தொட்டால் பூக்குமோ
தொட எண்ணினால் இனிக்குமோ
பார்த்தால் கவருமோ
பார்த்த பின் மயக்கமோ
மயங்கினால் சிரிக்குமோ
சிரித்தால் சொர்க்கமோ
சொர்க்கம் தரையிலோ
நடக்கும் பெண்ணிலோ
பெண்ணென்றால் பூவோ
சுடும் தென்றலோ
சொல்லியடங்கா எல்லையின் விரிவோ
விரிந்த வான் மனமோ
ஆழக் கடல் எண்ணமோ
என்னெல்லாம் எழுதினேன் -
அவள் எழுதிய என் காகிதத்தை படித்து
மடித்துக் கொண்ட பின் -
ஒற்றை பார்வையின் சிரிப்பில் உதிர்த்தாள்
அவள் காதலை!
உனை நான்
தூர நின்று பார்ப்பேன்
கற்பனையில் நெருங்குவேன்
கண்ணியத்தில் தொடுவேன்
காற்றுக்கும் தெரியாமல் மனதால் ரசிப்பேன்
உனை பார்க்கும் போது கூட
உன்னிடம் - பார்ப்பதை காட்ட அச்சப்படுவேன்;
பேசினால் வார்த்தையினூடே தெறிக்கும்
காதலையும் விழுங்கி விழுங்கி பேசுவேன்;
அதலாம் மீறி
எப்படியோ உனக்குத் தெரிந்து விட்டது
நானுன்னை நேசிப்பது.
நீ என்னிடம் மிக நன்றாக பேசுகிறாய்,
சிரிக்கிறாய்,
என்னை தொடுகிறாய்,
என்னோடு மட்டுமே அதிக நேரமிருக்கிறாய்,
தூர நிற்கையில் குரலெழுப்பி அழைக்கிறாய்
அருகே மிக அருகே ஒட்டி நிற்க
முயல்கிறாய்,
இதில் எதை காதலென்று சொல்லி
உனை காதலிப்பதாய் சொல்வேனோ?
வேண்டுமெனில் ஒன்று செய் -
இம்மடலை படி
படிக்கமட்டும் செய்
நாளை சந்திக்கையில் படித்துவிட்டேனெனத்
திருப்பிக் கொடு.
பிறகு பார்
நீ என்னை பார்க்கும் பார்வையில் -
நானுன்னை நெருங்கும் மௌனத்தில்
உன் கண்ணும் என் கண்ணும்
நம் காதலை நிறையவே பேசும்!!
உனக்கும் எனக்கும்
ஜாதியென்றும் மதமென்றும்
இனமென்றும் பணமென்றும்
இல்லையென்று ஏழையென்றும்
எத்தனை பேதங்கள் வேண்டுமாயினும்
இருந்து போகட்டும்;
பிடிக்கவில்லையென்ற
ஒன்றை தவிர!
நீ பார்க்கும்
கண்ணாடியில் என்
நினைவு படர்ந்ததுண்டா?
நீ விளக்கும் பற்பசையில்
என் நினைவு -
இனித்ததுண்டா??
நீ எழுதும்
எழுத்துக்களில்
என் பெயர் தெரிவதுண்டா?
நீ பார்க்கும்
பார்வையில்
எனக்கான தேடலை வைத்திருக்கிறாயா???
தேடித் பார்..
எங்கேனும் உனக்குள் நான்
நிச்சையம் இருப்பேன் -
இல்லையெனில்
எனை பார்க்காதே
யாருக்கும் தெரியாமல் சிரிக்காதே
தெருமுனை சென்று திரும்பாதே
என்னருகே வந்து மௌனமாய் நிற்காதே
உன்னிடம் எனக்கென
ஏதும் இல்லாதலில்
நானும் எனக்கென
என்னிடம் ஒன்றுமேயில்லை என
எண்ணிக் கொள்கிறேன்;
உயிரும்!