நோய்களைப் பெருக்கும் மனநிலைகள்
"நம் உடலில் உள்ள செல்கள் நம் எண்ணங்களை சதா ஒட்டுக் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. நம் எண்ணங்களால் அந்த மாறவும் செய்கின்றன. உடலில் உள்ள ஒவ்வொரு செல்லின் மீதும் மனதின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது" என்று பிரபல மருத்துவ எழுத்தாளர் தீபக் சோப்ரா கூறுகிறார்.
அதை இன்றைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் உறுதி செய்கின்றன. நம் உடல் ஆரோக்கியத்திற்கும், நம் மனநிலைகளுக்கும் இடையே நிறையவே தொடர்பு இருக்கின்றது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. உதாரணமாக, பக்கவாதத்தினால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் தங்கள் மனதில் நிறைய துக்கத்தைஅடக்கி வைத்திருக்கிறார்கள் அல்லது மன அழுத்தத்துடன் இருந்திருக்கிறார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
பெரும்பாலானோர் மாரடைப்புக்கு டென்ஷனான வாழ்க்கை முறை காரணமாக இருந்திருக்கிறது என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. கேன்சருக்கும் கூட கவலையும், மன உளைச்சலும் காரணமாக இருக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். தொடர்ச்சியாக இருக்கும் இது போன்ற மனநிலைகள் பெரிய நோய்களுக்குக் காரணமாக இருக்கின்றன என்றால் குறுகிய காலத்திற்கு இருக்கும் மனநிலைகள் கூட தலைவலி, வயிற்று வலி, கழுத்து வலி, இரத்த அழுத்தம் போன்ற உபாதைகளுக்குக் காரணமாக இருக்கின்றன என்கின்றன ஆராய்ச்சி முடிவுகள்.
மனநிலைகளுக்கும் நோய்களுக்கும் இடையே உள்ள தொடர்பைக் குறித்து சென்ற ஆண்டு கலிபோர்னியா-லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைகழகம் நடத்திய ஒரு பெரும் ஆராய்ச்சியில் இதன் காரணங்களை ஆழமாக ஆராய்ந்திருக்கிறார்கள். அவர்கள் கண்டுபிடித்திருக்கும் உண்மை சுவாரசியமானது. பல பக்கங்கள் கொண்ட அந்த ஆராய்ச்சியின் முடிவுகளை முடிந்த வரை எளிமையாக, சுருக்கமாக இங்கு தருகிறேன்.
ஒவ்வொரு செல்லினுள்ளும் டெலொமெர் (telemere) என்ற ஒரு நுண்ணிய கடிகாரம் உள்ளது. அது ஒவ்வொரு முறை செல் இரண்டாகப் பிரியும் போதும் மீண்டும் குறுகி சிறியதாகிறது. தான் பெற்றிருந்த ஆரோக்கியத்திற்குத் தேவையான வழிமுறைத் தகவல்களை சிறிது இழக்கிறது. ஆனால் செல்லினுள் இருக்கும் டெலொமெரெஸ் என்ற என்சைம் (telomerase enzyme) அந்த இழப்பினை சரிசெய்து அதன் பழைய அளவினையும் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. அந்த டெலொமெரெஸின் வேலையே ரிப்பேர் செய்து செல்லையும் அதன் மூலம் உடல்நலத்தையும் நல்ல நிலையில் வைத்துக் கொள்வது தான்.
ஆனால் மன உளைச்சல், மன அழுத்தம் போன்றவை அதிகமாக எழும் போது நிலைமையை சமாளிக்க உடலில் கார்ட்டிசோல் (Cortisol) என்ற ஹார்மோனை அதிகம் தயாராகிறது. அவை அதிக காலம் இரத்த ஓட்டத்தில் தங்கும் போது டெலொமெரெஸை வேலை செய்ய அனுமதிப்பதில்லை. அதன் காரணமாக செல்களின் பிரிவினை நடந்து கொண்டேயிருக்கையில் டெலொமெர் கடிகாரத்தின் அளவும், அதனிடம் உள்ள ஆரோக்கியத்திற்குத் தேவையான வழிமுறைத்தகவல்களும் குறைந்து கொண்டே வரும் போது அதை சரி செய்யும் ரிப்பேர் வேலை நடைபெறுவதில்லை. அதனால் நோய்க்கிருமிகள் உடலைத் தாக்க ஆரம்பிக்கும் போது தடுத்துப் போராடவோ, காத்துக் கொள்ளவோ போதிய சக்தியோ, ஞானமோ செல்களில் இல்லாமல் நம் உடல் நிராயுதபாணியாக நிற்க வேண்டி வருகிறது. விளைவு பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன.
மனநலன் தொடர்ந்து சீர்கெடும் போது மனவியாதிகள் மட்டுமல்லாமல் உடல் வியாதிகளும் நம்மை ஆட்கொள்ள வருகின்றன என்பது தெளிவு. இன்றைய அவசர வாழ்க்கை முறை, சக்திக்கு மீறிய எதிர்பார்ப்புகள் மற்றும் செயல்பாடுகள், யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள முடியாத தன்மை முதலானவையே இந்த
காலத்தில் நம் மனநலம் சீர்கெட அடிப்படைக் காரணங்களாக இருக்கின்றன. நம் இயல்புக்கும், சக்திக்கும் ஏற்ப முறையாக வாழ்வை அமைத்துக் கொள்ளும் போது நம் மனநலம் பெருமளவு சீர்படுகிறது.
மனநிலை ஆரோக்கியமாக இருந்தால் நோயே வராது என்பதல்ல இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சிகளின் கருத்து. வந்த நோய் வேகமாக நீங்குவதும், நிரந்தரமாகத் தங்கி விடுவதும் பெரும்பாலும் நம் மனநிலைகளைப் பொறுத்தே என்று தான் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். எனவே உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க மனதை ஆரோக்கியமாக வைத்திருப்போமாக!
நன்றி: விகடன்