழ்ச்சியுடன் ராஜகுமாரன் நின்ற இடத்தை
நோக்குகிறாள். அந்தோ! அவனைச் சுற்றிலும் பன்னிரண்டு பல்லவ வீரர்கள் நின்று
பன்னிரண்டு ஈட்டிகளை அவன் மீது செலுத்தச் சித்தமாயிருக்கிறார்கள். அடுத்த
கணத்தில் ஈட்டிகள் அந்த அரசிளங் குமாரனுடைய மிருதுவான தேகத்தில் பாயப்
போகின்றன. குந்தவி "ஐயோ!" என்று கதறிக் கொண்டு கீழே விழுகிறாள். கண்
விழித்துப் பார்த்தால், மஞ்சத்திலிருந்து கீழே விழுந்திருப்பதாகத்
தெரிகிறது.

இதன் பிறகு குந்தவி தூங்குவதற்குப் பிரயத்தனம்
செய்யவில்லை. யானையின் காலில் வைத்து இடறுதல், கழுவேற்றுதல் முதலிய
கொடூரமான தண்டனைகளெல்லாம் தன் தகப்பனாரின் தர்ம ராஜ்யத்தில் இல்லையென்பதை
ஞாபகப்படுத்திக் கொண்டு தைரியமடைந்தாள்.

ஒருவாறு இரவு கழிந்து பொழுது விடிந்தது. சக்கரவர்த்தி
சபைக்குப் புறப்படும் நேரமும் வந்தது. அவரிடம் மறுபடியும் சோழ ராஜகுமாரனைப்
பற்றிப் பேச வேண்டும் என்று குந்தவி துடித்தாள். ஆனால் சக்கரவர்த்தியைப்
பரிவாரங்கள் சூழ்ந்திருந்தபடியால் அது சாத்தியமாயில்லை. அவர் விடை பெற்றுக்
கொண்டு கொஞ்சதூரம் சென்றுவிட்டார். ஏதாவது சொல்லாவிட்டால் குந்தவிக்கு
நெஞ்சு வெடித்து விடும் போலிருந்தது. "அப்பா! நான் சொன்னது ஞாபகம்
இருக்கட்டும்" என்றாள். நரசிம்மவர்மர் அவளைத் திரும்பிப் பார்த்து, "எதைச்
சொல்லுகிறாய், குந்தவி! ஓகோ! சோழ ராஜகுமாரனைக் கடுமையாய்த் தண்டிக்க
வேண்டுமென்று சொன்னாயே, அதுதானே! ஞாபகம் இருக்கிறது!" என்று சொல்லிவிட்டுப்
பின்னர் திரும்பிப் பார்க்காமலேயே சென்று விட்டார்.

"குந்தவிக்குச் சொல்ல முடியாத ஆத்திரமும் துக்கமும்
பொங்கிக் கொண்டு வந்தன. விரைந்து பள்ளியறைக்குச் சென்று மஞ்சத்தில்
குப்புறப் படுத்துக் கொண்டு கொஞ்ச நேரம் விம்மி விம்மி அழுது
கொண்டிருந்தாள். தன்னாலே தான் ராஜ குமாரன் கடுந்தண்டனை அடையப் போகிறான்
என்ற எண்ணம் அவள் மனத்தில் வேரூன்றி விட்டது. இது அவனுக்குத் தெரியும் போது
எவ்வளவு தூரம் தன்னை வெறுப்பானென்ற எண்ணம் அவளைப் பெருவேதனைக்கு
உள்ளாக்கியது.

தான் ஏதாவது செய்துதான் ஆகவேண்டுமென்று அவள்
பதைபதைத்தாள். சற்று நேரத்துக்கெல்லாம் அரண்மனை அதிகாரியை அழைத்து வரச்
செய்து, "உதயவர்மரே! இன்று சக்கரவர்த்தியின் சபையில் சோழ ராஜகுமாரனுடைய
விசாரணை முடிந்ததும் அதன் விவரத்தை உடனே எனக்கு வந்து தெரியப்படுத்த
ஏற்பாடு செய்ய வேண்டும். ஒரு கண நேரங்கூட இதில் தாமதம் கூடாது" என்றாள்.
அரண்மனை அதிகாரி "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லிச் சபைக்கு ஆளையும்
அனுப்பி வைத்தார்.

குந்தவி அன்று வழக்கமான காரியங்கள் ஒன்றும் செய்யவில்லை.
நந்தவனம் சென்று மலர் எடுக்கவில்லை. ஆலயங்களுக்கும் போகவில்லை. பல்லைக்
கடித்துக் கொண்டு இராஜசபையிலிருந்து எப்போது ஆள் வரும் என்று
எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். கடைசியாக அந்த ஆளும் வந்து சேர்ந்தான்.
விசாரணையையும் முடிவையும் பற்றி விவரமாகக் கூறினான்.

சக்கரவர்த்தி ரொம்பவும் கருணை காட்டினாராம் 'இப்போதாவது
பல்லவ சாம்ராஜ்யத்துக்குப் பணிந்து கப்பம் செலுத்துவதாக ஒப்புக்
கொண்டாயானால் உன்னுடைய குற்றத்தை மன்னித்து சோழ ராஜ்யத்துக்கும் முடிசூட்டி
வைக்கிறேன்' என்றாராம். அதைச் சோழ ராஜகுமாரன் ஒரே பிடிவாதமாக மறுத்து
விட்டானாம். அதோடு நில்லாமல், சக்கரவர்த்தியைத் தன்னுடன் வாட்போர்
செய்யும்படி அழைத்தானாம்! அதன்மேல் சக்கரவர்த்தி தீர்ப்பு கூறினாராம்!
அவனுடைய இளம்பிராயத்தை முன்னிட்டு அவனுக்கு மரண தண்டனை விதிக்காமல் தேசப்
பிரஷ்டதண்டனை விதிப்பதாகவும் மறுபடியும் சோழ நாட்டிற்குள் அவன்
பிரவேசித்தால் சிரசாக்கினைக்குள்ளாக வேண்டுமென்றும் சொல்லி உடனே அவனைக்
கப்பலேற்றித் தீவாந்திரத்துக்கு அனுப்பிவிடும்படி கட்டளையிட்டாராம்.
அதன்படி அவனை உடனே மாமல்லபுரம் துறைமுகத்துக்குக் கொண்டுபோய் விட்டார்கள்
என்பதையும் இராஜசபையிலிருந்து வந்த ஆள் தெரிவித்தான்.

விக்கிரமனுக்கு மரண தண்டனை விதிக்கப்படவில்லை என்ற செய்தி
குந்தவிக்குச் சிறிது ஆறுதல் அளித்தது. ஆனால் அவனைக் கப்பல் ஏற்றி
அனுப்பப் போகிறார்கள்; இனிமேல் என்றென்றைக்கும் அவனைத் தான் பார்க்க
முடியாமற் போகலாம் என்ற எண்ணம் மிகுந்த துன்பத்தை உண்டாக்கியது. அந்த
அரசிளங்குமரன் கப்பலேறிப் போவதற்கு முன் ஒரு தடவை அவனைப் பார்த்துவிட
வேண்டுமென்ற ஆவல் பொங்கி எழுந்தது. அவளுடைய உடம்பையும், மனத்தையும்,
ஆத்மாவையுமே இந்த ஆவல் கவர்ந்து கொண்டது. அந்த இராஜகுமாரனை உடனே பார்க்க
வேண்டுமென்று அவளுடைய தேகத்தின் ஒவ்வொரு அணுவும் துடித்தது. அவனைத் தான்
நேரில் பார்த்துப் பேசினால் அவனுடைய மனத்தை ஒரு வேளை மாற்றித் தன்
தந்தையின் கீழ் சிற்றரசனாயிருக்கச் சம்மதிக்கும்படி செய்யலாம் என்ற ஆசை
உள்ளத்தின் ஒரு மூலையில் கிடந்தது.

குந்தவி அக்கணமே தன் தந்தையைப் பார்க்க விரும்பினாள்.
விக்கிரமனுடைய விசாரணை முடிந்ததும் சக்கரவர்த்தி குதிரை மீதேறி எங்கேயோ
போய்விட்டார் என்றும், போன இடந்தெரியாது என்றும் தெரிய வந்தபோது அவளுக்குப்
பெரிதும் ஏமாற்றமுண்டாயிற்று. சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.
பிறகு அரண்மனை அதிகாரியை அழைத்து, "உதயவர்மரே, மல்லைத் துறைமுகத்துக்கு
நான் உடனே போக வேண்டும்! என் தாயாரின் நவரத்தின மாலையைக் காணவில்லை.
மாமல்லபுரத்து அரண்மனையில் போட்டுவிட்டு வந்து விட்டேன் போலிருக்கிறது.
நானே போய்தான் தேடி எடுக்க வேண்டும்" என்றாள்.

உதயவர்மர் சற்றுத் தயங்கி "சக்கரவர்த்தி வந்தவுடன்
போகலாமே!" என்றதும் குந்தவிக்கு வந்த கடுங் கோபத்தைக் கண்டு அவர் மிரண்டு
விட்டார். குந்தவி தேவியின் கட்டளைக்கு மறுமொழி சொல்லும் வழக்கம் இதுவரை
இல்லையாதலால், மாமல்லபுரத்துக்கு அவ்வளவு அவசரமாகவும் தனியாகவும் அவள்
போகும் யோசனை ஆச்சரியம் அளித்தாலும் அரண்மனை அதிகாரி உடனே அதற்கு வேண்டிய
ஏற்பாடுகளைச் செய்தார். சற்று நேரத்துக்கெல்லாம் குந்தவி பரிவாரங்களுடன்
பல்லக்கில் மாமல்லபுரத்துக்குப் பிரயாணமானாள். இதுவரையும் இல்லாத வழக்கமாக
விரைந்து செல்லுமாறு ஆக்ஞாபித்தாள். கடைசியாக மாமல்லபுரத்தை அடைந்ததும்,
விக்கிரமனை ஏற்றிக் கொண்ட கப்பலானது துறைமுகத்திலிருந்து அப்போதுதான் பாய்
விரித்துக் கிளம்பிக் கொண்டிருந்தது என்று தெரிய வந்தது.

குந்தவியின் பல்லக்கு கடற்கரையை அடைந்த போது அவளுடைய கண்
முன்னால் தோன்றிய காட்சி இருதயத்தைப் பிளப்பதாயிருந்தது. சிங்கக் கொடி
பறந்த பாய் விரித்த கப்பல் கிளம்பிக் கடலோரமாகப் போய்க் கொண்டிருந்தது.
அதில் நேற்று அவள் வீதியில் பார்த்த இராஜகுமாரன் கயிற்றினால் பிணிப்புண்ட
கைகளைக் கூப்பிய வண்ணம் நின்று கொண்டிருந்தான். அச்சமயம் அவனுடைய பார்வை
கரைமீதுதான் இருந்தது. அவ்வளவு பக்தி விசுவாசத்துடன் யாரைப் பார்க்கிறான்
என்று குந்தவி தெரிந்து கொள்ள விரும்பி, கரையில் அவனுடைய பார்வை சென்ற
திசையை நோக்கினாள். ஜடாமுடி தரித்த கம்பீரத் தோற்றமுடைய சிவனடியார் ஒருவர்
அங்கே நின்று கொண்டிருந்தார். அவர் தமது வலது கரத்தைத் தூக்கி விக்கிரமனை
ஆசீர்வதிக்கும் நிலையில் காணப்பட்டார்.

மறுபடியும் குந்தவி விக்கிரமனை நோக்கினாள். ஒரு கணநேரம்
அவனுடைய பார்வை இவள் பக்கம் திரும்புவது போலிருந்தது. "இது நிஜந்தானா?
அல்லது பிரமையா?" என்று நிச்சயமாய்த் தெரிவதற்குள்ளே, விக்கிரமன் முகத்தைத்
திருப்பிக் கொண்டு மீண்டும் சிவனடியார் இருந்த திசையை நோக்கினான்.

குந்தவிக்கு அப்போது சட்டென்று ஒரு ஞாபகம் வந்தது. சோழ
ராஜகுமாரனுக்கு துர்ப்போதனை செய்து அவன் புத்தியைக் கெடுப்பது ஒரு
சிவனடியார் என்பதாக நேற்று அப்பா சொல்லவில்லையா? அந்த பொல்லாத சாமியார்
இவராகத்தான் இருக்க வேண்டும்! சந்தேகமே இல்லை!

அந்தச் சாமியைக் கையும் மெய்யுமாய்ப் பிடித்து விட
வேண்டுமென்னும் எண்ணத்துடன் குந்தவி பல்லக்கை அவரிருந்த திசையை நோக்கி
விரைந்து போகும்படி கட்டளையிட்டாள். ஆனால் அடுத்த கணத்திலேயே சிவனடியார்
துறைமுகத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஆட்களுக்குப் பின்னால் மறைந்து
மாயமாய்ப் போய்விட்டார்! குந்தவி எவ்வளவோ தேடியும் கண்டுபிடிக்க
முடியவில்லை.

இதற்குள்ளாக விக்கிரமன் இருந்த கப்பலும் கடலில் வெகுதூரம்
போய்விட்டது.



*************************************************
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Empty
PostSubject: 2.11. பொன்னனின் சந்தேகம்   அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Icon_minitimeMon Jun 14, 2010 9:55 pm

2.11. பொன்னனின் சந்தேகம்



பொன்னி ஆற்றின் வெள்ளத்தின் மீது மற்றொரு நாள் பாலசூரியனின் பொற் கிரணங்கள்
படிய, நதிப் பிரவாகமானது தங்கம் உருகி வெள்ளமாய்ப் பெருகுவது போலக் காட்சி
தந்தது. அந்த பிரவாகத்தைக் குறுக்கே கிழித்துக் கொண்டும், வைரம்,
வைடூரியம் முதலிய நவரத்தினங்களை வாரித் தெளித்துக் கொண்டும், பொன்னனுடைய
படகு தோணித் துறையிலிருந்து கிளம்பி வசந்த மாளிகையை நோக்கிச்
செல்லலாயிற்று. படகில் ஜடா மகுடதாரியான சிவனடியார் வீற்றிருந்தார். கரையில்
பொன்னனுடைய மனைவி நின்று, படகு போகும் திசையைப் பார்த்துக்
கொண்டிருந்தாள்.

நதியில் படகு போய்க் கொண்டிருந்தபோது, பொன்னனுக்கும்
சிவனடியாருக்கும் பின்வரும் சம்பாஷணை நடந்தது.

"பொன்னா! கடைசியில் இளவரசருடன் எவ்வளவு பேர்தான்
ஓர்ந்தார்கள்?" என்று சிவனடியார் கேட்டார்.

"அந்த அவமானத்தை ஏன் கேட்கிறீர்கள், சுவாமி! ஆகா! அந்தக்
கடைசி நேரத்தில் மகாராணிக்குச் செய்தி சொல்லும்படி மட்டும் இளவரசர்
எனக்குக் கட்டளையிடாமற் போயிருந்தால்...."

"என்ன செய்து விட்டிருப்பாய், பொன்னா? பல்லவ சைன்யத்தை நீ
ஒருவனாகவே துவம்சம் செய்திருப்பாயோ?"

"ஆமாம், ஆமாம் நீங்கள் என்னைப் பரிகாசம் செய்ய
வேண்டியதுதான். நானும் கேட்டுக் கொள்ள வேண்டியது தான். இந்த உயிரை இன்னும்
வைத்துக் கொண்டிருக்கிறனேல்லவா? ஆனால், சுவாமி! என்னத்துக்காக நான் உயிரை
வைத்துக் கொண்டிருக்கிறேன் தெரியுமா? மகாராணியின் வார்த்தைக்குக்
கட்டுப்பட்டு உடம்பைச் சுமக்கிறேன்..."

"மகாராணியின் வார்த்தைக்காக மட்டுந்தானா பொன்னா? நன்றாக
யோசித்துப் பார், வள்ளிக்காகக் கொஞ்சங்கூட இல்லையா?"

"வள்ளி அப்படிப்பட்டவள் இல்லை, சுவாமி! எப்படியாவது
உயிரைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்று நினைக்கிறவள் அவள் இல்லை.
வீரபத்திர ஆச்சாரியின் பேத்தி அல்லவா வள்ளி? ஆகா! அந்தக் கிழவனின்
வீரத்தைத்தான் என்னவென்று சொல்வேன்?"

"வீரபத்திர ஆச்சாரி இதில் எப்படி வந்து சேர்ந்தான்
பொன்னா?"

"கிழவனார் சண்டை போடும் உத்தேசத்துடனேயே வரவில்லை. என்ன
நடக்கிறதென்று தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அந்தச்
சமயத்தில் இளவரசர் அநாதைபோல் நிற்பதைப் பார்த்ததும் அவருக்கு ஆவேசம்
வந்துவிட்டது. இளவரசருடைய கட்சியில் நின்று போரிடுவதற்கு ஆயிரம் பதினாயிரம்
வீரர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். உண்மையில்
வந்து சேர்ந்தவர்கள் என்னைத் தவிர ஐந்தே பேர்தான். அவர்கள்
கிராமங்களிலிருந்து வந்த குடியானவர்கள் திடீரென்று நாலாபுறத்திலிருந்தும்
வீரகோஷத்துடன் வந்த பல்லவ வீரர்களைப் பார்த்ததும், அந்தக் குடியானவர்கள்
கையிலிருந்த கத்திகளைக் கீழே போட்டுவிட்டுத் திகைத்துப் போய் நின்றார்கள்.
இதையெல்லாம் பார்த்தார் வீரபத்திர ஆச்சாரி. ஒரு பெரிய கர்ஜனை செய்து கொண்டு
கண்மூடித் திறக்கும் நேரத்தில் இளவரசர் நின்ற இடத்துக்கு வந்துவிட்டார்.
கீழே கிடந்த கத்திகளில் ஒன்றை எடுத்துச் சுழற்றத் தொடங்கினார். 'வீரவேல்!
வெற்றி வேல்! விக்கிரம சோழ மகாராஜா வாழ்க!' என்று அவர் போட்ட சத்தம்
நெடுந்தூரத்திற்கு எதிரொலி செய்தது. அடுத்த கணத்தில் பல்லவ வீரர்கள் வந்து
எங்களைச் சூழ்ந்து கொண்டார்கள். ஆகா! அப்போது நடந்த ஆச்சரியத்தை நான்
என்னவென்று சொல்வேன், சுவாமி? கிழவனாரின் கைகளில்தான் அவ்வளவு பலம் எப்படி
வந்ததோ? தெரியவில்லை! கொல்லுப் பட்டறையில் சம்மட்டி அடித்த கையல்லவா? வாளை
வீசிக் கொண்டு இடசாரி வலசாரியாகச் சுற்றிச் சுற்றி வந்தார். தொப்புத்
தொப்பென்று பல்லவ வீரர்கள் மண்மேல் சாய்ந்தார்கள். ஏழெட்டு வீரர்களை
யமலோகத்துக்கு அனுப்பி விட்டுக் கடைசியாக அவரும் விழுந்து விட்டார்.
இதையெல்லாம் தூரத்தில் நின்று தளபதி அச்சுதவர்மர் பார்த்துக்
கொண்டிருந்தாராம். கிழவனாரின் வீரத்தைக் கண்டு அவர் பிரமித்துப் போய்
விட்டாராம். அதனாலேதான் அந்தத் தீரக் கிழவருடைய உடலைச் சகல மரியாதைகளுடன்
எடுத்துப் போய்த் தகனம் செய்யும்படியாகக் கட்டளையிட்டாராம்."

"அதில் ஆச்சரியம் என்ன பொன்னா! வள்ளியின் பாட்டனுடைய வீர
மரணத்தைக் கேட்டு உலக வாழ்க்கையை வெறுத்த எனக்குக்கூட உடம்பு
சிலிர்க்கிறது. ஒரு தேசமானது எவ்வளவுதான் எல்லா விதங்களிலும் தாழ்வு
அடைந்திருக்கட்டும்; இப்படிப்பட்ட ஒரு வீரபுருஷனுக்குப்
பிறப்பளித்திருக்கும்போது, அந்தத் தேசத்துக்கு இன்னும் ஜீவசக்தி இருக்கிறது
என்று சொல்வதில் தடை என்ன? சோழநாடு நிச்சயம் மேன்மையடையப் போகிறது என்று
நம்பிக்கை எனக்கு இப்போது உண்டாகிறது" என்றார் சிவனடியார்.

சற்றுப் பொறுத்து, "அப்புறம் என்ன நடந்தது?" என்று
கேட்டார்.

"அப்புறம் என்ன? இளவரசரும் நானும் கிழவருடைய ஆச்சரியமான
பராக்கிரமச் செயலைப் பார்த்துக் கொண்டே திகைத்து நின்றுவிட்டோ ம். அவர்
விழுந்ததும் நாங்கள் இருவரும் ஏக காலத்தில் 'ஆகா' என்று கதறிக் கொண்டு அவர்
விழுந்த திசையை நோக்கி ஓடினோம். உடனே, இளவரசரை அநேக பல்லவ வீரர்கள்
சூழ்ந்து கொண்டார்கள். நான் வெறி கொண்டவனைப் போல் என் கையிலிருந்த வாளை
வீசிப் போரிட ஆரம்பித்தேன். அப்போது, "நிறுத்து பொன்னா!" என்று இளவரசரின்
குரல் கேட்டது. குரல் கேட்ட பக்கம் பார்த்தேன். இளவரசரைச் சங்கிலியால்
பிணித்திருந்தார்கள். அவர் 'இனிமேல் சண்டையிடுவதில் பிரயோஜனமில்லை பொன்னா!
எனக்காக நீ ஒரு காரியம் செய்ய வேண்டும். மகாராணியிடம் போய் நடந்ததைச் சொல்ல
வேண்டும். மேற்கொண்டு என்ன நடந்தபோதிலும், என் தந்தையின் பெயருக்கு
அவமானம் வரும்படியான காரியம் மட்டும் செய்யமாட்டேன் என்று நான் சபதம்
செய்ததாய்த் தெரியப்படுத்த வேண்டும்" என்றார். எனக்குப் பிரமாதமான ஆத்திரம்
வந்தது. 'மகாராஜா! உங்களைப் பகைவர்களிடம் விட்டுவிட்டு நான் போகவா?' என்று
கத்திக் கொண்டு என் வாளை வீசினேன். பின்பிறமிருந்து என் மண்டையில் பலமான
அடி விழுந்தது. உடனே நினைவு தவறிவிட்டது. அப்புறம் காராக்கிரகத்திலேதான்
கண்ணை விழித்தேன்."

"ஓகோ! காராக்கிரகத்தில் வேறு இருந்தாயா? அப்புறம் எப்படி
விடுதலை கிடைத்தது?"

"மறுநாளே விடுதலை செய்துவிட்டார்கள். இளவரசரைத் தவிர
மற்றவர்களையெல்லாம் மன்னித்து விட்டுவிடும்படி மாமல்ல
சக்கரவர்த்தியிடமிருந்து கட்டளை வந்ததாம்" என்றான் பொன்னன்.

"சக்கரவர்த்தி எவ்வளவு நல்லவர் பார்த்தாயா பொன்னா? உங்கள்
இளவரசர் எதற்காக இவ்வளவு பிடிவாதம் பிடிக்க வேண்டும்? அதனால் தானே அவரைச்
சக்கரவர்த்தி தேசப்பிரஷ்டம் செய்ய நேர்ந்தது" என்றார் சிவனடியார்.

"ஆமாம்; நரசிம்ம சக்கரவர்த்தி ரொம்ப நல்லவர்தான்;
பார்த்திப மகாராஜாவும், விக்கிரம இளவரசரும் பொல்லாதவர்கள்!" என்றான்
பொன்னன்.

பிறகு, "நான் சக்கரவர்த்தியைப் பார்த்ததேயில்லை. பார்க்க
வேண்டுமென்று ரொம்ப ஆசையாயிருக்கிறது. உறையூர்க்கு எப்போதாவது வருவாரா,
சுவாமி?" என்றான்.

"ஆமாம்; சீக்கிரத்திலேயே வரப்போகிறார் என்று தான்
பிரஸ்தாபம். ஏது பொன்னா! சக்கரவர்த்தியிடம் திடீரென்று உனக்கு அபார பக்தி
உண்டாகிவிட்டது போல் தெரிகிறதே! சண்டையில் செத்துப் போகவில்லையென்று
கவலைப்பட்டாயே! இப்போது பார்த்தாயா? உயிரோடு இருந்ததனால் தானே உனக்குச்
சக்கரவர்த்தியைப் பற்றிய உண்மை தெரிந்து அவரிடம் பக்தி உண்டாயிருக்கிறது!"

"ஆமாம்; சக்கரவர்த்தியிடம் எனக்கு ரொம்ப பக்தி
உண்டாகியிருக்கிறது. எனக்கு மட்டுமில்லை; இதோ என்னுடைய வேலுக்கும் பக்தி
உண்டாகியிருக்கிறது!" என்று சொல்லிக் கொண்டே பொன்னன் படகில் அடியில் கிடந்த
வேலை ஒரு கையால் எடுத்தான்.

"இந்த வேலுக்குச் சக்கரவர்த்தியிடம் சொல்ல முடியாத பக்தி;
அவருடைய மார்பை எப்போது தழுவப் போகிறோம் என்று தவம் கிடக்கிறது" என்று
சொல்லிப் பொன்னன் சிவனடியாரின் மார்புக்கு நேரே வேலை நீட்டினான்.

சிவனடியார் முகத்தில் அப்போது புன்சிரிப்புத் தவழ்ந்தது.
"பொன்னா! நான்தான் சக்கரவர்த்தி என்று எண்ணிவிட்டாயா, என்ன?" என்றார்.

பொன்னன் வேலைக் கீழே போட்டான்.

"சுவாமி! சக்கரவர்த்தி எவ்வளவுதான் நல்லவராயிருக்கட்டும்;
மகா வீரராயிருக்கட்டும்; தெய்வாம்சம் உடையவராகவே இருக்கட்டும் அவர்
எனக்குப் பரம சத்துரு! ஒரு நாள் இல்லாவிட்டால் ஒருநாள் அவரை நான் நேருக்கு
நேர் காண்பேன் அப்போது...." என்று பொன்னன் பல்லை நெற நெறவென்று கடித்தான்.

சிவனடியார் பேச்சை மாற்ற விரும்பியவராய்" ஏன் பொன்னா!
அன்றைய தினம் மாரப்ப பூபதி உங்களுக்கு அருகில் வரவேயில்லையா?" என்று
கேட்டார்.

"அந்தச் சண்டாளன் பேச்சை ஏன் எடுக்கிறீர்கள்? அவன்
இளவரசரையும் தூண்டி விட்டுவிட்டு, அச்சுதவர்மரிடம் போய்ச் சகல
விவரங்களையும் தெரிவித்து விட்டான். அப்படிப்பட்ட துரோகி அன்றைக்கு ஏன்
கிட்ட வரப்போகிறான்? ஆனால் சுவாமி! அவனுடைய வஞ்சகப் பேச்சில் நாங்கள்
எல்லாருமே ஏமாந்துவிட்டோ ம். வள்ளி ஒருத்தி மட்டும், "பூபதி பொல்லாத
வஞ்சகன்; அவனை நம்பக் கூடாது" என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அவள்
சொன்னதுதான் கடைசியில் சரியாப் போச்சு" என்றான் பொன்னன்.

"வள்ளி ரொம்பவும் புத்திசாலி. பொன்னா! சந்தேகமேயில்லை,
அவள் ஒரு பெரிய தளதிபதியின் மனைவியாகயிருக்கத் தகுந்தவள்..."

"என்ன சொன்னீர்கள், சுவாமி!"

"வள்ளி ஒரு பெரிய சேனாதிபதியின் மனைவியாயிருக்கத்
தகுந்தவள் என்றேன்."

"நீங்கள் சொன்ன இதே வார்த்தையை இதற்கு முன்னாலும் ஒருவன்
சொன்னதுண்டு."

"யார் அது?"

"மாரப்ப பூபதிதான்; அவன் சோழ சேனாதிபதியாயிருந்த
காலத்தில் அப்படிச் சொன்னான்."

"ஓகோ!"

"எனக்கு ஒவ்வொரு சமயம் என்ன தோன்றுகிறது தெரியுமா?
தாங்கள் கோபித்துக் கொள்ளாமலிருந்தால் சொல்லுகிறேன்."

"தாராளமாய்ச் சொல்லு; பொன்னா! நான் சந்நியாசி;
ஐம்புலன்களையும் அடக்கிக் காமக் குரோதங்களை வென்றவன்."

"நீங்கள் கூட மாரப்ப பூபதியின் ஆளோ, அவனுடைய
தூண்டுதலினால் தான் இப்படி வேஷம் போட்டுக் கொண்டு வஞ்சகம் செய்கிறீர்களோ -
என்று தோன்றுகிறது."

சிவனடியார் கலகலவென்று சிரித்துவிட்டு, "இதைப் பற்றி
வள்ளியின் அபிப்ராயம் என்ன என்று அவளை எப்போதாவது கேட்டாயா?" என்றார்.

"வள்ளிக்கு உங்களிடம் ஒரே பக்தி. 'நயவஞ்சகனை நம்பி மோசம்
போவாய், உத்தம புருஷரைச் சந்தேகிப்பாய்!' என்று என்னை ஏசுகிறாள். மாரப்ப
பூபதி இப்படிப்பட்ட பாதகன் என்று தெரிந்த பிறகு அவளுடைய கை ஓங்கிவிட்டது.
என்னைப் பரிகாசம் பண்ணிக் கொண்டேயிருக்கிறாள்."

"நான்தான் சொன்னேனே பொன்னா, வள்ளி புத்திசாலி என்று அவள்
புத்திமதியை எப்போதும் கேளு. வள்ளி தளபதியின் மனைவியாயிருக்கத் தகுந்தவள்
என்று நான் சொன்னது மாரப்ப பூபதி சொன்ன மாதிரி அல்ல; நீயும் தளபதியாகத்
தகுந்தவன்தான்!"

"ஆமாம் யார் கண்டது? விக்கிரம மகாராஜா சோழ நாட்டின்
சிம்மாசனம் ஏறும்போது, ஒரு வேளை நான் தளபதியானாலும் ஆவேன்."

"இரண்டும் நடக்கக் கூடியதுதான்."

"ஆகா! இந்தப் பெரிய பாரத பூமியில் எங்கள் இளவரசருக்கு
இருக்க இடமில்லையென்று கப்பலில் ஏற்றி அனுப்பிவிட்டாரே, சக்கரவர்த்தி!
அவருடைய நெஞ்சு எப்படிப்பட்ட கல் நெஞ்சு! அதைக் காட்டிலும் ஒரே அடியாக
உயிரை வாங்கியிருந்தாலும் பாதகமில்லை...."

"நீ சொல்வது தவறு பொன்னா! உயிர் உள்ளவரையில் எப்படியும்
நம்பிக்கைக்கும் இடமுண்டு. ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் நம்முடைய
மனோரதங்கள் நிறைவேறும். நீ வேணுமானால் மகாராணியைக் கேட்டுப் பார். மகன்
இந்த மட்டும் உயிரோடு இருக்கிறானே என்று மகாராணிக்குச்
சந்தோஷமாய்த்தானிருக்கும்....அதோ மகாராணி போலிருக்கிறதே!" என்று சிவனடியார்
வியப்புடன் சொன்னார்.

அப்போது படகு வசந்த மாளிகைத் தீவின் கரைக்குச் சமீபமாக
வந்து கொண்டிருந்தது. கரையில் அருள்மொழித் தேவியும் ஒரு தாதியும் வந்து
தோணித் துறையின் அருகில் நின்றார்கள். அருள்மொழித் தேவி படகிலிருந்த
சிவனடியாரை நோக்கிப் பயபக்தியுடன் கை கூப்பிக் கொண்டு நிற்பதைப் பொன்னன்
பார்த்தான். உடனே சிவனடியாரை நோக்கி, "சுவாமி! ஏதோ நான் தெரியாத்தனமாக
உளறிவிட்டேன்; அதையெல்லாம் மன்னிக்க வேண்டும்" என்று உண்மையான
பச்சாதாபத்துடனும் பக்தியுடனும் கூறினான்.









***************************************************
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Empty
PostSubject: 2.12. ராணியின் துயரம்   அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Icon_minitimeMon Jun 14, 2010 9:57 pm

2.12. ராணியின் துயரம்





சிவனடியார் படகிலிருந்து இறங்கியதும் அருள்மொழி அவரை நமஸ்கரித்து விட்டு
நிமிர்ந்து பார்த்தாள். அவளுடைய கண்களில் நீர் ததும்பிற்று.

"சுவாமி! விக்கிரமன் எங்கே?" என்று சோகம் நிறைந்த குரலில்
அவள் கதறி விம்மியபோது, சிவனடியாருக்கு மெய்சிலிர்த்தது. பொன்னன்
முகத்தைத் திருப்பிக் கொண்டான். மரங்களின் மீதிருந்த பறவை இனங்களும் அந்தச்
சோகக் குரலைக் கேட்கச் சகிக்காதவை போல் சிறகுகளை அடித்துக் கொண்டு பறந்து
சென்றன.

"அருள்மொழி! இது என்ன பைத்தியம்? உன்னுடைய பதி உனக்கு
என்ன சொல்லிவிட்டுப் போனார்? நீ வீரத்தாயாக இருக்க வேண்டுமென்று அவர் சொன்ன
கடைசி வார்த்தையை மறந்துவிட்டாயா? இப்படியும் தைரியத்தை இழக்கலாமா? வா,
அரண்மனைக்குப் போய்ச் சாவகாசமாகப் பேசலாம்" என்றார் சிவனடியார்.

மாஞ்சோலைகளுக்கிடையே அமைந்திருந்த அழகிய பாறை வழியாக
எல்லாரும் வசந்த மாளிகைக்குப் போய்ச் சேர்ந்தார்கள். ஒரு காலத்தில் எவ்வளவு
குதூகலமும் கொண்டாட்டமுமாகயிருந்த வசந்த மாளிகை இப்போது பொலிவிழந்து
சூனியமாகக் காணப்பட்டது. அரண்மனை ஊழியர்களின் முகங்களும் கலையின்றிச் சோகம்
நிறைந்து தோன்றின.

மாளிகை முன் மண்டபத்திலே புலித்தோல் விரித்திருந்த உயரமான
பீடத்தில் சிவனடியார் அமர்ந்தார். அருள் மொழி கீழே வெறுந் தரையில்
உட்கார்ந்தாள்.

"அம்மா! உன் மனத்தைக் கலங்க விடக் கூடாது" என்று
சிவனடியார் ஆரம்பித்தபோது, அருள்மொழி அவரைத் தடுத்து துக்கம் பொங்கும்
குரலில் கூறினாள்:

"ஐயோ! மனத்தைக் கலங்கவிடக் கூடாது என்கிறீர்களே?
மனத்தைத்தான் நான் கல்லாகச் செய்து கொண்டு விட்டேனே? என் தேகமல்லவா
கலங்குகிறது? குழந்தையை நினைத்தால் வயிறு பகீரென்கிறதே! குடல் எல்லாம்
நோகிறதே! நெஞ்சை இறுக்கிப் பிழிவது போல் இருக்கிறதே! நான் என்ன செய்வேன்? -
சுவாமி! விக்கிரமனைக் காப்பாற்றுகிறேன் என்று வாக்குக் கொடுத்தீர்களே,
அந்த வாக்கை நிறைவேற்றினீர்களா?"

"ஏன் நிறைவேற்றவில்லை அருள்மொழி. நிறைவேற்றித்தான்
இருக்கிறேன். விக்கிரமனுடைய உயிரைக் காப்பாற்றித் தருகிறேன் என்று உனக்கு
வாக்குக் கொடுத்தேன். அவனுடைய உயிரைக் காப்பாற்றித்தான் இருக்கிறேன்.
விக்கிரமனை வீரமகனாகச் செய்வதாக அவனுடைய தந்தைக்கு வாக்களித்திருந்தேன்.
அதையும் நிறைவேற்றியே இருக்கிறேன். அம்மா! நீ மட்டும் அன்று காஞ்சியில்
பல்லவ சக்கரவர்த்தியின் நீதி சபையில் இருந்திருந்தாயானால், உடல்
பூரித்திருப்பாய்! பொய்யாமொழிப் பெருமான்,

"ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்"

என்று சொன்னது உன் விஷயத்தில் மட்டும் பொய்யாகப் போகுமா?
சக்கரவர்த்தி எவ்வளவோ நல்ல வார்த்தை சொன்னார் விக்கிரமனுக்கு. 'பல்லவ
சாம்ராஜ்யத்திற்குள் அடங்கிக் கப்பங்கட்டிக் கொண்டு வருவதாயிருந்தால்
உன்னுடைய துரோகத்தை மன்னித்து சோழ நாட்டுக்கும் பட்டங் கட்டுகிறேன்!'
என்றார். விக்கிரமன் அணுவளவாவது மனம் சலிக்க வேண்டுமே? மலையைப்போல்
அசையாமல் நின்றான். அதுமட்டுமா? சக்கரவர்த்தியையே தன்னுடன் சண்டைக்கு
அழைத்தான். 'நீர் வீரன் என்பது உண்மையானால் என்னுடன் வாட்போர் செய்ய
வாரும்; என்னை ஜெயித்து விட்டுப் பிறகு கப்பம் கேளும்' என்றான். அவனுடைய
கண்களிலேதான் அப்போது எப்படித் தீப்பொறி பறந்தது? அருள்மொழி! அதைப் பார்க்க
நான் கொடுத்து வைத்திருந்தேன்; நீதான் அந்தப் பாக்கியத்தைச் செய்யவில்லை!"


ஆவலினால் விரிந்த கண்களில் கண்ணீர் ததும்ப மேற்கூறிய
விவரத்தைக் கேட்டுக் கொண்டிருந்த அருள்மொழி கூறினாள்:- "நான்
பாக்கியமற்றவள்தான் அதற்கும் சந்தேகமா? பதியைப் போர்க்களத்தில் பலி
கொடுத்து விட்டு, இந்த உயிரை வைத்துக் கொண்டிருந்தேன். மகன் தேசப்
பிரஷ்டனாகிக் கண் காணாத தேசத்துக்குப் போன பிறகும் உயிர் வைத்துக்
கொண்டிருக்கிறேன், சுவாமி! பல்லவ சக்கரவர்த்தி உறையூருக்கு வரப்போகிறார்
என்று சொல்லுகிறார்களே, அது உண்மையா? அப்படி வந்தால் அவர் காலில் விழுந்து
'என்னையும் விக்கிரமனை அனுப்பிய இடத்துக்கே அனுப்பி விடுங்கள்!" என்று
வேண்டிக் கொள்ளப் போகிறேன்...."

"என்ன சொன்னாய், அருள்மொழி! அழகுதான்! உன் புருஷனுடைய
ஜன்ம சத்ருவின் காலில் விழுந்தா கெஞ்சுவாய்! வீர சொர்க்கத்தில் இருக்கும்
பார்த்திப ராஜா இதை அறிந்தால் சந்தோஷப்படுவாரா! யோசித்துப் பார்!"

"ஆமாம், அவர் சந்தோஷப்படமாட்டார்; நானும் அவருடைய
சத்ருவிடம் பிச்சைக் கேட்கப் போகமாட்டேன்! ஏதோ ஆத்திரப்பட்டுச் சொல்லி
விட்டேன். ஆகா! அவர் தான் என்னவெல்லாம் ஆகாசக் கோட்டை கட்டினார்?
கன்னியாகுமரியிலிருந்து இமய பர்வதம் வரையில் புலிக்கொடி பறக்க வேண்டுமென்று
ஆசைப்பட்டாரே! அவருடைய பிள்ளைக்கு இந்தப் பெரிய தேசத்தில் இருக்கவும்
இடமில்லாமல் போய்விட்டதே...."

"பார்த்திப மகாராஜா வேறொரு மனக்கோட்டையும் கட்டவில்லையா
அம்மா? சோழ ராஜ்யம் கடல்களுக்கு அப்பாலுள்ள தேசங்களிலும் பரவ வேண்டுமென்று
அவர் ஆசைப்படவில்லையா? இரகசிய சித்திர மண்டபத்தில் அவர் எழுதியிருக்கும்
சித்திரங்களைக் கொஞ்சம் ஞாபகப்படுத்திக் கொள்"

"ஐயோ! அவருடைய ஆசை இம்மாதிரியா நிறைவேற வேண்டும்?
விக்கிரமன் இன்று கடல்களுக்கப்பாலுள்ள இராஜ்யங்களைப் பிடிப்பதற்காகப்
படையெடுத்தா போயிருக்கிறான்? எந்த காட்டுமிராண்டித் தீவில் கொண்டு போய்
அவனை விட்டிருக்கிறார்களோ? காட்டிலும் மலையிலும் எப்படி அலைந்து
கஷ்டப்படுகிறானோ? ஏன் என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்கள், சுவாமி?"

"உன்னை நான் ஒரு நாளும் ஏமாற்ற மாட்டேன் அம்மா! உன்னை
ஏமாற்றி எனக்கு என்ன காரியம் ஆக வேண்டும்? உன் மகனுக்கு ஒரு குறையும் வராது
என்பது என் நம்பிக்கை. விக்கிரமனுக்கு முன்னால் யாரும் தேசப் பிரஷ்டராகிக்
காட்டுக்குப் போனதில்லையா? இராமன் போகவில்லையா? பஞ்சபாண்டவர்கள்
போகவில்லையா? விக்கிரமன் கடல்களுக்கு அப்பாலுள்ள நாடுகளில் அனுபவிக்கும்
கஷ்டங்கள் எல்லாம் அவனுடைய வீர பராக்கிரமங்களை இன்னும் அதிகமாக வளர்க்கும்.
திரும்பித் தாய் நாட்டுக்கு அவன் வரும்போது...."

"ஐயோ! அவன் வரவேண்டாம், சுவாமி. வரவேண்டாம். தாய்நாட்டில்
காலடி வைத்தால் சிரசாக்கினை என்றுதான் சக்கரவர்த்தி விதித்திருக்கிறாரே?
எங்கேயாவது கண்காணாத தேசத்திலாவது அவன் உயிரை வைத்துக் கொண்டிருக்கட்டும்;
அதுவே போதும்!" என்றாள் அருள்மொழி.

"ஆனால் அப்படி அவன் வராமல் இருக்க முடியாது, அருள்மொழி!
என்றைக்காவது ஒரு நாள் அவன் வந்து தான் தீருவான். தாயின் பாசமும் தாய்
நாட்டின் பாசமும் அவனைக் கவர்ந்து இழுக்கும். இந்த இரண்டு பாசங்களைக்
காட்டிலும் வலிமை பொருந்திய இன்னொரு பாசமும் சேர்ந்திருக்கிறது. உனக்கு அது
தெரிந்திருக்க நியாயமில்லை...." என்று சொல்லிச் சிவனடியார் நிறுத்தினார்.

"என்ன சொல்லுகிறீர்கள், சுவாமி!"

"ஆமாம்; தாயின் அன்பையும் தாய்நாட்டுப் பற்றையும்
காட்டிலும் பெரியதொரு சக்தியும் அவனைத் திரும்பவும் இத்தேசத்துக்கு
வரும்படி இழுக்கும். அது ஒரு இளம் பெண்ணின் கருவிழிகளிலுள்ள காந்த சக்தி
தான். அம்மா! நான் இன்று பற்றை அறுத்த துறவியானாலும் பூர்வாசிரமத்தில்
ஸ்திரீ பிரேமையினால் ஏற்படும் இன்ப துன்பங்களை அறிந்தவன்...."

"இது என்ன சுவாமி! நீங்கள் சொல்வது எனக்கு
விளங்கவில்லையே? விக்கிரமனுக்கும் ஸ்திரீ பிரேமைக்கும் என்ன சம்பந்தம்?"
என்று வியப்புடன் கேட்டாள் அருள்மொழி.

சிவனடியார் புன்னகையுடன் கூறினார்:-

"ஒவ்வொரு தாயும் மகனைப் பற்றி இப்படித்தான் வெகுகாலம்
எண்ணிக் கொண்டிருக்கிறாள். கடைசியில் நேருக்கு நேர் உண்மையைக் காணும் போது
திடுக்கிடுகிறாள். நீயாவது முன்னாலேயே தெரிந்துகொள், அம்மா! உன் மகன்
விக்கிரமன் காஞ்சி நகரின் வீதியில் ஒரு கன்னியைச் சந்தித்தான். அவனைக்
குறுக்கும் நெடுக்குமாய்ச் சங்கிலியால் பிணித்துக் குதிரைமீது
கூட்டிக்கொண்டு போன போதுதான் அந்தச் சந்திப்பு ஏற்பட்டது. அந்த நிலையிலேயே
அந்தப் பெண்ணும் தன்னுடைய உள்ளத்தை அவனுக்குப் பறிகொடுத்து விட்டாள். இது
நான் கேட்டும் ஊகித்தும் அறிந்த விஷயம். ஆனால் நேரில் நானே ஒரு அதிசயத்தைப்
பார்த்தேன். மாமல்லபுரத்துக் கடற்கரையில் விக்கிரமனை ஏற்றிச் சென்ற கப்பல்
கிளம்பக் கரையோரமாய்ச் செல்ல ஆரம்பித்த சமயத்தில், அந்தப் பெண்
காஞ்சியிலிருந்து ஓடோ டியும் வந்து சேர்ந்தாள்; மறுபடியும் அவர்களுடைய
கண்கள் சந்தித்தன; உள்ளங்கள் பேசிக் கொண்டன; காதலும் கனிவும் ததும்பிய
அந்தப் பெண்ணின் விசால நயனங்களை விக்கிரமனால் ஒருநாளும் மறக்க முடியாது.
இரவிலும் பகலிலும் விழித்திருக்கும் நிலையிலும் தூக்கத்திலே கனவிலும்
அந்தப் பெண்ணின் மதிவதனம் அவன் முன்னால் தோன்றிக் கொண்டுதானிருக்கும்.
எங்கே இருந்து எந்தத் தொழில் செய்தாலும், எத்தகைய இன்ப துன்பங்களை
அனுபவித்தாலும் விக்கிரமன் அந்தப் பெண்ணை மறக்க மாட்டான். என்றைக்காவது
ஒருநாள் அவளைப் பார்க்கும் ஆசையுடன் அவன் தாய்நாட்டுக்குத் திரும்பி வந்தே
தீருவான்."

இத்தனை நேரமும் திகைத்து உட்கார்ந்து கொண்டிருந்த
அருள்மொழி "ஐயோ! எனக்கு மிஞ்சியிருந்த செல்வமெல்லாம் என் பிள்ளையின் அன்பு
ஒன்றுதான், அதற்கும் ஆபத்து வந்துவிட்டதா? அந்தப் பெண் யார் சுவாமி!" என்று
தீனக்குரலில் கேட்டாள்.

"பல்லவச் சக்கரவர்த்தியின் மகள் குந்தவி"

"ஆகா! என் பதியினுடைய பரம சத்ருவின் மகளா? சுவாமி! என்னமோ
செய்கிறதே! தலையைச் சுற்றுகிறதே!" என்றாள் அருள்மொழி. அடுத்த கணம் தரையில்
மூர்ச்சித்து விழுந்தாள்.




**************************************************
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Empty
PostSubject: 2.13. சிவனடியார் கேட்ட வரம்   அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Icon_minitimeMon Jun 14, 2010 9:59 pm

2.13. சிவனடியார் கேட்ட வரம்



ராணி மூர்ச்சித்து விழுந்ததும், சற்று தூரத்தில் நின்ற தாதிமார் அலறிக்
கொண்டு ஓடி வந்து அவளைச் சூழ்ந்தனர். சிவனடியார் "நில்லுங்கள்" என்று
அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டு, தமது கமண்டலத்திலிருந்து தண்ணீர்
எடுத்து அவளுடைய முகத்தில் தெளித்தார். உடனே மந்திர சக்தியால் எழுந்தது
போல், அருள்மொழி கண்விழித்துச் சிவனடியாரைப் பார்த்தாள்.

"சுவாமி! எனக்கு என்ன நேர்ந்துவிட்டது?" என்று மெலிவான
குரலில் கேட்டாள்.

"உனக்கு ஒன்றுமே நேரவில்லை அம்மா! உன் மகனைப் பற்றிச்
சொல்லிக் கொண்டிருந்தேன். அவனுக்கு ஒரு குறைவும் நேராது என்றும், நிச்சயம்
திரும்பி வருவான் என்றும் சொன்னேன்" என்றார் சிவனடியார்.

அருள்மொழி சற்று சிந்தனையில் ஆழ்ந்திருந்துவிட்டு,
"இல்லை; ஏதோ ரொம்பவும் வேதனை தரும் செய்தி ஒன்றைச் சொன்னீர்கள்!" என்றாள்.

"சக்கரவர்த்தியின் மகளை உன் மகன் பார்க்க நேர்ந்தது என்று
கூறினேன். அந்தச் செய்தி உனக்குச் சந்தோஷம் அளிக்குமென்று எண்ணினேன்..."

"ஆமாம் நினைவு வருகிறது, ஆனால் அது சந்தோஷச் செய்தியா?
சோழநாட்டின் மிகப்பெரிய விரோதி யாரோ, என்னுடைய பதியின் மரணம் எந்தக் கொடிய
சத்துருவினால் ஏற்பட்டதோ, இன்று நான் இவ்விதம் ஆதரவற்ற அநாதையாயிருப்பதற்கு
யார் காரணமோ அப்பேர்ப்பட்ட பகைவனுடைய மகளைப் பார்த்தா என் மகன் மயங்கி
விட்டான்? விக்கிரமன் உண்மையில் என் வயிற்றில் பிறந்த பிள்ளைதானா....?"

"கொஞ்சம் பொறு அருள்மொழி! அவசரப்பட்டுச்
சாபங்கொடுக்காதே!" என்று சிவனடியார் சிறிது கலக்கத்துடன் கூறினார். அவர்
மகா புத்திமானாயிருந்தும் அருள்மொழி இவ்வாறு பொங்குவாள் என்பதை
எதிர்பார்க்கவில்லையென்று தோன்றியது.

"இதோபார் அம்மா! உன்னுடைய தீராத கோபத்துக்கு ஆளான
நரசிம்மவர்மனுடைய மகள் அந்தப் பெண் என்பது உன் மகனுக்குத் தெரியாது.
அவர்கள் ஒருவரையொருவர் அருகில் நெருங்கியதும் இல்லை; ஒரு வார்த்தை
பேசியதும் இல்லை. தூரத்திலிருந்தே ஒருவரையொருவர் பார்த்ததுதான்!
அவர்களுக்குக் கலியாணமே நிச்சயமாகி விட்டது போல் நீ கலக்கமடைய வேண்டாம்!"
என்றார் பெரியவர்.

"நல்ல வேளை; என் வயிற்றில் பாலை வார்த்தீர்கள். எங்கே
அதுவும் அந்தப் பல்லவ சக்கரவர்த்தியின் சூழ்ச்சியோ என்று நினைத்தேன்.
சுவாமி! விக்கிரமன் எங்கேயாவது கண்காணாத தேசத்தில் உயிர்
வாழ்ந்திருக்கட்டும்; பசிக்கு உணவு இல்லாமலும் தாகத்துக்குத் தண்ணீர்
இல்லாமலும், கஷ்டப்பட்டாலும் படட்டும்! ஆனால் அவன் திரும்பி வரவும்
வேண்டாம்; எங்கள் பரம விரோதியினுடைய மகளின் மாய வலையில் விழவும் வேண்டாம்!"


"உன்னுடைய இருதய அந்தரங்கத்தை நன்றாகச் சோதித்துப் பார்,
அருள்மொழி! உன் மகன் சக்கரவர்த்தியின் மகளை மணம் புரிந்து கொள்ள
வேண்டுமென்னும் விருப்பம் லவலேசமும் உனக்கு இல்லையா?"

"அதெல்லாம் அந்தக் காலத்தில் சுவாமி! தங்களிடம்
சொல்லுவதற்கு என்ன? வெண்ணாற்றங்கரைப் போருக்கு முன்னால் அந்த மாதிரி ஒரு
பைத்தியக்கார ஆசை என் மனத்தில் சில சமயம் தோன்றியதுண்டு. 'அவ்விதம்
ஏற்பட்டால் சோழ வம்சத்துக்கும் பல்லவ குலத்துக்கும் உள்ள பகை
தீர்ந்துவிடுமே!' என்று நினைத்ததுண்டு. ஆனால், எப்போது என் பிராணநாதர்
போர்க்களத்தில் உயிரை இழந்தாரோ, அந்த க்ஷணத்திலேயே அந்த ஆசையை வேருடன்
களைந்து எறிந்துவிட்டேன். இவ்வளவு நடந்து விட்ட பிறகு என் மகன்
சக்கரவர்த்தியின் மகளைக் கல்யாணம் செய்து கொள்வதைவிட அவன் இறந்துவிட்டான்
என்ற செய்தியே எனக்கு மகிழ்ச்சியைத் தரும்!"

"அருள்மொழி! நீ அந்தக் குழந்தை குந்தவியைப்
பார்த்ததில்லை; அதனால் தான் இப்படியெல்லாம் வெறுப்பாகப் பேசுகிறாய்...."

"தாங்கள் பார்த்திருக்கிறீர்களா, சுவாமி?"

"பார்த்திருக்கிறேன்; நெருங்கிப் பழகியுமிருக்கிறேன்.
என்னிடம் குந்தவிக்கு ரொம்பவும் பக்தி விசுவாசமுண்டு. அம்மா! சிவஞான
இன்பத்தின் சுவை கண்ட எனக்கு இந்தக் காலத்தில் வேறு எதன் மீதும் பற்றுக்
கிடையாது. ஆனால் அந்தக் குழந்தையின் பாசம் மட்டும் போக மாட்டேன் என்கிறது.
அவளோடு இரண்டு நாள் பழகிவிட்டால் நீயும் அவ்விதந்தான் அவளிடம் பாசம்
வைப்பாய்..."

"வேண்டாம்! எனக்கு ஒருவரையும் இனிமேல் பார்க்க வேண்டாம்;
பழகவும் வேண்டாம்; இந்த உலகை விட்டுச் சென்று என் பதியை மீண்டும் அடையும்
நாளை நான் எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறேன்...."

"அருள்மொழி! ஒரு காலத்தில் என்னை நீ ஒரு வரம் கேட்டு
வாங்கிக்கொண்டாய். அதன்படியே உன் மகனுடைய உயிரைக் காப்பாற்றினேன். உன்
பதியின் மரணத்தறுவாயில் நான் அளித்த வாக்கையும் காப்பாற்றினேன். இதெல்லாம்
உண்மையா, இல்லையா?"

"ஆமாம் உண்மைதான்."

"அதற்கெல்லாம் பிரதியாக இப்போது நான் உன்னிடம் ஒரு வரம்
கேட்கப் போகிறேன். அதை நீ தட்டாமல் கொடுக்க வேண்டும்."

"சிவசிவா!" என்று சொல்லிக்கொண்டு அருள்மொழி எழுந்து
கைகூப்பி நின்றாள்.

"சுவாமி! இவ்விதம் என்னை அபசாரத்துக்கு உள்ளாக்கலாமா?
அடியாளிடம் தாங்கள் வரம் கேட்பதா? எனக்குக் கட்டளையிட வேண்டியவர், தாங்கள்"
என்றாள்.

"சரி கட்டளையிடுகிறேன், அதைத் தட்டாமல் நிறைவேற்ற
வேண்டும்."

"தங்களுடைய வார்த்தையை நான் தட்டுவேனா? ஒருநாளும் இல்லை."


"அப்படியானால் சொல்லுகிறேன், கேள்! என்றைக்காவது ஒருநாள்
சக்கரவர்த்தியின் மகள் குந்தவி உன்னிடம் வருவாள். அவள் தாயில்லாப் பெண்,
தாயின் அன்பு இன்றி அவளுடைய இருதயம் உலர்ந்து போயிருக்கிறது. அதனால் தான்
அம்மா, எனக்குக்கூட அவள்மேல் அவ்வளவு பாசம். அந்தக் குழந்தை உன்னிடம்
வரும்போது அவளை நீ நிராகரிக்காதே. அன்புடன் உன் மகளைப் போல் ஏற்றுக் கொள்.
உன் மனப்புண் ஆறுவதற்கும் அது அனுகூலமாயிருக்கும்!" என்றார் சிவனடியார்.
அவருடைய கனிவு ததும்பிய குரலும் வார்த்தைகளும் அருள்மொழியின் மனத்தை
உருக்கிவிட்டன.

"தங்கள் ஆணைப்படி நடக்க முயற்சி செய்கிறேன். சுவாமி!
ஆனாலும் எங்கள் குலத்துக்கே ஜன்ம சத்துருவான ஒருவருடைய மகளிடம் நான் எப்படி
அன்பு செலுத்துவது எப்படி....?"

"தந்தை செய்த தீங்குக்காக மகளை வெறுப்பது என்ன நியாயம்,
அம்மா? மேலும் இன்னொரு விஷயம் சொல்லுகிறேன், கேள். உன் மகனுடைய உயிரைக்
காப்பாற்றும் விஷயத்தில் குந்தவிதான் எனக்கு மிகவும் ஒத்தாசையாயிருந்தாள்.
விக்கிரமனுக்கு மரண தண்டனை நேராமல் தடுப்பதற்கு அவள் எவ்வளவு பிரயத்தனம்
செய்தாள் தெரியுமா? இதுநாள் வரையில் தந்தையின் வார்த்தைக்கு மறுவார்த்தை
பேசி அறியாதவள், விக்கிரமனுக்காகச் சக்கரவர்த்தியிடம் எவ்வளவோ சண்டை
பிடித்தாள்...."

"அப்படியா சுவாமி? அந்தக் குழந்தையைப் பார்க்க
வேண்டுமென்று எனக்கும் ஆசை உண்டாகிறது. ஆனால் அவள் எதற்காக இந்த
அபாக்கியசாலியைத் தேடிக் கொண்டு வரப்போகிறாள்?"

"இல்லை, அம்மா! இல்லை நீ அபாக்கியசாலி இல்லை.
விக்கிரமனைப் போன்ற வீரப் புதல்வனைப் பெற்ற உன்னை அபாக்கியசாலி என்று சொல்ல
முடியுமா? குந்தவியும் உன்னைத் தேடிக்கொண்டு வரத்தான் போகிறாள்;
சீக்கிரத்திலேயே வருவாள்!" என்றார் சிவனடியார்.


************************************************
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Empty
PostSubject: 2.14. "வயதான தோஷந்தான்!"   அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Icon_minitimeMon Jun 14, 2010 10:00 pm

2.14. "வயதான தோஷந்தான்!"



அந்த நாளில் தமிழகத்தில் சைவ சமயமும் வைஷ்ணவ சமயமும் புத்துயிர் பெற்றுத்
தளிர்க்கத் தொடங்கியிருந்தன. இவ்விரு சமயங்களிலும் பெரியார்கள் பலர்
தோன்றி, திவ்ய ஸ்தல யாத்திரை என்ற விஜயத்தில் தமிழ் நாடெங்கும் யாத்திரை
செய்து, பக்திச்சுடர் விளக்கு ஏற்றி, ஞான ஒளியைப் பரப்பி வந்தார்கள்.
அமுதொழுகும் தமிழில் கவிதா ரஸமும் இசை இன்பமும் ததும்பும் தெய்வீகப்
பாடல்களை இயற்றி வந்தார்கள்.

அந்நாளில் தமிழகத்தில் வாழ்ந்து வந்த சைவப்
பெரியார்களுக்குள்ளே திருநாவுக்கரசர் இணையற்ற மகிமையுடன் விளங்கினார்.
மகேந்திரவர்ம சக்கரவர்த்தியின் காலத்திலேயே பிரசித்தி அடைந்து, தமிழகத்தின்
போற்றுதலுக்கு உரியவராகிவிட்ட அப்பர் சுவாமிகள் விக்கிரமன் நாடு
கடத்தப்பட்டபோது, முதிர்ந்த மூப்பின் காரணமாக அதிகமாய் நடமாடவும் இயலாத
தள்ளாமையை அடைந்திருந்தார். அந்தத் தள்ளாத பிராயத்திலும் அவர் ஸ்தல
யாத்திரை சென்றிருந்து சமீபத்தில் திரும்பி வந்திருக்கும் செய்தியைக்
குந்தவிதேவி அறிந்தாள். அப்பெரியாரைத் தரிசிப்பதற்காகக் காஞ்சியில்
பிரசித்தி பெற்று விளங்கிய சைவ மடாலயத்துக்கு ஒருநாள் அவள் சென்றாள்.

முதிர்ந்து கனிந்த சைவப் பழமாக விளங்கிய அப்பர்
சுவாமிகள், சக்கரவர்த்தியின் திருமகளை அன்புடன் வரவேற்று ஆசி கூறினார்.

அவரைப் பார்த்துக் குந்தவி, "சுவாமி! இவ்வளவு தள்ளாத
நிலைமையில் எதற்காகத் தாங்கள் பிரயாணம் செய்ய வேண்டும்? தாங்கள் தரிசிக்காத
ஸ்தலமும் இருக்கிறதா? எங்கே போயிருந்தீர்கள் என்று கேட்டாள்.

அதற்கு அப்பர், "குழந்தாய்! தில்லைப்பதி வரையிலே தான்
போயிருந்தேன். பொன்னம்பலத்தில் ஆடும் பெருமானை எத்தனை தடவை தரிசித்தால்தான்
என்ன? இன்னுமொருமுறை கண்ணாரக் கண்டு இன்புற வேண்டுமென்ற ஆசை உண்டாகத்தான்
செய்கிறது. ஆகா! அந்த ஆனந்த நடனத்தின் அற்புதத்தைதான் என்னவென்று
வர்ணிப்பேன்! அந்தப் பேரானந்தத்தை அனுபவிப்பதற்காக மீண்டும் மீண்டும்
மனிதப் பிறவி எடுக்கலாமே!" என்று கூறிவிட்டு, பாதி மூடிய கண்களில் ஆனந்தக்
கண்ணீர் பெருக, பின்வரும் பாசுரத்தைப் பாடினார்:-

"குனித்த புருவமும், கொவ்வைச் செவ் வாயில் குமிண்
சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்த பொற் பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே!"

பாட்டு முடிந்த பின்னர் அப்பர் சுவாமிகள் சற்று நேரம்
மெய்ம்மறந்து பரவச நிலையில் இருந்தார். முன்பெல்லாம் இப்படிப்பட்ட
சந்தர்ப்பத்தில் குந்தவி பக்தி பரவசமடைந்து ஆனந்தக் கண்ணீர்
பெருக்கியிருப்பாள். ஆனால் இன்றைக்கு அவள் மனம் அவ்வாறு பக்தியில்
ஈடுபடவில்லை.

அப்பர் ஒருவாறு சுய உணர்வு அடைந்தபோது குந்தவி அவரை
நோக்கி "சுவாமி, சோழ நாட்டில் யாரோ ஒரு சிவனடியார் புதிதாகத் தோன்றி
ராஜரீகக் காரியங்களிலெல்லாம் தலையிடுகிறாராமே, தங்களுக்கு அவரைத்
தெரியுமா?" என்று வினவினாள்.

அவளுடைய வார்த்தைகளை அரைகுறையாகவே கேட்ட அப்பெரியார்,
"என்ன குழந்தாய்! சோழ நாட்டில் தோன்றியிருக்கும் சிவனடியாரைப் பற்றிக்
கேட்கிறாயா? ஆகா அவரைப் பார்க்கத்தானே, அம்மா நான் முக்கியமாக யாத்திரை
கிளம்பினேன்? நான் அவரைப் பார்க்க வருகிறேன் என்று தெரிந்ததும் அவரே
என்னைத் தேடிக் கொண்டு புறப்பட்டார். தில்லைப் பதியிலே நாங்கள்
சந்தித்தோம். ஆகா! அந்தப் பிள்ளைக்கு 'ஞானசம்பந்தன்' என்ற பெயர் எவ்வளவு
பொருத்தம்! பால் மணம் மாறாத அந்தப் பாலகருக்கு, எப்படித்தான் இவ்வளவு
சிவஞானச் செல்வம் சித்தியாயிற்று? என்ன அருள் வாக்கு! அவர் தாய்ப் பால்
குடித்து வளர்ந்த பிள்ளை இல்லை, அம்மா! ஞானப்பால் குடித்து வளர்ந்த பிள்ளை!
- இல்லாவிட்டால் முகத்தில் மீசை முளைப்பதற்குள்ளே இப்படிப்பட்ட தெய்வீகப்
பாடல்களையெல்லாம் பொழிய முடியுமா?" என்றெல்லாம் அப்பர் பெருமான்
வர்ணித்துக் கொண்டே போனார்.

குந்தவி பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள். கடைசியில்
குறுக்கிட்டு, "சுவாமி! நான் ஒருவரைப் பற்றிக் கேட்கிறேன். தாங்கள்
இன்னொருவரைப் பற்றிச் சொல்லுகிறீர்கள். நான் சொல்லும் சிவனடியார்,
முகத்தில் மீசை முளைக்காதவரல்ல; ஜடா மகுடதாரி; புலித்தோல் போர்த்தவர்"
என்றாள்.

"குழந்தாய்! நீ யாரைப்பற்றிக் கேட்கிறாயோ எனக்குத்
தெரியாது! ஜடாமகுடத்துடன் புலித்தோல் தரித்த சிவனடியார்கள் எத்தனையோ பேர்
இருக்கிறார்கள். இந்த மடாலயத்தில் நூறு பேருக்கு மேல் இருப்பார்கள். வேறு
ஏதாவது அடையாளம் உண்டானால் சொல்லு!" என்றார் நாவுக்கரசர்.

"நான் சொல்லுகிற சிவனடியார் ராஜரீக விஷயங்களில் எல்லாம்
தலையிடுவாராம். என்னுடைய தந்தைக்கு விரோதமாகக் கலகங்களை உண்டு பண்ணிக்
கொண்டிருக்கிறாராம்..."

"என்ன சொன்னாய், அம்மா! அதிசயமாயிருக்கிறதே! அப்படிப்பட்ட
சிவனடியார் யாரையும் எனக்குத் தெரியாது. சைவத்தையும் வைஷ்ணவத்தையும் இரு
கண்களைப் போல் காத்து வளர்த்து வருகிறவராயிற்றே உன் தந்தை! நரசிம்மவர்ம
சக்கரவர்த்தியின் ஆட்சியில் சிவனடியார்கள் எதற்காக ராஜரீகக் காரியங்களில்
ஈடுபட வேண்டும்? அதுவும் உன் தந்தைக்கு விரோதமாகக் கலகத்தைக் கிளப்புவதா?
வேடிக்கைதான்! அப்படி யாராவது இருந்தால், அவன் சைவனாகவோ, வைஷ்ணவனாகவோ
இருக்க மாட்டான். பாஷாண்ட சமயத்தான் யாராவது செய்தால்தான் செய்யலாம்."

"நான் போய் வருகிறேன் சுவாமி!" என்று குந்தவி அவருக்கு
நமஸ்கரித்து விடை பெற்றுக் கொண்டு கிளம்பினாள்.

பல்லக்கில் ஏறி அரண்மனைக்குப் போகும் போது அவள்
பின்வருமாறு எண்ணமிட்டாள்:-

"முதுமை வந்து விட்டால் எவ்வளவு பெரியவர்களாயிருந்தாலும்
இப்படி ஆகிவிடுவார்கள் போலிருக்கிறது. பேச ஆரம்பித்தால் நிறுத்தாமல்
வளவளவென்று பேசிக் கொண்டே போகிறார்! கேட்டதற்கு மறுமொழி உண்டா என்றால்,
அதுதான் கிடையாது! எல்லாம் வயதான தோஷந்தான்!"





********************************************
Back to top Go down
Sponsored content





அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Empty
PostSubject: Re: அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு   அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு Icon_minitime

Back to top Go down
 
அமரர் கல்கியின் படைப்புகள் - பார்த்திபன் கனவு
Back to top 
Page 1 of 2Go to page : 1, 2  Next
 Similar topics
-
»  அமரர் கல்கியின் படைப்புகள் - அலை ஒசை ( 1. தபால்சாவடி )
» அமரர் கல்கியின் படைப்புகள் - பொன்னியின் செல்வன்
» பார்த்திபன் கனவு மூன்றாம் பாகம்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 14. கனவு பலிக்குமா?
» புதுமைப்பித்தன் படைப்புகள் { கொடுக்காப்புளி மரம்}

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Tamil Novel & Tamil Short Stories-
Jump to: