என் முதல் மழலைப் பேச்சு
என் தாய் தந்தைக்குத் தெரியும்
என் பிஞ்சு வயது தத்தித் தத்திய நடை
என் தாய் தந்தைக்குத் தெரியும்
என் முதல் காதல்
என் மனசுக்குத் தான் தெரியும்
வேடிக்கை பார்த்தலைந்த வயது மாறியது
கால் வேட்கை கொண்ட மனமோ
பெண்ணை வேட்டையாடத் துடித்தலையும்
மனம் கொண்ட வயதாகியது
காதல் என்னை சந்திக்க மறுத்ததுமில்லை
ஒரு தங்கச் சிலையின் முகப்பொலிவைக் கண்டே
என் உணர்வுகள் மயங்க மனமுருகி நின்றேன்
பிறை நுதல் கொண்ட இவளென்ன
பிரபஞ்சப் பேரழகுப் பெண்ணா
நிலாப் பாறைக்குள் புயலாய் வீற்றிருந்த
இவள் ஒரு அழகுப் பதுமையன்றோ
அந்த நீலக்கடல் திரைச்சீலையில்
மோதிவந்து கரையில் சிதறித் தெளித்த
வெள்ளிச் சிதறல்களோ
இவள் வெண்முத்துச் சிரிப்பு
நீல ஏட்டின் வழியே
ஒளிக் கதிரதைத் தந்திடும்
நட்சத்திரங்களோ
இவள் ஒளிக் கண்கள்
காற்றின் உரசலால் இலைகள் படபடப்பது போல்
என் பார்வையின் உரசலால்
இவள் இமைகள் படபடத்தது ஏன்?
வெண்பளிங்குத் தோற்றமோ
என் இதயத்திற்குள் இடம் பிடித்துக் கொண்டதால்
அவள் உள்ளம் நோக்க என் இதயமும்
ஏவுகணை ஏவியது
பதினெட்டில் மனம் வளைந்தால்
அறுபதிலும் மனம் வளையாதென்றெண்ணி
காதல் கொண்ட மனமொருமுறை வெண்சாமரம்
வீசிட எண்ணியெண்ணி ஏணி கட்டிப் பார்க்கிறது
உணர்வு முடிச்சுகள் இறுக இறுக
காதல் அவள் மனசுக்குள் முடி சுட்டிக் கொண்டது
பெண்ணே உன்னை பொற்சிவிகையிட்டு
சுமந்து செல்ல முதுகு முனைகிறது
விழுதுகள் இறக்கிய காதல் நினைவால்
நித்தியப் பிரகாசமாய் நிலாக் கீற்றடிக்கும்
இரவுகளெல்லாம் உன் இன்ப நினைவுகளே
விரிந்து பரந்து கிடக்கின்றன
உனைத் தேடும் காதல் நெஞ்சமோ
நித்தமும் உன் நீங்காத நினைவால் தவிக்கிறதே!