பிரியமானவளே !!!-உன்
பேர் சொல்லப் பிடிக்கும்! ...
"இவள் காதலன்" -என
ஊர் சொல்லப் பிடிக்கும்!
எப்போதாவது பேசும் உன்
இதழ்களைப் பிடிக்கும்!
கதை கதையாய் பேசும் -உன்
கண்களைப் பிடிக்கும்!.
நினைவுகளால் -உன்னைத்
திருடப் பிடிக்கும்! ...
கனவுகளால் கன்னம்
வருடப் பிடிக்கும்!
உன் விரல்விட்டு
விழுகின்ற
நகங்களைப் பிடிக்கும்!
உன் சாயலில்
நடந்துவரும்
முகங்களைப் பிடிக்கும்!
உன்னை தூரத்தில்
பார்த்துச்
சிரிக்கப் பிடிக்கும்! ...
அருகே பார்த்து
அலைபாய பிடிக்கும்!
பொட்டு என்று பொய்சொல்லி
நீ வைத்த
வட்ட நிலா பிடிக்கும்! ..
அதன் கீழே - இன்னும்
வெளிச்சமாய் இருக்கும்
விழிகளை பிடிக்கும்!.
உன்
புன்னகை நினைத்து
புரளப் பிடிக்கும்!
உன் கோபங்கள்
கண்டு
மிரளப் பிடிக்கும்!
சொல்லாமல் கோபம்
கொள்ளவும் பிடிக்கும்! ...
கண்டு பிடித்து
நீ
களைவதும் பிடிக்கும்! ..
இப்படியெல்லாம்
உன்னைப் பற்றி எழுதப் பிடிக்கும்!
எழுதியது படித்து -நீ
சிலிர்த்துப் போனால்,
அப்போதெல்லாம்
எழுதியதற்காக என்னையும் பிடிக்கும்!!
- ப்ரியமுடன்