உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம்-ஐ.நாவுக்கு இலங்கை எச்சரிக்கை
உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று ஐக்கிய நாடுகள் சபையிடம் இலங்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் புலிகளுக்கு எதிரான கடைசிகட்ட போரின்போது ராணுவம் தமிழர் பகுதியில் உள்ள வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகள் மீது பயங்கர தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்தது.
இதில் பெரும் மனித உரிமைமீறல் நடைபெற்றதாகவும், அதற்கு இலங்கை அரசே காரணம் என்றும் பிரஸ்ஸல்ஸ் சர்வதேச மனித உரிமை அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இலங்கை ராணுவம் நடத்திய இந்த கொடூரத்தை தடுத்து நிறுத்த ஐ.நா.வும் தவறிவிட்டதாக அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து இது குறித்து விசாரிக்க ஆலோசனைக் குழு ஒன்றை அமைக்க ஐ.நா. முடிவு செய்துள்ளது.
இந் நிலையில் அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ்நிருபர்களிடம் பேசுகையில்,
புலிகளுடனான போரின் போது எங்களது நாட்டு ராணுவத்தால் மனித உரிமை மீறப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து இலங்கை அரசே விசாரிக்க முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் இதன் மீது நம்பிக்கை இல்லாமல் ஐ.நா. விசாரிக்க முயல்வது சரியல்ல.
இலங்கை ராணுவத்தின் மீது எழுந்துள்ள புகார் குறித்து விசாரிக்க உயர் குழுவை ஐ.நா. அமைப்பதென்பது சட்டரீதியாகவும், தார்மிகரீதியாகவும் நியாயமானதல்ல. இதனால் இலங்கை மக்கள் மத்தியில் ஐ.நா. குறித்து அதிருப்திதான் ஏற்படும்.
புலிகளுடனான போரினால் 30 ஆண்டுகளாக நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. அதிலிருந்து மீண்டு தற்போதுதான் லேசாக வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இலங்கை மீதான விசாரணை என்ற ஐ.நாவின் நடவடிக்கை நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்.
இது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோரை விரைவில் சந்தித்துப் பேசுவேன். பான் கீ மூனை சந்திக்கும்போது இலங்கை உள்விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று வலியுறுத்துவேன்.
இலங்கை அரசு விசாரணை நடத்தவுள்ள நிலையில் ஐ.நா. தலையிடுவது விசாரணையில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றார்.